எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

Daniel Ryan Dayகட்டுரைகள்

ஒழுங்குபடுத்தும் அன்பு

அவள் கதவை வேகமாக அடைத்தாள். மீண்டும் அதையே செய்தாள். நான் சுத்தியலையும் ஸ்கூருட்ரைவரையும் எடுத்துக்கொண்டு என் மகளுடைய அறைக்கு சென்று, “செல்லமே, நீ உன் கோபத்தை கட்டுப்படுத்தப் பழகவேண்டும்” என்று மென்மையாக சொன்னேன். சொல்லிவிட்டு அவளுடைய அறைக் கதவை கழட்டி கொண்டுபோய்விட்டேன். கதவை தற்காலிகமாக கழட்டிக் கொண்டுபோவதின் மூலம் சுயக்கட்டுப்பாட்டின் அவசியத்தை அவள் அறிந்துகொள்வாள் என நம்பினேன். 

நீதிமொழிகள் 3:11-12இல் ஞானி, கர்த்தருடைய சிட்சையை ஏற்றுக்கொள்ளும்படிக்கு அறைக்கூவல் விடுக்கிறார். “சிட்சை” என்கிற வார்த்தையை “திருத்தம்” என்று மொழிபெயர்க்கக்கூடும். அன்பான நல்ல தேவன், அவருடைய ஆவியின் மூலமும் வசனத்தின் மூலமும் நம்மை பாதிக்கும் சுபாவங்களை திருத்தும்படிக்கு பேசுகிறார். தேவனுடைய திருத்துதல் என்பது உறவுரீதியாய் அவருடைய அன்பில் ஊன்றப்பட்டதும் நமக்கு நன்மை செய்யவேண்டும் என்னும் அவருடைய எண்ணத்தையும் பிரதிபலிக்கிறது. சில நேரம் அது நம் செய்கையின் விளைவுபோல் தோன்றும். சிலவேளைகளில் வேறொரு நபரைக் கொண்டு நம்முடைய பிழைகளை தேவன் திருத்துவார். அது நமக்கு எப்போதும் சாதகமாய் இல்லாததுபோல் தோன்றும். ஆனால் தேவனுடைய திருத்துதல் ஒரு வரப்பிரசாதம். 

ஆனால் அதை நாம் எல்லா வேளைகளிலும் அப்படி பார்ப்பதில்லை. “கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே” என்று ஞானி சொல்லுகிறான் (வச. 11). தேவனுடைய சிட்சையைக் கண்டு சிலவேளைகளில் நாம் பயப்படுகிறோம். சிலவேளைகளில் தவறாய் சம்பவிக்கிற காரியங்களை கர்த்தருடைய சிட்சை என்று தவறாய் கருதிவிடுகிறோம். ஆனால் நம்மை நேசிக்கும் தகப்பனுடைய இருதயத்திற்கு அது தூரமாயுள்ளது. அவர் நம்மை நேசிப்பதினால் நம்மை திருத்துகிறார். 

தேவனுடைய சிட்சைக்கு பயப்படாமல் அதை ஏற்றுக்கொள்ளப் பழகுவோம். நம்மைத் திருத்தும் தேவனுடைய சத்தத்தைக் கேட்டாலோ அல்லது வேதத்தை படித்து குற்றவுணர்வடைந்தாலோ நம்மில் வாழுகிற தேவன் நமக்கு நன்மையையே செய்வார் என்று நன்றி சொல்லுவோம். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஒரு நல்ல திருப்பம்

இந்தியாவில் "பாரத் ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ்" என்று அழைக்கப்படும் சாரணர் இயக்கம், “தினமும் ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்து" என்ற மிகவும் சுவாரஸ்யமான முழக்கத்தைக் கொண்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் அதன் உறுப்பினர்கள் ஒருவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவர்களின் நாட்டை சிறந்த இடமாக மாற்றும் கருணை மற்றும் உதவியின் சிறிய செயலாகவும் இருக்கலாம். அந்த "நல்ல செயல்" எதுவென்று என்பது பற்றி எந்த விளக்கமும் இல்லை என்றாலும், மற்றொரு நபரின் வாழ்க்கையைச் சற்றே எளிதாக்குவதில் அதற்கு ஏதாகிலும் தொடர்பு இருக்க வேண்டுமென்றே பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

சங்கீதம் 90:12, “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்" என்கிறது. ஆரம்பத்தில் இது வயதானவர்களுக்கான அறிவுரையாகத் தோன்றலாம். இருப்பினும், அதைக் கூர்ந்து படிக்கும்போது, இது சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என்று அனைவருக்கும் பொருந்தும் என்பதை நாம புரிந்துகொள்கிறோம். நமது ஆயுட்காலம் எழுபது ஆண்டுகள் என்று சங்கீதக்காரன் கூறுகிறார். முதலில், இந்த ஆண்டுகளின் எண்ணிக்கை மனித வாழ்க்கையின் நீண்ட ஆயுளைக் குறிக்கிறது போலத் தோன்றினாலும், கூர்ந்து கவனித்ததில், சங்கீதக்காரன் உண்மையில் ஒரு நபரின் ஆயுட்காலம் பற்றிக் குறிப்பிடவில்லை, ஆனால் அவர் நம் பூமிக்குரிய வாழ்நாட்களை நோக்கம் வாய்ந்தவையாக இருக்குமாறு உறுதிப்படுத்திக் கொள்ளும்படி கேட்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.

