எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ப்ரெண்ட் ஹகெட்கட்டுரைகள்

வானவில்களும் தேவனின் வாக்குகளும்

நயாகரா நீர்வீழ்ச்சியின் அற்புதமான ஆற்றலை நான் பார்த்துக் கொண்டிருந்த போது, ​​மற்ற சுற்றுலாப் பயணிகள் திடீரென புகைப்படம் எடுக்கத் தொடங்கியதைக் கவனித்தேன். அதே திசையில் பார்த்தபோது, ​​ஒரு வானவில் தோன்றியதைக் கண்டேன் , அது ஆற்றின் குறுக்கே வளைந்திருந்தது. இது குதிரைக் குளம்பு வடிவ கனேடிய நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் தொடங்கி, அமெரிக்க நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் முடிவடைவது போல் தோன்றியது.

உண்மையில், வானவில்லுக்கு முடிவே இல்லை. வானவில் என்பது ஒரு முழு வட்டம், நான் ஒருமுறை மட்டுமே பார்த்திருக்கிறேன். நான் விமானத்தின் ஜன்னலில் பார்த்துக் கொண்டிருந்தேன், சூரியன் சரியான திசையில் பிரகாசித்து, மேகங்களுக்கு மேலே ஒரு முழு வட்ட வானவில்லை வெளிக்காட்டியது. விமானம் திரும்பி, வட்டம் மறையும் வரை, இந்த  காட்சியால் பரவசமாக அமர்ந்திருந்தேன்.

நான் சிந்திக்கும்படி, அந்த வானவில் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. தேவனுக்கு ஆரம்பமும் முடிவும் இல்லை, நாம் எங்கிருந்தாலும் அவர் தம் வாக்குத்தத்தங்களை நமக்கு வெளிப்படுத்துகிறார். முடிவில்லாத, நம் நித்திய தேவன் "[அவரது] வில்லை மேகத்தில் வைத்(தார்)தேன்" (ஆதியாகமம் 9:13). "எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு" (வ.15) அது வாக்குத்தத்தமாக இருந்தது. இன்றும் கூட, நம் சிருஷ்டிகர் அந்த வாக்குத்தத்தத்தின் நினைவூட்டலை அவருடைய படைப்பாகிய நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் (வ.13-16).

ஏசாயா 40:28, “பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன்.... அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது” என்கிறது. என்ன ஒரு அற்புதமான சிந்தனை! தம் வாக்குத்தத்தத்தைக் காப்பவரைப் பற்றி அறிந்துகொள்ள நமக்கு நித்தியமே இருக்கும், மேலும் அவருடைய புத்தியின் ஆழத்தை நாம் ஒருபோதும் அடைய மாட்டோம்.

 

வேதவசனங்கள் வெளிப்படுத்துவது என்ன

ஏப்ரல் 1817 இல், இங்கிலாந்தின் க்ளௌசெஸ்டர்ஷையரில் ஒரு தன்னிலையிழந்த இளம் பெண், அயல்நாட்டு ஆடைகளை அணிந்துகொண்டு, புரியாத பாஷையில் பேசிக்கொண்டிருந்தாள். அவளைப்  பிச்சைக்காரி என்று கருதி, அதிகாரிகள் அவளைச் சிறையில் அடைத்தனர். இருப்பினும், அவள் ஜாவாசு தீவைச் சேர்ந்த இளவரசி கராபூ என்று சிறை அதிகாரிகளை நம்ப வைத்தாள். உண்மையில் அவள் மேரி வில்காக்ஸ் என்ற பணிப்பெண் என்பதை விருந்தினர் மாளிகை பணியாளர் ஒருவர் வெளிப்படுத்தும் வரை சமூகம் அவளை ராணிபோல பத்து வாரங்கள்  நடத்தியது.

இந்த இளம் பெண் எப்படி ஒரு முழு சமூகத்தையும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு ஏமாற்றினார் என்று நாம் ஆச்சரியப்படலாம். ஆனால், 2 யோவான் புத்தகம் ஏமாற்றுவது ஒன்றும் புதிதல்ல என்று நம்மை எச்சரிக்கிறது, அது குறிப்பிடுவது போல் "அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்” (1:7). இவர்கள், இயேசு கிறிஸ்து "மாம்சத்தில்" வந்தார் என்பதை மறுப்பவர்கள் (வ.7), அல்லது கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிறவர்கள் (வ.9)  வேதாகமம் இன்று நமக்குப் போதுமானதாக இல்லை என்று அறிவிக்கிறார்கள். இந்த இரண்டு வகையான வஞ்சகர்களும் நாம் நம் "செய்கைகளின் பலனை" (வ.8) இழந்துபோகும்படி செய்யலாம் மற்றும் அவர்களின் துர்க்கிரியைகளுக்குப் பங்குள்ளவனாயிருக்கும்படி நம்மை ஏமாற்றலாம் (வ.11).

