ஊடுருவக் குத்தும் முள்
ஒரு முள் என் ஆள்காட்டி விரலைக் குத்தியதில் ரத்தம் வந்தது. நான் வலியில் சத்தமிட்டதோடு, தன்னிச்சையாக என் கையை இழுத்துக்கொண்டேன். ஆனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தோட்ட வேலைக்கான கையுறை அணியாமல், முள் செடியை கத்தரித்தால் இதுதானே நடக்கும்.
என் விரலில் இருந்த வலியையும், அதிலிருந்து வழிந்த ரத்தத்தையும் உடனடியாக கவனிக்க வேண்டியதிருந்தது. காயத்தைக் கட்ட முயன்றபோது, எதிர்பாராத விதமாக, என் இரட்சகரைப் பற்றி சிந்தித்தேன். ஏனென்றால், போர்ச்சேவகர் இயேசுவுக்கு முழுவதும் முட்களினால் ஆன கிரீடத்தை அணியச் செய்தார்களே (யோவான் 19:1-3). ஒரு முள் இவ்வளவு வலியைக் கொடுத்தால், முட்களால் ஆன ஒரு கிரீடம் எவ்வளவு வலியைக் கொடுத்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவர் அனுபவித்த சரீரப் பிரகாரமான வலியில் அது ஒரு சிறு பகுதியே. அவர் முதுகை ஒரு வார் தாக்கியது. ஆணிகள் அவர் மணிக்கட்டுகளையும், கணுக்கால்களையும் ஊடுருவின. ஒரு ஈட்டி அவர் விலாவை ஊடுருவியது.
ஆனால் இயேசு ஆவிக்குரிய வலியையும் சகித்தார். ஏசாயா 53ல், ஐந்தாம் வசனம் “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது” என்று நமக்குச் சொல்கிறது. மன்னிப்பு பற்றி வேறு விதமாக எடுத்துச் சொல்வதே ஏசாயா குறிப்பிடும் “சமாதானம்”. நாம் கடவுளோடு ஆவிக்குரிய சமாதானத்தைப் பெறும்படி, தான் ஈட்டி, ஆணிகள், முள் கிரீடம் ஆகியவற்றால் குத்தப்பட, இயேசு அனுமதித்தார். அவருடைய தியாகம், நமக்காக மரிக்க தயாராக இருந்தது ஆகியவை நாம் பிதாவுடன் ஒரு உறவை ஏற்படுத்திக்கொள்ள உதவின. அவர் அதை எனக்காகவும், உங்களுக்காகவும் செய்தார் என்று வேதாகமம் கூறுகிறது.
பாடும் நம் பிதா
பாடுவது எவ்வளவு முக்கியமானது என்று எங்கள் குழந்தைகள் பிறக்கும் முன் எனக்கோ, என் மனைவிக்கோ யாரும் சொல்லவில்லை. என் பிள்ளைகளுக்கு இப்போது முறையே ஆறு, எட்டு, பத்து வயதாகிறது. ஆனால் அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது தூங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். ஒவ்வொரு இரவும் நானும், என் மனைவியும் மாறி மாறி அவர்களைத் தொட்டிலில் போட்டு ஆட்டி, தூங்க மாட்டார்களா என்று ஏங்குவோம். அவர்களை சீக்கிரம் தூங்க வைக்கும் எண்ணத்தில், தொட்டிலை ஆட்டுவதிலும், தாலாட்டுப் பாடுவதிலும் பல மணி நேரம் செலவழித்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு இரவும் என் குழந்தைகளுக்காக நான் பாடும்போது, ஏற்பட்ட ஒரு மாறுதல் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது: அவர்கள்மீது நான் வைத்திருந்த அன்பும், சந்தோஷமும் நான் கனவிலும் நினைக்காத அளவிற்கு பல மடங்கு அதிகரித்தது.
நம் பரம பிதா தன் பிள்ளைகளுக்காக மகிழ்ந்து பாடுவார் என்று வேதாகமம் சொல்வது உங்களுக்குத் தெரியுமா? பாட்டின்மூலம் நான் என் குழந்தைகளை அமர்த்த முயன்றதுபோல, நமது பரம தந்தை தன் மக்களுக்காகப் பாடுகிறார் என்ற வர்ணனையுடன் செப்பனியா தன் புத்தகத்தை முடிக்கிறார்: “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (3:17).
