தேவனை பின்பற்ற கற்றுக்கொள்ளுதல்
“ஒரு சராசரி நபர் வாழ்நாளில் 7,73,618 முடிவுகளை எடுப்பார் என்றும் அதில் 143,262 முடிவுகளுக்காக அவர் வருத்தப்படுகிறார்” என்று ஒரு பிரிட்டிஷ் செய்தித்தாள் கூறுகிறது. இந்த எண் இலக்க கணக்கு எந்த அளவிற்கு சரி என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் நம் வாழ்நாள் முழுவதும் எண்ணற்ற முடிவுகளை நாம் எதிர்கொள்கிறோம் என்பது உண்மையே. அவை எத்தனை என்று அறியும்போது நாம் ஒருவேளை ஆச்சரியப்படக்கூடும். அதிலும் குறிப்பாய், நமது தேர்வுகள் அனைத்தும் விளைவுகளைக் கொண்டிருப்பதாகக் கருதும்போது, சில மற்றவைகளைவிட மிக முக்கியமானவைகளாய் தெரியும்போது ஆச்சரியமடையலாம்.
நாற்பது வருடங்கள் வனாந்திரத்தில் அலைந்து திரிந்த பிறகு, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் புதிய தேசத்தின் விளிம்பில் நிற்கின்றனர். அவர்கள் தேசத்திற்குள் பிரவேசித்த பின்னர், அவர்களின் தலைவனான யோசுவா அவர்களுக்கு ஒரு சவாலான தேர்வை அறிவிக்கிறார்: “கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்” சேவியுங்கள் என்கிறார். “உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை” (யோசுவா 24:14) அகற்றிவிடவும் எச்சரிக்கிறார். மேலும் யோசுவா, “கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்... நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்” என்று கூறுகிறார்.
ஒவ்வொரு புதிய நாளையும் நாம் தொடங்கும் போது, பல தீர்மானங்களை நாம் எடுக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். தேவனை முன்நிறுத்தி நாம் எடுக்கும் தீர்மானங்களில் தேவன் மகிமைப்படுவார். அவருடைய ஆவியானவரின் வல்லமையினாலே, அவரை அனுதினமும் பின்பற்றும் தீர்மானத்தை நாம் எடுக்க பிரயாசப்படுவோம்.
- பில் கிரவுடர்
புவியீர்ப்பு மலை
மர்ம புதிர்களை விடுவிப்பதென்பது என்னையும் சேர்த்து பலரைக் கவர்ந்த ஒன்றாகும். லடாக்கின் லே அருகே உள்ள ஒரு மலையில், வாகனங்கள் கீழ்நோக்கிச் செல்வதற்குப் பதிலாக, தானாக மேல்நோக்கிச் செல்கின்றன. "கிராவிட்டி ஹில் (புவியீர்ப்பு மலை)" என்று பிரபலமாக அழைக்கப்படும் இவ்விடத்திற்கு, மக்கள் இது ஒரு மாயத்தோற்றமாக இருக்கலாம் அல்லது மலைக்கு வலுவான காந்தப்புலம் இருக்கலாம் அல்லது நிலப்பரப்புதான் மனதளவில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறது என்றெல்லாம் கருதுகின்றனர். காரணம் எதுவாக இருந்தாலும், ஒன்று நிச்சயம், இந்த நிகழ்வு புவியீர்ப்பு விதிகளுக்கு எதிரானது போல் தெரிகிறது. இது ஒரு மர்மம்.
