எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எமி பவுச்சர் பைகட்டுரைகள்

காண்பதற்கு கண்கள்

ஜெனிவீவ் தனது மூன்று குழந்தைகளுக்கு “கண்களாக” இருக்கவேண்டியதாயிருந்தது, ஏனெனில் அவர்கள் மூவரும் பார்வை குறைபாட்டுடன் பிறந்தவர்கள். மேற்கு ஆப்பிரிக்காவின் பெனின் குடியரசில் உள்ள தங்களின் கிராமத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லும்போதெல்லாம், அவள் குழந்தையைத் தனது முதுகில் கட்டிக்கொண்டு,  மூத்த பிள்ளைகள் இருவரின் கைகளையும் பிடித்தபடியே, எப்போதும் வாழ்க்கையின் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தாள். மாந்திரீகத்தால் குருட்டுத்தன்மை ஏற்படுவதாகக் கருதப்பட்ட ஓர் கலாச்சாரத்தில் வாழ்ந்த இந்த ஜெனிவீவ், விரக்தியடைந்து தேவனிடத்தில் உதவிக்காய் மன்றாடினாள். 

அப்போது அவளது கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் “மெர்சி ஷிப்ஸ்” பற்றி அவளிடம் சொன்னார். அவை ஏழைகளுக்கு நம்பிக்கையையும், சுகமளிக்கும் இயேசுவின் மாதிரியை அடையாளப்படுத்தும் விதத்தில் முக்கிய அறுவைசிகிச்சைகளையும் சேவையாக செய்துவந்த ஓர் ஊழிய ஸ்தாபனம். அவர்களிடத்தில் உதவி கிடைக்குமா என்ற நிச்சயமில்லாமல் அவர்களை அணுகினாள். அவர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர், அவளின் மூன்று பிள்ளைகளுக்கும் பார்வை கிடைத்தது. 

தேவனுடைய நடத்துதுல் எப்போதுமே இருளில் மூழ்கியவர்களுடன் சேர்ந்துவந்து, அவர்களுக்கு அவருடைய ஒளியைக் கொண்டுவருவதாகும். ஏசாயா தீர்க்கதரிசி, தேவன் புறஜாதிகளுக்கு ஒளியாய் இருக்கிறார் (ஏசாயா 42:6) என்று அறிவிக்கிறார். அவர் குருடருடைய கண்களைத் திறப்பார் (வச. 7). சரீரப்பிரகாரமான குருடுகளை மட்டுமின்றி, ஆவிக்குரிய ரீதியான பார்வையற்ற நிலைமையையும் அவர் மாற்றுவார். அவர் தனது ஜனத்தின் கரத்தைப் பிடித்திருப்பதாக வாக்களிக்கிறார் (வச. 6). பார்வையற்றவர்களுக்குப் பார்வையை மீட்டுத் தந்தார். இருளில் வாழ்ந்தவர்களுக்கு ஒளியைக் கொண்டு வந்தார்.

இன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தார்!

சார்லஸ் சிமியோன் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் பல்கலைக்கழகத்தில் சேரும் முன், அவருக்கு குதிரைகளும் ஆடைகளும் பிடிக்கும், ஆண்டுதோறும் தனது ஆடைகளுக்காக பெரிய தொகையை செலவிட்டார். ஆனால் அவரது கல்லூரியின் ஒழுங்கின்படி திருவிருந்து ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், அவர் நம்புவதை ஆராயத் தொடங்கினார். இயேசுவின் விசுவாசிகளால் எழுதப்பட்ட புத்தகங்களைப் படித்த பிறகு, அவர் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை ஒரு வியத்தகு மாற்றத்தை அனுபவித்தார். ஏப்ரல் 4, 1779 அன்று அதிகாலையில் எழுந்த அவர், “இயேசு கிறிஸ்து இன்று உயிர்த்தெழுந்தார்! அல்லேலூயா! அல்லேலூயா!” என கதறினார். அவர் ஆண்டவரைப் பற்றிய விசுவாசத்தில் வளர்ந்ததால், அவர் வேதாகம வாசிப்பு, ஜெபம் மற்றும் சபை ஆராதனைகளில் கலந்துகொள்வதில் தன்னை அர்ப்பணித்தார்.