செப்பனியா தீர்க்கதரிசியின் புத்தகத்தின் பெரும்பகுதி கடவுளை நிராகரித்தவர்களுக்கு வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக் குறித்த எச்சரிக்கையாகும். ஆனால் செப்பனியா தன் புத்தகத்தை நியாயத்தீர்ப்புடன் முடிக்கவில்லை. கடவுள் தன் மக்களை அவர்கள் துன்பங்களில் இருந்து மீட்பது மட்டுமல்லாமல் (வச.19-20), அவர்களை நேசிப்பதாகவும், அவர்கள்பேரில் மகிழ்ந்து பாடுவதாகவும் முடிக்கிறார் (வச. 17).
நம் ஆண்டவர் வல்லமையான இரட்சகர் மட்டுமல்லாமல் (வச.17), நமக்காக அன்பின் பாடல்களைப் பாடும் நம் நேச தகப்பனாகவும் இருக்கிறார்.
கர்த்தரின் வழியில் நடப்பது
“நாம் இந்த வழியாகப் போகவேண்டும்” என்று என் மகனின் தோளைத் தட்டிச் சொன்னேன். கூட்டத்தில் அவன் போகவிருந்த திசையிலிருந்து அவனை மாற்றி, அவன் அம்மாவுக்கும், சகோதரிகளுக்கும் பின்னால் போகச் சொன்னேன். நாங்கள் குடும்பமாகச் சென்றிருந்த உல்லாசப் பூங்காவில், இதையே பலமுறை அவனிடம் கூறினேன். சோர்வடைந்திருந்த அவன் கவனம் எளிதில் சிதறியது. அவர்களை அவன் பின் தொடர்ந்து போனால் என்ன? என்று நினைத்தேன்.
நானும் இதையே எத்தனை தடவை செய்கிறேன்? எத்தனை தடவை கர்த்தருக்கு கீழ்ப்படிந்து அவரோடு நடக்காமல், எத்தனை தடவை கர்த்தருடைய வழிகளைத் தெரிந்துகொள்வதற்குப் பதிலாக, என் சுய ஆசைகளால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன், என்று அப்போதுதான் நான் உணர்ந்தேன்.
இஸ்ரவேலுக்காக கர்த்தர் ஏசாயா மூலம் சொன்ன வார்த்தைகளை யோசித்துப்பாருங்கள்: “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்” (ஏசாயா 30:21). அதே அதிகாரத்தின் முன்பகுதியில் கர்த்தர் தம் ஜனங்களின் கீழ்ப்படியாமையும், எதிர்ப்பையும் கடிந்து கொண்டார். ஆனால் அவர்கள் மனந்திரும்பி தங்கள் சுய வழிகளின்மேல் அல்லாமல், கர்த்தரின் பெலத்தில் நம்பிக்கை கொண்டிருந்தால் (வச. 15), கர்த்தர் தன் இரக்கத்தையும், மன உருக்கத்தையும் காண்பிப்பதாக வாக்குக் கொடுத்தார் (வ. 18).
தம் ஆவியின் மூலமாக நம்மை வழிநடத்துவதாக கர்த்தர் கொடுத்த வாக்குறுதி, அவரது இரக்கத்தின் வெளிப்பாடாகும். நமது விருப்பங்களை அவரிடத்தில் எடுத்துக்கூறி, நமக்கு என்ன முன்குறித்திருக்கிறார் என்பதை நாம் ஜெபத்தில் கேட்கும்போது அது நடந்தேறும். நாம் அவரில் நம்பிக்கை வைத்து, அவருடைய சத்தத்துக்குச் செவி கொடுக்கும்போது தேவன் பொறுமையாக, ஒவ்வொரு நாளும், படிப்படியாக, நம்மை வழிநடத்துவதற்காக நான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்.
செயலிலிருக்கிறதா அல்லது முடிவடைந்துவிட்டதா?
ஒரு வேலையை முடித்துவிட்டால் அது திருப்தியைத் தரும். ஒவ்வொரு மாதமும் என்னுடைய வேலை ஒரு வகையிலிருந்து மற்றொரு வகைக்கு மாறும். அதாவது “செயலிலிருக்கிறது” லிருந்து “முடிக்கப்பட்டது” என மாறும். “முடிக்கப்பட்டது” என்ற பொத்தானை அமுக்குவது எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால், சென்ற மாதம் நான் அந்த பொத்தானை அமுக்கிய போது சிந்தனைக்குள்ளானேன். நான் எனது விசுவாச வாழ்விலும் கடினமான இடங்களை இத்தனை இலகுவாக மேற்கொள்ள முடியுமா? கிறிஸ்தவ வாழ்வு எப்பொழுதும் செயலிலேயே இருக்கின்றது, அது ஒருநாளும் “முடிக்கப்பட்டது” என்ற நிலையை அடையாது.
