எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆனி சிட்டாஸ்கட்டுரைகள்

சாகசம்

“கிறிஸ்தவம் எனக்கானது அல்ல. அது சலிப்பு தட்டுகிறது. நான் சாகசம் செய்ய விரும்புகிறேன். அதுதான் எனக்கு வாழ்க்கை” என்று ஒரு இளம் பெண் என்னிடம் கூறினார். இயேசுவைப் பின்தொடர்வதன் மூலம் வரும் நம்பமுடியாத மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அவள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருந்தது. இந்த ஆச்சரியமான சாகசம் வேறு எதனுடனும் ஒப்பிடமுடியாது. இயேசுவைப் பற்றியும் அவரில் உண்மையான வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியும் அவளிடம் உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டேன். 
தேவகுமாரனாகிய இயேசுவை அறிந்து, அவருடன் நடந்த ஆச்சரியமான சாகசத்தை விவரிக்க வெறும் வார்த்தைகள் போதாது. ஆனால் எபேசியர் 1ல், அப்போஸ்தலனாகிய பவுல், அவருடனான வாழ்க்கையைப் பற்றிய ஒரு சிறிய ஆனால் சக்திவாய்ந்த காட்சியை நமக்குத் தருகிறார். தேவன் நமக்கு நேரடியாக பரலோகத்திலிருந்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைத் தருகிறார் (வச. 3), தேவனுடைய பார்வையில் பரிசுத்தம் மற்றும் குற்றமற்ற தன்மை (வச. 4), மற்றும் அவருடைய சொந்த குடும்பத்தின் அங்கத்தினராய் நம்மை தெரிந்துகொள்ளுதல் (வச. 5). அவருடைய மன்னிப்பு மற்றும் கிருபை (வச. 7-8), அவருடைய சித்தத்தின் மர்மத்தைப் புரிந்துகொள்வது (வச. 9) மற்றும் “அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு” (வச. 12) ஒரு புதிய நோக்கத்துடன் அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பலப்படுத்தவும் வழிநடத்தவும் நமக்குள் கிரியை நடப்பிக்கிறார் (வச. 13). மேலும் அவர் தேவனுடைய பிரசன்னத்தில் நித்தியவாழ்விற்கு நமக்கு உத்தரவாதம் அளிக்கிறார் (வச. 14). 
இயேசு கிறிஸ்து நம் வாழ்வில் பிரவேசிக்கும்போது, அவரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதும், அவரைப் பின்தொடர்வதும் மிகப்பெரிய சாகசமாகும். மெய்யான வாழ்க்கை வாழுவதற்கு நாம் ஒவ்வொருநாளும் அவரை தேடுவோம்.  

எது சிறப்பாக இருக்கும்?

எரிக் தனது இருபதுகளின் ஆரம்பத்தில் இயேசுவின் அன்பைப் பற்றி கேள்விப்பட்டார். அவர் தேவாலயத்திற்குச் செல்லத் தொடங்கினார், அங்கு அவர் கிறிஸ்துவை நன்கு அறிந்துகொள்ள உதவிய ஒருவரைச் சந்தித்தார். எரிக்கின் வழிகாட்டி அவரை தேவாலயத்தில் ஒரு சிறுவர் குழுவிற்கு போதிக்கும்படி கேட்டுக்கொண்டார். பல ஆண்டுகளாக, தனது நகரத்தில் ஆபத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு உதவவும், முதியவர்களைச் சந்திக்கவும், அண்டை வீட்டாருக்கு விருந்தோம்பல் காட்டவும் தேவன் எரிக்கை ஏவினார். இப்போது ஐம்பதுகளின் பிற்பகுதியில் இருக்கும் எரிக் தனக்கு சேவை செய்ய ஆரம்பத்திலேயே கற்றுக் கொடுத்ததற்கு எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை விளக்குகிறார்: “இயேசுவிடம் நான் கண்ட நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ள என் இதயம் நிரம்பி வழிகிறது. அவருக்குச் சேவை செய்வதைவிடச் சிறந்தது எது?” என்று சொல்லுகிறார்.

