எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எலிசா மோர்கன்கட்டுரைகள்

குறுக்குச் சாலையில் தேவன்

பல நாட்கள் நோய்வாய்ப்பட்டு, பின்னர் உடல் சூடு அதிகரித்த பிறகு, என் கணவருக்கு அவசர சிகிச்சை தேவை என்பது தெளிவாகத் தெரிந்தது. உடனடியாக மருத்துவமனை அவரை அனுமதித்தது. ஒரு நாள் கடந்துபோனது. அடுத்த நாளில் அவர் சற்று தேறியிருந்தார். ஆகிலும் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கும் நிலையில் இல்லை. மருத்துவமனையில் தங்கி என் கணவரை பராமரித்துக்கொள்வதும், அதே நேரத்தில் பலர் பங்குபெறும் திட்டப்பணி வேலையை செய்வதற்கும் நான் மிகவும் சிரமப்பட்டேன். நான் நலமாக இருப்பேன் என்று என் கணவர் உறுதியளித்தார். ஆனால் அவரை பராமரிப்பதற்கும் என் வேலையை செய்வதற்கு இடையில் நான் சிக்கித் தவிக்க நேரிட்டது.

வாழ்க்கையின் இதுபோன்ற முக்கியமான தருணங்களில் தீர்மானம் எடுப்பதற்கு தேவ ஜனத்திற்கு தேவனுடைய உதவி தேவைப்படுகிறது. பெரும்பாலும் அவர்கள் தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்ள தவறிவிடுகின்றனர். ஆனால் மோசே, தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து ஜீவனைத் தெரிந்துகொள்ளும்படிக்கு அவர்களுக்கு வலியுறுத்துகிறார் (உபாகமம் 30:19). மேலும் எரேமியா தீர்க்கதரிசி, இஸ்ரவேல் ஜனங்களுக்கு “வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்” (எரேமியா 6:16) என்று ஜனங்களுடைய வழிநடத்துதலுக்கு அறிவுறுத்துகிறார். வேதாகமத்தில் பூர்வ பாதைகளும் கடந்த காலத்தில் கர்த்தர் செய்த நன்மைகளும் நம்மை நேர்த்தியாய் வழிநடத்தக்கூடியவைகள்.

நான் நடைமுறையில் குழப்பமான வாழ்க்கைப் பாதையில் இருப்பதாக கற்பனை செய்துகொண்டு, எரேமியாவின் ஞான போதனைனை கருத்தில்கொண்டேன். என் கணவருக்கு நான் தேவை. என் வேலையையும் நான் செய்தாக வேண்டும். என்னுடைய மேற்பார்வையாளர் என்னை அழைப்பித்து, வீட்டில் தங்கி கணவரை பராமரித்துக்கொள்ளும்படிக்கு என்னை ஊக்கப்படுத்தினார். தேவனுடைய இந்த கிருபைக்காய் நான் பெருமூச்சுடன் நன்றி சொன்னேன். தேவனுடைய வழிநடத்துதல் எப்போதும் தெளிவாக தெரிவதில்லை. ஆனால் அது நம்மை நோக்கி நிச்சமாய் வரும். நாம் குழப்பமான பாதையில் நிற்கும்போது, அது நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறது என்பதை நம்புவோம்.

- எலிசா மோர்கன்

திருச்சபையாயிரு!

