எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆர்தர் ஜாக்சன்கட்டுரைகள்

தேவனுக்கென்று நன்மை செய்தல்

அவர் வழக்கமாக தன்னுடன் பணத்தை எடுத்துச் செல்லவில்லை என்றாலும், வீட்டை விட்டு வெளியேறும் முன் கொஞ்சம் பணத்தை (சுமார் ₹400) பாக்கெட்டில் வைக்க தேவன் ஏவுவதை பேட்ரிக் உணர்ந்தார். அவர் பணிபுரிந்த பள்ளியில் மதிய உணவு நேரத்தில், ஒரு அவசரத் தேவையை பூர்த்திசெய்ய தேவன் அவரை எவ்வாறு ஆயத்தப்படுத்தினார் என்பதை அவர் புரிந்துகொண்டார். மதிய உணவு அறையின் சலசலப்புக்கு நடுவில், அவர் இந்த வார்த்தைகளைக் கேட்டார்: “ராணியின் [தேவையுள்ள ஒரு குழந்தைக்கு] கணக்கில் ₹400 போட வேண்டும், அப்போது அவள் வாரம் முழுவதும் மதிய உணவை சாப்பிடலாம் மற்றும் புத்தகங்கள் வாங்க முடியும்” ராணிக்கு உதவுவதற்காக பேட்ரிக் தனது பணத்தை கொடுத்தபோது அனுபவித்த உணர்வுகளை கற்பனை செய்து பாருங்கள்!

தீத்துவுக்கான நிருபத்தில், இயேசுவின் விசுவாசிகளுக்கு “நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல்” (3:5) என்று பவுல் நினைப்பூட்டினாலும், “நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி” (வ.8; பார்க்கவும் வ.14) சொன்னார். நம் வாழ்க்கை நேரம் இல்லாததாகவும், மிகவும் பளுவானதாகவும், பரபரப்பாகவும் இருக்கும். உங்கள் சொந்த நல்வாழ்வை கவனிப்பதே மிகப்பெரியதாக இருக்கும். ஆனாலும், இயேசுவை விசுவாசிக்கிறவர்களாக நாம் “நற்கிரியைகளுக்கு ஆயத்தமாக” இருக்க வேண்டும். நம்மிடம் இல்லாததையும் செய்ய முடியாததையும் நினைத்து விரக்தியடைவதற்குப் பதிலாக, தேவனின் நமக்கு உதவுவதற்கு ஏற்ப நம்மிடம் என்ன இருக்கிறது, என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்திப்போம். அவ்வாறு செய்வதன் மூலம், நாம் மற்றவர்களுக்கு அவர்களின் தேவையுள்ள நேரத்தில் உதவுகிறோம், மேலும் தேவன் மகிமைப்படுகிறார். “இவ்விதமாக மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:16). 

தேவனின் சீரமைப்பிற்கு கனிந்திருக்கிறது

நண்பரிடமிருந்து வந்த புகைப்படங்கள் பிரமிக்க வைக்கின்றன! அவரது மனைவிக்கு ஒரு ஆச்சரியமான பரிசை அவர் கொடுத்திருக்கிறார். அது ஒரு சீரமைக்கப்பட்ட சொகுசு 1965 போா்டு மஸ்தாங் காா் பரிசு. கவா்ச்சிகரமான, அடர் நீல வெளிப்புறம்; பிரகாசமான குரோம் விளிம்புகள்;, மறுஉருவாக்கம் செய்யப்பட்ட கருப்பு உட்புறம்;, மற்ற மேம்படுத்தல்களுடன் பொருந்தக்கூடிய மோட்டார் ஆகியவைகள் அதில் இடம்பெற்றிருந்தன. அதே வாகனத்தின் முந்தைய புகைப்படங்களும் இருந்தன. அதில் மந்தமான, தேய்ந்த, ஈர்க்க முடியாத மஞ்சள் பதிப்பு ஆகியவைகள் பழமையான காட்சியளித்தன. கற்பனை செய்வது கடினமாக இருந்தாலும், புதுப்பிக்கப்பட்ட வாகனம் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அது நிச்சயமாய் கண்ணைக் கவரக்கூடியதாய் இருந்தது. அதை புதிதாக்குவதற்கு நேரம், தேய்மான மாற்றம் போன்ற பிற காரணிகளும் அவசியப்பட்டது.