தீமோத்தேயுவின் தாயும் அவனுடைய பாட்டியும் அவன் குழந்தையாயிருந்தபோதிலிருந்து அவனை விசுவாசத்தில் வளர்த்தார்கள் ( 2 தீமோத்தேயு 1:5). மேலும் அவன் அப்போஸ்தலனாகிய பவுலைச் சந்தித்தபோது இளைஞனாக இருந்திருக்கலாம். தீமோத்தேயு தேவனுக்கு ஊழியம் செய்யும் அவனுடைய பாரத்தை பவுல் கண்டு, அவருடைய ஊழிய பயணத்தில் அவனையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டார் (அப்போஸ்தலர் 16:1-3). பவல் தீமோத்தேயுவுக்கு ஊழியத்திலும் வாழ்க்கையிலும் வழிகாட்டியாக ஆனார். அவனைப் படிக்கவும், தவறான போதனைகளை எதிர்கொண்டபோது தைரியமாக இருக்கவும், தேவனுக்கு ஊழியம் செய்வதில் தனது திறமைகளைப் பயன்படுத்தவும் பவுல் தீமோத்தேயுவை ஊக்கப்படுத்துகிறார் (1 தீமோத்தேயு 4:6-16).

தீமோத்தேயு தேவனுக்கு உண்மையாய் ஊழியம் செய்யவேண்டும் என்று பவுல் ஏன் விரும்பினார்? அவர் “ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்” (வச. 10) என்று எழுதுகிறார். இயேசுவே நம்முடைய நம்பிக்கையும் உலகத்தின் இரட்சகராகவும் திகழ்கிறார். அவருக்கு ஊழியம் செய்ய அதைக்காட்டிலும் வேறென்ன காரணம் தேவை?  

பாதையில் சுதந்திரம்

பார்வையற்ற விளையாட்டு வீரர்கள் விளையாடும் “பீப்” ஓசையிடும் பேஸ்பாலில், அதின் சத்தத்தைக் கேட்டு என்ன செய்யவேண்டும் என்பதையும் எங்கு செல்லவேண்டும் என்பதையும் தீர்மானிக்கின்றனர். கண்கள் மூடப்பட்ட பந்தை அடிக்கும் நபரும், அதைத் தடுக்கும் பார்வையுள்ள நபரும் ஒரே அணியில் இடம்பெற்றிருப்பர். ஒரு நபர் மட்டையை சுழற்றி, பீப் பந்தை அடிக்கும்போது, அவர்கள் சலசலக்கும் தளத்தை நோக்கி ஓடுவார்கள். அவர் ஓடிவருவதற்கும் அந்த பந்தை யாரேனும் பிடித்துவிட்டால், பந்தை அடித்தவர் தோற்றுவிடுவார். இல்லையெனில், அவருக்கு ரன் கொடுக்கப்படும். “தெளிவான ஓடுபாதையும் திசையும் இருக்கிறது என்பதை அறிந்திருப்பதால், “ஓடுவதில் ஒரு பெரிய சுதந்திரம்” அவர்களுக்கு இருக்கிறது என்று ஒரு விளையாட்டு வீரர் குறிப்பிடுகிறார்.

ஏசாயா தீர்க்கதரிசன புத்தகம், “மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்” (26:7) என்று தேவனைக் குறித்து அறிவிக்கிறது. இந்த வாக்கியம் உரைக்கப்பட்டபோது, இஸ்ரவேலர்களின் பாதை செம்மையாயிருந்தது. ஆனால் அவர்களின் கீழ்ப்படியாமையினிமித்தம் அவர்கள் தெய்வீக நியாயத்தீர்ப்பை அனுபவிக்க நேரிட்டது. “உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும்” (வச. 8) அவர்களின் இருதயத்தின் நோக்கங்களாய் இருந்துள்ளது என்று சொல்லுகிறார்.