அப்பொழுது நான் எபிரெயர் 10:14ஐ நினைத்துப் பார்த்தேன். கிறிஸ்துவின் தியாகம் எப்படி நம்மை முற்றிலுமாக விடுவிக்கின்றது என்பதை விளக்குகின்றது. ஆனால், ஒரு முக்கியமான செய்தியென்னவெனில் அந்த “முடிக்கப்பட்டது” என்ற பொத்தான் நமக்காக அமுக்கப்பட்டுவிட்டது. நம்மால் செய்ய முடியாத ஒன்றை இயேசுவின் மரணம் நமக்காக நிறைவேற்றிவிட்டது. நம்முடைய நம்பிக்கையை அவர் மீது வைக்கும் போது, கிறிஸ்து நம்மை தேவனுடைய பார்வையில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவர்களாக மாற்றிவிடுகின்றார். இயேசு “முடிந்தது” என்று சொல்கின்றார் (யோவா. 19:30) அவருடைய தியாகம் முழுமையாக நிறைவேற்றப்பட்டதன் மூலம், நாம் நம்முடைய எஞ்சிய நாட்களை அவருடைய ஆவியின் முழுமையாக்கலால் “பரிசுத்தமாக்கப்பட்டவர்களாக” வாழலாம் என எபிரெயரை ஆக்கியோன் குறிப்பிடுகின்றார்.
இயேசு கிறிஸ்து ஒன்றை முடித்தார் என்ற உண்மை நம் வாழ்வில் இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை நம்மால் புரிந்து கொள்ள சற்றுக் கடினமாயிருக்கிறது. நாம், நம் ஆவியில் போராடிக் கொண்டிருக்கும் போது இயேசு எனக்காக, உனக்காக தன்னைத் தியாகம் செய்து முடித்துவிட்டார் என்ற செய்தி நம்மை ஊக்குவிப்பதாகவுள்ளது. அவருடைய சாயலை நம் வாழ்வின் மூலம் நாம் காண்பிக்கின்றோம். இது ஒரு செயலிலிருக்கும் வேலை. நாம் அவரைப் போல மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதனை நிறைவேற்றி முடிப்பது அவருடைய கரத்திலுள்ளது. நாம் முற்றிலும் அவரைப் போல மாற்றப்படும் போது, இந்த வேலையை அவர் முடிக்கின்றார்
(2 கொரி. 3:18).
அந்தப் புன்னகை மனிதன்
மளிகைக் கடைக்குச் செல்வது என்பது நான் மிகவும் விரும்பும் ஒரு காரியமல்ல. ஆனால், அது இவ்வுலக வாழ்வோடு இணைந்த ஒன்று, கண்டிப்பாகச் செய்ய வேண்டிய ஒன்று.
ஆனால், இந்த வேலையில் ஓர் அங்கத்தை எதிர்பார்த்துச் செல்ல நான் தூண்டப்பட்டேன். அது ப்ரெட் நிற்கும் பகுதியில் அமைந்த வெளியே போகும் வரிசை. ப்ரெட் அந்த வெளியே செல்லும் வரிசைக்கு அதை ஒரு காட்சி நேரமாக மாற்றிவிட்டார். அவர் வியத்தகுவகையில் வேகமாகச் செயல்படுவதோடு, முகத்தில் பெரிய சிரிப்பும், சில வேளைகளில் நடனமும், அதனோடு சிலவேளைகளில் பாடலையும் கொண்டிருப்பார். அத்தோடு கரணமிட்டுத் திரும்பி நினைக்க முடியாத வேகத்தில் நாம் வாங்கிய பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டுக் கொடுப்பார் யாவரும் கடினமானதாகப் பார்க்கும் ஒரு வேலையை ப்ரெட் மிகவும் ஆர்வத்தோடு செய்வதைக் காணலாம். ஒரு நொடிப் பொழுதில் அவருடைய உற்சாகமான ஆவி அந்த வரிசையிலுள்ள அனைவரின் வாழ்வையும் பிரகாசிக்கச் செய்யும்.