மீண்டு உருபெற்று வருவதற்கு காத்திருத்தல்! இதுவே சங்கீதம் 80இல் இடம்பெற்றிருக்கும் கர்த்தருடைய ஜனத்தின் வேண்டுதலாய் இருந்தது. அவர்கள் “சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்” (வச. 3; 7,9ஐ பார்க்கவும்) என்று தொடர்ந்து விண்ணப்பம்பண்ணினர். அவர்கள் எகிப்து தேசத்திலிருந்து மீட்கப்பட்டு செழிப்பான தேசத்தில் நாட்டப்பட்டாலும் (வச. 8-11), அவர்கள் தற்போது ஆசீர்வாதத்தை இழந்து காணப்பட்டனர். அவர்களின் முரட்டாட்டத்தினிமித்தம் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கரம் அவர்கள் மீது ஓங்கியிருந்தது (வச. 12-13). ஆகையினால் அவர்கள், “சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்” (வச. 14) என்று கெஞ்சுகின்றனர்.

நீங்கள் எப்போதாவது மந்தமாக, தூரமாக அல்லது தேவனிடமிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டதாக உணர்கிறீர்களா? மகிழ்ச்சியான ஆத்ம திருப்தி உங்களுக்கு இல்லையா? இயேசுவுடனும் அவருடைய சித்தத்துடனும் ஒத்துபோகாததால் அப்படி எண்ணுகிறீர்களா? மீண்டு வருவதற்கான நமது ஜெபங்களை தேவன் கேட்கிறார் (வச. 1). தேவனிடத்தில் அதை விண்ணப்பிப்பதற்கு உங்களுக்கு எது தடையாய் இருக்கிறது? 

- ஆர்தர் ஜாக்சன்

கலங்கிய ஆத்துமாக்கள், நேர்மையான ஜெபங்கள்

ஜனவரி 1957இல் அவரது வீட்டை குண்டுவெடிப்பு தாக்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்வு அவருடைய வாழ்நாள் முழுவதிலும் நினைவுகூரப்படுகிறது. அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்பைப் பெற்ற பிறகு, சிவில் உரிமைகள் இயக்கத்தில் இருந்து வெளியேறுவதைக் குறித்து கிங் யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் மனதிற்குள் ஜெபிக்க ஆரம்பித்தார். அவர், “நான் இங்கே சரியானது என்று நம்புவதற்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறேன். ஆனால் இப்போது நான் பயப்படுகிறேன். என்னிடம் எதுவும் இல்லை. என்னால் தனியாக எதிர்கொள்ள முடியாத நிலைக்கு வந்துவிட்டேன்” என்று சொன்னார். அவரது ஜெபத்திற்கு பின்னர், அவருடைய இருதயத்தில் சமாதானத்தை உணர்ந்தவராய், “என்னுடைய பயம் ஒரேயடியாய் போய்விட்டது. என் நிச்சயமற்ற தன்மை மறைந்தது. நான் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தேன்” என்று சொன்னார்.  
யோவான் 12ல், “என் ஆத்துமா கலங்குகிறது” (வச. 27) என்று இயேசு ஒப்புக்கொண்டார். அவர் ஜெபத்தில் தன்னுடைய உள்ளான மனநிலைமையை வெளிப்படையாகக் காண்பித்தார். எனினும், தேவனை தன் ஜெபத்தின் மையமாக வைத்து ஜெபித்தார், “பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும்” (வச. 28). தேவனுடைய சித்தத்திற்கு தன்னை பூரணமாய் அர்ப்பணிப்பதே இயேசுவின் ஜெபத்திற்கு இருந்த முக்கியமான ஒரு அம்சம்.  
தேவனை மகிமைப்படுத்தலாமா வேண்டாமா என்ற எண்ணம் நம் இருதயத்தில் தோன்றும்போது,பயம் மற்றும் அசௌகரியத்தின் வேதனையை நாம் உணருவது இயல்பு. உறவுகள், பழக்கவழக்கங்கள் அல்லது பிற வடிவங்கள் (நல்லது அல்லது கெட்டது) பற்றி ஞானம் கடினமான முடிவுகளை எடுக்க தயங்குகிறது. நாம் எதை எதிர்கொண்டாலும், தைரியமாக தேவனிடம் ஜெபிக்கும்போது, நம்முடைய பயம் மற்றும் அசௌகரியத்தை வெல்வதற்கும், அவருக்கு மகிமையைக் கொண்டுவருவதற்கும் அவர் நம்மை பெலப்படுத்துவார்.  

