எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எமி பவுச்சர் பைகட்டுரைகள்

தேவையானது ஒன்றே

மார்ச் மாதத்தின் ஒரு வார இறுதியில், பெத்தானியாவில் வசித்த இயேசுவின் நேசத்திற்கு பாத்திரமான மரியாள், மார்த்தாள் அவர்களுடைய சகோதரனாகிய லாசுரு (யோவான் 11:5) என்னும் தலைப்பில் ஒரு ஐக்கிய கூடுகையை நான் நடத்த நேரிட்டது. நாங்கள் ஆங்கிலேய கடற்கரையோரத்திலிருந்து தொலை தூரத்தில் இருந்தோம். அங்கு எதிர்பாராத விதமாக பனிப்பொழிவு ஏற்பட்டபோது, பங்கேற்பாளர்களில் பலர், மரியாளைப் போலவே கிறிஸ்துவின் பாதத்தில் அமர்ந்து இன்னுமொரு நாள் பயிற்சி செய்யலாம் என்று தீர்மானித்தனர். இயேசு மார்த்தாளிடத்தில் அன்பாய் சொன்ன, “தேவையானது ஒன்றே” (லூக்கா 10:42) என்ற வாக்கியத்திற்கிணங்க, அவரை நெருங்கி அவரிடத்தில் கற்றுக்கொள்ள தீர்மானித்தோம்.  
இயேசு, மார்த்தாள் - மரியாள் - லாசரஸ் வீட்டிற்குச் சென்றபோது, அவர் வருவதை முன்கூட்டியே மார்த்தாள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் உணவளிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்ட மார்த்தாள், ஏன் மரியாளிடம் கோபப்பட்டால் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் உண்மையில் முக்கியமானது எது என்பதை அவள் அறியாதிருந்து, அவரிடத்திலிருந்து கற்றுக்கொண்டாள். இயேசுவுக்கு அவள் சேவை செய்ய விரும்பியதற்காய் இயேசு அவளை திட்டவில்லை. மாறாக, அவள் மிக முக்கியமான விஷயத்தை இழக்கிறாள் என்பதை அவளுக்கு நினைவூட்டினார். 
குறுக்கீடுகள் நம்மை எரிச்சலடையச் செய்யும்போது அல்லது நாம் சாதிக்க விரும்பும் பல விஷயங்களைப் பற்றி அதிகமாக உணரும்போது, வாழ்க்கையில் உண்மையில் என்ன முக்கியம் என்பதை நாம் நிறுத்தி நிதானிக்கவேண்டும். நாம் நம்மை நிதானப்படுத்தி, இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருந்து அவருடைய அன்பினாலும் ஜீவனாலும் நம்மை நிரப்பும்படிக்கு நாம் அவரை வேண்டிக்கொள்ளலாம். அவருடைய அன்பான சீஷனாயிருப்பதில் நாம் மகிழ்ச்சியடையலாம்.  

ஆச்சரியங்களின் தேவன்

அந்த கன்வென்ஷன் ஹால் முழுவதும் இருளாக்கப்பட்டது. அதில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் அர்ப்பணிப்பு ஜெபத்திற்காய் தங்கள் தலைகளை தாழ்த்தினர். வெளிநாட்டில் ஊழியம் செய்ய அழைக்கப்பட்டவர்களை அவர் வரவேற்றபோது, என் தோழி லினெட் தனது இருக்கையை விட்டு எழுந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. அவள் பிலிப்பைன்ஸில் வாழ்ந்து ஊழியம் செய்வதாக உறுதியளித்தார். ஆனாலும் எனக்கு நிற்க ஆசை வரவில்லை. எனது சொந்த நாட்டில் உள்ள தேவைகளைப் பார்த்து, என் நாட்டு மக்களுக்கே தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஆனால் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, நான் வேறொரு நாட்டில் என் வீட்டை உருவாக்கி, தேவன் எனக்குக் காண்பிக்கும் மக்களுக்கு அவருடைய அன்பைக் குறித்து சொல்லுவேன். நான் எதிர்பார்த்ததை விட வித்தியாசமான ஊழியத்திற்கு தேவன் என்னை அழைத்தார் என்பதை உணர்ந்தவுடன், என்னுடைய வாழ்க்கையை நான் எப்படி வாழப்போகிறேன் என்னும் என்னுடைய எண்ணம் மாறியது.