ப்ரெட் தன்னுடைய வேலையைச் செய்யும் முறை என்னுடைய மரியாதையையும், பாராட்டையும் பெற்றது. அவருடைய மகிழ்ச்சியான நடத்தையும், சேவை செய்யும் ஆவலும், அங்கு வரிசையிலிருப்போரின் அத்தனை தேவைகளையும் நன்கு கவனித்துச் செய்வதும், அப்போஸ்தலனாகிய பவுல், நாம் எப்படி வேலை செய்ய வேண்டுமென கொலோசெயர் 3:22ல் குறிப்பிட்டிருக்கின்றாரோ அதே போலிருந்தது. “நீங்கள் மனுஷருக்கு பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ் செய்யாமல் தேவனுக்கு பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ் செய்யுங்கள்”
நாம் இயேசுவோடு ஐக்கியமாக இருக்கும் போது, எந்த வேலையை நாம் செய்ய நேர்ந்தாலும் அது தேவனுடைய பிரசன்னத்தை நம் வாழ்வில் காட்டும் சந்தர்ப்பமாகக் கொள்ள வேண்டும். எந்த வேலையும் பெரிதென்றும், சிறிதென்றுமில்லை. அது எவ்வாறிருந்தாலும், எந்த வேலையாயினும் நம்முடைய பொறுப்புக்களை மகிழ்ச்சியோடும், புதிய வகையிலும் மிகச் சிறப்பாகவும் கையாள்வது நம்மைச் சுற்றியிருப்பவர்களின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களாகும்.
நாம் பயப்படும் பொது ஒரு நங்கூரம்
நீங்கள் கவலைப்படுபவரா? நானும் அப்படித்தான். நான் அநேகமாக எல்லா நாட்களிலும் பதட்டத்தோடு போராடிக் கொண்டிருப்பவன். நான் பெரிய காரியங்களைக் குறித்தும் கவலைப்படுவேன், சிறிய காரியங்களைக் குறித்தும் கவலைப்படுவேன், சிலவேளைகளில் எல்லாவற்றைக் குறித்தும் கவலைப்படுவேன். என்னுடைய வாலிபப்பருவத்தில் ஒருமுறை என்னுடைய பெற்றோர் வர 4 மணி நேரம் தாமதமான போது, நான் காவல்துறையை அழைத்துவிட்டேன்.
வேதாகமம் நம்மை பயப்பட வேண்டாமென அடிக்கடி சொல்லுகிறது. தேவனுடைய நன்மையும், வல்லமையும் நமக்கிருப்பதால், அவர் இயேசுவை நமக்காக பலியாக அனுப்பியதால் பரிசுத்த ஆவியானவரை நமக்கு வழிகாட்டும்படி தந்துள்ளதால், நம்முடைய வாழ்வை பயம் மேற்கொள்ளத் தேவையில்லை. நாம் கடினமான சூழல்களையும் எளிதாக சந்திக்கலாம். தேவன் நம்முடைய சூழ்நிலைகளில் நம்மோடுவருவதாக வாக்களித்துள்ளார்.
நான் மிகவும் பயப்பட்ட நேரங்களில் எனக்கு மிகவும் உதவிய பகுதி ஏசாயா 51:12-16. இப்பகுதியில், மிக அதிகமாக வேதனைகளை அனுபவித்த அவருடைய ஜனங்களிடம் தேவன் இன்னும் அவர்களோடு இருப்பதாக நினைப்பூட்டுகின்றார். நாம் எத்தகைய கடினமான வேளைகளை சந்தித்தாலும் அவருடைய ஆறுதலளிக்கும் பிரசன்னம் நம்மோடிருப்பது உண்மை. “நான் நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்” என ஏசாயா தீர்க்கன் மூலமாக உரைக்கின்றார்.
நான் இந்த வாக்குத்தத்தத்தை நேசிக்கின்றேன், இந்த வார்த்தைகள் என் ஆன்மாவையும், உணர்வுகளையும் வலுப்படுத்துகின்ற நங்கூரம், என்னுடைய பயம் என் மேல் விழுந்து என்னை அமுக்குகையில், என் வாழ்வின் துயரங்கள் என்னை மேற்கொள்ள முயற்சிக்கும் போது, நான் இந்த வாக்கைப் பற்றிக்கொள்வேன் (வச. 13). இந்தப் பகுதியின் மூலம் நாம் நம்பிக்கையோடு அவரைச் சார்ந்து “வானங்களை விரித்தவரை”, நம்மை ஆறுதல் செய்கிறவரை, நோக்கி நம் கண்களை உயர்த்திப் பார்க்கும்படி நம்மையழைக்கின்றார் (வச. 13).