கிறிஸ்தவர்களாகிய நாம் அவருக்கு கீழ்ப்படிந்து அவருடைய வழிகளில் நடக்கும்போது, தேவனைக் குறித்து அறிகிற அறிவில் தேறவும் அவருடைய சுபாவங்களின் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் செய்கிறோம். நம்முடைய வாழ்க்கைப் பாதையின் வழிகள் எப்போதும் செம்மையானதாய் தெரியாது. ஆனால் நாம் தேவனை நம்பும்போது, தேவன் நம்மோடு நடந்துவந்து நமக்கு வழியை உண்டுபண்ணுவார். நாமும் தேவனுக்கு கீழ்ப்படிந்து, சுதந்திரமாய் அவருடைய சிறந்த பாதையில் நடப்போம்.

புகழுக்கு உரியவர் யார்?

வீட்டு முகவர் ஒருவர், சுழல் படிக்கட்டு முதல் விரிந்த படுக்கையறை வரை, பளிங்கு தரையிலிருந்து பட்டு விரிப்பு வரை, பிரமாண்டமான சலவை அறை முதல் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அலுவலகம் வரை இளம் தம்பதியினருக்கு ஏற்ற ஒரு வீட்டைக் காட்டினார். அவர்கள் திரும்பிய ஒவ்வொரு மூலையிலும் அவ்வீட்டின் அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டு, "எங்களுக்கு சிறந்த இடத்தை நீங்கள் தேர்ந்தெடுத்து கொடுத்தீர்கள். இந்த வீடு மிகவும் நன்றாக இருக்கிறது!" என்றனர். அதற்கு வீட்டு முகவர், "உங்கள் பாராட்டுக்களை நான் இதை கட்டினவருக்கு தெரிவிக்கிறேன். வீட்டைக் கட்டியவராகிய அவர்தான் பாராட்டுக்குரியவர், வீடோ அதைக் காட்டின நானோ அல்ல" என பதிலளித்தார். இது சற்று விசித்திரமாக இருந்தாலும், அதுதான் உண்மை வீட்டு முகவரின் இந்த வார்த்தைகள் எபிரெய எழுத்தாளரை எதிரொலித்தது. "வீட்டை உண்டுபண்ணினவன் வீட்டைப்பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான்". (வ.3:3). எபிரெய நிருபத்தின் எழுத்தாளர் தேவ குமாரனாகிய இயேசுவின் உண்மைத்தன்மையை, தீர்க்கதரிசியாகிய மோசேயுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார் (வவ. 1-6). மோசே தேவனிடம் நேருக்கு நேர் பேசுவதற்கும், அவருடைய உருவத்தைக் காண்பதற்கும் பாக்கியம் பெற்றிருந்தாலும் (எண்ணாாகமம் 12:8), அவர் தேவனுடைய வீட்டில் "ஒரு பணிவிடைக்காரனாய்" மட்டுமே இருந்தார் (எபிரெயர் 3:5). கிறிஸ்துவே படைப்பாளர் (1:2, 10). ஆவிக்குரிய "எல்லாவற்றையும் கட்டுபவர்" மற்றும் "தேவனின் வீட்டில்" குமாரன் (3:4, 6) என்ற மரியாதைக்குத் தகுதியானவர். தேவமக்களாகிய நாம்தான் அவருடைய வீடு. 
  
நாம் தேவனை உண்மையாகச் சேவிக்கும்போது, நமது ஆவிக்குரிய ஜீவியத்தைக் கட்டி எழுப்புகிறவராகிய இயேசுவே அந்த கனத்திற்குத் தகுதியானவர். தேவனின் வீடாகிய நாம் பெறும் எந்தப் புகழும் அவருக்கே உரியதாகும். 