அப்போஸ்தலனாகிய பவுல், அவருடைய காலத்தில் நன்கு அறியப்பட்ட அறிஞராக இருந்தார், அவருடைய உயர்ந்த அறிவு, ஞானம் மற்றும் கல்வி நிலைப்பாட்டை மேன்மையாக எண்ணிட அவருக்கு எல்லா தகுதியும் இருந்தன (வ.1-2). ஆயினும்கூட, அவர் பயத்துடனும் நடுக்கத்துடனும் கொரிந்தியர்களிடம் வந்தார், ஏனெனில் அவர் சாட்சியிட்ட "இரகசியமானது" அவரது அறிவுத் திறனைக் காட்டிலும் உன்னதமானதாக இருந்தது. இந்த "இரகசியம்" மனிதக்குலத்தைப் பாவத்திலிருந்து மீட்பதற்கான தேவனின் புரிந்துகொள்ள முடியாத திட்டமாகும், மேலும் இது அவருடைய குமாரனாகிய இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. இதைத் திட்டமிடுவதிலிருந்த தேவஞானம் ஒரு இரகசியமாகும், இது பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் (வ.5-10).கிறிஸ்துவை நமது இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, நாமும் இந்த மாபெரும் "இரகசியத்தின்" ஒரு அங்கமாகி விடுகிறோம். இதைத் தேவனே நமக்குள் ஏற்படுத்துகிறார். தேவனின் ஞானம் பூமிக்குரிய எந்த ஞானத்தையும் விட பெரியது, பரிசுத்த ஆவியானவர் மூலம் அது நமக்குக் கிடைக்கிறது. வாழ்க்கையின் பலவழிச் சாலையில் குடும்பம், நண்பர்கள் அல்லது சகாக்களின் ஞானத்தைச் சார்ந்துகொள்ள நாம் தூண்டப்படுகையில், சகல ஞானத்தின் மூலாதாரமான பரிசுத்த ஆவியானவரை (கொலோசெயர் 1:9) அண்டிக்கொள்வதில் தவறாதிருப்போமாக. ஏனென்றால் மனிதனின் ஞானம் நல்லது, தேவனின் ஞானம் சிறந்தது, அவருடைய பிரசன்னமும் எப்போதும் நம்மோடு உண்டு.
- ரெபேக்கா விஜயன்
பொங்கிப் பொங்கி வழிதல்
மற்ற இடங்களில் லோஹரி என்றும் மகர சங்கராந்தி என்றும் கொண்டாடப்படும் பொங்கல் என்ற தமிழ்ப் பண்டிகையின் கலாச்சாரக் கொண்டாட்டத்தை எங்கள் பள்ளியில் அனுபவிக்க, தமிழ் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்தனர். அவர்கள் ஒரு பாரம்பரிய அடுப்பை அமைத்து, சிறிய கட்டைகளை எரித்து, அதன்மேல் ஒரு மண் பானையை வைத்து, அதில் அரிசி, சர்க்கரை மற்றும் பாலை வைத்தனர். பானையிலிருந்தவை கொதித்தெழுவதை நாங்கள் பிரமிப்புடன் பார்த்து, குலவிச் சத்தமிட்டோம். ஒவ்வொருவரும் கொஞ்சம் பொங்கல் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வகுப்பிற்குச் சென்றோம். தமிழ்க் கலாச்சாரத்தில், 'பொங்கல்' அதாவது 'நிரம்பி வழிகிறது' என்பது அறுவடையின் மிகுதியைக் குறிக்கிறது.
யோவான் 7, கூடாரப் பண்டிகை எனப்படும் யூதர்களின் பண்டிகையைப் பற்றிப் பேசுகிறது. இந்த பண்டிகையின் கடைசி நாளில், இயேசு எழுந்து நின்று சத்தமாக, "ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்" (வ.37) என்றார். அவரை விசுவாசிக்கும் எவருக்கும் அவர்களுடைய "உள்ளத்திலிருந்து" "ஜீவத்தண்ணீருள்ள நதிகள்" ஓடும் (வ.38) என்று அவர் வாக்களித்தார். இயேசு குறிப்பிடும் இந்த ஓடும் நதிகளானது, பின்னர் அனைவர் மீதும் ஊற்றப்படும் வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரே (வ.39) என்று எழுத்தாளர் யோவான் விளக்குகிறார். இயேசு மரித்து, மீண்டும் உயிர்த்தெழுந்து பரலோகத்திற்குச் சென்றபின், மற்றொரு பண்டிகையான பெந்தெகொஸ்தே நாளில் (அப்போஸ்தலர் 2:1). அவர் இந்த வாக்குறுதியை நிறைவேற்றினார், ஆவியானவரால் நிரம்பி வழிந்த அவருடைய சீஷர்கள் பல்வேறு பாஷைகளில் நற்செய்தியை அறிவித்து, தங்களுக்கு உண்டானவற்றை விருப்பத்துடன் பகிர்ந்துகொண்டு, கரிசனையுள்ள சமுதாயமாக மாறினார்கள் (அப்போஸ்தலர் 2:3,52).