மீன்பிடித்துக்கொண்டிருந்த தன்னுடைய சீஷர்கள் உட்பட இயேசு தாம் சந்தித்த யாவரையும் ஆச்சரியப்படுத்தினார். மீன்களைப் பிடிக்கும் ஒரு புதிய யுக்தியை இயேசு கற்றுக்கொடுத்தபோது, பேதுருவும் அந்திரேயாவும் தங்களுடைய வலைகளை விட்டுவிட்டு, அவரைப் பின்பற்றினார்கள் (மத்தேயு 4:20). யாக்கோபும் யோவானும் தங்களுடைய படகை விட்டுவிட்டு அவருக்கு பின்சென்றனர் (வச. 22). இயேசு அவர்களுக்கு கொடுத்த ஆச்சரியத்தை பின்பற்றி, எங்கு போகிறோம் என்பதை அறியாமல் அவர்கள் புறப்பட்டு சென்றார்கள்.

தேவன் பெரும்பாலானவர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே ஊழியம் செய்யும்படிக்கு அழைப்பு விடுக்கிறார். நாம் தரித்திருந்து ஊழியம் செய்கிறோமோ அல்லது வேறிடத்திற்கு புறப்பட்டுபோய் ஊழியம்செய்கிறோமோ, நாம் சற்றும் கற்பனை செய்யாத வழியில் அவர் நம்மை ஆச்சரியத்தினால் நிரப்பி வழிநடத்துவார்.

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

“மோசேயைப் போன்று நீங்கள் எங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தீர்” ஜமீலா ஆச்சரியப்பட்டார். பாகிஸ்தானில் செங்கல்சூளை முதலாளிக்கு அவர்கள் செலுத்தவேண்டிய அதிகப்படியான பணத்தை திரும்பச்செலுத்த வசதியில்லாத காரணத்தினால், அதே சூளையில் கொத்தடிமையாக அவளும் அவரது குடும்பமும் பணியாற்றினர். அவர்களின் சம்பாத்தியத்தின் பெரும்பகுதி வட்டியை செலுத்துவதற்கே செலவாகியது. அவர்களின் கடன் தொகையை ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலம் பரிசாக பெற்றபோது, அவர்கள் நிம்மதி பெருமூச்சிவிட்டனர். அந்த நிறுவனத்தின் பிரதிநிதிக்கு நன்றி செலுத்துகையில், கிறிஸ்துவின் விசுவாசியான ஜமீலா, இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தேவன் மோசேயை பயன்படுத்திய உதாரணத்தை சுட்டிக்காண்பித்தார்.

இஸ்ரவேலர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக எகிப்தியர்களால் ஒடுக்கப்பட்டனர். கடுமையான சூழ்நிலையில் உழைத்தனர். தேவனிடம் உதவி கேட்டு மன்றாடினர் (யாத்திராகமம் 2:23). ஆனால் அவர்களது பணிச்சுமை அதிகரித்தது. ஏனெனில் புதிய பார்வோன், செங்கற்கள் செய்வது மட்டுமல்லாது அவற்றை சுடுவதற்கு தேவையான வைக்கோலை சேகரிக்கவும் அவர்களை கட்டாயப்படுத்தினான் (5:6-8). இஸ்ரவேலர்கள் தேவனை நோக்கி கூக்குரலிட்டபோது, தேவன் அவர்களுடைய தேவனாய் இருக்கும் உடன்படிக்கையை அவர்களுக்கு நினைவுபடுத்தினார் (6:7). இனி அவர்கள் அடிமைகளாக இருக்க மாட்டார்கள். ஏனென்றால் தேவன் அவர்களை ஓங்கிய கையினால் மீட்பதாக வாக்குப்பண்ணுகிறார் (வச. 6).

