திராட்சை செடியில்
கடுமையான குளிர் காலத்தில், எம்மா தன்னுடைய குடும்பத்தின் நபர் ஒருவருக்கு, அவருடைய நீண்ட நாள் சுகவீனத்தில் உதவினாள். கேம்பிரிட்ஜ் நகரிலுள்ள அவளுடைய வீட்டினருகிலுள்ள செர்ரி மரங்களைக் கடந்து செல்லும் போதெல்லாம் அவளுக்கு ஓர் ஊக்கம் கிடைக்கும். அந்த இளஞ்சிவப்பு நிற செர்ரி மலர்களினூடே ஒரு வெள்ளையான மலர் கொத்து வெளிப்பட்டது. ஒரு புத்திசலியான தோட்டக்காரர் அந்த செர்ரி மரக் கிளையில் வெண்மை மலர் கொப்பு ஒன்றை ஒட்ட வைத்தார். அந்த அசாதாரணமான மரத்தை எம்மா கடந்து செல்லும் போதெல்லாம், திராட்சைக் கொடிகளைப் பற்றி இயேசு சொன்ன வார்த்தைகளை அவள் நினைவு கூர்ந்தாள். இயேசுவின் சீடர்களாகிய நாம் அவரில் கிளைகளாக ஒட்டப் பட்டுள்ளோம். அவரில் நிலைத்திருந்து அவர் தரும் ஆகாரத்தையும், பெலனையும் பெற்றுக் கொண்டோமேயானால் நாமும் மிகுந்த கனிகளைத் தர முடியும் (யோவா. 15:6).
எம்மா தன் குடும்ப நபர் ஒருவருக்கு ஆதரவாக இருந்தது போல, அவள் இயேசுவில் நிலைத்திருந்து தன்னுடைய ஆகாரத்தை இயேசுவிடமிருந்து பெற்றுக் கொண்டாள்.
இளஞ்சிவப்பு ,மலர்களினிடையே இருந்த வெண் மலர்கள், இந்த உண்மையை உறுதிப் படுத்தின. அவளும் இயேசுவில் நிலைத்திருந்தால் அவளுக்குத் தேவையான பெலனை அவர் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
திராட்சைக் கொடியானது செடியில் நிலைத்திருக்க வேண்டியது எத்தனை அவசியமோ அப்படியே இயேசுவின் விசுவாசிகளான நாமும் அவரோடு நெருங்கி ஜீவிக்க வேண்டும். அப்பொழுது நம்முடைய விசுவாசம் உறுதியாயிருந்து பலன் தரும்.
தன்னை திராட்சைச் செடி என்று கூறும் இயேசு, இஸ்ரவேலர் அதன் கொடிகள் என்றும், அவர்கள் தம்மோடு இணைக்கப்பட்டவர்கள் என்றும் உணர்த்துகிறார். அவரில் நிலைத்திருக்கும் போது, அவருடைய போஷாக்கையும் பெலனையும் பெற்று, மிகுந்த கனிகளைக் கொடுப்பர் (யோவா. 15:5).
வாழ்க்கை மாறுகிறது
ஸ்டீபன் கிழக்கு லண்டனின் மோசமான பகுதியில் வளர்ந்து தன்னுடைய 10ஆவது வயதிலே குற்றவாளியானான். அவன், 'எல்லாரும் போதைப்பொருள் விற்று, ஏமாற்றுகிறவர்களாயிருந்து, கொள்ளையடித்து வாழ்பவர்களோடு சேர்ந்து வாழ்வது தான் வாழ்க்கை" எனக் கூறினான். ஆனால், அவன் இருபது வயதாகும் போது, அவன் கண்ட ஒரு கனவு அவன் வாழ்வையே மாற்றியது. 'ஸ்டீபன், நீ கொலை செய்தமைக்காக சிறைக்கு செல்லவிருக்கிறாய்", என்று தேவன் என்னிடம் கூறக்கேட்டேன். இந்த விளக்கமான கனவானது அவனுக்கு ஒரு எச்சரிப்பாக மாறி, அவனை தேவனுக்கு நேராகத் திருப்பி ஆண்டவரை ஏற்றுக்கொள்ள வைத்தது. பரிசுத்த ஆவியானவர் அவன் வாழ்வை மாற்றினார்.