உள்ளான சுகத்திற்கான வேட்டை

அமெரிக்க மாநிலமான மிச்சிகனில் வசிக்கும் கார்சன், வேட்டையாடுவது, மீன்பிடிப்பது, பைக்குகள் ஓட்டுவது மற்றும் ஸ்கேட்போர்டில் செல்வது என்று எப்போதும் மும்முரமாகவே செயல்படுவார். அவர் வெளியே பொழுதைக் கழிப்பதில் அதிக பிரியப்பட்டார். ஆனால் அவர் திடீரென்று ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி விபத்திற்குள்ளானதால், அவருடைய மார்புக்கு கீழ் அனைத்தும் செயலிழந்துபோனது. விரைவில் மனச்சோர்வுக்குள் மூழ்கினார். அவருடைய எதிர்காலம் இருண்டுபோனது. அவனுடைய சிநேகிதர்களில் சிலர் அவனை மீண்டும் வேட்டைக்கு கூட்டிச்சென்றனர். அந்த தருணத்தில் தன்னுடைய துயரங்கள் அனைத்தையும் மறந்து சுற்றியிருக்கும் அனைத்து அழகையும் ரசித்தான். இந்த அனுபவம் அவனுக்கு உள்ளான இருதய சுகத்தை ஏற்படுத்தி, அவனுடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுத்தது. அவனைப் போல் இருப்பவர்களும் அந்த அனுபவத்தை பெறும் நோக்கத்தோடு, “வேட்டையிலிருந்து சுகத்துக்கு” (ர்ரவெ 2 ர்நயட) என்ற பெயரில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தான். அவன், “என்னுடைய விபத்தானது எனக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்தது... நான் எப்போதும் செய்ய விரும்பியதை இப்போது மற்றவர்களுக்கு செய்வதின் மூலம் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று சொல்லுகிறான். மிகவும் கடுமையான சரீர குறைபாடுகள் உள்ளவர்களுக்கு தேவையான இடவசதியை ஒழுங்குசெய்து அவர்களுக்கு உள்ளான சுகத்தை கொடுப்பதில் இப்போது அவர் மும்முரமாய் செயல்பட்டு வருகிறான்.  
நொருங்குண்ட இருதயங்களை காயங்கட்டும் ஒருவரின் வருகையைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்துள்ளார் (ஏசாயா 61). அவர் “இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும்... துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும்” கிரியை செய்வார் (வச. 1-2). இயேசு இந்த வேத வாக்கியங்களை தேவாலயத்தில் வாசித்த பின்பு, “உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று” (லூக்கா 4:21) என்றார். இயேசு நம்மை இரட்சிக்கவும் பூரணப்படுத்தவும் வந்தார்.  
உங்களுக்கு உள்ளான சுகம் அவசியப்படுகிறதா? இயேசுவிடம் வாருங்கள், அவர் “ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையை” (ஏசாயா 61:3) உங்களுக்குக் கொடுப்பார்.  

சேவை செய்யும் சவால்

பதிமூன்றே வயது நிரம்பிய டேஏவியன் மற்றவர்களுக்கு சேவை செய்யும் சவாலை மேற்கொண்டான். கோடை விடுமுறையின் போது, தன்னுடைய ஐம்பது புல்வெளிகளை இலவசமாக வெட்டும்படி குழந்தைகளுக்கு அழைப்புக் கொடுத்த ஒரு மனிதனைப் பற்றிய கதையை அவனும் அவனது அம்மாவும் கேட்டிருக்கிறார்கள். இராணுவ வீரர்கள், ஒற்றை அம்மாக்கள், ஊனமுற்றவர்கள், அல்லது உதவி தேவைப்படும் எவருக்கும் உதவுவதே அவர்களின் நோக்கம். அந்த புல்வெளிகளின் சொந்தக்காரர், வேலையின் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு நன்மை செய்வதின் அவசியத்தையும் அவர்களுக்கு விளங்கச்செய்தார். கோடையின் வெயில் சுட்டெரிக்கும் போதும், மற்றவர்களுக்குச் சேவை செய்வதை விரும்பிய டேஏவியன் 
அடிக்கும்போது அந்த சவாலை நேர்த்தியாய் செய்து முடித்தார். மற்றவர்களுக்குச் சேவை செய்யும் சவால் கிறிஸ்தவர்களுக்கும் உண்டு. இயேசு மரிப்பதற்கு முந்தின நாள் இரவில், அவர்சீஷர்களோடு பந்தியிருந்தார் (யோவான் 13:1-2). அவர் கடந்துபோகப்போகிற உபத்திரம் மற்றும் மரணம் என்னும் பாதையைக் குறித்து அவர் நன்கு அறிந்திருந்த போதிலும், அவர் ஒரு துண்டை எடுத்து தன்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டு சீஷர்களின் பாதங்களை கழுவினார் (வச. 3-5). மேலும் "ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்” என்று அவர்களிடம் வலியுறுத்தினார் 
(໙. 14). நம்முடைய தாழ்மையான மாதிரியாகிய இயேசு மக்களிடம் கரிசனை காண்பித்தார். அவர் குருடருக்குப் பார்வையும், வியாதியஸ்தருக்கு சுகமும் கொடுத்து இராஜ்யத்தின் நற்செய்தியைப் போதித்து, தன் சிநேகிதருக்காகத் தன்னுடைய ஜீவனையும் கொடுத்தார். கிறிஸ்து உங்களை நேசிப்பதால், இந்த வாரத்தில் யாருக்கு சேவை செய்யவேண்டும் என்று அவர்விரும்புகிறார் என்று அவரிடத்தில் கேளுங்கள். 