நம்முள்ளிருந்து நம்முடைய ஆவிக்குரிய தாகத்தைத் தணிக்க இயேசுவானவர் தம்முடைய ஆவியை நமக்குத் தந்திருக்கிறார் (யோவான் 7:38-39). ஆவியானவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார், நமக்குச் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறார், மேலும் நிரம்பி வழியும்படி (வ.38) நம்மை நிரப்புகிறார். நாம் நிரப்பப்படுகையில், மற்றவர்களையும் நிரப்ப நாம் நிரம்பி வழிகிறோம்
- ஆன் ஹரிகீர்த்தன்
தேவனுடைய வேலையாட்கள்
மத்திய கிழக்கு தேசங்களில் உள்ள அகதிகள் முகாமில் இருந்த ரேசா ஒரு வேதாகமத்தை பரிசாய் பெற்றுக்கொண்டபோது, அவர் இயேசுவை விசுவாசிக்கத் துவங்கினார். “என்னை உம்முடைய வேலையாளாய் பயன்படுத்தும்” என்பதே அவருடைய முதல் ஜெபமாய் இருந்தது. அவர் முகாமை விட்டு வெளியேறிய பின்னர், அவர் எதிர்பாராத விதமாக ஒரு நிவாரண நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தபோது தேவன் அவருடைய அந்த ஜெபத்திற்கு பதிலளித்தார். அவர் அறிந்த மற்றும் நேசித்த மக்களுக்கு சேவை செய்ய மீண்டும் முகாமுக்குத் திரும்பினார். அவர் விளையாட்டுக் கழகங்கள், மொழி வகுப்புகள், சட்ட ஆலோசனைகள் என்று “மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய அனைத்தையும்” ஏற்படுத்தினார். மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கும் தேவனுடைய ஞானத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வழியாகவும் இந்த திட்டங்களை அவர் பார்க்கிறார்.
அவரது வேதாகமத்தைப் படித்தபோது, ரேசா ஆதியாகமத்திலிருந்து யோசேப்பின் சம்பவத்தோடு தனக்கான தொடர்பை உணர்ந்தார். யோசேப்பு சிறைச்சாலையில் இருந்தபோது, அவனுடைய வேலையைத் தொடர்ந்து செய்ய தேவன் எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை அவர் கவனித்தார். தேவன் யோசேப்புடன் இருந்ததால், அவர் அவனுக்கு இரக்கம்பாராட்டி தயவு காண்பித்தார். சிறைச்சாலைக்காரன் யோசேப்பின் காரியங்களில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. ஏனென்றால், யோசேப்பு செய்த எல்லாவற்றையும் தேவன் வாய்க்கப்பண்ணினார் (ஆதியாகமம் 39:23).
தேவன் நம்மோடு கூட இருப்பார் என்று வாக்களிக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம், இடப்பெயர்வு, மனவேதனை அல்லது துக்கம் போன்ற சிறைச்சாலை அனுபவங்களுக்குள் நாம் கடந்துவந்தாலும், அவர் நம்மை விட்டு விலகமாட்டார் என்று நம்பலாம். முகாமில் இருப்பவர்களுக்கு சேவை செய்ய ரேசாவுக்கும், சிறைச்சாலையை கண்காணிக்க யோசேப்புக்கும் தேவன் உதவியது போல, அவர் எப்போதும் நம்மோடே கூட இருக்கிறார்.
- எமி பவுச்சர் பை
கிறிஸ்துவில் அமைதியான உண்மை
அவரை நான் முதலில் பார்க்கவில்லை.
நான் தங்கியிருந்த ஹோட்டலில் காலை உணவு சாப்பிடுவதற்காக நான் கீழே இறங்கிவந்தேன். உணவு உண்ணும் அந்த அறையில் அனைத்தும் சுத்தமாக இருந்தது. உணவு மேசைகள் பதார்த்தங்களினால் நிரம்பியிருந்தன. குளிர்சாதன பெட்டி நிரம்பியிருந்தது. பாத்திரம் கொள்கலன் நிரம்பியிருந்தது. அனைத்தும் சரியாக இருந்தது.