தேனீக்களும், பாம்புகளும்
சில பிரச்சனைகள் என்றால் தந்தையின் பெயர் அங்கு எழுதப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, சமீபத்தில் என்னுடைய குழந்தைகள் எங்கள் வீட்டின் முன் தாழ்வாரத்தின் பகுதியில், சுவரில் ஏற்பட்ட விரிசலில் தேனீக்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். எனவே நான் பூச்சி விரட்டும் மருந்தோடு, தேனீக்களோடு போராட சென்றேன். ஐந்து முறை தேனீக்களால் கொட்டப்பட்டேன்.
பூச்சிகளால் கொட்டப்படுதல் எனக்கு விருப்பமில்லாத செயல்தான். ஆனால், என் பிள்ளைகளையோ, மனைவியையோ அவை கடிப்பதைவிட என்னைக் கடிப்பதே மேல். என் குடும்பத்தினரின் நல்வாழ்வுதான் என்னுடைய வேலையின் பிரதான நோக்கமாயிருக்கும். என் குழந்தைகளுக்கு ஒரு தேவையிருந்தால், அவர்கள் என்னைக் கொண்டே செய்யவிரும்புவார்கள். அவர்கள் பயப்படும் காரியங்களில் அவர்களைப் பாதுகாக்க அவர்கள் என்னை நம்பினார்கள்.
மத்தேயு 7ல், இயேசு நமக்குப் போதிப்பது என்னவெனின், நம்முடைய தேவைகளைக் குறித்து தேவனிடம் நம்பிக்கையோடு வேண்டிக் கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொள்ள இயேசு ஒரு விளக்கத்தைத் தருகின்றார். “உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?” (வச. 9-10) ஓர் அன்பு பெற்றோர் எதைக் கொடுப்பார் என நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால், இயேசு நம் பிதாவின் தயாள குணத்தின் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிடக் கூடாதென்பதற்காக “ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (வச. 11) என்றார்.
நான் என்னுடைய குழந்தைகளை இதையும் விட அதிகமாக நேசிக்க முடியாதென நினைக்கின்றேன். ஆனால், தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பில் மறைந்து போகும் என இயேசு கூறுகின்றார்.
நாம் பயப்படும் பொது ஒரு நங்கூரம்
நீங்கள் கவலைப்படுபவரா? நானும் அப்படித்தான். நான் அநேகமாக எல்லா நாட்களிலும் பதட்டத்தோடு போராடிக் கொண்டிருப்பவன். நான் பெரிய காரியங்களைக் குறித்தும் கவலைப்படுவேன், சிறிய காரியங்களைக் குறித்தும் கவலைப்படுவேன், சிலவேளைகளில் எல்லாவற்றைக் குறித்தும் கவலைப்படுவேன். என்னுடைய வாலிபப்பருவத்தில் ஒருமுறை என்னுடைய பெற்றோர் வர 4 மணி நேரம் தாமதமான போது, நான் காவல்துறையை அழைத்துவிட்டேன்.
வேதாகமம் நம்மை பயப்பட வேண்டாமென அடிக்கடி சொல்லுகிறது. தேவனுடைய நன்மையும், வல்லமையும் நமக்கிருப்பதால், அவர் இயேசுவை நமக்காக பலியாக அனுப்பியதால் பரிசுத்த ஆவியானவரை நமக்கு வழிகாட்டும்படி தந்துள்ளதால், நம்முடைய வாழ்வை பயம் மேற்கொள்ளத் தேவையில்லை. நாம் கடினமான சூழல்களையும் எளிதாக சந்திக்கலாம். தேவன் நம்முடைய சூழ்நிலைகளில் நம்மோடுவருவதாக வாக்களித்துள்ளார்.