முதல் ஈஸ்டர் அன்று, இயேசுவின் கல்லறைக்கு வந்த இரண்டு பெண்களின் வாழ்க்கை மாறியது. அங்கே ஒரு தூதன் கல்லைத் புரட்டி போட்டதால் பூமி மிகவும் அதிர்ந்ததை கண்டனர். அவன் அவர்களிடம், "நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்" (மத்தேயு 28:5–6) என்றான். மிகுந்த மகிழ்ச்சியில், ஸ்திரீகள் இயேசுவை பணிந்துகொண்டு, தங்கள் நண்பர்களுக்கு நற்செய்தியைச் சொல்ல ஓடினர்.

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை சந்திப்பது பண்டைய நாட்களில் மட்டும் நடப்பதல்ல; அவர் இங்கேயும் இப்போதும் நம்மை சந்திப்பதாக வாக்களிக்கிறார். கல்லறையில் பெண்கள் அல்லது சார்லஸ் சிமியோன் பெற்றது போன்ற ஒரு வியத்தகு சந்திப்பை நாம் அனுபவிக்கலாம், இல்லமல் போகலாம். இயேசு தம்மை நமக்கு வெளிப்படுத்துவது எத்தகைய விதமாயினும், அவர் நம்மை நேசிக்கிறார் என்பதை நாம் நம்பலாம்.

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் 'மாண்டடம்' அதாவது "கட்டளை" என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: "நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்." (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, ​​நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.

நம் சத்துருக்களைச் சிநேகிப்பது

அமெரிக்க உள்நாட்டுப் போரால் ஏற்பட்ட கசப்பான உணர்வுகளின் மத்தியில், ஆபிரகாம் லிங்கனுக்கு தெற்கு பகுதியினரைப் பற்றிக் கனிவாகப் பேசுவது சரியானதாகப் பட்டது. அருகே நின்றுகொண்டிருந்தவரோ அதிர்ச்சியுடன், அவரால் எப்படிச் சாத்தியமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவர், "அம்மையாரே, நான் என் எதிரிகளை என் நண்பர்களாக்கும்போது எதிரிகள் அழிவதில்லையா?" எனக் கேட்டார். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அந்த வார்த்தைகளைப் பற்றி, "இதுதான் மீட்டுக்கொள்ளும் அன்பின் வல்லமை" என்று குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்து சத்துருக்களை நேசிக்குமாறு சீடர்களை அழைத்திருக்க, லூதர் கிங் இயேசுவின் போதனைகளில் கற்றார். விசுவாசிகள் தங்களைத் துன்புறுத்துபவர்களை நேசிப்பது கடினமாயிருந்தாலும், தேவனுக்கு "தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் அர்ப்பணிப்பதால்" இத்தகைய அன்பு வளருகிறதைக் குறிப்பிடுகிறார். தொடர்ந்து "இப்படி நாம் அன்பு செலுத்துகையில் நாம் தேவனை அறிந்து அவருடைய பரிசுத்தத்தின் அழகை அனுபவிப்போம்" என்கிறார்.

"உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள் . . . உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்" (மத்தேயு 5:44-45) என்று இயேசு மலைப்பிரசங்கத்தை லூதர் கிங் மேற்கோள் காட்டினார். பிறனை மட்டுமே நேசிக்க வேண்டும், சத்துருக்களை வெறுக்க வேண்டும் என்ற அன்றைய வழக்கமான யோசனைக்கு எதிராக இயேசு ஆலோசனை கூறினார். மாறாக, பிதாவாகிய தேவன் தங்களை எதிர்ப்பவர்களை நேசிக்க தம்முடைய பிள்ளைகளுக்குப்  பெலனைக் கொடுக்கிறார்.