கோவிட்-19 தொற்றுநோயின்போது, டேவ் மற்றும் கார்லா ஒரு தேவாலய வீட்டைத் தேடி பல மாதங்கள் செலவிட்டனர். தொற்று பரவிய காலங்கிளல் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது, பல்வேறு தனிப்பட்ட அனுபவங்களை மட்டுப்படுத்தி, அவற்றை மேலும் கடினமாக்கியது. அவர்கள் கிறிஸ்தவ திருச்சபையோடு ஐக்கியம்கொள்வதற்கு ஏங்கினர். “ஒரு திருச்சபையைக் கண்டுபிடிப்பது கடினமானது” என்று கார்லா எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். என் திருச்சபை குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கான எனது சொந்த ஏக்கத்திலிருந்து எனக்குள் ஒரு உணர்தல் எழுந்தது. “திருச்சபையாக இருப்பது கடினமானது" என்று நான் பதிலளித்தேன். அந்த காலங்களில், எங்கள் திருச்சபை சுற்றியுள்ள மக்களுக்கு உணவு வழங்குதல், ஆன்லைன் சேவைகளை உருவாக்குதல் மற்றும் ஆதரவுடனும் ஜெபத்துடனும் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் போன் செய்து நலம் விசாரித்தது. அந்த சேவையில் நானும் எனது கணவரும் கலந்துகொண்டாலும், மாறக்கூடிய இந்த உலகத்தில் நாம் திருச்சபையாய் செயல்படுவது எப்படி என்று ஆச்சரியப்பட்டோம்.  
எபிரெயர் 10:25இல் ஆசிரியர் “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல்” இருக்கும்படிக்கு ஊக்குவிக்கிறார். ஒருவேளை உபத்திரவத்தின் நிமித்தமோ (வச. 32-34), சோர்வின் நிமித்தமாகவோ (12:3) ஐக்கியத்தை விடும் அபாயம் அவர்களுக்கு நேரிட்டிருக்கலாம். அவர்களுக்கு இந்த தூண்டுதல் அவசியப்பட்டது.  
இன்று, எனக்கும் ஒரு தூண்டுதல் தேவைப்படுகிறது. உங்களுக்கும் தேவைப்படுகிறதா? நடைமுறை சூழ்நிலைகள் நாம் கூடிவரும் திருச்சபையை பாதிக்கும் தருவாயில் நாம் திருச்சபையாய் நிலைநிற்போமா? ஆக்கப்பூர்வமாக ஒருவரையொருவர் ஊக்குவிப்போம். தேவன் நம்மை வழிநடத்துவது போல ஒருவரையொருவர் கட்டியெழுப்புவோம். நம்முடைய வளங்களைப் பகிர்ந்து கொள்வோம். ஆதரவான செய்திகளை பகிர்வோம். நம்மால் முடிந்தவரை சேகரிப்போம். ஒருவருக்கொருவர் ஜெபியுங்கள். நாமே திருச்சபையாக நிற்போம். 

தேவனில் பலப்படுதல்

கிரேஞ்சர் மெக்காய் ஒரு சிற்பக்கலைஞர். அவர் பறவைகளைக் குறித்து ஆய்வுசெய்து அவற்றை சிற்பமாய் வடிக்கிறவர். அவரது படைப்புகளில் ஒன்று “மீட்பு” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இது செங்குத்து நிலையில் உயரமாக நீட்டப்பட்ட வாத்து ஒன்றின் ஒற்றை வலது இறக்கையைக் காட்டுகிறது. அந்த சிற்பத்தின் கீழே பதிக்கப்பட்டிருந்த ஒரு தகட்டில், “பறப்பதில் பறவையின் மிகப்பெரிய பலவீனத்தின் தருணம், ஆனால் அதின் முன்னோக்கிச் செல்லும் பயணத்திற்கு வலிமையை சேகரிக்கும் தருணம்” என்று எழுதப்பட்டிருந்தது. கிரேஞ்சர் இந்த வசனத்தையும் சேர்த்து எழுதுகிறார்;: “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரிந்தியர் 12:9). 
அப்போஸ்தலன் பவுல் இந்த வார்த்தைகளை கொரிந்து சபைக்கு எழுதினார். தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்களோடு போராடிக்கொண்டிருக்கும்வேளையில், “என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று அதை அகற்றும்படிக்கும் தேவனிடத்தில் பவுல் கெஞ்சுகிறார். அவரது துன்பம் ஒரு உடல் நோயாகவோ அல்லது ஆன்மீக எதிர்ப்பாகவோ இருக்கலாம். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய இரவில் தோட்டத்தில் இருந்ததைப் போல (லூக்கா 22:39-44), பவுல் தனது துன்பத்தை நீக்கும்படி கடவுளிடம் மீண்டும் மீண்டும் மன்றாடுகிறார். பரிசுத்த ஆவியானவர் அவருக்குத் தேவையான பலத்தை கொடுப்பதாக வாக்களிக்கிறார். “அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்” (2 கொரிந்தியர் 12:10) என்று பவுல் கற்றுக்கொண்டார்.  
ஓ, இந்த வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் முட்கள்! முன்னோக்கி செல்லும் பயணத்திற்கு ஒரு பறவை தன் பலத்தை சேகரிக்கிறது போல, நாம் எதிர்நோக்கும் காரியத்திற்காக தேவனின் பலத்தை நாம் பெற்றுக்கொள்ளமுடியும். அவருடைய பலத்தில் நாம் பலப்படுத்தப்படுகிறோம்.  