முற்றிலும் தனிமையா?

ஸ்வேதாவின் குடும்பம் பிரிவதை அவள் தன் கண்முன்னே பார்த்தாள். அவளுடைய கணவர் ஒருநாள் திடீரென வீட்டைவிட்டுச் சென்றுவிட்டார். அதனால் அவளும், அவளுடைய குழந்தைகளும், குழப்பத்துடனும் கோபத்துடனும் இருந்தனர்‌. அவள் அவனைத் திருமண ஆலோசகரிடம் செல்லுமாறு கூற, அவன் தவறு முழுவதும் மனைவியிடம்தான் இருக்கிறதென்று சொல்லி, அதை மறுத்து விட்டான். அவன் திரும்பிவர வாய்ப்பில்லை என்பதை நினைக்கும்போது, அவள் பயத்தாலும் நம்பிக்கையின்மையினாலும் பாதிக்கப்பட்டாள். அவளால் தன்னையும், தன்னுடைய குழந்தைகளையும் தனியே கவனித்துக் கொள்ள முடியுமோ?

ஆபிரகாம் மற்றும் சாராளின் வேலைக்காரியாகிய ஆகாரும் இத்தகைய சூழலை எதிர்கொண்டாள். தேவன் தாம் வாக்குப்பண்ணினபடி (ஆதியாகமம் 12,15) ஒரு குமாரனைத் தருவாரென்பதற்குப் பொறுமையாய் காத்திராமல், சாராய் தன்னுடைய வேலைக்காரியாகிய ஆகாரை தன்னுடைய கணவருக்குக் கொடுத்தமையால், ஆகாருக்கு இஸ்மவேல் பிறந்தான் (ஆதியாகமம் 16:1-4,15). ஆனால் தேவனுடைய வாக்கின்படி ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் ஈசாக்கு பிறந்தபோது, குடும்பத்திலுள்ள பதற்றம் அதிகரித்து, ஆபிரகாம் ஆகாரையும், இஸ்மவேலையும், சிறிது உணவு மற்றும் தண்ணீரைக் கொடுத்து அனுப்ப வேண்டியதாயிற்று (ஆதியாகமம் 21:8-21). அவளுடைய விரக்தியை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? சீக்கிரத்தில் அவ்வுணவெல்லாம் தீர்ந்து வனாந்தரத்தில் தவித்தனர். ஆகார் செய்வதறியாமல் இஸ்மவேலை ஒரு புதரின் அடியில் வைத்துவிட்டு, தன் மகன் சாவதை காணவேண்டாமென்பதற்காக தூரமாக நடந்து சென்றாள். இருவரும் அழுதனர். ஆனால் தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார் (வ.17). தேவன் அவர்களுடைய அழுகையைக் கேட்டு, அவர்கள் தேவைகளைச் சந்தித்து, அவர்களோடே இருந்தார்.               

தனிமையான நேரங்களில் விரக்தியுற்று நாம் தேவனிடம் அழுகிறோம். அப்படிப்பட்ட தருணங்களில் நம்முடைய வாழ்வில் அவர் கேட்கிறவராகவும், தேவைகளைச் சந்திப்பவராகவும், நம்முடன் கூட இருப்பவராகவும் இருக்கிறாரென்பது எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது.

நீங்கள் இயேசுவிடம் என்ன கேட்பீர்கள்?