நம் எதிரிகளை நேசிப்பது சாத்தியமற்றதாக தோன்றலாம், ஆனால் நாம் தேவனின் உதவியைத் தேடும்போது, அவர் நம் ஜெபங்களுக்குப் பதிலளிப்பார். "தேவனாலே எல்லாம் கூடும் " (19:26) என்று இயேசு சொன்னபடி, இந்த புரட்சிகரமான நடைமுறையைத் தழுவ அவர் தைரியத்தைக் கொடுக்கிறார்.

தேவனின் மறுரூபமாக்கும் வாா்த்தை

கிறிஸ்டின் தனது சீன கணவருக்காக ஒரு விசேஷித்த புத்தகத்தை வாங்க விரும்பியபோது, சீன மொழியில் அவருக்குக் கிடைத்த ஒரே புத்தகம் பரிசுத்த வேதம். அவர்கள் இருவருமே கிறிஸ்தவ விசுவாசிகள் அல்ல எனினும், அவர் எப்படியும் இந்த பரிசை பாராட்டுவார் என அவள் நம்பினாள். சீன மொழியின் பரிசுத்த வேதாகமத்தைப் பார்த்ததுமே அவர் மிகுந்த கோபமடைந்தார் எனினும் ஏற்றுக்கொண்டார். இறுதியில் அவர் அதைப் படிக்கும்போது, அதிலிருந்த சத்தியம் அவரை விசுவாசிக்க வைத்தது. இந்த எதிர்பாராத நிகழ்வால் வருந்திய கிறிஸ்டினும், உடனே வேத சத்தியங்களை மறுப்பதற்காக அவளும் வேதத்தை வாசிக்கத் தொடங்கினாள். ஆனால் அவளும் இந்த வேத சத்தியத்தை ஏற்று நம்பி கிறிஸ்துவின் விசுவாசியாக மாறியது அவளுக்கே ஆச்சரியமாயிருந்தது.

வேதாகமத்தின் மறுரூபமாக்கும் தன்மையை அப்போஸ்தலனாகிய பவுல் அறிந்திருந்தார். ரோமாபுரியின் சிறையிலிருந்து தான் பயிற்றுவித்த தீமோத்தேயுவுக்கு எழுதுகையில், "பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும், …நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு" (2 தீமோத்தேயு 3:14-15) என வலியுறுத்தினார். மூல மொழியான கிரேக்கத்தில், "தொடரு" என்பதற்கு அர்த்தம் "வேதம் வெளிப்படுத்தினவற்றில் 'நிலைத்திரு' " என்பதாகும். ஊழியத்தில் தீமோத்தேயு எதிர்ப்பையும் துன்பத்தையும் எதிர்கொள்ள வேண்டிவரும் என அறிந்திருந்த பவுல், இப்படிப்பட்ட சவால்களுக்குத் தயாராயிருக்கும்படி விரும்பினார். வேதத்தை வாசித்துத் தியானிக்க நேரத்தைச் செலவிடும்போது, தன இளம் சீடன் பொலத்தையும் ஞானத்தையும் பெறுவான் என்று நம்பினார்.

தேவன் தமது ஆவியினால் வேதத்தை நமக்கு ஜீவனுள்ளதாகத் தருகிறார். நாம் அதில் வாழும்போது, சியோ-ஹூ மற்றும் கிறிஸ்டினுக்கு செய்ததைப் போலவே, அவர் நம்மையும் அவரைப் போலவே மாற்றுகிறார்.

தேவனுடைய வேலையாட்கள்

மத்திய கிழக்கு தேசங்களில் உள்ள அகதிகள் முகாமில் இருந்த ரேசா ஒரு வேதாகமத்தை பரிசாய் பெற்றுக்கொண்டபோது, அவர் இயேசுவை விசுவாசிக்கத் துவங்கினார். “என்னை உம்முடைய வேலையாளாய் பயன்படுத்தும்” என்பதே அவருடைய முதல் ஜெபமாய் இருந்தது. அவர் முகாமை விட்டு வெளியேறிய பின்னர், அவர் எதிர்பாராத விதமாக ஒரு நிவாரண நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தபோது தேவன் அவருடைய அந்த ஜெபத்திற்கு பதிலளித்தார். அவர் அறிந்த மற்றும் நேசித்த மக்களுக்கு சேவை செய்ய மீண்டும் முகாமுக்குத் திரும்பினார். அவர் விளையாட்டுக் கழகங்கள், மொழி வகுப்புகள், சட்ட ஆலோசனைகள் என்று “மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய அனைத்தையும்” ஏற்படுத்தினார். மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கும் தேவனுடைய ஞானத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வழியாகவும் இந்த திட்டங்களை அவர் பார்க்கிறார்.