ஓய்வெடுக்க அனுமதி

சில கடற்கரை பாறைகளின் மேல் அமர்ந்தோம், நானும் என் நண்பன் சூசியும், பொங்கும் நுரைகளின் வழியே, கடல் நீர் சுருளையாகப் பொங்குவதைப் பார்த்தோம். பாறைகளில் ஒன்றன் பின் ஒன்றாக மோதும் அலைகளைப் பார்த்து சூசி, “எனக்குக் கடல் பிடிக்கும். அது ஓடிக்கொண்டே இருப்பதால், நான் நின்று பார்க்கலாம்" என்றார்.

நம் வேலையை இடைநிறுத்தி ஓய்வெடுக்க "அனுமதி" தேவை என்று நம்மில் சிலர் நினைக்கிறார்கள் என்பது சுவாரஸ்யமானது அல்லவா? சரி, அதைத்தான் நம் நல்ல தேவன் நமக்கு வழங்குகிறார்! ஆறு நாட்களுக்குத் தேவன், சுழலும் பூமி, ஒளி, நிலம், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களை உருவாக்கினார். ஏழாவது நாளில், தேவன் ஓய்வெடுத்தார் (ஆதியாகமம் 1:31-2:2). பத்து கட்டளைகளில், அவரை கனப்படுத்தக்கூடிய ஆரோக்கியமான வாழ்க்கைக்கான விதிகளைத் தேவன் பட்டியலிட்டார் (யாத்திராகமம் 20:3-17), ஓய்வுநாளை ஓய்வுநாளாக நினைவுகூர வேண்டும் (வவ. 8-11) என்பது அதிலொன்று. புதிய ஏற்பாட்டில், இயேசு ஊரில் உள்ள அனைத்து நோயாளிகளையும் குணப்படுத்துவதைக் காண்கிறோம் (மாற்கு 1:29-34). பின்னர் மறுநாள் அதிகாலையில் ஜெபிக்க ஒரு தனியான இடத்திற்குச் செல்கிறார் (வச. 35). நம் தேவன் நோக்கத்துடன் வேலை செய்தார் மற்றும் ஓய்வெடுத்தார்.

வேலையில் தேவனுடைய உதவி, ஓய்விற்கான அவரது அழைப்பு என இரண்டுமே நம்மைச் சுற்றி ரீங்காரமாக இசைக்கிறது. வசந்த காலத்தில் நட்டால், கோடையில் வளர்ச்சியும், இலையுதிர்காலத்தில் அறுவடையும், குளிர்காலத்தில் ஓய்வும் உண்டாகும். காலை, நன்பகல், மதியம், மாலை, இரவு. தேவன் நம் வாழ்க்கையில் வேலை மற்றும் ஓய்வு ஆகிய இரண்டையுமே ஏற்படுத்தியுள்ளார்,  இரண்டையும் செய்ய அனுமதியும் வழங்குகிறார்.