"இந்த காலையில் இயேசு நம்முடன் மேஜையில் பிரத்தியட்சமாக அமர்ந்திருந்தால், நீங்கள் அவரிடம் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?" ஜோ, தனது குழந்தைகளிடம் காலை உணவின்போது விசாரித்தார். அவர் வீட்டுச் சிறுவர்கள் தங்களுக்கான கடினமான கேள்வியைக் குறித்து யோசித்தார்கள். அவர்கள் மிகவும் கடினமான கணித புதிர்களை இயேசுவிடம் கேட்க வேண்டும் என்றும், பிரபஞ்சம் உண்மையில் எவ்வளவு பெரியது என்று அவர் சொல்லிக் கேட்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர். அப்போது அவரது மகள், "நான் அவரை அணைக்கும்படி கேட்பேன்" என்றாள்.

இந்த பிள்ளைகளுக்காக இயேசுவின் கண்களில் இருக்கும் அன்பை உங்களால் கற்பனை செய்ய முடியவில்லையா? அவர்களின் வேண்டுகோள்களுக்கு மகிழ்ச்சியுடன் அவர் இணங்குவார் என்று நான் நினைக்கிறேன், இல்லையா? அவர் சிறுவர்களுக்கு வேடிக்கை காட்டுவதாகவும், சிறுமியிடம் தனது கரங்களைத் திறப்பதாகவும் நான் கற்பனை செய்கிறேன். தன்னை அணைக்கும்படியான ஜோவின் மகளின் ஆசையைக் குறிப்பாக அவர் விரும்பலாம், இது அவரது அன்பிற்காக ஏங்கும் மற்றும் அவரை நேசிக்கும் இதயத்தையும் வெளிப்படுத்துகிறது.

சிறுவர்கள் சார்ந்துகொள்ளுகிறவர்கள், மேலும் இயேசு வலிமையானவர் மற்றும் அன்பானவர் என்பதை அவர்கள் அறிவார்கள். "எவனாகிலும் சிறுபிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் " (லூக்கா 18:17) என்று அவர் கூறினார். அவருடைய கிருபை, மன்னிப்பு மற்றும் இரட்சிப்புக்கான தேவையை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்று கிறிஸ்து ஏங்குகிறார். அவருக்கு அருகில் இருக்க விரும்பும் தாழ்மையான இதயங்களை அவர் விரும்புகிறார்.

நீங்கள் இயேசுவிடம் ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா? நாம் அனைவரும் நிச்சயமாக நமக்கான கேள்விகளைக் கொண்டிருப்போம்! அல்லது ஒருவேளை நீங்கள் அவருடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறீர்களா? அந்த அணைப்பிற்காகவும், உங்களுக்குத் தேவையான பலவற்றிற்காகவும் இப்போது அவரிடம் ஓடுங்கள்.

 

நன்மைக்காகத் தேவனுக்கு ஊழியஞ்செய்தல்

விமல் ஒரு புதிய நகரத்திற்குக் குடிபெயர்ந்தார், அவர் ஆராதிப்பதற்கு ஒரு சபையையும் விரைவில் தேடிக்கொண்டார். அவர் சில வாரங்கள் ஆராதனைக்குச் சென்றார். பின்னர் ஒரு ஞாயிறன்று, அவர் போதகரிடம் ஏதாவது ஒரு முறையில் ஊழியம் செய்திட விரும்புவதைப் பற்றிப் பேசினார்.  "நான் துடைப்பத்தால் சுத்தம் செய்யவே விரும்பினேன்" என்றார். ஆராதனைக்கு நாற்காலிகள் அடுக்குவது, கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது என்று அவர் துவங்கினார். விமலின் திறமை போதிப்பதில் இருப்பதைச் சபை குடும்பத்தினர் பின்னர் கண்டுபிடித்தனர், ஆனால் அவர் எதையும் செய்யத் தயாராக இருந்தார்.