ஸ்டீபன் ஒரு நிறுவனத்தை நிறுவி அதன்மூலம் விளையாட்டுப்போட்டிகளின் வாயிலாக, உள் பட்டணத்து பிள்ளைகளுக்கு ஒழுக்கம், மரியாதை மற்றும் சுத்தமான வாழ்க்கை போன்றவற்றைக் கற்றுக்கொடுத்தான். அந்தப் பிள்ளைகளோடு ஜெபித்து அவர்களைப் பயிற்றுவிப்பதின் மூலம் தேவனுடைய நாமத்திற்கு மகிமையைக் கொண்டுவந்தான். 'வழிதப்பிப்போன கனவுகளைத் திரும்பிக்கட்டுதல்" என அதற்குப் பெயரிட்டான்.
தேவனை நாடி நம்முடைய பழையவைகளை மறந்து வாழ்வோமானால்-நாமும் ஸ்டீபனைப்போல் ஆவோம். புதிய வழியான வாழ்க்கையைத் தழுவிக்கொள்ள பவுல் எபேசியருக்குக் கொடுத்த அறிவுரையின்படி நாமும் வாழலாம். நம்முடைய பழைய சுயமானது, 'ஏமாற்றுகின்ற இச்சைகளினால் பாதிக்கப்படும் பொழுது," நாம் தினந்தோறும் 'புதிய மனுஷனை தரித்துக் கொள்ளலாம்". அது தேவனுக்கு ஏற்ற அவரைப் போலாகும் சுபாவமாக மாறும் (எபே. 4:22,24). அவருடைய பரிசுத்த ஆவியானவருடைய ஒத்தாசையோடு, அவரைப் போல நம்மையும் மாற்றுவதற்கு, இந்த தொடர்ச்சியான சுத்திகரிப்பினைத் தழுவிக்கொள்ளலாம்.
ஸ்டீபன், 'என் வாழ்க்கையை மாற்றின விசுவாசமானது, ஒரு முக்கியமான அஸ்திபாரமாக எனக்கு அமைந்தது", என்று கூறுகிறார். இது உங்களுடைய வாழ்க்கையில் எவ்வாறு உண்மையாகும்?
தேவனுக்காகப் பிரயாசப்படுதல்
இங்கிலாந்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் வில்லியம் கேரி. பின்னாளில் அவர் என்ன சாதிக்கப்போகிறார் என்று அவர் காலத்தில் (1761-1834), அவருடைய கிராமத்தில் வாழ்ந்த யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நவீனக்கால ஊழியப் பணிகளின் தந்தை என்று அவர் இன்று அழைக்கப்படுகிறார். அவருடைய பெற்றோர் நெசவு தொழிலாளர்கள். வில்லியம் கேரியும்கூட ஆசிரியராகவும், செருப்புத் தைப்பவராகவும் வேலை செய்தார்; ஆனால் அதில் அவர் பெரிதாக ஜொலிக்கவில்லை. கிரேக்கம், எபிரெயம், லத்தீன் போன்ற மொழிகளைக் கற்றுக் கொண்டார். இந்தியாவில் நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என்பது அவருடைய கனவு. பல வருடங்களுக்கு பிறகு அந்தக் கனவு நிஜமாகியது. ஆனால் அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. அவருடைய குழந்தை மரித்துப்போனது, மனைவி மனநோய்க்கு ஆளானார், அவர் யார் மத்தியில் ஊழியம் செய்தாரோ அவர்களிலும்கூட பல வருடங்களாக எந்த மாற்றமுமே காணப்படவில்லை.