நான் மிகவும் பயப்பட்ட நேரங்களில் எனக்கு மிகவும் உதவிய பகுதி ஏசாயா 51:12-16. இப்பகுதியில், மிக அதிகமாக வேதனைகளை அனுபவித்த அவருடைய ஜனங்களிடம் தேவன் இன்னும் அவர்களோடு இருப்பதாக நினைப்பூட்டுகின்றார். நாம் எத்தகைய கடினமான வேளைகளை சந்தித்தாலும் அவருடைய ஆறுதலளிக்கும் பிரசன்னம் நம்மோடிருப்பது உண்மை. “நான் நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்” என ஏசாயா தீர்க்கன் மூலமாக உரைக்கின்றார்.
நான் இந்த வாக்குத்தத்தத்தை நேசிக்கின்றேன், இந்த வார்த்தைகள் என் ஆன்மாவையும், உணர்வுகளையும் வலுப்படுத்துகின்ற நங்கூரம், என்னுடைய பயம் என் மேல் விழுந்து என்னை அமுக்குகையில், என் வாழ்வின் துயரங்கள் என்னை மேற்கொள்ள முயற்சிக்கும் போது, நான் இந்த வாக்கைப் பற்றிக்கொள்வேன் (வச. 13). இந்தப் பகுதியின் மூலம் நாம் நம்பிக்கையோடு அவரைச் சார்ந்து “வானங்களை விரித்தவரை”, நம்மை ஆறுதல் செய்கிறவரை, நோக்கி நம் கண்களை உயர்த்திப் பார்க்கும்படி நம்மையழைக்கின்றார் (வச. 13).
“நேசிக்கத்தகுந்தது!”
“நேசிக்கத் தகுந்தவள்!” என்ற வார்த்தைகளை, காலையில் எழுந்து தயாராகிக்கொண்டிருந்த என் மகளிடமிருந்து வந்தன. எனக்கொன்றும் புரியவில்லை. தன்னுடைய உறவினர் ஒருவரிடமிருந்து பெற்ற தன்னுடைய மேல் சட்டையைத் சுட்டிக் காட்டினாள். அந்தத்ச் சட்டையின் முன் பகுதியில் இந்த வார்த்தைகளிருந்தன. “நேசிக்கத்தகுந்தவள்” என்று நான் அவளைக் கட்டித் தழுவிக்கொண்டேன். அவளும் மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டாள். “நீ நேசிக்கத்தகுந்தவள்” என நான் மீண்டும் கூறினேன். அவளுடைய சிரிப்பு இன்னும் அதிகரித்தது. அவள் நகர்ந்து சென்றபோது இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே சென்றாள்.
நான் மிகச் சிறந்த தந்தையல்ல ஆனால் அந்த நேரத்தில் நான் சரியான தந்தையாகச் செயல்பட்டேன். தற்செயலாய் நடந்த அந்த அழகிய உரையாடலின் போது, என்னுடைய நிபந்தனையற்ற அன்பைப் பெற்ற என் மகளின் பிரகாசமான முகத்தைக் கவனித்தேன். அது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு சித்திரம் போலிருந்தது. அவளுடைய சட்டையிலிருந்த வார்த்தைகளும், அவளுடைய தந்தை அவளைக் குறித்து எண்ணியிருப்பதும் பொருந்தியிருக்கிறது என்பதை அவள் அறிவாள்.
நாம் அளவற்ற அன்பினைக் கொண்டுள்ள ஒரு தந்தையால் நேசிக்கப்படுகிறோம் என்பதை நம்மில் எத்தனை பேர் நம் இருதயத்தில் உணர்ந்திருக்கின்றோம்? சிலவேளைகளில் இந்த உண்மையோடு நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். இஸ்ரவேலரும் அப்படியே உணர்ந்தனர். அவர்களுடைய சோதனைகளின் போது தேவன் அவர்களை நேசிக்கவில்லை என்று எண்ணினர். ஆகையால், எரேமியா 31:3ல் தீர்க்கதரிசி, தேவன் அவர்களுக்கு முன்பு கூறியிருந்ததை நினைவுபடுத்துகின்றார். “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்” என்று தேவன் விளம்பியுள்ளார். நாமும் இத்தகைய நிபந்தனையற்ற அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றோம். ஆனாலும் நம்முடைய காயங்கள், ஏமாற்றங்கள், தவறுகளினால் நாம் நேசிக்கப்பட முடியாதவர்கள் என்று நினைக்கிறோம். தேவனுடைய கரங்கள் ஒரு நேர்த்தியான தந்தையின் கரங்கள், அவருடைய அன்பிற்குள் இளைப்பாறும்படி நம்மை அழைக்கின்றன.