தேவனின் மகத்துவங்களை சொல்லுங்கள்

எங்கள் சபையின் சாட்சி நேரத்தில், ஜனங்கள் தங்கள் வாழ்க்கையில் தேவன் எவ்வாறு கிரியை செய்தார் என்பதை சாட்சியாய் பகிருவார்கள். ஆன்ட்டி அல்லது சகோதரி லாங்ஃபோர்ட் என்று எங்கள் சபைக் குடும்பத்தினரால் அறியப்பட்ட அவர், தேவனை மனதார துதிப்பதில் பெயர்பெற்றவர். அவர் தனது இரட்சிப்பின் சாட்சியை பகிர்ந்துகொண்டபோது, ஒரு அழகான ஊழியத்தை செய்வார் என்று எவரும் எதிர்பார்க்கலாம். ஆம்! தன்னுடைய ஜீவியத்தை கிருபையாய் மாற்றி தேவனுக்கு துதி செலுத்த அவருடைய இருதயம் துடித்தது.  
இதேபோல், 66 ஆம் சங்கீதத்தை எழுதிய சங்கீதக்காரனின் சாட்சியில், தேவன் தன்னுடைய ஜனங்களுக்கு செய்த நன்மைகளை எண்ணி அவருடைய இருதயம் பூரிப்படைகிறது. “தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; அவர் மனுப்புத்திரரிடத்தில் நடப்பிங்குங் கிரியையில் பயங்கரமானவர்” (வச. 5). அற்புதமான விதத்தில் அவர்களை தேவன் நடத்திவந்தார் (வச. 6). பாதுகாத்தல் (வச. 9) மற்றும் உபத்திரவம் மற்றும் அனுபவங்கள் ஆகியவற்றின் பாதையில் கடந்து நன்மையான இடத்தை அவருடைய ஜனங்கள் அடைந்திருக்கின்றனர் (வச. 10-12). கிறிஸ்தவ விசுவாசிகளுடன் நமக்கு சில பொதுவான வாழ்க்கை அனுபவங்கள் இருப்பினும், ஒவ்வொருவருடைய வாழ்க்கைப் பயணத்திலும் பிரத்யேகமான அனுபவங்கள் அவரவர்க்கு கிடைக்கின்றன. தேவன் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்திக் காண்பித்த தருணங்கள் உங்கள் வாழ்க்கையில் உண்டா? உங்கள் வாழ்க்கையில் அவர் எவ்வாறு கிரியை செய்தார் என்பதைக் கேட்க வேண்டிய மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மதிப்புக்குரியது. “தேவனுக்கு பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்” (வச. 16).  
 

அனைவருக்கும் ஒரே கதவு

எனது குழந்தைப் பருவத்தில் இருந்த உணவகத்தின் நெறிமுறைகள் 1950களின் பிற்பகுதியிலும் 1960களின் முற்பகுதியிலும் சமூக மற்றும் இன இயக்கவியலுக்கு இசைவாக இருந்தன.

சமையலறை உதவியாளர் மேரி, சமையல்காரர் மற்றும் என்னைப் போன்று பாத்திரங்களைக் கழுவுபவர்கள் எல்லாம் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் உணவுபரிமாறும் இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் வெள்ளையர்கள். கறுப்பின வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்யலாம். ஆனால் அவர்கள் அதை பின் வாசலில் வந்து வாங்கிக்கொள்ளவேண்டும். இத்தகைய கொள்கைகள் அந்த சகாப்தத்தில் கறுப்பர்களின் சமத்துவமற்ற சிகிச்சையை வலுப்படுத்தியது. அந்த காலத்தைக் கடந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டாலும், தேவனின்; சாயலில் உருவாக்கப்பட்ட மக்களாக நாம் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதில் இன்னும் வளர்ச்சிக்கு இடம் உள்ளது.