ஆனாலும் அவர் முழு வேதாகமத்தையும் ஆறு மொழிகளில் மொழிபெயர்த்திருக்கிறார்; வேதாகமத்தின் சில பகுதிகளை இருபத்தொன்பது மொழிகளில் மொழிபெயர்த்திருக்கிறார். பல கஷ்டங்களின் மத்தியிலும் அவரால் எவ்வாறு தொடர்ந்து சேவைபுரிய முடிந்தது? “என்னால் கடுமையாகப் பிரயாசப்படமுடியும். குறிப்பிட்ட இலக்கை அடைய என்னால் விடாமல் முயற்சிசெய்யமுடியும்” என்று அவர் சொன்னார். என்னென்ன சோதனைகள் வந்தாலும் தேவனுக்குச் சேவைசெய்ய தன்னை அர்ப்பணித்திருந்தார்.
இவ்வாறு கிறிஸ்துவுக்கு நம்மை தொடர்ந்து அர்ப்பணிக்க வேண்டியது அவசியமென எபிரெயருக்கு எழுதும்போது பவுல் ஆலோசனை கூறுகிறார். தேவனைக் கனப்படுத்த விரும்பினால் ‘அசதியாயிராமல்’ (எபி. 6:11) “முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்க வேண்டுமென்று” தன் வாசகர்களுக்கு அறிவுறுத்துகிறார் (வச. 12).
தேவன் தன்னுடைய தேவைகளை எல்லாம் சந்தித்து வந்ததாக பின்னான வருடங்களில் வில்லியம் கேரி சொன்னார். “தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களை ஒரு நாளும் நிறைவேற்றத் தவறவில்லை; எனவே அவருடைய பணியை நானும் செய்யாமல் இருக்கமுடியாது” என்று சொன்னார். நாமும்கூட ஒவ்வொரு நாளும் தேவனுக்காகச் சேவைசெய்யும்படி அவர் தாமே நம்மைப் பெலப்படுத்துவாராக.
எப்படி சமாதானம் பெறுவது?
மதியம் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, என்னுடைய நண்பன் என்னிடம், “சமாதானம் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான். “சமாதானமா... என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஏன் கேட்கிறாய்?” என்று சற்றுக் குழப்பத்தோடு அவனிடம் கேட்டேன். உடனே அவன், “ஆராதனையின்போது காலால் தரையில் கோலமிட்டவண்ணம் இருந்தாய். உன் மனது ஏதோ சஞ்சலத்தில் இருக்கிறதென நினைக்கிறேன். தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு தேவன் தருகிற சமாதானம் பற்றி யோசித்திருக்கிறாயா?” என்று என்னிடம் கேட்டான்.
சில வருடங்களுக்குமுன் ஒரு நாளில், என் நண்பன் கேட்ட அந்தக் கேள்வி உண்மையிலேயே என் மனதில் ஆழமாகக் குத்தியது. புதிய ஒரு பாதையில் நான் பயணிக்க உதவியது. சந்தோஷமாகவும் சமாதானமாகவும் வாழ்வது ஓர் ஈவு. அதை கஷ்டங்களுக்கு மத்தியிலும் தேவ பிள்ளைகள் எவ்வாறு தங்களுக்குச் சொந்த மாக்கினார்களென வேதாகமத்தில் ஆராயத் துவங்கினேன். கொலோசெயருக்கு பவுல் எழுதும் நிருபத்தில், தேவ சமாதானம் அவர்களுடைய இருதயங்களில் ஆளவேண்டுமென அவர் சொல்கிறார். அதுபற்றித் தியானித்தேன் (கொலோ. 3:15).
