எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆர்தர் ஜாக்சன்கட்டுரைகள்

தேவனின் மகத்துவங்களை சொல்லுங்கள்

எங்கள் சபையின் சாட்சி நேரத்தில், ஜனங்கள் தங்கள் வாழ்க்கையில் தேவன் எவ்வாறு கிரியை செய்தார் என்பதை சாட்சியாய் பகிருவார்கள். ஆன்ட்டி அல்லது சகோதரி லாங்ஃபோர்ட் என்று எங்கள் சபைக் குடும்பத்தினரால் அறியப்பட்ட அவர், தேவனை மனதார துதிப்பதில் பெயர்பெற்றவர். அவர் தனது இரட்சிப்பின் சாட்சியை பகிர்ந்துகொண்டபோது, ஒரு அழகான ஊழியத்தை செய்வார் என்று எவரும் எதிர்பார்க்கலாம். ஆம்! தன்னுடைய ஜீவியத்தை கிருபையாய் மாற்றி தேவனுக்கு துதி செலுத்த அவருடைய இருதயம் துடித்தது.  
இதேபோல், 66 ஆம் சங்கீதத்தை எழுதிய சங்கீதக்காரனின் சாட்சியில், தேவன் தன்னுடைய ஜனங்களுக்கு செய்த நன்மைகளை எண்ணி அவருடைய இருதயம் பூரிப்படைகிறது. “தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; அவர் மனுப்புத்திரரிடத்தில் நடப்பிங்குங் கிரியையில் பயங்கரமானவர்” (வச. 5). அற்புதமான விதத்தில் அவர்களை தேவன் நடத்திவந்தார் (வச. 6). பாதுகாத்தல் (வச. 9) மற்றும் உபத்திரவம் மற்றும் அனுபவங்கள் ஆகியவற்றின் பாதையில் கடந்து நன்மையான இடத்தை அவருடைய ஜனங்கள் அடைந்திருக்கின்றனர் (வச. 10-12). கிறிஸ்தவ விசுவாசிகளுடன் நமக்கு சில பொதுவான வாழ்க்கை அனுபவங்கள் இருப்பினும், ஒவ்வொருவருடைய வாழ்க்கைப் பயணத்திலும் பிரத்யேகமான அனுபவங்கள் அவரவர்க்கு கிடைக்கின்றன. தேவன் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்திக் காண்பித்த தருணங்கள் உங்கள் வாழ்க்கையில் உண்டா? உங்கள் வாழ்க்கையில் அவர் எவ்வாறு கிரியை செய்தார் என்பதைக் கேட்க வேண்டிய மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மதிப்புக்குரியது. “தேவனுக்கு பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்” (வச. 16).  
 

அனைவருக்கும் ஒரே கதவு

எனது குழந்தைப் பருவத்தில் இருந்த உணவகத்தின் நெறிமுறைகள் 1950களின் பிற்பகுதியிலும் 1960களின் முற்பகுதியிலும் சமூக மற்றும் இன இயக்கவியலுக்கு இசைவாக இருந்தன.

சமையலறை உதவியாளர் மேரி, சமையல்காரர் மற்றும் என்னைப் போன்று பாத்திரங்களைக் கழுவுபவர்கள் எல்லாம் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் உணவுபரிமாறும் இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் வெள்ளையர்கள். கறுப்பின வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்யலாம். ஆனால் அவர்கள் அதை பின் வாசலில் வந்து வாங்கிக்கொள்ளவேண்டும். இத்தகைய கொள்கைகள் அந்த சகாப்தத்தில் கறுப்பர்களின் சமத்துவமற்ற சிகிச்சையை வலுப்படுத்தியது. அந்த காலத்தைக் கடந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டாலும், தேவனின்; சாயலில் உருவாக்கப்பட்ட மக்களாக நாம் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதில் இன்னும் வளர்ச்சிக்கு இடம் உள்ளது.