தேவனின் முழுமையான பராமரிப்பு

டேவிட் வெட்டெர் தனது வாழ்நாளெல்லாம் ஒரு குமிழியில் வாழ்ந்து, தனது பன்னிரண்டாம் வயதில் மரணமடைந்தார். “குமிழ் சிறுவன்” என்று செல்லப் பெயரிடப்பட்ட டேவிட், ஒருவகையான கடும் நோயெதிர்ப்பு குறையோடு பிறந்தார். அவனுடைய பெற்றோர் தங்களது மூத்த மகனை நோய்க்குப் பலிகொடுத்ததால், இளையவனின் உயிர்காக்க மனவுறுதியோடிருந்தனர். அவனுடைய ஆயுளை நீட்டிக்க, நாசாவின் விஞ்ஞானிகள் நெகிழியிலான ஒரு பாதுகாப்பு குமிழியை உண்டாக்கினர், மேலும் அவன் பெற்றோருக்கு விண்வெளி கவச உடையையும் அளித்தனர். இதனைக்கொண்டு, அவர்கள் டேவிட்டை வெளியிருந்து பராமரிக்க முடியும். நாம் நேசிப்பவர்களைப் பாதுகாக்க நாம் எவ்வளவாய் ஏங்குகிறோம்.

அபிகாயிலின் முட்டாள் கணவனான நாபாலினால் தாவீது ராஜா தவறிழைக்கப்பட்டார். கோபம் தலைக்கேறிய நிலையில், தனது சொந்த கைகளால் பழிதீர்க்க தாவீது வகைத்தேடினார். அபிகாயிலோ அவரை துரிதமாகச் சந்தித்து, “உம்முடைய பிராணனை வாங்க வகைதேடவும், ஒரு மனுஷன் எழும்பினாலும் என் ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்” (1 சாமுவேல் 25:29) என்று ஞானமாக நினைப்பூட்டினாள். எஜமானன் தனது விலையேறப்பெற்றவற்றை ஒன்று சேர்த்து, பத்திரமாகச் சுமக்கும் செயலே “கட்டிலே கட்டுப்படுதல்” ஆகும். தேவன் தாவீதை பத்திரமாக “கட்டிலே” சுமக்க சித்தம் கொண்ட, அபிகாயில் நினைப்பூட்டினாள். தன்னுடையவற்றில் அல்ல, தேவனின் கரத்தில்தான் அவர் பாதுகாப்பாக இருப்பார். “நீர் விருதாவாய் இரத்தம் சிந்தாமலும், என் ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என் ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இராது, மன இடறலும் இராது” (வ.31).

பிறருக்குப் பாதுகாப்பு தேவைப்படுகையில், நாம் சிறப்பாகவே செயல்படுகிறோம். ஆனாலும், தேவனின் பூரணமான பராமரிப்பில்தான் அவர்கள் உண்மையாகப் பாதுகாக்கப்படுவார்கள்.

 

“சிறிய” அற்புதங்கள்

எங்கள் திருமண நிகழ்வில், எங்கள் கூச்ச சுபாவமுள்ள நண்பர் டேவ் ஒரு மூலையில் ஒரு நீள்சதுர, திசுக்களால் மூடப்பட்ட ஒரு பொருளைப் பிடித்தபடி நின்றார். அவரது பரிசை வழங்குவதற்கான முறை வந்தபோது, அவர் அதை முன் கொண்டு வந்தார். இவானும் நானும் அதை அவிழ்த்து, கையால் செதுக்கப்பட்ட மரத் துண்டில் “தேவனுடைய சில அற்புதங்கள் மிகவும் சிறியவைகள்” என்று பொறிக்கப்பட்டிருந்தது. சின்னச் சின்ன விஷயங்களிலும் தேவன் கிரியை செய்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் வகையில், நாற்பத்தைந்து ஆண்டுகளாக எங்கள் வீட்டில் அந்த மரத்தகடு தொங்கவிடப்பட்டுள்ளது. கட்டணத்தை செலுத்துதல், உணவை பெற்றுக்கொள்ளுதல், மற்றும் வியாதி குணமாகுதல் போன்ற அனைத்திலும் தேவனுடைய கிரியை இருக்கிறது. 