கொலோசெ சபைக்கு பவுல் சென்றதில்லை, தன் நண்பனாகிய எப்பாப்பிரா மூலம்தான் அதைப்பற்றி அறிந்துகொண்டார். பொய்ப்போதகங்களை அவர்கள் கேட்க நேரிட்டால், கிறிஸ்துவின் சமாதானத்தை இழந்துபோவார்களென வருந்தினார். ஆனால் அவர்களைக் கடிந்துகொள்வதற்கு பதிலாக, இயேசுவை நம்பும்படியும், நம்பிக்கையையும் நிச்சயத்தையும் கொடுக்க அவர் வல்லவர் என்றும் அவர்களை ஊக்கப்படுத்துகிறார் (வச. 15).
கிறிஸ்துவின் சமாதானம் நம் இருதயங்களில் ஆளும்படி அதை அனுமதிப்பதா அல்லது மறுப்பதா என்று நம்மைக் குழப்புகிற பல சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்கிறோம். நாம் அவரிடம் சென்று, நமக்குள் வசிக்கும்படி அவரிடம் கேட்டால், நம்மைப் பாரப்படுத்துகிற சஞ்சலத்தையும் கவலைகளையும் அன்போடு அவர் அகற்றிப் போடுவார். அவருடைய சமாதானத்தை நாம் தேடினால், அவர் அன்போடு நம் தேவைகளைச் சந்திக்கிறார் என்று நம்புவதை வெளிப்படுத்துகிறோம்.
கயிற்றை அவிழ்த்துவிடுங்கள்
மன்னிப்பதால் கிடைக்கிற சுகத்தை எல்லாரும் அறிந்துகொள்ள ஒரு கிறிஸ்தவ அமைப்பினர் முயன்று வருகிறார்கள். அந்த ஊழியத்தின் ஒரு பகுதியாக குறுநாடகம் ஒன்றை நடத்துவார்கள். அதில், தவறுசெய்த ஒருவரையும் அவரால் பாதிக்கப்பட்டவரையும் முதுகோடு முதுகாகச் சேர்த்துக் கட்டிவிடுவார்கள். அந்தக் கட்டிலிருந்து தப்பிக்கவேண்டுமானால் பாதிக்கப்பட்டவர்தான் கட்டை அவிழ்க்கவேண்டும். அவர் எவ்வளவுதான் முயன்றாலும் கட்டை அவிழ்க்க முடியாது; கட்டை அவிழ்க்காமல் தப்பிக்கவும் முடியாது.
தாங்கள் தவறுசெய்துவிட்டதாக ஒருவர் நம்மிடம் வந்து வருத்தம் தெரிவிக்கும்போது, அவரை மன்னிக்கவேண்டும். அப்போதுதான் நாம் அனுபவித்த வேதனை, கசப்பிலிருந்து நம்மையும் நம்மைப் பாடுபடுத்தியவரையும் விடுவித்துவிட முடியும். ஏசாவின் சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபு ஏமாற்றி வாங்கிவிட்டார், அதன்பிறகு இரு சகோதரர்களும் இருபது வருடங்கள் பிரிந்து வாழ்கிறார்கள். இந்தச் சம்பவத்தை ஆதியாகமத்தில் வாசிக்கலாம். பல வருடங்கள் கடந்த நிலையில், பிதாக்களுடைய தேசத்திற்குத் திரும்பிச்செல்லும்படி யாக்கோபிடம் தேவன் கூறுகிறார். ஆதி 31:3. யாக்கோபு உடனே கீழ்ப்படிந்தார்; ஆனால், அதற்கு முன்னரே ஏராளமான மிருக ஜீவன்களை வெகுமானமாக ஏசாவுக்கு அனுப்பிவைக்கிறார். ஆதி 32:13-15. சகோதரர்கள் இருவரும் சந்தித்த போது, ஏழுவிசை தன் சகோதரனை குனிந்து, வணங்குகிறார். ஆதி 33:3. ஏசா ஓடிச்சென்று, தன் சகோதரனைக் கட்டியணைக்கிறார்; மீண்டும் சேர்ந்ததை எண்ணி, இருவரும் அழுகிறார்கள் (வச. 4). தன் சகோதரனுக்கு விரோதமாக தான் செய்த பாவத்தின் பிடியிலிருந்து இப்போது யாக்கோபு விடுவிக்கப்பட்டார்.