தேவனுடைய வழிநடத்துதலின்பேரில், மோசே இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுவித்தார் (அதி. 14). இன்றும் சிலுவையில் தன்னுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் விரிந்த கரத்தினால் தேவன் நம்மை மீட்கிறார். நம்மை ஒருகாலத்தில் அடிமைப்படுத்தி வைத்திருந்த பாவத்திலிருந்து நாம் இன்று விடுதலையாக்கப்பட்டுள்ளோம். நாம் இனி அடிமைகள் இல்லை, சுதந்தரவாளிகள்!

ஆவியில் நிரம்பி

அமெரிக்க நாட்டு எழுத்தாளரும், புதிய ஏற்பாட்டு அறிஞருமான ஸ்காட் மெக்நைட்; உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, "ஆவியில் நிரம்பிய அனுபவத்தைப் பற்றி" பகிர்ந்து கொண்டார். அவர் ஒரு முகாமில் இருந்தபோது, ஆவியானவருக்கு ஒப்புவிப்பதன் மூலம் கிறிஸ்துவை வாழ்க்கையின் சிம்மாசனத்தில் அமர்த்த அதின் பேச்சாளர் அவருக்கு அழைப்பு விடுத்தார். பின்னர், அவ்வறிஞர் மரத்தடியில் அமர்ந்து, "பிதாவே, என் பாவங்களை மன்னியும். பரிசுத்த ஆவியானவரே, என்னுள்ளே வந்து என்னை நிரப்பும்" என்று ஜெபித்தார். ஒரு பெரிய வல்லமையான மாற்றம் ஏற்பட்டது. "அந்த தருணத்திலிருந்து என் வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டதாய் மாறியது. பூரணம் அல்ல ஆனால் மற்றம் உண்டானது” என்றார். வேதத்தைப் படிக்கவும், ஜெபிக்கவும், இயேசுவில் உள்ள மற்ற விசுவாசிகளைச் சந்திக்கவும், தேவனுக்கு ஊழியம் செய்யவும் அவருக்கு 
உடனே விருப்பம் ஏற்பட்டது. 
  
உயிர்த்தெழுந்த இயேசு பரலோகத்திற்குச் செல்வதற்கு முன், தனது நண்பர்களிடம், "ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள்" (அப்போஸ்தலர் 1:5) என்று கட்டளையிட்டார். அவர்கள் பெலனடைந்து, "எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும்" சாட்சிகளாயிருப்பார்கள் (அப்போஸ்தலர் 1:8). இயேசுவை நம்பும் ஒவ்வொருவருக்கும், தேவன் பரிசுத்த ஆவியானவரைத் தருகிறார். இது பெந்தெகொஸ்தே நாளில் முதலில் நடந்தது (அப்போஸ்தலர் 2ஐப் பார்க்கவும்). இன்றும் யாரெல்லாம் கிறிஸ்துவை நம்புகிறார்களோ அவர்களுடைய வாழ்விலும் இது நிகழ்கிறது. 
  
இயேசுவை விசுவாசிக்கிறவர்களை தேவனுடைய ஆவியானவர் தொடர்ந்து தம் ஆவியால் நிரப்புகிறார். ஆவியானவரின் உதவியால் சுபாவ மாற்றங்கள் மற்றும் உன்னதமான விருப்பங்கள் போன்ற கனிகளைத் தருகிறோம் (கலாத்தியர் 5:22-23). தேவன் நமக்கருளும் ஆறுதலுக்கு, உணர்த்துதலுக்கு, உதவிக்கு மற்றும் அன்பிற்காக நன்றியோடு துதிப்போம். 