சகரியா தீர்க்கதரிசியின் மூலம், எருசலேமையும் ஆலயத்தையும் மீண்டும் கட்டுவது குறித்த தேவ கட்டளையை யூதேயாவின் ஆளுநரான செருபாபேல் பெறுகிறார். பாபிலோனிய சிறையிலிருந்து திரும்பிய பிறகு, மெதுவான முன்னேற்றத்தின் ஒரு பருவம் தொடங்கியது. இஸ்ரவேலர்கள் ஊக்கம் அடைந்தனர். “அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?” என்று தேவன் ஊக்கப்படுத்தினார் (சகரியா 4:10). அவர் தனது ஆசைகளை நம் மூலமாகவும் சில சமயங்களில் நம்மை மீறியும் நிறைவேற்றுகிறார். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (வச. 6). 

நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும் கடவுளின் கிரியையின் வெளிப்படையான சிறியத்தன்மையைக் கண்டு நாம் சோர்வடையும் போது, அவருடைய சில அற்புதங்கள் ‘சிறியதாக" இருக்கலாம் என்பதை நினைவில் கொள்வோம். அவர் தனது பெரிய நோக்கங்களுக்காக கட்டியெழுப்ப சிறிய விஷயங்களை பயன்படுத்துகிறார்.

 

வரவேற்பு விரிப்பு

எனது உள்ளூரின் நவீன அங்காடியில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு விரிப்புகளைப் பார்த்துக்கொண்டே நடக்கையில், ​​அவற்றின் மீது பதிக்கப்பட்டிருந்த வாசகங்களைக் கவனித்தேன். "வணக்கம்!", இதய வடிவில் "இல்லம்" போன்றவை. நான் வழக்கமான ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன், "வரவேற்பு" அதை வீட்டில் வைத்த பின்னர், என் உள்ளதை ஆராய்ந்தேன். தேவன் விரும்புவதை உண்மையிலேயே என் இல்லம் வரவேற்கிறதா? துன்பப்படும் அல்லது குடும்ப பிரச்சனையால் துயரப்படும் சிறுபிள்ளையை? தேவையோடிருக்கும் அண்டை வீட்டாரை? அவசரமாக அழைக்கும் வெளியூரிலிருந்து வந்திருக்கும் குடும்ப அங்கத்தினரை?

மாற்கு 9 இல், அவரது பரிசுத்த பிரசன்னத்தைக் கண்டு பிரமித்து நின்ற பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானை விட்டு (வ.1-13) கீழே பிசாசு பிடித்திருந்த தனது மகன் குணமாவான் என்ற நம்பிக்கை இழந்த தகப்பனைக் கண்டு மகனைக் குணமாக்க, இயேசு மறுரூப மலையிலிருந்து இறங்கினார் (வ.14-29). பின்னர் இயேசு சம்பவிக்கப்போகும் தனது  மரணத்தைப் பற்றிய தனிப்பட்ட படிப்பினைகளைச்  சீடர்களுக்கு வழங்கினார் (வ.30-32). அவர்களோ அவருடைய கருத்தை மிகவும் தவறாகப் புரிந்துகொண்டனர் (வ.33-34). மறுமொழியாக, இயேசு ஒரு சிறுபிள்ளையை தம் மடிமீது அமர்த்தி, “இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்” (வ. 37). இங்கு ஏற்றுக்கொள்ளுதல் என்ற சொல்லுக்கு விருந்தினராகப் பெறுவதும்,  ஏற்பதும் என்று பொருள். தம்முடைய சீடர்கள் அனைவரையும் வரவேற்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். மதிக்கப்படாதவர்களையும், அசௌகரியம் உண்டாக்குகிறவர்களையும் கூட நாம் அவரை வரவேற்பது போல ஏற்றுக்கொள்ளவேண்டும்.

நான் எனது வரவேற்பு கம்பளத்தை மனதிற்கொண்டு, அவருடைய அன்பை நான் எப்படி மற்றவர்களுக்கு வழங்குகிறேன் என்று சிந்தித்தேன். இது இயேசுவைப் பொக்கிஷமான விருந்தினராக வரவேற்பதன் மூலம் தொடங்குகிறது. அவர் விரும்பும் வழியில் பிறரை வரவேற்கும்பொருட்டு, என்னை வழிநடத்திட நான் அவரை அனுமதிப்பேனா?