அவரது வேதாகமத்தைப் படித்தபோது, ரேசா ஆதியாகமத்திலிருந்து யோசேப்பின் சம்பவத்தோடு தனக்கான தொடர்பை உணர்ந்தார். யோசேப்பு சிறைச்சாலையில் இருந்தபோது, அவனுடைய வேலையைத் தொடர்ந்து செய்ய தேவன் எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை அவர் கவனித்தார். தேவன் யோசேப்புடன் இருந்ததால், அவர் அவனுக்கு இரக்கம்பாராட்டி தயவு காண்பித்தார். சிறைச்சாலைக்காரன் யோசேப்பின் காரியங்களில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. ஏனென்றால், யோசேப்பு செய்த எல்லாவற்றையும் தேவன் வாய்க்கப்பண்ணினார் (ஆதியாகமம் 39:23). 

தேவன் நம்மோடு கூட இருப்பார் என்று வாக்களிக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம், இடப்பெயர்வு, மனவேதனை அல்லது துக்கம் போன்ற சிறைச்சாலை அனுபவங்களுக்குள் நாம் கடந்துவந்தாலும், அவர் நம்மை விட்டு விலகமாட்டார் என்று நம்பலாம். முகாமில் இருப்பவர்களுக்கு சேவை செய்ய ரேசாவுக்கும், சிறைச்சாலையை கண்காணிக்க ஜோசப்புக்கும் தேவன் உதவியது போல, அவர் எப்போதும் நம்மோடே கூட இருக்கிறார்.

தேவையானது ஒன்றே

மார்ச் மாதத்தின் ஒரு வார இறுதியில், பெத்தானியாவில் வசித்த இயேசுவின் நேசத்திற்கு பாத்திரமான மரியாள், மார்த்தாள் அவர்களுடைய சகோதரனாகிய லாசுரு (யோவான் 11:5) என்னும் தலைப்பில் ஒரு ஐக்கிய கூடுகையை நான் நடத்த நேரிட்டது. நாங்கள் ஆங்கிலேய கடற்கரையோரத்திலிருந்து தொலை தூரத்தில் இருந்தோம். அங்கு எதிர்பாராத விதமாக பனிப்பொழிவு ஏற்பட்டபோது, பங்கேற்பாளர்களில் பலர், மரியாளைப் போலவே கிறிஸ்துவின் பாதத்தில் அமர்ந்து இன்னுமொரு நாள் பயிற்சி செய்யலாம் என்று தீர்மானித்தனர். இயேசு மார்த்தாளிடத்தில் அன்பாய் சொன்ன, “தேவையானது ஒன்றே” (லூக்கா 10:42) என்ற வாக்கியத்திற்கிணங்க, அவரை நெருங்கி அவரிடத்தில் கற்றுக்கொள்ள தீர்மானித்தோம். 

இயேசு, மார்த்தாள் - மரியாள் - லாசரஸ் வீட்டிற்குச் சென்றபோது, அவர் வருவதை முன்கூட்டியே மார்த்தாள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் உணவளிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்ட மார்த்தாள், ஏன் மரியாளிடம் கோபப்பட்டால் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் உண்மையில் முக்கியமானது எது என்பதை அவள் அறியாதிருந்து, அவரிடத்திலிருந்து கற்றுக்கொண்டாள். இயேசுவுக்கு அவள் சேவை செய்ய விரும்பியதற்காய் இயேசு அவளை திட்டவில்லை. மாறாக, அவள் மிக முக்கியமான விஷயத்தை இழக்கிறாள் என்பதை அவளுக்கு நினைவூட்டினார்.