விசுவாசம் கேள்வியினால் வரும்

பாஸ்டர் பாப், அவரது குரலைப் பாதிக்கும் வகையிலான ஒரு பெலவீனத்தால் பாதிக்கப்பட்டபோது,  பதினைந்து ஆண்டுகள் அவர் நெருக்கடியிலும் மனச்சோர்விலும் வாழ நேரிட்டது. பேச முடியாத ஒரு போதகரால் என்ன செய்ய முடியும் என்று அவர் சோர்ந்துபோனார். இந்தக் கேள்வியுடன் அவர் போராடினார். தனது ஏக்கத்தையும் குழப்பத்தையும் தேவனிடம் விண்ணப்பித்தார். “கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவது ஒன்று மட்டுமே எனக்கு தெரியும்” என்று அவர் ஜெபித்தார். அவர் வேதத்தைப் படிக்க நேரம் செலவழித்தபோது, தேவன் மீது அவருக்கு இருந்த அன்பு அதிகரித்தது. அவர், “வேதத்தை உள்வாங்குவதற்கும் அதில் மூழ்கியிருப்பதற்கும் என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தேன். ஏனென்றால், விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தைக் கேட்பதினால் வரும்” என்று அறிக்கையிடுகிறார்.  
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர்களுக்கு எழுதிய நிருபத்தில் “விசுவாசம் கேள்வியினாலே வரும்” என்று குறிப்பிடுவதை நாம் பார்க்கமுடிகிறது. பவுல், யூதர்கள் அனைவரும் இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்படவேண்டும் என்று விரும்பினார் (ரோமர் 10:9). அவர்கள் எப்படி நம்புவார்கள்? தேவனுடைய வார்த்தையை கேட்பதினால் ஏற்படும் விசுவாசத்தினாலும், கிறிஸ்துவைக் குறித்த வார்த்தையினாலுமே அது சாத்தியமாகும் (வச. 17).  
பாஸ்டர் பாப், வேதத்தை வாசிக்கும்வேளையில் கிறிஸ்துவின் செய்தியை பெற்றுக்கொள்ளவும் விசுவாசிக்கவும் முயற்சிக்கிறார். அவரால் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே பேசக்கூடும். அவ்வாறு பேசும்போதும் அதிக வேதனையை அவர் உணருவார். ஆனால் அவர் வேதத்தில் மூழ்கியிருப்பதின் மூலம் தேவனிடமிருந்து சமாதானத்தையும் திருப்தியையும் தொடர்ந்து காண்கிறார். ஆகவே, நம்முடைய போராட்டங்களில் இயேசு தம்மை நமக்கு வெளிப்படுத்துவார் என்று நாம் நம்பலாம். நாம் எதிர்கொள்ளும் சவால்கள் எதுவாக இருந்தாலும், அவருடைய செய்தியைக் கேட்கும்போது அவர் நம்முடைய விசுவாசத்தை அதிகரிக்கச் செய்வார்.

சோதனைகள் மூலம் பெலப்படுத்தப்பட்டது

“நான் கண் பரிசோதனை செய்து கொண்டேன்” என்ற ஒரு ஸ்டிக்கரை என்னுடைய மகன் ஒரு கடிதத்தில் ஒட்டியிருந்தை பார்த்த மாத்திரத்தில் என் நினைவுகள் பின்நோக்கி சென்றன. அவனுடைய கண்ணில் அந்த மருத்தை ஊற்றிக்கொண்டு, அந்த ஸ்டிக்கரை அவன் பெருமையோடு ஒட்டிக்கொண்டதை பார்த்து நான் நெகிழ்ச்சியடைந்தேன். பலவீனமான கண் தசைகள் காரணமாக, அவன் நேர்த்தியாய் செயல்பட்ட தனது கண்ணின் மீது ஒவ்வொரு நாளும் பல மணிநேரங்களுக்கு ஒரு பேட்ச் அணிய வேண்டியிருந்தது. அவ்வாறு செய்வதின் மூலம் அவனுடைய பலவீனமான கண் சரியாகும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவனுக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்பட்டது. அவனுடைய பெற்றோர்களாகிய எங்களை ஆறுதலாகவும், ஒரு குழுந்தையின் விசுவாசத்தோடு தேவனையும் சார்ந்துகொண்டு அவன் இந்த சவால்களை ஒவ்வொன்றாய் மேற்கொண்டான். இந்த சவால்களின் மூலம் அவன் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டான்.  
பாடுகளிலும் உபத்திரவத்திலும் நிலைநிற்கும் மக்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களினால் அடிக்கடி மாற்றத்தை அனுபவிக்கின்றனர். பவுல் அப்போஸ்தலர் அதற்கு ஒரு படி மேலே போய், “தேவமகிமையை அடைவோமென்கிற” நம்பிக்கையினாலே, உபத்திரவம் பொறுமையை கற்றுக்கொடுக்கிறது என்கிறார். உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும், உண்டாக்குகிறது என்கிறார் (ரோமர் 5:3-5). பவுல், கப்பல் சேதம் மற்றும் சிறைவாசங்கள் போன்ற சோதனைகளை அனுபவித்தவர். ஆகிலும் ரோமில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு அவர் சொல்லும்போது. “நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது” (வச. 5) என்கிறார். நாம் அவர் மீது நம்பிக்கை வைக்கும்போது, கிறிஸ்துவின் மீதான நம்முடைய நம்பிக்கையை பரிசுத்த ஆவியானவர் உறுதிப்படுத்துவார் என்று அப்போஸ்தலர் வலியுறுத்துகிறார்.  
நீங்கள் எவ்விதமான போராட்ங்களை சகித்தாலும், தேவன் தன்னுடைய கிருபையையும் இரக்கத்தையும் உங்கள் மீது பொழியச் செய்வார். அவர் உங்களை நேசிக்கிறார்.