மகிழ்ச்சியில் ஊழியம் செய்தல்

ஆண்ட்ரூ கார்டு, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தலைமை அதிகாரியாக இருந்தார். வெள்ளை மாளிகையில் அவரது பங்கு பற்றிய ஒரு நேர்காணலில் அவர் விளக்கினார். “ஒவ்வொரு பணியாளரின் அலுவலகத்திலும், 'நாங்கள் ஜனாதிபதியின் விருப்பப்படி சேவை செய்கிறோம்” என்று ஒரு வடிவமைக்கப்பட்ட நோக்க அறிக்கை தொங்குகிறது. ஆனால் நாங்கள் ஜனாதிபதியை மகிழ்விக்கவோ அல்லது அவருடைய மகிழ்ச்சியை வெல்லவோ சேவை செய்யவில்லை; மாறாக, அவருடைய வேலையைச் செய்ய அவர் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை அவருக்கு சொல்ல நாங்கள் சேவை செய்கிறோம்.” அந்த வேலை, அமெரிக்காவை நேர்த்தியாய் ஆட்சி செய்வதாகும். 

அப்போஸ்தலனாகிய பவுல் அடிக்கடி வற்புறுத்தியபடி, நாம் பல வேளைகளில் ஒருவரையொருவர் ஒற்றுமையில் கட்டியெழுப்புவதை விடுத்து, மனிதர்களை பிரியப்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். எபேசியர் 4இல் பவுல், “சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்” (வச. 11-13) என்று சொல்லுகிறார். 15-16 வசனங்களில், மக்களை பிரியப்படுத்த முயற்சிக்கும் செய்கையை விட்டுவிடும்படிக்கு அறிவுறுத்தி, “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு” செயல்பட்டால், “அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது” என்று வலியுறுத்துகிறார். 

இயேசுவின் விசுவாசிகளாக, நாம் மக்களைக் கட்டியெழுப்பவும் தேவனுடைய நோக்கங்களை நிறைவேற்றவும் ஊழியம் செய்கிறோம். நாம் மற்றவர்களைப் பிரியப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும், அவருடைய திருச்சபையில் ஒற்றுமையை உருவாக்க அவர் நம் மூலம் செயல்படும்போது நாம் தேவனை பிரியப்படுத்துவோம்.

 

பாவத்திலிருந்து பரிசுத்தத்திற்கு

சிறுமியாக, என் மகள் பாலாடைக்கட்டிகளுடன் விளையாடுவதை விரும்பினாள். அதின் இரண்டு துளைகளிலிருந்து அவளது பளபளப்பான கண்கள் எட்டிப்பார்த்து, "அம்மா பாருங்கள்" என்று சொல்லி, முகமூடியைப் போல வெளிர் மஞ்சள் நிற சதுரத்தை முகத்தில் வைப்பாள். ஒரு இளம் தாயாக, அந்த முகமூடி எனது உண்மையான, அன்பு நிறைந்த ஆனால் மிகவும் அபூரணமான கிரியைகளை எனக்கு நினைப்பூட்டியது. அவை குறைவுள்ளவை, பரிசுத்தமானவை அல்ல.

தேவனுக்காகப் பிரித்தெடுக்கப்பட்ட, அவரைப் போல வாழ வகையறுக்கப்பட்டிருக்கும் அந்த பரிசுத்தமான வாழ்வை வாழ நாம் எவ்வளவாய் ஏங்கினாலும் ,பரிசுத்தத்திற்கு பதிலாக,நாளுக்கு நாள் குறைவுகளே  நம்மிடம் காணப்படுகிறது.

 

2 தீமோத்தேயு 1:6-7ல், பவுல் தனது இளம் சீடன் தீமோத்தேயுவிடம் அவருடைய பரிசுத்த அழைப்பின்படி வாழ அவரை வலியுறுத்துகிறார். அப்போஸ்தலன் பின்னர் "[தேவன்]  நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும்....கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்." (வச. 9) என்று தெளிவுபடுத்தினார். இப்படிப்பட்ட வாழ்க்கை நம் குணத்தால் அல்ல, தேவனின் கிருபையாலேயே சாத்தியமாகும். இது, "ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட" (வச. 9) கிருபை என்று பவுல் தொடர்கிறார். தேவனின் கிருபையை ஏற்று, அவை அருளும் வல்லமையை அடித்தளமாக்கி வாழ முடியுமா?