குறுக்கீடுகள் நம்மை எரிச்சலடையச் செய்யும்போது அல்லது நாம் சாதிக்க விரும்பும் பல விஷயங்களைப் பற்றி அதிகமாக உணரும்போது, வாழ்க்கையில் உண்மையில் என்ன முக்கியம் என்பதை நாம் நிறுத்தி நிதானிக்கவேண்டும். நாம் நம்மை நிதானப்படுத்தி, இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருந்து அவருடைய அன்பினாலும் ஜீவனாலும் நம்மை நிரப்பும்படிக்கு நாம் அவரை வேண்டிக்கொள்ளலாம். அவருடைய அன்பான சீஷனாயிருப்பதில் நாம் மகிழ்ச்சியடையலாம்.

ஆச்சரியங்களின் தேவன்

கருச்சிதைவு ஏற்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, வலேரி ஒரு சில பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்தாள். சில மைல்களுக்கு அப்பால் இருந்த அவளுடைய ஜெரால்ட் என்னும் கைவினையாளர் ஒருவர் அவள் விற்ற குழந்தை தொட்டிலை ஆர்வத்துடன் வாங்கினார். அதை வாங்கும்போது, வலேரியிடம் பேசிய அவரது மனைவியின் வாயிலாக, வலேரியின் பெரும் இழப்பைக் குறித்து அறிந்துகொண்டார். வீட்டிற்கு செல்லும் வழியில் அவளது நிலைமையைக் கேள்விப்பட்ட ஜெரால்ட், தொட்டிலைப் பயன்படுத்தி வலேரிக்கு ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்க முடிவு செய்தார். ஒரு வாரம் கழித்து, அவர் கண்ணீருடன் ஒரு அழகான பெஞ்சை அவளுக்கு பரிசளித்தார். “இங்கே நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், அதற்கான ஆதாரம் இங்கே இருக்கிறது" என்று வலேரி பெருமிதப்பட்டாள். 

வலேரியைப் போலவே, ரூத்தும் நகோமியும் பெரும் இழப்பை தங்களுடைய வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்தது. நகோமியின் கணவரும் அவளுடைய இரண்டு குமாரர்களும் மரித்துபோய்விட்டனர். தற்போது அவளும் அவளுடைய மருமகளான ரூத்தும் ஆதரவற்று நிர்க்கதியாய் நிற்கின்றனர் (ரூத் 1:1-5). அங்கே தான் போவாஸ் வருகிறார். போவாஸின் நிலத்தில் சிந்தியிருக்கும் கதிர்களை பொறுக்குவதற்கு போன ரூத்தைக் குறித்து போவாஸ் கேள்விப்படுகிறார். அவள் யார் என்று அறிந்த பின்பு அவளுக்கு தயைபாராட்டுகிறார் (2:5-9). “எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயைகிடைத்தது” (வச. 10) என்று ரூத் ஆச்சரியத்துடன் கேட்கிறாள். அதற்கு போவாஸ்,  “உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், ... எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது” (வச. 11) என்று பதிலளிக்கிறான். 

போவாஸ் ரூத்தை மணந்துகொண்டு, நகோமியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறான் (வச. 4). அவர்களுடைய அந்த திருமணத்தின் மூலம், முற்பிதாவான தாவீது மற்றும் இயேசுகிறிஸ்து அவர்களின் வம்சாவளியில் தோன்றுகின்றனர். ஜெரால்டையும் போவாஸையும் தேவன் பயன்படுத்தி மற்றவர்களின் கண்ணீரை தேவன் துடைப்பார் என்றால், வேதனையில் உள்ளவர்களின் கண்ணீரை துடைக்க தேவன் நம் மூலமாகவும் கிரியை செய்ய முடியும்.