அப்போது நான் அவரைப் பார்த்தேன். ஒரு கவனிக்கப்படாத நபர் அவைகள் ஒவ்வொன்றையும் நிரப்பிக்கொண்டேயிருந்தார். அவைகளை துடைத்து சுத்தம் செய்தார். அவர் யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. ஆனால் நான் அதிக நேரம் அமர்ந்திருந்தேன், மேலும் நான் ஆச்சரியப்பட்டேன். அந்த மனிதர் மிக வேகமாக வேலை செய்து கொண்டிருந்தார். எல்லாவற்றையும் கவனித்து, யாருக்கும் ஏதாவது தேவைப்படுமுன் அனைத்து பாத்திரங்களையும் நிரப்பிக்கொண்டேயிருந்தார். உணவு சேவையில் அனுபவம் வாய்ந்தவராக, அவர் தன் வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்துவதை நான் கவனித்தேன். இந்த மனிதர் உண்மையாக வேலை செய்ததால் அந்த இடத்தில் அனைத்தும் சரியாக இருந்தது.
இந்த நபர்; உன்னிப்பாக வேலை செய்வதைப் பார்த்து, தெசலோனிக்கேயர்களுக்கு பவுல் சொன்ன வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன்: “அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும்வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்” (1 தெசலோனிக்கேயர் 4:12). உண்மையாய் வேலை செய்யும் ஒருவன் மற்றவர்களுடைய மதிப்புக்கு எவ்விதத்தில் பாத்திரமாகக்கூடும் என்பதை அறிந்த பவுல், ஒரு சிறிய சேவையின் மூலம் சுவிசேஷத்தை நாம் எவ்வாறு கண்ணியத்துடனும் நோக்கத்துடனும் சொல்ல முடியும் என்பதை வலியுறுத்துகிறார்.
அன்று நான் பார்த்த மனிதர் கிறிஸ்தவ விசுவாசியா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவரது அமைதியான விடாமுயற்சி, கிறிஸ்துவுக்காக அமைதியான உண்மையுடன் வாழ என்னை ஊக்குவித்தது.
- ஆடம் ஹோல்ட்ஸ்
விலைப்பட்டி இல்லை
எனது ஊரில் உள்ள ஒரு சிறிய குடும்ப பல்பொருள் அங்காடி புத்தாண்டின் போது ஏழை மக்களுக்குப் பரிசுகளை வழங்க முடிவு செய்தது. அந்த அங்காடியே பொருட்களுக்குரிய விலையைச் செலுத்தியது, அதன் பணியாளர்கள் சில அத்தியாவசிய பொருட்கள், உடைகள் மற்றும் உணவுகளால் கடையை நிரப்பினர். அழைக்கப்பட்ட ஏழை மக்கள் கடைக்குள் நுழைந்தபோது, “விலைப்பட்டிகள் இல்லை, உங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்று உங்களுக்கு எல்லாம் இலவசம்!” என்று அறிவிக்கும் குரல் கேட்டது. புதிய ஆடைகள், புதிய உணவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுவதை அவர்கள் கண்டதேயில்லை என்பதால், அவர்களின் நன்றியுணர்வு மெய்யாகவே மேலோங்கியது.
தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக முற்றிலும் இலவசமான ஒரு பரிசை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்று அப்போஸ்தலன் பவுல் கூறுகிறார். பாவம் மற்றும் மரணத்தின் வல்லமையிலிருந்து நம்மை இரட்சித்த இயேசுவின் மூலம் தேவனே இந்த பரிசுக்கான விலையைச் செலுத்தினார், ஆகையால் நாம் அவருடன் என்றென்றும் வாழ முடியும் (ரோமர் 6:23). தேவன் அதற்கான விலையை முன்கூட்டியே செலுத்தியதின் மூலம் நமக்கு இரட்சிப்பை இலவசமாக்கினார். கிறிஸ்துவின் இரத்தமே விலை. அவர் நம்மைக் கிரயத்தால் மீட்டுத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டதால், நாம் இனி நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல, நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் (1 கொரிந்தியர் 6:20). நமது பிரயத்தனம் இந்த விலையேறப்பெற்ற பாக்கியத்தை வாங்கியிருக்க முடியாது (எபேசியர் 2:8-9). அவருடைய மிகுந்த அன்பினால்தான் நமக்கும், விசுவாசத்தோடு அவரிடம் திரும்புகிற அனைவருக்கும் இரட்சிப்பு இலவசமாக அருளப்படுகிறது.