மன்னிப்பு வழங்கமுடியாமல் சிறைபட்டிருக்கிறீர்களா? கோபத்தையும் பயத்தையும் அல்லது அவமானத்தையும் அகற்றமுடியாமல் தவிக்கிறீர்களா? நீங்கள் உதவிகேட்டால், தேவன் தம்முடைய குமாரன் மூலமாகவும் ஆவியானவர் மூலமாகவும் உங்களை விடுவிப்பார். எப்படிப்பட்ட கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும் கட்டை அவிழ்ப்பதற்கான செயல்முறையைத் துவங்குவதற்கு அவர் பெலன் தருவார்; அப்போது நீங்கள் விடுதலைபெறலாம்.
தேவன் என் வாழ்வைக் காப்பாற்றினார்
ஆரோன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பதினைந்து வயதாயிருக்கும் போது சாத்தானிடம் ஜெபிக்க ஆரம்பி;த்தான். “நானும் அவனும் பங்காளிகளென நான் உணர்கிறேன்” என ஆரம்பித்த ஆரோன், பொய் கூறவும், திருடவும் ஆரம்பித்தான். தன் குடும்பத்தையும் நண்பர்களையும் திறமையாகக் கையாண்டான். அவனுக்கு பயங்கர கனவுகள் தோன்றின. “ஒரு நாள் காலை நான் எழுந்திருந்தபோது என் படுக்கையின் ஓரத்தில் சாத்தானிருக்கக் கண்டேன். ஆவன் என்னிடம் நீ இந்த தேர்வில் வெற்றிபெறுவாய் அதன் பின்னர் மரித்துவிடுவாய்” எனறான். தேர்வுகள் முடிந்த பின்னரும் அவன் உயிரோடிருந்தான். அதனைக் குறித்து ஆரோன் சிந்திக்க ஆரம்பித்தான்.…
பள்ளத்தாக்கினூடே
ஹே வூ (அது அவளுடைய சொந்த பெயரல்ல) வட கொரியாவிலுள்ள தொழிலாளர் கேம்பில் சிறையிலடைக்கப்பட்டாள். அவள் அந்நாட்டு எல்லையைத் தாண்டி சீனாவிற்குள் செல்ல முயற்சித்ததால் பிடிபட்டாள். அங்கு அவள் இரவும் பகலும் பல கொடுமைகளைச் சகித்தாள். மிருகத்தனமான காவலாளிகளாலும், முதுகை உடையச் செய்யும் வேலையாலும், பனி போல குளிரும் தரையில் பூச்சிகள் பேன்களோடும், எலிகளோடும் போராடி குறைந்த நேரமே தூங்க முடிந்தததாலும் மிகவும் துன்பப்பட்டாள். ஆனால், தேவன் ஒவ்வொருநாளும் அவளோடிருந்து அவளுக்கு உதவினார். அந்தச் சூழலிலும் தேவன், எந்த கைதிகளோடு நம்மோடு பேச முடியும் என்பதைக் காட்டி, அவர்களோடு தன்னுடைய விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ள உதவினார்.