ரோமர் 10:8-13 போன்ற வேதப்பகுதிகள், தேவனுடைய குடும்பத்திற்கு அனைவருக்கும் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளதைக் காண்பிக்கிறது. அங்கே பின் கதவு இல்லை. சுத்திகரிப்பு மற்றும் மன்னிப்புக்காக இயேசுவின் மரணத்தை நம்புவதன் மூலம் அந்த வாசலின் வழியாய் எவரும் பிரவேசிக்கலாம். இந்த மறுரூப அனுபவத்திற்கு வேதம் கொடுக்கும் பெயர் “இரட்சிப்பு” (வச. 9,13). உங்கள் சமூகசூழ்நிலை அல்லது இனநிலை அல்லது மற்றவர்களின் நிலை ஆகியவை சமன்பாட்டிற்கு காரணியாக இல்லை. “அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்” (வச. 11-12). இயேசுவைக் குறித்த வேதத்தின் சாட்சியை நீங்கள் உங்கள் இருதயத்தில் நம்புகிறீர்களா? இந்த குடும்பத்திற்கு நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்!

அதிகப்படியான தயவு

துரித உணவு ஹோட்டல் ஊழியர் கெவின் ஃபோர்டு இருபத்தேழு வருடங்களில் ஒரு மாற்றத்தையும் தவறவிடவில்லை. அவரது பல ஆண்டுகள் செய்த சேவையை நினைவுகூரும் வகையில் அவர் பெற்ற ஒரு எளிமையான பரிசுக்காக அவரது பணிவான நன்றியைக் காட்டும் வீடியோ வெளியான பிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு தங்கள் பொருளாதாரத்தின் மூலம் அன்பை காண்பிக்க ஒன்று திரண்டனர். “இது ஒரு கனவு நனவாகும் தருணம்” என்று அவர் அதைக் குறித்து சொல்லுகிறார். ஒரே வாரத்தில் 2,50,000 டாலர்கள் நிதி திரட்டப்பட்டது.

சிறைபிடித்து கொண்டுபோகப்பட்ட யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனும் மிகவும் இரக்கமுள்ளவனாயிருந்தான். பாபிலோனிய ராஜாவின் கருணையால் அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்பு அவர் முப்பத்தேழு ஆண்டுகள் சிறையில் அடைபட்டு இருந்தார். “யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி... அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய ஆசனத்தைத் தன்னோடே பாபிலோனில் இருந்த ராஜாக்களுடைய ஆசனங்களுக்கு மேலாகவைத்து” (எரேமியா 52:31-32) அவனை கனப்படுத்தினான். யோயாக்கீனுக்கு புதிய பதவியும், புதிய வஸ்திரமும், புதிய வீடும் கொடுக்கப்பட்டது. அவனுடைய புதிய வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.

இந்த கதையானது, கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் விசுவாசிக்கிற கிறிஸ்தவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும்போது அவர்களின் ஆவிக்குரிய ஜீவியத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதை சித்தரிக்கிறது. அவர்கள் மரண இருளிலிருந்து ஜீவனுக்கும் வெளிச்சத்துக்கும் கொண்டுவரப்படுவர். தேவனுடைய அதிகப்படியான இரக்கத்தினால் அவர்கள் தேவனுடைய குடும்பத்திற்கு வரவேற்கப்படுகிறார்கள்.

நம்பிக்கையுடன் தாழ்மைபடுதல்

ஆலய ஆராதனையின் முடிவில் போதகரின் அழைப்பின் பேரில், லாட்ரீஸ் முன்னோக்கிச் சென்றாள். சபைக்கு வாழ்த்துச் சொல்ல அவள் அழைக்கப்பட்டபோது, அவள் பேசிய கனமான மற்றும் அற்புதமான வார்த்தைகளுக்கு யாரும் தயாராக இல்லை. டிசம்பர் 2021ல் அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தை தாக்கிய சூறாவளியில் தன்னுடைய ஏழு குடும்ப உறுப்பினர்களை இழந்த பின்பு அங்கிருந்து இடம்பெயர்ந்தவள் இவள். “தேவன் என்னுடன் இருப்பதால் என்னால் இன்னும் சிரிக்க முடிகிறது,” என்று அவள் கூறினாள். போராட்டங்களால் நசுக்கப்பட்டாலும், அவளது சாட்சி, சவால்களோடு போராடிக்கொண்டிருக்கிறவர்களுக்கு வல்லமையுள்ள ஊக்கமாய் அமைந்தது.  
சங்கீதம் 22ல் (இயேசுவின் பாடுகளைச் சுட்டிக்காட்டும்) தாவீதின் வார்த்தைகள், தேவனால்; கைவிடப்பட்டதாக உணர்ந்து (வச. 1), மற்றவர்களால் இகழ்ந்து கேலி செய்யப்பட்ட (வச. 6–8), மற்றும் வேட்டையாடுபவர்களால் சூழப்பட்ட (வச. 12–13), பாதிக்கப்பட்ட மனிதனின் வார்த்தைகள். அவர் பலவீனமாகவும் ஒன்றுமில்லாமலும் உணர்ந்தார் (வச. 14-18). ஆனால் அவர் தன் நம்பிக்கையை கைவிடவில்லை. “ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்” (வச. 19) என்று தன் நம்பிக்கையை பிரதிபலிக்கிறார். நீங்கள் தற்போது சந்திக்கும் சவாலானது தாவீது அல்லது லாட்ரீஸ் போன்றவர்களுடைய சவால்களைப் போன்றல்லாமல் இருக்கலாம்; ஆனால் அவைகள் மெய்யானவைகள். மேலும் 24-ஆம் வசனத்தின் வார்த்தைகள் அர்த்தமுள்ளவை: “உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மைநோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.” தேவனுடைய உதவியை நாம் பெறும்போது, அவருடைய மகத்துவத்தை மற்றவர்கள் கேட்கும்பொருட்டு நாம் அறிவிக்க பிரயாசப்படுவோம் (வச. 22).  