யாரும் ஏமாற்றப்படுவதை விரும்புவதில்லை. க்ளௌசெஸ்டர்ஷையர் மக்கள், சில ஆடைகள் மற்றும் உணவுகள் தவிர அதிகம் இழக்கவில்லை. ஆனால் பாவம் மற்றும் வஞ்சகத்தின் விளைவுகள் நம்மை அச்சுறுத்திக்கொண்டே இருக்கின்றன என்று வேதாகமம் சொல்கிறது. நாம் வேதாகமத்தில் ஈடுபாடு கொள்ளுகையில், ​​“அவருடைய கற்பனைகளின்படி நடப்ப(தால்)தே” (வ.6) வஞ்சகத்திற்குத் தப்பிக்கத் தேவன் நமக்கு உதவுவார்.

தேவனுடைய வாக்குகளால் ஊக்கமடைதல்

மருத்துவமனையில் நீண்ட நாள் அது. இளமையில் ஜொலித்த அந்த பத்தொன்பது வயது இளைஞனைப் பாதித்த நோய்க்கு இன்னும் பதில் இல்லை. வீட்டிற்குத் திரும்பிய குடும்பத்தினர் தளர்ந்திருந்தனர். அவர்களுக்கு ஆச்சரியமாக, அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு பெட்டியின் முன்புறத்தில் ஏசாயா 43:2 அச்சிடப்பட்டு, படியில் வைக்கப்பட்டிருந்தது. உள்ளே, நண்பர்கள் கையால் எழுதப்பட்ட பலதரப்பட்ட ஊக்கமளிக்கும் வேதாகம வசனங்கள் இருந்தன. அடுத்த மணிநேரம் வேதவசனங்களாலும், குடும்ப நண்பர்களின் சிந்தனையாக்கச் செயலாலும் உற்சாகம் உண்டானது.

கடினமான நேரங்கள் அல்லது குடும்ப பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள்,  எப்போதும் ஒரு ஆத்மார்த்தமான ஊக்கத்தை உபயோகிக்கலாம். அதுதான் வேத வசனங்கள். ஒரு நீண்ட பகுதியோ அல்லது ஒரே வசனமோ; உங்களை, ஒரு நண்பரை அல்லது குடும்ப உறுப்பினரை ஊக்குவிக்கும். தனிநபருக்காகவோ அல்லது அனைவருக்குமென்றோ பெறக்கூடிய உற்சாக துளிகளால் ஏசாயா 43 நிறைந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிந்தனைகளை அதிலே கவனியுங்கள்: கர்த்தர் " உன்னைச் சிருஷ்டித்தவர்", "உன்னை உருவாக்கினவர்", "உன்னை மீட்டவர்" மற்றும் "உன்னைப் பேர்சொல்லி அழைத்தவர்" (வ.1). கர்த்தர் "உன்னோடு இருப்பார்" (வ. 2), அவர் "இஸ்ரவேலின் பரிசுத்தர்" மற்றும் அவர் நமது "இரட்சகர்" (வ. 3).

தேவனின் வாக்குகளை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது, ​​அவை உங்களை ஊக்குவிக்கட்டும். உங்களுக்குத் தேவையானதை அவர் வழங்குகையில், நீங்கள் வேறொருவரை ஊக்குவிக்கலாம். அந்த வசனப் பெட்டியைச் செய்ய அதிகம் செலவாகவில்லை, ஆனால் அதன் தாக்கம் விலையேறப்பெற்றது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த வசன அட்டைகளில் சில இன்னும் அந்த குடும்பத்தால் போற்றப்படுகின்றன.

மறுபடியும் பிறந்தீர்களா?

"மறுபடியும் பிறப்பதா? அதற்கு என்ன பொருள்? "நான் இதற்கு முன்பு அந்த வார்த்தையைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை" அடக்க ஆராதனையின் இயக்குநர் கேட்டார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மரித்தவரின் மகன், யோவான் 3-ம் அதிகாரத்தின் வார்த்தைகளின் மூலம் அதன் அர்த்தம் என்ன என்பதை விளக்கினார்.