கொடுக்கப்பட்ட பொருட்களுக்கு அங்காடியின் உரிமையாளர்கள் பணம் கொடுத்தது போல், இயேசுவானவர் சிலுவையில் நம் இடத்தை எடுத்துக்கொண்டு நமது இரட்சிப்புக்கான விலையைச் செலுத்தினார். அவா்கள் அதைச் செய்ததால், ஏழை மக்கள் தங்களுக்குத் தேவையானதை எந்தச் செலவுமின்றி பெற்றுக் கொண்டது போல நாமும் இலவசமாக இரட்சிப்பு என்ற பரிசை பெறலாம். அவருடைய இரட்சிப்பை நமக்கு இலவசமாக வழங்கும்படி அவர் எடுத்த அன்பான தீர்மானத்திற்கு அவர்களைப் போலவே நாமும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்
- ரவி எஸ். ரத்ரே
கவனக்குறைவுக்கான ஆகாரம்
எனது செல்பேசியின் சிறிய திரையில் ஒளிபரப்பப்படும் படங்கள், யோசனைகள் மற்றும் அறிவிப்புகளின் தொடர்ச்சியான செயல்பாடுகளால் சோர்வடைந்த நான் எனது செல்பேசியை கீழே வைத்தேன். பிறகு, அதை எடுத்து மீண்டும் ஆன் செய்தேன். ஏன்?
நிக்கோலஸ் கார், அவரது 2013இல் வெளியான புத்தகமான “தி ஷாலோஸ்” என்ற புத்தகத்தில், இணைதளம் அமைதியுடன் நமது உறவை எவ்வாறு வடிவமைத்துள்ளது என்பதை விவரிக்கிறார்: “இணையதளங்கள், என் செறிவு மற்றும் சிந்தனையின் திறனைக் குறைக்கிறது. நான் ஆன்லைனில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வேகமாக நகரும் துகள்களின் ஓட்டத்தில் இணையதளங்கள் அதை விநியோகிக்கும் விதத்தில் தகவல்களைப் பெற வேண்டும் என்று என் மனம் எப்போதும் எதிர்பார்க்கிறது. ஒருகாலத்தில் நான் வார்த்தைக் கடலில் மூழ்கி முத்தெடுக்கம் அளவிற்கு தேறினவனாயிருந்தேன். ஆனால் இப்போது நான் கரையில் நிற்கிறேன்.”
மனரீதியாக நான் கரையில் நிற்பது ஆரோக்கியமானதாக இல்லை. ஆனால் ஆவிக்குரிய நீரோட்டத்தில் ஆழமாய் போவது எப்படி?
சங்கீதம் 131இல் தாவீது “நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்” (வச. 2) என்கிறான். தாவீதின் வார்த்தைகள் என்னுடைய பொறுப்பை எனக்கு நினைவூட்டுகிறது. என்னும் சுபாவங்களை மாற்றுவது என்பது, நான் நிலையாக நிற்பதிலிருந்து துவங்குகிறது. ஆகிலும் தேவனுடைய திருப்திபடுத்தக்கூடிய நன்மையான சுபாவங்களை நாம் அனுபவிக்கிறோம். அவரே நம்முடைய நம்பிக்கை என்பதை நம்பி, ஒரு சிறு குழந்தையைப் போல மனநிறைவுடன் நாம் இளைப்பாறக்கூடும் (வச. 3). ஆத்ம திருப்தியை எந்த ஸ்மார்ட்ஃபோன் செயலியும், எந்த சமூக ஊடகங்களாலும் தர முடியாது.