என்னை சுத்திகரியும்

"என்னை சுத்தம் செய்!" என்ற வார்த்தைகள் எனது வாகனத்தில் எழுதப்படவில்லை என்றாலும், என் வாகனம் அதை வெளிப்படுத்தியது. எனவே, நான் கார் கழுவுவதற்குச் சென்றேன். சமீபத்திய பனிப்பொழிவின் காரணத்தினால், உப்பு நீர் நிறைந்த சாலைகளில் இருந்த மோசமான அசுத்தங்களிலிருந்து நிவாரணம் பெற விரும்பும் பிற ஓட்டுநர்களும் வந்து தங்கள் வாகனங்களைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். எங்களுக்கு முன்பே நீளமான வரிசையில் வாகனங்கள் சுத்தப்படுத்தப்படுவதற்காக இருந்தன. சேவையோ மெதுவாக இருந்தது. ஆனால் அக்காத்திருப்பு நல்லது. நான் ஒரு சுத்தமான வாகனத்துடன் புறப்பட முடிந்தது. சேவை தாமதத்தின் காரணமாக, கார் சுத்தம் செய்ததற்கான பணமும் இலவசமாக்கப்பட்டது! 
  
வேறொருவரின் செலவில் சுத்தம் செய்யப்பட்டது. இதுதான் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி. தேவன், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், நம் பாவங்களுக்கு மன்னிப்பை வாங்கித்தந்தார். வாழ்க்கையின் "அழுக்கு மற்றும் கறைகள்" நம்மில் ஒட்டிக்கொண்டிருக்கும்போது "குளிப்பதன்" அவசியத்தை நம்மில் யார் உணராமல் இருக்கிறோம்? எப்பொழுது நம் சுயநல எண்ணங்கள், செயல்கள் பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்கள் தேவனுடனான நம் அமைதியைப் பறித்திருக்கிறது? தாவீது சங்கீதம் 51ல், சோதனை தன்னை மேற்கொண்டபோது, தான் அழுததைக் குறிப்பிடுகிறார். ஆவிக்குரிய ஆலோசகர் தேவனுக்கு விரோதமான அவன் பாவத்தை அவனுக்கு உணர்த்திய போது (2 சாமுவேல் 12 பார்க்கவும்), அவன் தேவனிடம் "என்னை சுத்திகரியும்" என ஜெபிக்கிறான்: ”நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்."(வ.7). உங்களிடம் பாவம் மற்றும் குற்ற உணர்வு இருக்கிறதா? இயேசுவிடம் உங்கள் வழியை செவ்வைப்படுத்தி, இவ்வசனத்தை நினைவில் வையுங்கள்: "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் 
உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்". (| யோவான் 1:9)  