இயேசு தம்முடைய சீஷர்களில் இருவரான யாக்கோபு, யோவான் மற்றும் அவர்களது தாயாருக்கு ஊழியத்தைக் குறித்ததான பாடத்தைக் கற்பித்தார். கிறிஸ்து தமது ராஜ்யத்தோடு வருகையில்,  அவளுடைய மகன்களுக்கு ஒவ்வொரு பக்கத்திலும் முக்கியமான இடம் வேண்டும் என்று அவர்களின் தாய் கேட்டுக் கொண்டாள் (மத்தேயு 20:20-21). மற்ற சீஷர்கள் இதைக் கேள்விப்பட்டு அவர்கள் மீது கோபம் கொண்டார்கள். ஒருவேளை அவர்களும் தங்களுக்காக அந்த பதவிகளை விரும்பினார்களா? பிறர் மீது அதிகாரம் செலுத்துவது வாழ்வதற்கான வழி அல்ல (வ. 25-26), மாறாகப் பணிவிடை செய்வதே மிக முக்கியமானது என்று இயேசு அவர்களிடம் கூறினார். "உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்" (வ. 26).

"துடைப்பத்தால் சுத்தம் செய்தல்" என்ற விமலின் வார்த்தைகள்; கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ய, நம் சமூகங்களிலும் சபைகளிலும் நாம் ஒவ்வொருவரும் என்ன செய்திடலாம் என்பதற்கான நடைமுறை பாடம். விமல்  தனது வாழ்க்கையில் தேவன் மீதான கொண்டுள்ள ஆர்வத்தை இவ்வாறு விவரித்தார்: "நான் தேவனின் மகிமைக்காகவும், உலகின்  நன்மைக்காகவும், என் சொந்த மகிழ்ச்சிக்காகவும் ஊழியம் செய்ய விரும்புகிறேன்." தேவன் நம்மை வழிநடத்துகையில்,  நீங்களும் நானும் எவ்வாறு "துடைப்பத்தைக் கையிலெடுப்போம்"?

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.  

தேவனின் ஆறுதலான அர்ப்பணிப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பம் அமெரிக்காவின் நான்கு மாநிலங்கள் சந்திக்கும் புள்ளியில் எங்கள் குடும்பம் ஆளுக்கொரு திசையாய் நின்றோம். என் கணவர் அரிசோனா எனக் குறிக்கப்பட்ட பிரிவில் நின்றார். எங்கள் மூத்த மகன், ஏ.ஜே., யூட்டாவிற்குள் நுழைந்தார். நாங்கள் கொலராடோவிற்குள் நுழைந்தபோது எங்கள் இளைய மகன் சேவியர் என் கையைப் பிடித்தார். நான் நியூ மெக்சிகோவிற்குச் சென்றபோது, சேவியர், “அம்மா, நீங்கள் என்னை கொலராடோவில் விட்டுச் சென்றீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை!” என்று சொன்னான். எங்கள் சிரிப்பு நான்கு வெவ்வேறு மாநிலங்களில் கேட்டதால் நாங்கள் ஒன்றாகவும் பிரிந்தும் இருந்தோம். இப்போது எங்கள் வளர்ந்த மகன்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால், அவர்கள் எங்கு சென்றாலும் அவருடைய பிள்ளைகள் அனைவரோடுங்கூட தேவன் இருப்பேன் என்று சொன்ன வாக்குத்தத்தத்தை நான் ஆழமாக நம்புகிறேன்.  
மோசேயின் மரணத்திற்குப் பிறகு, தேவன் யோசுவாவை தலைமைத்துவத்திற்கு அழைத்தார். மேலும் இஸ்ரவேலரின் எல்லையை விரிவுபடுத்தியபோது அவரது பிரசன்னத்தை உறுதிசெய்தார் (யோசுவா 1:1-4). தேவன், “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 5) என்று சொன்னார். யோசுவா தம்முடைய ஜனங்களின் புதிய தலைவராக சந்தேகத்துடனும் பயத்துடனும் போராடுவான் என்பதை அறிந்த தேவன், இந்த வார்த்தைகளில் நம்பிக்கையின் அடித்தளத்தை உருவாக்கினார்: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (வச. 9). 
தேவன் நம்மை அல்லது நம் அன்புக்குரியவர்களை எங்கு அழைத்துச் சென்றாலும், கடினமான காலங்களில் கூட, அவருடைய மிகவும் ஆறுதலான அர்ப்பணிப்பு அவர் எப்போதும் நம்மோடு இருப்பதை உறுதிப்படுத்துகிறது.