அந்த காப்பகத்திலிருந்து விடுதலை பெற்ற பின்பு தென் கொரியாவில் வாழ்ந்தாள். வூ தான் சிறையிலிருந்த நாட்களைக் குறித்து எண்ணிப்பார்த்தாள். தன்னுடைய வாழ்வின் அநுபவம் முழுவதும் சங்கீதம் 23ல் தொகுக்கப்பட்டுள்ளது என்றாள். அவள் ஓர் இருளடைந்த பள்ளத்தாக்கில் அடைக்கப்பட்டிருந்தாலும் இயேசு அவளுடைய மேய்ப்பனாக இருந்து சமாதானம் கொடுத்தார். “சாவின் பள்ளத்தாக்கு போன்ற ஓரிடத்தில் தான் தங்க நேர்ந்தாலும் நான் எதைக் குறித்தும் அஞ்சவில்லை. ஒவ்வொரு நாளும் தேவன் என்னைத் தேற்றினார்” அவள் தேவனுடைய நன்மையையும் அன்பையும் ருசித்தபடியால், தேவன் அவளுக்கு தான் தேவனுடைய அன்பு மகள் என்ற உறுதியைக் கொடுத்தார். “நான் ஒரு பயங்கரமான இடத்திலிருந்தேன். ஆனாலும் தேவனுடைய நன்மையையும் அன்பையும் நான் உணர்ந்தேன்” என்றாள். அவள் தேவனுடைய பிரசன்னத்தில் எப்பொழுதும் இருப்பதாக அறிந்து கொண்டாள்.
வூவின் கதையைக் கேட்கும் போது நமக்கு அது ஊக்கத்தையளிக்கின்றது. அவள் பயங்கரமான சூழலிலிருந்த போதும் தேவனுடைய அன்பையும் வழிநடத்துதலையும் உணர முடிந்தது. தேவன் அவளைத் தாங்கி அவளுடைய பயத்துக்கு விலக்கிக் காத்தார். நாமும் இயேசுவைப் பின்பற்றுவோமாயின், அவர் நம்முடைய துன்பங்களின் வழியே நம்மை மென்மையாக நடத்துவார். நாம் பயப்படத் தேவையில்லை. ஏனெனில், “நாம் கர்த்தருடைய விட்டில் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்போம்” (23:6)
மேகங்களால் மறைக்கப்பட்டது
மிக அபூர்வமான நிலவின் காட்சி, நவம்பர் மாதம் 2016ல் தெரிந்தது. நிலா தன்னுடைய வட்டப் பாதையில் சுழன்று பூமிக்கு மிக அருகில் வந்ததால் அது மிகப் பெரியதாகவும் மிகப் பிரகாசமானதாகவும் தோன்றியது. கடந்த அறுபது ஆண்டுகளுக்குப்பின் காணக் கிடைத்த ஓர் அரிய காட்சி. ஆனால், நான் இக்காட்சியைக் கரிய மேகங்களால் சூழப்பட்டதால் வானத்தில் பார்க்க முடியவில்லை. ஆனால், வேறு இடங்களிலிருந்து இக்காட்சியைக் கண்ட என்னுடைய நண்பர்களின் புகைப்படங்கள் மூலம் கண்டு கொண்டேன். நான் வானத்தை உற்று நோக்கினேன். மேகங்களுக்குப் பின்னால் இந்த மிகப் பெரிய நிலா இருக்கின்றது என்பதை நான் நம்பவேண்டியதாயிற்று.
கொரிந்து பட்டணத்தின் சபைகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதும்போது அவர்கள் அனுபவிக்கின்ற துன்பத்தின் மத்தியில் காணப்படாத நித்தியத்தைக் குறித்த நம்பிக்கையை விடாதிருக்கக் கேட்கின்றார். மேலும் 'அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது" எனக் கூறுகின்றார் (2 கொரி. 4:17). எனவே அவர்கள் தங்கள் கண்களை, ''காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளையே நோக்கித்" திருப்புமாறும் ''காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்" (வச. 18) எனவும் கூறுகின்றார். கொரிந்து சபையினரின் விசுவாசம் வளர வேண்டுமென பவுல் வாஞ்சிக்கின்றார். அவர்கள் துயரத்தை அநுபவிப்பதால். தேவன் மீது நம்பிக்கையோடிருக்க விரும்புகின்றார். அவர்களால் தேவனைக் காண முடியாவிட்டாலும் தேவன் அவர்களை நாளுக்கு நாள் புதிதாக்குகின்றதை நம்பும்படி கேட்கின்றார் (வச. 16).