"இது, நாம் அனைவரும் இந்த உலகில் ஒரு முறை பிறந்தோம் என்ற நிஜத்தைப் பற்றியது. நமது நல்ல செயல்களைத் தீய செயல்களுக்கு எதிராக எடைபோட, தேவனிடம் எந்த ஒரு மந்திர தராசும் இல்லை. நாம் ஆவியினால் பிறக்க வேண்டும் என்று தேவன் கோருகிறார். அதனால்தான் இயேசு சிலுவையில் மரித்தார்; அவர் நம்முடைய பாவங்களுக்கான கிரயத்தைச் செலுத்தினார், மேலும் அவருடன் நித்திய ஜீவனைப் பெறுவதைச் சாத்தியமாக்கினார். இதை நமது சுயத்தால் செய்ய முடியாது" என்று அவர் கூறினார்.

யோவான் 3 இல், நிக்கொதேமு உண்மையில் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டாரா என்று சந்தேகிக்கத் தொடங்கினார். வேத வாக்கியங்களில் தேறின போதகர் அவர் (வ. 1), இயேசு வித்தியாசமானவர் என்பதையும் அவருடைய போதனைக்கு அதிகாரம் இருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டார் (வ. 2). இதை அவர் சோதிக்க விரும்பினார், எனவே அவர் ஒரு இரவு கிறிஸ்துவை அணுகி காரியத்தைக் கண்டுகொண்டார். "நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டுமென்று" (வ. 7) என்ற இயேசுவின் கூற்றை நிக்கொதேமு ஏற்றுக்கொண்டு விசுவாசித்திருக்க வேண்டும், ஏனெனில் சிலுவையில் அறையப்பட்ட பிறகு (19:39) இரட்சகரின் உடலை அடக்கம் செய்ய அவர் உதவினார்.

ஆறுதல் கூட்டத்தை நடத்தியவர்  வீட்டிற்குச் சென்று யோவானின் நற்செய்தியின் மூன்றாவது அத்தியாயத்தைப் படிக்க ஒப்புக்கொண்டார். அவரிடம் பேசிய மகனைப் போல, இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்று, அவர் நமக்கு உதவும்போது பிறருடன் பகிர்ந்து கொள்வோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.  

தேவனின் ஆறுதலான அர்ப்பணிப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பம் அமெரிக்காவின் நான்கு மாநிலங்கள் சந்திக்கும் புள்ளியில் எங்கள் குடும்பம் ஆளுக்கொரு திசையாய் நின்றோம். என் கணவர் அரிசோனா எனக் குறிக்கப்பட்ட பிரிவில் நின்றார். எங்கள் மூத்த மகன், ஏ.ஜே., யூட்டாவிற்குள் நுழைந்தார். நாங்கள் கொலராடோவிற்குள் நுழைந்தபோது எங்கள் இளைய மகன் சேவியர் என் கையைப் பிடித்தார். நான் நியூ மெக்சிகோவிற்குச் சென்றபோது, சேவியர், “அம்மா, நீங்கள் என்னை கொலராடோவில் விட்டுச் சென்றீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை!” என்று சொன்னான். எங்கள் சிரிப்பு நான்கு வெவ்வேறு மாநிலங்களில் கேட்டதால் நாங்கள் ஒன்றாகவும் பிரிந்தும் இருந்தோம். இப்போது எங்கள் வளர்ந்த மகன்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால், அவர்கள் எங்கு சென்றாலும் அவருடைய பிள்ளைகள் அனைவரோடுங்கூட தேவன் இருப்பேன் என்று சொன்ன வாக்குத்தத்தத்தை நான் ஆழமாக நம்புகிறேன்.  
மோசேயின் மரணத்திற்குப் பிறகு, தேவன் யோசுவாவை தலைமைத்துவத்திற்கு அழைத்தார். மேலும் இஸ்ரவேலரின் எல்லையை விரிவுபடுத்தியபோது அவரது பிரசன்னத்தை உறுதிசெய்தார் (யோசுவா 1:1-4). தேவன், “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 5) என்று சொன்னார். யோசுவா தம்முடைய ஜனங்களின் புதிய தலைவராக சந்தேகத்துடனும் பயத்துடனும் போராடுவான் என்பதை அறிந்த தேவன், இந்த வார்த்தைகளில் நம்பிக்கையின் அடித்தளத்தை உருவாக்கினார்: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (வச. 9). 
தேவன் நம்மை அல்லது நம் அன்புக்குரியவர்களை எங்கு அழைத்துச் சென்றாலும், கடினமான காலங்களில் கூட, அவருடைய மிகவும் ஆறுதலான அர்ப்பணிப்பு அவர் எப்போதும் நம்மோடு இருப்பதை உறுதிப்படுத்துகிறது.