சிறிய கருணை செயல், கண்ணியமான மரியாதை, உதவி செய்வதற்கான ஆயத்தம் மற்றும் பிறரை அவர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் பாரபட்சமின்றி நடத்துதல் ஆகியவை நம் நாட்களைச் சரியாக வாழ சில எளிய வழிகள். பூமியில் இருக்கும் நேரத்தை நம்மால் ஒருபோதும் கணிக்க முடியாவிட்டாலும், ஒவ்வொரு நாளும் நன்மை செய்வதன் மூலம் முடிந்தவரைத் தாக்கத்தை விட்டுசெல்ல நாம் தீர்மானிக்கலாம். நாம் கிறிஸ்துவில் வளர்ந்து, அவருடைய சுபாவங்களை வெளிப்படுத்தும்போது, ஒவ்வொரு நாளையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக்குவோம். 

 

விசுவாசத்தில் அடியெடுத்து வைத்தல்

சிறப்புப் பேச்சாளர் தேவனை நம்பி “நதியில் அடியெடுத்து வைப்பதன்” ஞானத்தைப் பற்றி பேசினார். தேவனை நம்பிய ஒரு போதகரைப் பற்றி அவர் கூறினார். அவருடைய நாட்டில் புதிய சட்டம் இருந்தபோதிலும் ஒரு பிரசங்கத்தில் வேதாகமத்தின் உண்மைகளைப் பேசத் தேர்ந்தெடுத்தார். அவர் அந்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு முப்பது நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவரது வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் வேதாகமத்தைக் குறித்த தனிப்பட்ட விளக்கத்தை அளிக்கவும் மற்றவர்களைப் பின்பற்றும்படி வலியுறுத்தவும் அவருக்கு உரிமை இருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உடன்படிக்கைப் பேழையைச் சுமக்கும் ஆசாரியர்களும் ஒரு தேர்வு செய்ய வேண்டியிருந்தது —தண்ணீரில் இறங்குவது அல்லது கரையில் தங்குவது. எகிப்திலிருந்து தப்பித்த இஸ்ரவேலர்கள் நாற்பது வருடங்கள் வனாந்திரத்தில் அலைந்து திரிந்தனர். இப்போது அவர்கள் யோர்தான் நதியின்; கரையில் நின்றார்கள். அது வெள்ளப்பெருக்கெடுக்கும் ஆபத்தான நிலையில் இருந்தது. ஆனால் அவர்கள் துணிந்து இறங்கினர். தேவன் தண்ணீரை குறையச் செய்தார்: “ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று..” (யோசுவா 3:15-16).

நாம் நம் வாழ்வில் தேவனை நம்பும்போது, வேதாகமத்தின் உண்மைகளைப் பேசுவதைத் தேர்ந்தெடுத்தாலும் அல்லது தெரியாத பிரதேசத்தில் ஒரு அடி எடுத்து வைப்பதைத் தேர்ந்தெடுத்தாலும், முன்னேறுவதற்கு ஆண்டவா் நமக்கு தைரியத்தைத் தருகிறார். போதகரின் விசாரணையின் போது, நீதிமன்றம் அவரது பிரசங்கத்தைக் கேட்பதன் மூலம் நற்செய்தியைக் கேட்டது. மேலும், யோசுவா புத்தகத்தில் இஸ்ரவேலர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் பாதுகாப்பாகக் கடந்து, வருங்கால சந்ததியினருடன் தேவனுடைய வல்லமையைக் குறித்து பகிர்ந்து கொண்டனர் (வச. 17; 4:24).

விசுவாசத்தில் நாம் துணிந்து அடியெடுத்து வைத்தால், தேவன் மற்றதைப் பார்த்துக்கொள்வார். 

 

கிறிஸ்துவுக்குள் உண்மையை பேசுதல்

ஒரு நபர் தனது தனிப்பட்ட போக்குவரத்து டிக்கெட்டுகளை பொய் சொல்லி பெறுதில் வல்லவர். அவர் நீதிமன்றத்தில் பல்வேறு நீதிபதிகள் முன் ஆஜரானபோது, “நான் என் சிநேகிதியுடன் சண்டையிட்டேன், அவள் எனக்குத் தெரியாமல் என் காரை எடுத்துச் சென்றுவிட்டாள்” என்று கதை சொல்லுவார். மேலும், பணியில் இருந்தபோது தவறான நடத்தைக்காக அவர் பலமுறை கண்டிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர்கள் இறுதியாக அவர் மீது நான்கு பொய்ச் சாட்சியங்கள் மற்றும் ஐந்து மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இந்த மனிதருக்கு, பொய் சொல்வது வாழ்நாள் பழக்கமாகிவிட்டது.

இதற்கு நேர்மாறாக, உண்மையைச் சொல்வது கிறிஸ்தவர்களுக்கு ஒரு முக்கியமான பழக்கம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். எபேசியர்களுக்கு அவர்கள் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்படைப்பதன் மூலம் பழைய வாழ்க்கை முறையை விட்டுவிடுவார்கள் என்று அவர் நினைப்பூட்டினார் (எபேசியர் 2:1-5). இப்போது, அவர்கள் புதிய நபர்களைப் போல வாழ வேண்டும், அவர்களின் வாழ்க்கையில் குறிப்பிட்ட செயல்களை இணைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் “பொய்யைக் களைந்து,” “அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்” (4:25) என்று ஆலோசனைக் கொடுக்கப்படுகிறது. அது திருச்சபையின் ஒற்றுமையைப் பாதுகாக்கும், எபேசியர்கள் எப்போதும் தங்கள் வார்த்தைகள் செயல்கள் மூலம் “மற்றவர்களைக் கட்டியெழுப்புவதாக” இருக்க வேண்டும் (வச. 29).

பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுவது போல (வச. 3-4), இயேசுவின் விசுவாசிகளாகிய நாம் வார்த்தைகளிலும் செயல்களிலும் சத்தியத்திற்காக பிரயாசப்படுவோம். அப்போது திருச்சபை ஒன்றுபடும், தேவன் மகிமைப்படுத்தப்படுவார்.