துக்கமும் மகிழ்ச்சியும்

ஏஞ்சலாவின் குடும்பம் நான்கு வாரங்களில் மூன்று பேரை இழந்ததால் சோகத்தில் தள்ளாடியது. அவரது மருமகனின் திடீர் மரணத்திற்குப் பிறகு, ஏஞ்சலாவும் அவரது இரண்டு சகோதரிகளும் மூன்று நாளாக உணவு மேசையை சுற்றி அமர்ந்துகொண்டு துக்கம் அனுசரித்தனர். மேசனின் இழப்பைக் குறித்து அவர்கள் அழுது கொண்டிருந்தபோது, அவர்களது இளைய சகோதரிக்குள் வளர்ந்து வரும் புதிய கருவின் அசைவுகளைக் காண்பிக்கும் அல்ட்ராசவுண்ட் புகைப்படங்களைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர்.  
அவ்வப்போது ஏஞ்சலா பழைய ஏற்பாட்டின் எஸ்றா புத்தகத்தைப் பார்த்து தேறுதல் அடைந்துகொள்வாள். பாபிலோனியர் எருசலேம் ஆலயத்தை தரைமட்டமாக்கி, அவர்களை சிறைபிடித்த பின்னர், தேவ ஜனம் எருசலேமுக்கு திரும்புவதைக் குறித்த தகவலை அது பதிவுசெய்துள்ளது (எஸ்றா 1). ஆலயம் மறுபடியும் எடுப்பித்து கட்டப்படுவதை எஸ்றா பார்த்த பிறகு, தேவனுக்கு துதி ஏறெடுக்கும் சத்தத்தை அவர் கேட்கிறார் (3:10-11). ஆனால் சிறையிருப்பிற்கு முன்னர் மக்களின் துக்கமான அழுகுரல்களையும் அவர் கேட்டிருக்கிறார் (வச. 12).  
ஏஞ்சலாவுக்கு ஒரு வசனம் மிகவும் பிடித்திருந்தது: “ஜனங்கள் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரிக்கிறதினால் அவர்கள் சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறியக்கூடாதிருந்தது” (வச. 13). அவள் ஆழ்ந்த துக்கத்தில் இருந்தாலும், அங்கிருந்தும் மகிழ்ச்சியை அனுபவிக்கக்கூடும் என்பதை அறிந்துகொண்டாள்.  
நாமும் நமக்கு நெருங்கியவர்களுடைய இழப்பைக் குறித்து துக்கங்கொண்டாடலாம். அப்படியென்றால், அவர் நம்மை அவருடைய புயங்களுக்கு நடுவில் அணைத்து சேர்த்துக்கொள்வார் என்று நம்பி நம்முடைய துக்கங்களை மகிழ்ச்சியோடு கூடிய தருணங்களோடு அவரிடத்தில் வெளிப்படுத்தக்கடவோம்.  