பெற்றோர், கடமை, திருமணம், வேலை, அல்லது நம் அயலாரை நேசித்தல் என்று எதுவாக இருந்தாலும், தேவன் நம்மை ஒரு பரிசுத்த வாழ்க்கைக்கு அழைக்கிறார் .நாம் பரிபூரணமாக இருக்க முயல்வதால் அல்ல, மாறாக அவருடைய கிருபையால்.

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

 கிறிஸ்துவுடன் ஆழமான நட்பு

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள க்ரைஸ்ட் கல்லூரியின் சிற்றாலயத்தில் உள்ள நினைவுச்சின்னம், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த “இணைபிரியா நண்பர்களாகிய" ஜான் ஃபின்ச் மற்றும் தாமஸ் பெயின்ஸ் என்ற மருத்துவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இருவரும் மருத்துவ ஆராய்ச்சியில் ஒன்றாக பணியாற்றியவர்கள் மற்றும் அரசாங்க பயணங்களில் ஒன்றாக பயணித்தவர்கள். 1680 இல் பெயின்ஸ் இறந்தபோது, ஃபின்ச் 36 காலமாக “ஈருடல் ஓருயிராக” இருந்த அவர்களின் நட்புக்காக வருந்தினார். அவர்களுடைய நட்பில் அன்பு, உண்மை, அர்ப்பணிப்பு இருந்தது. 

இப்படிப்பட்ட நெருக்கமான நட்பு தாவீது ராஜாவுக்கும் யோனத்தானுக்கும் இருந்தது. அவர்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒருவரையொருவர் நேசித்தனர் (1 சாமுவேல் 20:41), மேலும் ஒருவருக்கொருவர் உடன்படிக்கையும் செய்தனர் (வ.8–17, 42). அவர்களின் நட்பில் உண்மையாக இருந்தனர் (1 சாமுவேல் 19:1–2; 20:13). தாவீது ராஜாவாவதற்காக, யோனத்தான் தனது உரிமையைத் தியாகம் செய்தார் (20:30-31; பார்க்க 23:15-18). யோனத்தான் மரித்தபோது, அவன் தன்மேல் வைத்திருந்த அன்பு " ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது" என்று தாவீது புலம்பினார் (2 சாமுவேல் 1:26). 

நட்பைத் திருமணத்துடன் ஒப்பிடுவது இன்று நமக்குக் கடினமாயிருக்கலாம், ஆனால் ஃபின்ச் மற்றும் பெயின்ஸ், தாவீது மற்றும் யோனத்தான் போன்ற நட்புகள், நம் சொந்த வாழ்வில் நட்பை அதிக ஆழப்படுத்த ஊக்குவிக்கிறது. இயேசுவும் தம்முடைய மார்பில் சாய தமது நண்பர்களை ஏற்றுக்கொண்டார் (யோவான் 13:23-25). அவர் காட்டும் உண்மை, நம்பகத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு நாம் ஒன்றாக உருவாக்கும் ஆழமான நட்பின் அடித்தளமாக இருக்கட்டும். 

கிறிஸ்துவுக்கு பூரணமாய் சரணடைதல்

1920 ஆம் ஆண்டில், ஒரு சீன போதகரின் ஆறாவது மகனான ஜான் சுங், அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க உதவித்தொகை பெற்றார். அவர் உயர்ந்த மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார். முதுகலை படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றார். ஆனால் அவர் தனது படிப்பைத் தொடரும்போது, தேவனை விட்டு விலகிச் சென்றார். பின்னர், 1927இல் ஒரு இரவு, அவர் தனது வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தார் மற்றும் ஒரு போதகராகும் அழைப்பைப் பெற்றார்.