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

“மோசேயைப் போன்று நீங்கள் எங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தீர்” ஜமீலா ஆச்சரியப்பட்டார். பாகிஸ்தானில் செங்கல்சூளை முதலாளிக்கு அவர்கள் செலுத்தவேண்டிய அதிகப்படியான பணத்தை திரும்பச்செலுத்த வசதியில்லாத காரணத்தினால், அதே சூளையில் கொத்தடிமையாக அவளும் அவரது குடும்பமும் பணியாற்றினர். அவர்களின் சம்பாத்தியத்தின் பெரும்பகுதி வட்டியை செலுத்துவதற்கே செலவாகியது. அவர்களின் கடன் தொகையை ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலம் பரிசாக பெற்றபோது, அவர்கள் நிம்மதி பெருமூச்சிவிட்டனர். அந்த நிறுவனத்தின் பிரதிநிதிக்கு நன்றி செலுத்துகையில், கிறிஸ்துவின் விசுவாசியான ஜமீலா, இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தேவன் மோசேயை பயன்படுத்திய உதாரணத்தை சுட்டிக்காண்பித்தார்.

இஸ்ரவேலர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக எகிப்தியர்களால் ஒடுக்கப்பட்டனர். கடுமையான சூழ்நிலையில் உழைத்தனர். தேவனிடம் உதவி கேட்டு மன்றாடினர் (யாத்திராகமம் 2:23). ஆனால் அவர்களது பணிச்சுமை அதிகரித்தது. ஏனெனில் புதிய பார்வோன், செங்கற்கள் செய்வது மட்டுமல்லாது அவற்றை சுடுவதற்கு தேவையான வைக்கோலை சேகரிக்கவும் அவர்களை கட்டாயப்படுத்தினான் (5:6-8). இஸ்ரவேலர்கள் தேவனை நோக்கி கூக்குரலிட்டபோது, தேவன் அவர்களுடைய தேவனாய் இருக்கும் உடன்படிக்கையை அவர்களுக்கு நினைவுபடுத்தினார் (6:7). இனி அவர்கள் அடிமைகளாக இருக்க மாட்டார்கள். ஏனென்றால் தேவன் அவர்களை ஓங்கிய கையினால் மீட்பதாக வாக்குப்பண்ணுகிறார் (வச. 6).

தேவனுடைய வழிநடத்துதலின்பேரில், மோசே இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுவித்தார் (அதி. 14). இன்றும் சிலுவையில் தன்னுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் விரிந்த கரத்தினால் தேவன் நம்மை மீட்கிறார். நம்மை ஒருகாலத்தில் அடிமைப்படுத்தி வைத்திருந்த பாவத்திலிருந்து நாம் இன்று விடுதலையாக்கப்பட்டுள்ளோம். நாம் இனி அடிமைகள் இல்லை, சுதந்தரவாளிகள்!

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).

 

இயேசு – மெய்யான சமாதானக் காரணர்

1862, டிசம்பர் 30ஆம் தேதி, அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூண்டது. எதிர் துருப்புக்கள் ஓர் ஆற்றின் எதிர்பக்கங்களில் எழுநூறு மீட்டர் இடைவெளியில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தீ மூட்டி குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது, மற்றொரு பகுதியில் சிப்பாய்கள் தங்கள் வயலின்களையும் ஹார்மோனியங்களையும் எடுத்துக்கொண்டு “யாங்கி டூடுல்” என்ற இசையை வாசிக்கத் துவங்கினர். பதிலுக்கு, மறுபக்கத்தில் இருந்த வீரர்கள் “டிக்ஸி” என்று ஓர் பாடல் இசையை  வாசித்தனர். அப்படி மாறி மாறி வாசிக்கையில், இறுதியில் இருதரப்பினரும் இணைந்து “ஹோம், ஸ்வீட் ஹோம்” என்ற இசையை வாசித்தனர். ஒன்றுக்கொன்று எதிரிகளாய் இருந்த இரண்டு தேசத்து இராணுவ வீரர்களும் இரவில் இசையைப் பகிர்ந்து, கற்பனைசெய்ய முடியாத அளவு சமாதானத்தை பிரதிபலித்தனர். இருப்பினும் அந்த மெல்லிசைப் போர்நிறுத்தம் குறுகிய காலமே நீடித்தது. மறுநாள் காலை, அவர்கள் தங்கள் இசைக்கருவிகளை கீழே வைத்துவிட்டு, தங்கள் துப்பாக்கிகளை கையில் எடுத்தனர். அந்த போரில் 24,645 வீரர்கள் உயிரிழந்தனர்.