சிறந்த அன்பு

இயேசுவின் சிலுவை தியாகத்தை நினைவுகூரும் அந்த புனித வாரத்தில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் தியாகமான அன்பை நினைவுகூர்ந்து அவருடைய உயிர்த்தெழுதலை கொண்டாடும்வேளையில், தென்மேற்கு பிரான்சில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கி சூடு நடத்தி  அங்கிருந்த இருவரைக் கொன்றான். பேச்சு வார்த்தைக்கு பின்னர், அவன் தன் கைவசம் பிடித்துவைத்திருந்த மக்களை விடுவித்தான்;. ஆனால் அவனுடைய பாதுகாப்புக்காக அதில் ஒரு பெண்ணை மட்டும் பினையக்கைதியாய் பிடித்து வைத்திருந்தான். ஆபத்தை அறிந்த போலீஸ் அதிகாரி அர்னாட் பெல்ட்ரேம், எதிர்பாராத ஒன்றைச் செய்தார். அவர் அவன் பிடித்து வைத்திருந்த பெண்ணுக்கு பதிலாக, தன்னை பிடித்து வைத்துக்கொள்ளும்படிக்கு முன்வந்தார். தீவிரவாதியும் அதை ஒப்புக்கொண்டு அவளை விடுவித்தான். ஆனால் அதற்கடுத்து நடந்த சண்டையில், பெல்ட்ரேம் காயமடைந்து பின்னர் இறந்துபோனார். 
அந்த போலீஸ் அதிகாரியை நன்கு அறிந்த போதகர் ஒருவர், அவருடைய அந்த துணிச்சலான செய்கையை தேவன் மீதான விசுவாசத்திற்கு ஒப்பிட்டு யோவான் 15:13ஐ மேற்கோள் காண்பிக்கிறார்: “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.” பூமியில் தன்னுடைய கடைசிபோஜனத்தை புசித்த இயேசு இவ்வார்த்தைகளை தன்னுடைய சீஷர்களைப் பார்த்து கூறினார். “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும்” (வச. 12) என்று போதித்த அவர், ஒருவர் தன் சிநேகிதருக்காக ஜீவனைக் கொடுக்க துணிவதே அந்த மெய்யான அன்பு என்று கூறுகிறார் (வச. 13). அதைத்தான் அடுத்த நாளில் அவர் செய்தார். நம்மை பாவத்திலிருந்து மீட்கும்பொருட்டு, அவர் சிலுவையில் தன் ஜீவனையே ஒப்புக்கொடுத்தார். 
அர்னாட் பெல்ட்ரேம் செய்த அந்த துணிச்சலான தியாகத்தை செய்வதற்கு நமக்கு அழைப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் தேவனுடைய அன்பில் நிலைத்திருக்கும்போது, நம்முடைய மாம்ச திட்டங்களை விட்டுவிட்டு, அவருடைய அந்த சிறந்த அன்பின் மேன்மையை மற்றவர்களுக்கு அறிவிக்க பிரயாசப்படுவோம்.  

புத்துணர்ச்சியூட்டும் பாலைவனச்சோலை

ஆன்ட்ரூவும் அவனது குடும்பத்தினரும் கென்யாவில் வனப்பயணம் சென்றிருந்தபோது, ஒரு ஏரியை நோக்கிப் பல வகையான மிருகங்கள் செல்வதைக் கண்டு மகிழ்ந்தனர். அவ்வாழ்வு தரும் நீரூற்றை நோக்கி, ஒட்டகச்சிவிங்கிகளும், காட்டு மிருகங்களும், நீர்யானைகளும், நீர்ப்பறவைகளும் பயணம் செய்தன. அக்காட்சியை ஆன்ட்ரூ உற்றுக் கவனித்தபோது, வேதமானது அத்தண்ணீரைப் போல வழிநடத்துதலையும், ஞானத்தையும் தருவதுமின்றி, மனிதர்களுடைய நடைமுறை வாழ்க்கையில், புத்துணர்ச்சியைத் தந்து அவர்கள் தாகத்தைத் தீர்க்கும் தெய்வீகம் சுரக்கும் ஊற்றாய் இருக்கிறதென்பதை நினைவுகூர்ந்தார்.