குறுச்செய்திகள், பிரச்சனைகள் மற்றும் ஜெயம்

ஜிம்மி, சமூக பிரச்சனைகள், அபாயங்கள், மற்றும் பிரச்சனைகள் நிறைந்திருக்கும் உலகத்தின் ஏழ்மையான நாட்டில் ஊழியம் செய்துகொண்டிருக்கும் தம்பதியினரை உற்சாகப் படுத்துவதற்காக அங்கு கடந்து சென்றார். அவர் அனுப்பிய குறுச்செய்திகளிலிருந்து அவர் கடந்துபோன கடினமான பாதைகளை நாங்கள் அறிந்துகொண்டோம்: “சரி நண்பர்களே, ஜெபத்தை ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. கடந்த இரண்டு மணி நேரத்தில் நாம் பத்து மைல் தூரத்தைக் கடந்திருக்கிறோம்... அதற்கிடையில் நம்முடைய கார் பன்னிரண்டு தரம் சூடாகிவிட்டது.” வாகன பிரச்சனைகளில் சிக்கி, ஐந்து மணி நேரமாய் அவருடைய செய்திக்காய் காத்திருந்தவர்களை சந்திக்க நள்ளிரவில் வந்து சேர்ந்தார். அதற்கு பின்பதாய் வித்தியாசமான குறுச்செய்திகளை காண நேர்ந்தது. “ஆச்சரியம், அழகான ஒரு ஐக்கியம்... ஜெபம் செய்துகொள்வதற்காக பன்னிரெண்டு பேர் ஒப்புக்கொடுத்து முன்னுக்கு வந்தார்கள். அது ஒரு வல்லமையான இரவாய் அமைந்தது.”  
தேவனுக்கு உண்மையாய் ஊழியம் செய்வது ஒரு சவால். எபிரெயர் 11ஆம் அதிகாரத்தில் இடம்பெற்றிருக்கும் விசுவாச வீரர்கள் இதை அங்கீகரித்துக்கொள்வார்கள். தங்கள் விசுவாசத்தினிமித்தம், சாதாரண மனிதர்கள் சங்கடமான பல சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கின்றனர். “வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்” (வச. 36). அந்த சவால்களை மேற்கொள்ளும்படிக்கு அவர்களுடைய விசுவாசம் அவர்களை நெருக்கி ஏவியது. நமக்கும் அப்படித்தான். நம் நம்பிக்கையை நம்பி வாழ்வது நம்மை ஆபத்தான இடங்களுக்கோ அல்லது வெகுதூரத்திற்கு அழைத்துச் செல்லாமல் போகலாம், ஆனால் அது நம்முடைய தெருக்களுக்கு, வளாகங்களுக்கு, உணவு அறைக்கு அல்லது அலுவலக அறைகளுக்குள் அழைத்துச் செல்லலாம். அது ஒருவேளை அபாயகரமானதாய் இருக்கலாம். ஆனால் நாம் துணிகரமாய் எடுக்கும் அந்த அபாயகரமான முயற்சிகளுக்கு தகுதியான வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்வோம் என்பது அதிக நிச்சயம்.

இயேசுவுக்காய் நிற்கும் துணிச்சல்

கி.பி. 155 இல், ஆதித்திருச்சபையின் தந்தையான பாலிகார்ப், கிறிஸ்துவை விசுவாசித்ததினால் உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதாக அச்சுறுத்தலுக்கு ஆளானார். பாலிகார்ப் அவர்களிடம், “எண்பத்தாறு ஆண்டுகளாக நான் அவருடைய ஊழியக்காரனாக இருந்தேன்; அவர் எனக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. என்னைக் காப்பாற்றிய என்னுடைய ராஜாவை இப்போது நான் எப்படி நிந்திக்க முடியும்?” என்று பதிலளித்தாராம். நம் ராஜாவாகிய இயேசுவின் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக நாம் கடுமையான சோதனையை எதிர்கொள்ளும்போது, பாலிகார்ப்பின் இந்த பதில் நமக்கு உத்வேகமாக இருக்கும். 
இயேசுவின் மரணத்திற்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன்பாக, பேதுரு துணிச்சலாக, “உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன்” (யோவான் 13:37) என்று சொல்லுகிறான். பேதுரு தன்னை அறிந்ததைக் காட்டிலும், பேதுருவை நன்கு அறிந்த இயேசு அவனைப் பார்த்து, “சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (வச. 38) என்றார். ஆனாலும் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு பின்பாக, இயேசுவை மறுதலித்த அதே பேதுரு அவரை மகிமைப்படுத்தும் விதமாக, தன்னுடைய ஜீவனையே கொடுக்கிறான் (21:16-19).  
நீங்கள் பாலிகார்ப்பா? அல்லது பேதுருவா? சிலவேளைகளில் நம்மில் பெரும்பாலானோர் பேதுருவைப் போல துணிச்சல் இல்லாமல், கிறிஸ்துவின் விசுவாசியாய் செயல்படாமல் கோழையாக இருக்கிறோம். அதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் வகுப்பறையில் இருந்தாலும், அலுவலகத்தில் இருந்தாலும், எங்கிருந்தாலும் நாம் பயப்படத்தேவையில்லை. அதுபோன்ற தோல்விகள் நமக்கு நேரிடும்போது, நமக்காக மரித்து இன்னும் ஜீவித்துக்கொண்டிருக்கிற இயேசுவிடம் ஜெபத்தில் அணுகுவோம். அவர் நமக்கு உண்மையுள்ளவராய் வெளிப்பட்டு, கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும் அவருக்காக துணிச்சலாய் நிற்க கிருபை செய்வாராக.  