அமைதியை உருவாக்குவதற்கான நமது மனித முயற்சிகள் தவிர்க்க முடியாமல் பெலனற்றுபோகிறது. பகைமைகள் ஓர் இடத்தில் அணைந்து, வேறொரு இடத்தில் நெருப்பை பற்றவைக்கிறது. ஓர் குடும்பப் பிரச்சனை திடீரென்று முடிவுக்கு வரும், சிறிது நாட்கள் கழித்து மறுபடியும் சூடுபிடிக்கும். நமக்கு நம்பிக்கையான சமாதானக் காரணர் தேவன் மட்டுமே என்று வேதம் சொல்லுகிறது. “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டு” (16:33) என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசுவில் நாம் இளைப்பாறக்கூடும். அவருடைய சமாதானப் பணியில் நாமும் இணைந்துகொள்ளும்போது, மெய்யான சமாதானத்தை அவர் நமக்கு அருளுவார். 

இவ்வுலகத்தின் உபத்திரவ பாதையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாது என்று இயேசு கூறுகிறார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) என்று இயேசு சொல்லுகிறார். நம்முடைய முயற்சிகள் பல சமயங்களில் பயனற்றவையாக இருந்தாலும், நம் அன்பான தேவன் (வச. 27) இந்த உடைந்த உலகில் நமக்கு சமாதானத்தை அருளுகிறார். 

 

கிறிஸ்துவின் சமூகம்

“வீட்டையும், என் மனைவி, மகன் மற்றும் மகளையும் மறந்துவிடுவதே வெற்றிக்கான ஒரே வழி என்று எனக்குத் தெரியும்; ஆனால் என்னால் அதை செய்ய முடியாது என்று கண்டுபிடித்தேன்; அவை என் இதயம் மற்றும் ஆன்மாவில் பிணைக்கப்பட்டுள்ளன” என்று ஜோர்டன் கூறினார். அவர் ஓர் தொலைதூரப் பகுதியில் தனியாக, ஓர் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுக்கொண்டிருந்தார். அங்கு போட்டியாளர்கள் முடிந்தவரை குறைந்தபட்ச பொருட்களுடன் சமவெளியில் உயிர்வாழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அங்கிருக்கக்கூடிய பயங்கரமான கரடிகள், உறைபனி, காயங்கள் மற்றும் பசி ஆகியவைகளை அவரால் சமாளிக்க முடிந்திருந்தும், தன் குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்கும் தனிமையை அவரால் மேற்கொள்ள முடியவில்லை. அந்த ஆட்டத்தை கைவிட அவைகள் அவரை கட்டாயப்படுத்தியது. 

வனாந்தரத்தில் உயிர்வாழ தேவையான அனைத்து காரியங்களும் நம்மிடம் இருந்தாலும், நம்முடைய சமூகத்தினின்று நாம் பிரிந்திருப்பது நம்மை தோல்விக்கு நேராய் நடத்தக்கூடும். பிரசங்கி புத்தகத்தில் ஞானி, “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்... ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்” (4:9-10) என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவை கனப்படுத்தும் சமூகம், குழப்பம் ஏற்படுத்தினாலும்கூட, அவைகள் நமது வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இந்த உலகத்தின் சோதனைகளை நாம் சொந்தமாகச் சமாளிக்க முயற்சித்தால் அவைகளை நாம் மேற்கொள்ள முடியாது. “ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்” (வச. 8) அவனுடைய பிரயாசம் விருதாவாயிருக்கிறது. சமூகத்தில் இல்லாமல் தனித்திருந்தால் நாம் அபாயத்தை சந்திக்கக்கூடும் (வச. 11-12). “முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (வச. 12). அன்பான, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சமூகத்தின் பரிசு, ஊக்கத்தை அளிப்பது மட்டுமல்லாமல், சவாலான சூழ்நிலைகளிலும் செழிக்க நமக்கு பலத்தையும் அளிக்கிறது. நமக்கு மற்றவர்களின் ஆதரவும் அவசியப்படுகிறது.