ரோமர் 10:8-13 போன்ற வேதப்பகுதிகள், தேவனுடைய குடும்பத்திற்கு அனைவருக்கும் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளதைக் காண்பிக்கிறது. அங்கே பின் கதவு இல்லை. சுத்திகரிப்பு மற்றும் மன்னிப்புக்காக இயேசுவின் மரணத்தை நம்புவதன் மூலம் அந்த வாசலின் வழியாய் எவரும் பிரவேசிக்கலாம். இந்த மறுரூப அனுபவத்திற்கு வேதம் கொடுக்கும் பெயர் “இரட்சிப்பு” (வச. 9,13). உங்கள் சமூகசூழ்நிலை அல்லது இனநிலை அல்லது மற்றவர்களின் நிலை ஆகியவை சமன்பாட்டிற்கு காரணியாக இல்லை. “அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்” (வச. 11-12). இயேசுவைக் குறித்த வேதத்தின் சாட்சியை நீங்கள் உங்கள் இருதயத்தில் நம்புகிறீர்களா? இந்த குடும்பத்திற்கு நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்!

அதிகப்படியான தயவு

துரித உணவு ஹோட்டல் ஊழியர் கெவின் ஃபோர்டு இருபத்தேழு வருடங்களில் ஒரு மாற்றத்தையும் தவறவிடவில்லை. அவரது பல ஆண்டுகள் செய்த சேவையை நினைவுகூரும் வகையில் அவர் பெற்ற ஒரு எளிமையான பரிசுக்காக அவரது பணிவான நன்றியைக் காட்டும் வீடியோ வெளியான பிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு தங்கள் பொருளாதாரத்தின் மூலம் அன்பை காண்பிக்க ஒன்று திரண்டனர். “இது ஒரு கனவு நனவாகும் தருணம்” என்று அவர் அதைக் குறித்து சொல்லுகிறார். ஒரே வாரத்தில் 2,50,000 டாலர்கள் நிதி திரட்டப்பட்டது.

சிறைபிடித்து கொண்டுபோகப்பட்ட யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனும் மிகவும் இரக்கமுள்ளவனாயிருந்தான். பாபிலோனிய ராஜாவின் கருணையால் அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்பு அவர் முப்பத்தேழு ஆண்டுகள் சிறையில் அடைபட்டு இருந்தார். “யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி... அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய ஆசனத்தைத் தன்னோடே பாபிலோனில் இருந்த ராஜாக்களுடைய ஆசனங்களுக்கு மேலாகவைத்து” (எரேமியா 52:31-32) அவனை கனப்படுத்தினான். யோயாக்கீனுக்கு புதிய பதவியும், புதிய வஸ்திரமும், புதிய வீடும் கொடுக்கப்பட்டது. அவனுடைய புதிய வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.

இந்த கதையானது, கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் விசுவாசிக்கிற கிறிஸ்தவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும்போது அவர்களின் ஆவிக்குரிய ஜீவியத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதை சித்தரிக்கிறது. அவர்கள் மரண இருளிலிருந்து ஜீவனுக்கும் வெளிச்சத்துக்கும் கொண்டுவரப்படுவர். தேவனுடைய அதிகப்படியான இரக்கத்தினால் அவர்கள் தேவனுடைய குடும்பத்திற்கு வரவேற்கப்படுகிறார்கள்.