சோர்வின் கூடாரங்கள்

“இந்த கூடாரம் சோர்ந்துபோயிருக்கிறது.” இந்த வார்த்தைகளை கென்யாவின் நைரோபி என்ற பகுதியில் போதகராய் ஊழியம் செய்துகொண்டிருக்கிற பால் என்ற என்னுடைய சிநேகிதர் சொன்னார். 2015ஆம் ஆண்டிலிருந்து அவருடைய திருச்சபை விசுவாசிகள் ஒரு கூடாரம் போன்ற அமைப்பிலிருந்தே ஆராதனை செய்துகொண்டிருக்கிறார்கள். தற்போது பால், “எங்களுடைய கூடாரம் கிழிந்துவிட்டது, மழைபெய்யும்போது அது ஒழுகுகிறது” என்று சொன்னார்.   
பெலவீனமான அந்த கூடாரத்தைக் குறித்து என்னுடைய சிநேகிதர் சொன்ன அந்த வார்த்தைகள் மனுஷ வாழ்க்கையின் பெலவீனமான பக்கத்தைக் குறித்து பவுல் அப்போஸ்தலர் சொன்ன வார்த்தைகளை எனக்கு நினைவுபடுத்திற்று. “எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும்... இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்” (2 கொரிந்தியர் 4:16; 5:4).  
இவ்வுலக வாழ்வின் பெலவீனமான பக்கத்தை நம்முடைய இளம்பிராயத்திலேயே ஓரளவிற்கு நாம் புரிந்துகொள்ள நேர்ந்தாலும், நாம் முதிர்வயதை சந்திக்கும்போதே அதைக் குறித்த விழிப்புணர்வை பெறுகிறோம். காலம் நம்மை விட்டு வேகமாய் கடந்துசெல்லுகிறது. நம்முடைய இளமைப்பருவத்தில் நாம் முதுமையைக் குறித்து சிந்திக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது (பிரசங்கி 12:1-7). நம்முடைய சரீரமாகிய கூடாரம் சோர்ந்துபோய்விடுகிறது.  
கூடாரம் சோர்ந்துபோகலாம் ஆனால் நம்பிக்கை சோர்ந்துபோகக் கூடாது. நமக்கு வயதாகும்போது நம்பிக்கையும் இருதயமும் பெலவீனமடையவேண்டிய அவசியமில்லை. “ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை” என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகிறார் (2 கொரிந்தியர் 4:16). நம்முடைய சரீரத்தை உண்டாக்கிய ஆண்டவர், அவருடைய ஆவியின் மூலம் அதற்குள் வாசமாயிருக்கிறார். இந்த சரீரம் நம்மோடு வெகுகாலம் ஒத்துழைக்காது. “தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று” அறிந்து செயல்படுவோம் (5:1).  