நான் அன்று அந்த மேகங்களினூடே பார்த்தபோது காணப்படாத ஒரு பெரிய நிலாவை எப்படி நம்பினேனோ, அப்படியே தேவன் காணப்படாதவராகவும் ஆனால் நித்தியமானவராகவும் இருக்கின்றார். தேவன் என்னை விட்டு மிக தூரத்தில் இருக்கின்றார் என்று நான் நினைக்கத் தோன்றும்போதெல்லாம் நான் என் கண்களை காணப்படாத நித்தியமானவைகளின் மீது வைத்துக் கொள்வேன்.
அந்நியரை உபசரித்தல்
ஐரோப்பா கண்டத்திலேயே மிகவும் ஏழ்மையான நாடான மால்டோவாவிற்கு என்னுடைய சிநேகிதி சென்றிருந்தபோது, அங்குள்ள கிறிஸ்தவர்கள் அவர்களுக்குக் கொடுத்த மலர்ந்த வரவேற்பில் அகமகிழ்ந்து போனாள். ஒருமுறை அவள் சில துணிகளையும், வீட்டிற்குத் தேவையான சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு அங்குள்ள ஆலயத்தின் உறுப்பினரான ஓர் ஏழைத் தம்பதியினரைக் காண அவர்கள் இல்லத்திற்குச் சென்றபோது, அங்கு அவர்கள் அநேகக் குழந்தைகளைத் தத்தெடுத்து, பராமரித்து வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். அந்தத் தம்பதியினர் என்னுடைய சிநேகிதியை இன்முகத்தோடு வரவேற்று, டீ வழங்கினர். அத்தோடு சில தின்பண்டங்களையும் கொடுத்தனர். மேலும் தர்பூசணி, மேலும் சில பழவகைகள், காய்கனிகளை அவளுக்குக் கொடுத்து வழியனுப்பிவைத்தனர். அவர்களுடைய உபசரணையைப் பார்த்து வியந்துபோனாள்.
தேவன் தம் ஜனங்களாகிய இஸ்ரவேலரிடம் அந்நியரை உபசரிக்கும்படி சொன்னதை இந்த விசுவாசிகள் செயலில் காட்டுகின்றனர். தேவன் அவர்களிடம், 'நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிளெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்பு கூர்ந்து, உன் முழு இருதயத்;தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து... (உபா. 10:12) என்பதாகக் கூறியுள்ளதை இஸ்ரவேலர் எவ்வாறு செயலில் காட்ட வேண்டும்? இன்னும் சில வசனங்களுக்கப்பால் இதற்கான பதில் வருகிறது. 'நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக" (வச. 19). அந்நியரை வரவேற்கும் போது அவர்கள் தேவனுக்குப் பணிசெய்து, அவரைக் கனம் பண்ணுகின்றனர். அந்நியரிடம் அன்பையும், கரிசனையையும் காண்பிப்பதால் தேவன் மீதுள்ள நம்பிக்கையை அவர்களுக்கு வெளிப்படுத்துகின்றனர்.
மால்டோவர்களிடமிருந்தும், இஸ்ரவேலிடமிருந்தும் நம்முடைய சூழ்நிலைகள் வேறுபட்டு காணப்படலாம். ஆனால் பிறரை உபசரிப்பதன் மூலம் தேவன் மீதுள்ள அன்பினைக் காட்ட முடியும். நம்முடைய வீட்டைப் பிறருக்குத் திறந்து கொடுப்பதன் மூலமாகவும், நம் எதிரே வருபவர்களிடம் புன்னகையோடு வாழ்த்து தெரிவிப்பதன் மூலமாகவும், தேவனுடைய அன்பைக் காட்டலாம். ஒருவரையொருவர் காயப்படுத்தும், தனிமைப்படுத்தும் இவ்வுலகில் தேவனுடைய கரிசனையையும், உபசரணையையும் காட்டுவோம்.