நம்பிக்கையுடன் தாழ்மைபடுதல்

ஆலய ஆராதனையின் முடிவில் போதகரின் அழைப்பின் பேரில், லாட்ரீஸ் முன்னோக்கிச் சென்றாள். சபைக்கு வாழ்த்துச் சொல்ல அவள் அழைக்கப்பட்டபோது, அவள் பேசிய கனமான மற்றும் அற்புதமான வார்த்தைகளுக்கு யாரும் தயாராக இல்லை. டிசம்பர் 2021ல் அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தை தாக்கிய சூறாவளியில் தன்னுடைய ஏழு குடும்ப உறுப்பினர்களை இழந்த பின்பு அங்கிருந்து இடம்பெயர்ந்தவள் இவள். “தேவன் என்னுடன் இருப்பதால் என்னால் இன்னும் சிரிக்க முடிகிறது,” என்று அவள் கூறினாள். போராட்டங்களால் நசுக்கப்பட்டாலும், அவளது சாட்சி, சவால்களோடு போராடிக்கொண்டிருக்கிறவர்களுக்கு வல்லமையுள்ள ஊக்கமாய் அமைந்தது.  
சங்கீதம் 22ல் (இயேசுவின் பாடுகளைச் சுட்டிக்காட்டும்) தாவீதின் வார்த்தைகள், தேவனால்; கைவிடப்பட்டதாக உணர்ந்து (வச. 1), மற்றவர்களால் இகழ்ந்து கேலி செய்யப்பட்ட (வச. 6–8), மற்றும் வேட்டையாடுபவர்களால் சூழப்பட்ட (வச. 12–13), பாதிக்கப்பட்ட மனிதனின் வார்த்தைகள். அவர் பலவீனமாகவும் ஒன்றுமில்லாமலும் உணர்ந்தார் (வச. 14-18). ஆனால் அவர் தன் நம்பிக்கையை கைவிடவில்லை. “ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்” (வச. 19) என்று தன் நம்பிக்கையை பிரதிபலிக்கிறார். நீங்கள் தற்போது சந்திக்கும் சவாலானது தாவீது அல்லது லாட்ரீஸ் போன்றவர்களுடைய சவால்களைப் போன்றல்லாமல் இருக்கலாம்; ஆனால் அவைகள் மெய்யானவைகள். மேலும் 24-ஆம் வசனத்தின் வார்த்தைகள் அர்த்தமுள்ளவை: “உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மைநோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.” தேவனுடைய உதவியை நாம் பெறும்போது, அவருடைய மகத்துவத்தை மற்றவர்கள் கேட்கும்பொருட்டு நாம் அறிவிக்க பிரயாசப்படுவோம் (வச. 22).  

என்னை சுத்திகரியும்

"என்னை சுத்தம் செய்!" என்ற வார்த்தைகள் எனது வாகனத்தில் எழுதப்படவில்லை என்றாலும், என் வாகனம் அதை வெளிப்படுத்தியது. எனவே, நான் கார் கழுவுவதற்குச் சென்றேன். சமீபத்திய பனிப்பொழிவின் காரணத்தினால், உப்பு நீர் நிறைந்த சாலைகளில் இருந்த மோசமான அசுத்தங்களிலிருந்து நிவாரணம் பெற விரும்பும் பிற ஓட்டுநர்களும் வந்து தங்கள் வாகனங்களைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். எங்களுக்கு முன்பே நீளமான வரிசையில் வாகனங்கள் சுத்தப்படுத்தப்படுவதற்காக இருந்தன. சேவையோ மெதுவாக இருந்தது. ஆனால் அக்காத்திருப்பு நல்லது. நான் ஒரு சுத்தமான வாகனத்துடன் புறப்பட முடிந்தது. சேவை தாமதத்தின் காரணமாக, கார் சுத்தம் செய்ததற்கான பணமும் இலவசமாக்கப்பட்டது! 
  
வேறொருவரின் செலவில் சுத்தம் செய்யப்பட்டது. இதுதான் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி. தேவன், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், நம் பாவங்களுக்கு மன்னிப்பை வாங்கித்தந்தார். வாழ்க்கையின் "அழுக்கு மற்றும் கறைகள்" நம்மில் ஒட்டிக்கொண்டிருக்கும்போது "குளிப்பதன்" அவசியத்தை நம்மில் யார் உணராமல் இருக்கிறோம்? எப்பொழுது நம் சுயநல எண்ணங்கள், செயல்கள் பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்கள் தேவனுடனான நம் அமைதியைப் பறித்திருக்கிறது? தாவீது சங்கீதம் 51ல், சோதனை தன்னை மேற்கொண்டபோது, தான் அழுததைக் குறிப்பிடுகிறார். ஆவிக்குரிய ஆலோசகர் தேவனுக்கு விரோதமான அவன் பாவத்தை அவனுக்கு உணர்த்திய போது (2 சாமுவேல் 12 பார்க்கவும்), அவன் தேவனிடம் "என்னை சுத்திகரியும்" என ஜெபிக்கிறான்: ”நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்."(வ.7). உங்களிடம் பாவம் மற்றும் குற்ற உணர்வு இருக்கிறதா? இயேசுவிடம் உங்கள் வழியை செவ்வைப்படுத்தி, இவ்வசனத்தை நினைவில் வையுங்கள்: "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் 
உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்". (| யோவான் 1:9)  