இயேசுவிடம் ஓடுதல்

 பாரீஸ_க்கு ஒரு பயணத்தில், பென்னும் அவனது நண்பர்களும் நகரத்தில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகம் ஒன்றிற்கு சென்றிருந்தனர். அவன் ஓவியக்கலை மாணவனாய் இல்லாதபோதிலும், யூஜின் பர்னாண்ட் வரைந்த “உயிர்த்தெழுந்த நாளின் அதிகாலையில் கல்லறைக்கு ஓடிய பேதுருவும் யோவானும்” என்று தலைப்பிடப்பட்ட அந்த ஓவியத்தைக் கண்டு ஆச்சரியத்தில் வியந்தான். வார்த்தைகளை பகிராத அந்த ஓவியத்தில் இடம்பெற்றிருந்த பேதுரு மற்றும் யோவானின் முகங்கள் எண்ணற்ற உணர்வுகளை பகிருகின்றது. பார்வையாளர்களை அவர்களின் உணர்வுக்குள் நிறுத்தி, அவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது.  
யோவான் 20:1-10இன் பிரகாரம், அந்த ஓவியமானது இயேசுவின் வெறுமையான கல்லறைக்கு நேராய் ஓடிய இரண்டுபேரை காண்பிக்கிறது (வச. 4). அந்த பிரம்மாண்ட ஓவியம் உணர்ச்சிபொங்கிய இரண்டு சீஷர்களின் உணர்வுகளை படம்பிடித்திருக்கிறது. அந்த கட்டத்தில் அவர்களுடைய விசுவாசம் இன்னும் முழுமைபெறவில்லையெனினும், அவர்கள் சரியான திசையை நோக்கி ஓடினார்கள். உயிர்த்தெழுந்த இயேசுவும் அவர்களுக்கு தன்னை வெளிப்படுத்திக் காண்பித்தார் (வச. 19-29). அவர்களுடைய இந்த தேடுதல், நூற்றாண்டுகளாய் இயேசுவைத் தேடுவோரின் தேடலுக்கு ஒத்தது. இயேசுவின் கல்லறை அருகே அக்காலகட்டத்தில் நாம் இல்லாதிருந்தாலும், அந்த அழகான ஓவியத்தை நாம் பார்த்திராவிடினும், நற்செய்தியை நம்மால் தெளிவாய் பார்க்கமுடியும். நமக்கு சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் குழப்பங்கள் இருந்தாலும், இயேசுவும் அவருடைய அன்பும் இருக்கும் திசை நோக்கி ஓடுவதற்கு வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது. நாளைக்கு உயிர்தெழுதலின் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும்போது, “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” (எரேமியா 29:13) என்னும் வார்த்தையை நினைவுகூருங்கள்.  

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.  

தேவனின் ஆறுதலான அர்ப்பணிப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பம் அமெரிக்காவின் நான்கு மாநிலங்கள் சந்திக்கும் புள்ளியில் எங்கள் குடும்பம் ஆளுக்கொரு திசையாய் நின்றோம். என் கணவர் அரிசோனா எனக் குறிக்கப்பட்ட பிரிவில் நின்றார். எங்கள் மூத்த மகன், ஏ.ஜே., யூட்டாவிற்குள் நுழைந்தார். நாங்கள் கொலராடோவிற்குள் நுழைந்தபோது எங்கள் இளைய மகன் சேவியர் என் கையைப் பிடித்தார். நான் நியூ மெக்சிகோவிற்குச் சென்றபோது, சேவியர், “அம்மா, நீங்கள் என்னை கொலராடோவில் விட்டுச் சென்றீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை!” என்று சொன்னான். எங்கள் சிரிப்பு நான்கு வெவ்வேறு மாநிலங்களில் கேட்டதால் நாங்கள் ஒன்றாகவும் பிரிந்தும் இருந்தோம். இப்போது எங்கள் வளர்ந்த மகன்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால், அவர்கள் எங்கு சென்றாலும் அவருடைய பிள்ளைகள் அனைவரோடுங்கூட தேவன் இருப்பேன் என்று சொன்ன வாக்குத்தத்தத்தை நான் ஆழமாக நம்புகிறேன்.  
மோசேயின் மரணத்திற்குப் பிறகு, தேவன் யோசுவாவை தலைமைத்துவத்திற்கு அழைத்தார். மேலும் இஸ்ரவேலரின் எல்லையை விரிவுபடுத்தியபோது அவரது பிரசன்னத்தை உறுதிசெய்தார் (யோசுவா 1:1-4). தேவன், “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 5) என்று சொன்னார். யோசுவா தம்முடைய ஜனங்களின் புதிய தலைவராக சந்தேகத்துடனும் பயத்துடனும் போராடுவான் என்பதை அறிந்த தேவன், இந்த வார்த்தைகளில் நம்பிக்கையின் அடித்தளத்தை உருவாக்கினார்: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (வச. 9). 
தேவன் நம்மை அல்லது நம் அன்புக்குரியவர்களை எங்கு அழைத்துச் சென்றாலும், கடினமான காலங்களில் கூட, அவருடைய மிகவும் ஆறுதலான அர்ப்பணிப்பு அவர் எப்போதும் நம்மோடு இருப்பதை உறுதிப்படுத்துகிறது.