பல அதிக ஊதியம் பெறும் வாய்ப்புகள் அவருக்கு சீனாவில் மீண்டும் காத்திருந்தன. ஆனால் அவருடைய இலட்சியங்களை ஒதுக்கி வைக்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டார். அவரது அர்ப்பணிப்பின் அடையாளமாக, அவர் தனது பெற்றோருக்கு கனம்செலுத்தும் நோக்கத்தோடு தனது பிஎச்டி சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற அனைத்து விருதுகளையும் கடலில் வீசினார்.

தம்முடைய சீடராக மாறுவது பற்றி இயேசு சொன்னதை ஜான் சங் புரிந்துகொண்டார்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36). நாம் நம்மையே வெறுத்து, கிறிஸ்துவையும் அவருடைய வழிநடத்துதலையும் பின்பற்றுவதற்காக நமது பழைய வாழ்க்கையை விட்டு மனம்திரும்பும்போது (வச. 34-35), அவரைப் பின்பற்றுவதிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் தனிப்பட்ட ஆசைகளையும் பொருள் ஆதாயத்தையும் தியாகம் செய்ய அவசியமாகலாம்.

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளாக, ஜான் தனது தேவன் கொடுத்த பணியை முழு மனதுடன் நிறைவேற்றினார். சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு நற்செய்தியை அறிவித்தார். நாம் எப்படி? நாம் பிரசங்கிகளாகவோ அல்லது மிஷனரிகளாகவோ இருக்க அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை எங்கு ஊழியம் செய்ய அழைக்கிறாரோ, அவருடைய ஆவி நம்மில் கிரியை செய்வதால், நாம் அவருக்கு முழுமையாக சரணடைவோமாக. 

- ஜாஸ்மின் கோ

இயேசு நம் ராஜா

உலகின் மிக வெப்பம் மிகுந்த மற்றும் வறண்ட நாடுகள் ஒன்றில் எண்ணெய் தோண்டும் போது,குழுக்கள் மிகப்பெரிய நிலத்தடி நீர் அமைப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். எனவே, 1983 ஆம் ஆண்டில், “மனிதனால் உருவாக்கப்பட்ட சிறப்பான நதி திட்டம்” தொடங்கப்பட்டது. அதின் மூலம் தண்ணீர் தேவைப்படும் நகரங்களுக்கு பெரிய குழாய் மூலம் நல்ல தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டது. திட்டம் துவக்கப்படுகிற இடத்தில் உள்ள ஒரு பதாகத்தில், “இங்கிருந்து ஜீவத் தண்ணீர் பாய்கிறது” என்று எழுதப்பட்டிருந்தது.

ஏசாயா தீர்க்கதரிசி, வனாந்திரத்தில் பாய்ந்தோடும் நீர்க்கால்களை எதிர்கால நீதியுள்ள ராஜாவை விவரிக்க பயன்படுத்துகிறார் (ஏசாயா 32). ராஜாக்களும் அதிபதிகளும் நீதியோடும் நியாயத்தோடும் அரசாளும்போது, அது “வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்” (வச. 2) இருப்பார்கள். சில ஆட்சியாளர்கள் கொடுப்பதற்குப் பதிலாக பறித்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இருப்பினும், தேவனை கனம்பண்ணும் தலைவர் மக்களுக்கு தங்குமிடம், அடைக்கலம், புத்துணர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டு வருபவராயிருக்கிறார். “நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்” (வச. 17) என்று ஏசாயா குறிப்பிடுகிறார்.

ஏசாயாவின் நம்பிக்கையான வார்த்தைகள், “கர்த்தர் தாமே.. இறங்கிவருவார்; நாமும்... எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1 தெசலோனிக்கேயர் 4:16-17) என்று இயேசுவில் தன் நிறைவேறுதலைக் கண்டது. “மனிதனால் உருவாக்கப்பட்ட சிறப்பான நதி திட்டம்” மனிதனால் தோற்றுவிக்கப்பட்டது. என்றாவது ஒரு நாள் அந்த நீர் தேக்கம் வறண்டு போகும். ஆனால் நம் நீதியுள்ள ராஜா, ஒருபோதும் வறண்டு போகாத புத்துணர்ச்சியையும் ஜீவத் தண்ணீரையும் தருகிறார். 

 

- கேரன் பிம்போ