குறுச்செய்திகள், பிரச்சனைகள் மற்றும் ஜெயம்

ஜிம்மி, சமூக பிரச்சனைகள், அபாயங்கள், மற்றும் பிரச்சனைகள் நிறைந்திருக்கும் உலகத்தின் ஏழ்மையான நாட்டில் ஊழியம் செய்துகொண்டிருக்கும் தம்பதியினரை உற்சாகப் படுத்துவதற்காக அங்கு கடந்து சென்றார். அவர் அனுப்பிய குறுச்செய்திகளிலிருந்து அவர் கடந்துபோன கடினமான பாதைகளை நாங்கள் அறிந்துகொண்டோம்: “சரி நண்பர்களே, ஜெபத்தை ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. கடந்த இரண்டு மணி நேரத்தில் நாம் பத்து மைல் தூரத்தைக் கடந்திருக்கிறோம்... அதற்கிடையில் நம்முடைய கார் பன்னிரண்டு தரம் சூடாகிவிட்டது.” வாகன பிரச்சனைகளில் சிக்கி, ஐந்து மணி நேரமாய் அவருடைய செய்திக்காய் காத்திருந்தவர்களை சந்திக்க நள்ளிரவில் வந்து சேர்ந்தார். அதற்கு பின்பதாய் வித்தியாசமான குறுச்செய்திகளை காண நேர்ந்தது. “ஆச்சரியம், அழகான ஒரு ஐக்கியம்... ஜெபம் செய்துகொள்வதற்காக பன்னிரெண்டு பேர் ஒப்புக்கொடுத்து முன்னுக்கு வந்தார்கள். அது ஒரு வல்லமையான இரவாய் அமைந்தது.”  
தேவனுக்கு உண்மையாய் ஊழியம் செய்வது ஒரு சவால். எபிரெயர் 11ஆம் அதிகாரத்தில் இடம்பெற்றிருக்கும் விசுவாச வீரர்கள் இதை அங்கீகரித்துக்கொள்வார்கள். தங்கள் விசுவாசத்தினிமித்தம், சாதாரண மனிதர்கள் சங்கடமான பல சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கின்றனர். “வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்” (வச. 36). அந்த சவால்களை மேற்கொள்ளும்படிக்கு அவர்களுடைய விசுவாசம் அவர்களை நெருக்கி ஏவியது. நமக்கும் அப்படித்தான். நம் நம்பிக்கையை நம்பி வாழ்வது நம்மை ஆபத்தான இடங்களுக்கோ அல்லது வெகுதூரத்திற்கு அழைத்துச் செல்லாமல் போகலாம், ஆனால் அது நம்முடைய தெருக்களுக்கு, வளாகங்களுக்கு, உணவு அறைக்கு அல்லது அலுவலக அறைகளுக்குள் அழைத்துச் செல்லலாம். அது ஒருவேளை அபாயகரமானதாய் இருக்கலாம். ஆனால் நாம் துணிகரமாய் எடுக்கும் அந்த அபாயகரமான முயற்சிகளுக்கு தகுதியான வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்வோம் என்பது அதிக நிச்சயம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்

பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். “ஏன் இப்படி செய்தாய்?” என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், “எனக்கு பசித்தது” என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.

ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்” (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, “புசித்துக் குடித்து” மற்றும் “தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்” (வ. 34).

நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை “நன்மைகளால்” (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.

நெருக்கத்தின் குரல்

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் இரண்டு தளங்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிரியா நாட்டுச் சிறுமியான ஐந்து வயது ஜினான், தனது சிறிய சகோதரனைச் சுற்றியுள்ள இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியபோது மீட்புப் பணியாளர்களை அழைத்தார். “என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச்செல்லுங்கள்; நான் உங்களுக்காக எதையும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரியாகவும் இருப்பேன்” என்று அவள் நொறுங்கிய உள்ளத்தோடு அழைத்தாள்.