ஆன்ட்ரூவின் அக்கணிப்பு பழைய ஏற்பாட்டில் தேவனின் கட்டளைகளையும், அறிவுறுத்தல்களையும் குறிக்கும் பதமான "தேவனின் வேதத்தில்" பிரியமாயிருந்து, அதை தியானிப்பவர்களை "பாக்கியவான்" என்று சங்கீதக்காரன் அழைப்பதை எதிரொலிக்கிறது. வசனங்களைத் தியானிக்கிறவர்கள் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தரும் மரத்தைப் போலிருக்கிறார்கள் (சங்கீதம் 1:3). எப்படி வேறானது மண்ணுக்குள் சேர்ந்து, வளர்ச்சியைப் பெற்றுக் கொள்கிறதோ, அதேபோல், தேவனை உண்மையாய் நேசித்து அவரை விசுவாசிப்பவர்களும், சத்தியத்தில் வேரூன்றி, அவர்களுக்குத் தேவையான பலத்தை பெற்றுக்கொள்ளுவார்கள்.

தேவனுடைய ஞானத்திற்குள்ளாக, நம்முடைய ஆதாரங்களை நாம் ஒப்புக்கொடுக்கும் போது, நாம் "காற்றுப் பறக்கடிக்கும் பதரை போல்" (வ.4 ) இருக்க மாட்டோம். தேவன் நமக்கு வேதத்தில் கொடுத்துள்ளவற்றை நாம் தியானிக்கும் போது, நாம் அவருடைய பராமரிப்பையும் வழி நடத்துதலையும் பெற்று நிலைத்திருக்கும் கனி கொடுக்கிறவர்களாய் இருக்க முடியும்.       

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.  

தேவனின் ஆறுதலான அர்ப்பணிப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பம் அமெரிக்காவின் நான்கு மாநிலங்கள் சந்திக்கும் புள்ளியில் எங்கள் குடும்பம் ஆளுக்கொரு திசையாய் நின்றோம். என் கணவர் அரிசோனா எனக் குறிக்கப்பட்ட பிரிவில் நின்றார். எங்கள் மூத்த மகன், ஏ.ஜே., யூட்டாவிற்குள் நுழைந்தார். நாங்கள் கொலராடோவிற்குள் நுழைந்தபோது எங்கள் இளைய மகன் சேவியர் என் கையைப் பிடித்தார். நான் நியூ மெக்சிகோவிற்குச் சென்றபோது, சேவியர், “அம்மா, நீங்கள் என்னை கொலராடோவில் விட்டுச் சென்றீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை!” என்று சொன்னான். எங்கள் சிரிப்பு நான்கு வெவ்வேறு மாநிலங்களில் கேட்டதால் நாங்கள் ஒன்றாகவும் பிரிந்தும் இருந்தோம். இப்போது எங்கள் வளர்ந்த மகன்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால், அவர்கள் எங்கு சென்றாலும் அவருடைய பிள்ளைகள் அனைவரோடுங்கூட தேவன் இருப்பேன் என்று சொன்ன வாக்குத்தத்தத்தை நான் ஆழமாக நம்புகிறேன்.  
மோசேயின் மரணத்திற்குப் பிறகு, தேவன் யோசுவாவை தலைமைத்துவத்திற்கு அழைத்தார். மேலும் இஸ்ரவேலரின் எல்லையை விரிவுபடுத்தியபோது அவரது பிரசன்னத்தை உறுதிசெய்தார் (யோசுவா 1:1-4). தேவன், “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 5) என்று சொன்னார். யோசுவா தம்முடைய ஜனங்களின் புதிய தலைவராக சந்தேகத்துடனும் பயத்துடனும் போராடுவான் என்பதை அறிந்த தேவன், இந்த வார்த்தைகளில் நம்பிக்கையின் அடித்தளத்தை உருவாக்கினார்: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (வச. 9). 
தேவன் நம்மை அல்லது நம் அன்புக்குரியவர்களை எங்கு அழைத்துச் சென்றாலும், கடினமான காலங்களில் கூட, அவருடைய மிகவும் ஆறுதலான அர்ப்பணிப்பு அவர் எப்போதும் நம்மோடு இருப்பதை உறுதிப்படுத்துகிறது.