நெருக்கத்திலிருந்து அழைப்பது என்பது சங்கீதம் முழுதும் உள்ளது, “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” (118:5). பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எடையை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும், சவாலான உடல்நிலை, பொருளாதாரக் கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது உறவுமுறை இழப்பு போன்றவற்றின் நெருக்குதலை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.

அந்த தருணங்களில் நாம் விடுதலைக்காக தேவனிடம் பேரம் பேசலாம். ஆனால் உதவிக்காக தேவனை வற்புறுத்த வேண்டியதில்லை. அவர் பதிலளிப்பதாக உறுதியளிக்கிறார், அது நமது சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அவர் நம்முடனும் நம் அருகிலும் இருப்பார். மரணம் உட்பட வேறு எந்த ஆபத்துக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சங்கீதக்காரனோடு நாமும், “எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்” (வ.7) எனலாம்.

ஜினானும் அவளது தம்பியும் பெற்றுக்கொண்டதை போல வியத்தகு மீட்பு நமக்கு வாக்களிக்கப்படவில்லை, ஆனால் சங்கீதக்காரனை “விசாலத்திலே” (வ. 5) கொண்டு வந்த நமது உண்மையுள்ள தேவனை நாம் நம்பலாம். அவர் நம் நிலைமையை அறிந்திருக்கிறார், மரணத்திலும் அவர் நம்மை கைவிடமாட்டார்.

பெஹலே ஆப்

கருணை மற்றும் விருந்தோம்பலின் இந்தியாவின் முடிசூடா தலைநகரம் லக்னோ. பின்வரும் நகைச்சுவையில் இது பொருத்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது: "ஏன் பயணிகள் லக்னோ ரயில் நிலையத்தை விட்டு வெளியே வருவதில்லை? ஏனென்றால் அவர்கள் ரயில் நிலைய நடைபாதையில் ஒருவருக்கொருவர், "பெஹலே ஆப்!" ("நீங்கள் முதலில்" என்று மொழிபெயர்க்கிறது) என்று சொல்லி நகராமல் இருப்பதாலே". மற்றவர்களை முதலில் செல்ல அனுமதிப்பது பற்றி லக்னோ மக்களிடம் இருந்து நாட்டின் பிற பகுதிகள் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது.

ஆனால் இயேசுவைப் பின்பற்றுபவர்களான நமக்கோ தாழ்மைக்கான நமது அளவுகோல் இயேசுவே. இயேசு சொன்னார், "உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்" (மத்தேயு 23:11). அண்ட சராசரத்தின் சிருஷ்டிகராகிய அவர், "அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போல" (ஏசாயா 53:7) நடத்தப்படுவதற்கு அனுமதித்தபோது, அவர் நமக்குத் தாழ்மையை விளக்கிக் காட்டினார். பவுல் பிலிப்பி சபைக்கு எழுதிய நிருபத்தில், கிறிஸ்துவின் தலைமையின் அளவை குறித்து நம் கவனத்தை ஈர்க்கிறார். இயேசு, சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி இருக்க அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார் (வ.6-8) என்ற உண்மையை நாம் சிந்தையில் கொள்ள அவர் நமக்கு உதவுகிறார். இந்த கீழ்ப்படிதலுள்ள தாழ்மையே அவரது அந்தஸ்தை மேலும் உயர்த்தியது, அவருக்கு உலகின் ஒரே மீட்பராக "மேலான நாமத்தை" வழங்கியது (வ.9-11).

தாழ்மையான இதயம் கொள்வது எளிதல்ல. மற்றவரின் தேவைகளை நம் தேவைக்கு மேல் வைப்பது மிகவும் கடினம். குடும்பம் அல்லது நண்பர்கள் போன்ற நாம் விரும்பும் நபர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது அவ்வளவு கடினம் அல்ல, ஆனால் அந்நியர்களின் தேவைகளை நம்முடைய தேவைகளுக்கு மேல் வைப்பது கடினம் (மாற்கு 12:31). உண்மையான தாழ்மையின் தன்மையை இயேசு நமக்குக் காட்டினார். நாம் பின்பற்றும்படி அவர் நமக்கு ஒரு உதாரணம் கொடுத்தார். தாழ்மையானது கடினமாக இருந்தாலும், நாம் கைக்கொள்ள வேண்டிய ஒன்று.