இனி உன் பாவங்கள் நினைவுகொள்ளப்படாது
நான் பனியைப் பார்த்ததில்லை. ஆனால் நான் அதை உணர்ந்திருக்கிறேன். நான் என்னுடைய தாத்தாவின் லாரியை வீட்டின் பின்புறமாக ஓட்டிக்கொண்டிருந்தேன். திடீரென்று வந்த அந்த வளைவு என்னை நிலைகுலையச் செய்து, பதினைந்து அடி சுவரை தகர்த்துக்கொண்டு, லாரியும் நானும் காற்றில் பறக்க ஆரம்பித்தோம். இந்த விபத்திலிருந்து தப்பித்து நான் உயிர்பிழைத்தால் நலமாயிருக்கும் என்று யோசித்தேன். சிறிது நேரம் கழித்து, லாரி செங்குத்தான சரிவில் நொறுங்கி கீழே உருண்டது. நொறுக்கப்பட்ட வண்டியிலிருந்து நான் காயமடையாமல் ஊர்ந்து வெளியே வந்தேன்.
டிசம்பர் 1992, காலை லாரி முற்றிலுமாக சேதத்திற்குள்ளாகி நொறுங்கியது. தேவன் என்னை சேதமின்றி பாதுகாத்தார். ஆனால் என் தாத்தா என்ன சொல்லப்போகிறார் என்று பயந்தேன். அவர் சேதமடைந்த லாரியைக் குறித்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. என்னை அவர் திட்டவும் இல்லை. அதை பழுதுபார்ப்பது குறித்தோ என்னிடம் ஆலோசனை எதுவும் நடத்தவும் இல்லை. முழுமையான மன்னிப்பு. மேலும் எனக்கு ஒன்றும் பாதிப்பில்லாதது குறித்து அவர் புன்னகைத்தார்.
என் தாத்தாவின் கிருபை எரேமியா 31-ல் உள்ள தேவனின் கிருபையை எனக்கு நினைவூட்டுகிறது. அங்கு அவர்களுடைய மிகப்பெரிய தோல்விகள் இருந்தபோதிலும், தேவன் தம் ஜனங்களுக்கு “நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்” (வச. 34) என்று வாக்களிக்கிறார்.
நான் அவருடைய லாரியை உடைத்ததை என் தாத்தா ஒருபோதும் மறக்கமாட்டார் என்று எனக்கு தெரியும். ஆனால் அவர் இங்கே தேவனைப் போல நடந்து கொண்டார். அதை நினைவில் கொள்ளவில்லை, என்னை அவமானப்படுத்தவில்லை, நான் செலுத்த வேண்டிய கடனை அடைக்க என்னை வேலை செய்ய சொல்லுவும் இல்லை. தேவன் சொன்னதைப்போலவே, நான் செய்த அழிவு நடக்காதது போல், என் தாத்தா அதை இனி நினைவுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை.
பட்டியலில் முதலாவதாக
காலை ஒரு தட சந்திப்பு போல் தொடங்கியது. நான் படுக்கையில் இருந்து எழுந்த மாத்திரத்தில், அன்றைய காலக்கெடுவினை செய்யத் துவங்கினேன். குழந்தைகளை பள்ளிக்கு ஆயத்தம் செய்தல். பரிசோதி. வேலை செய். பரிசோதி. அன்று நான் செய்யவேண்டிய காரியங்களை எழுதி வைத்திருந்த தாளில் ஒன்றன்பின் ஒன்றாய் வேலைகளை செய்துமுடித்தேன்.
“ . . . 13. கட்டுரையைத் திருத்துதல் 14. அலுவலகத்தை சுத்தம்செய்தல் 15. மூலோபாய குழு திட்டமிடல் 16. தொழில்நுட்ப வலைப்பதிவை எழுதுதல் 17. அடித்தளத்தை சுத்தம்செய்தல் 18. ஜெபித்தல்.
நான் பதினெட்டாம் இடத்திற்கு வந்தபோது, எனக்கு தேவனின் உதவி தேவை என்பதை நினைவில் வைத்தேன். ஆனால் இதற்கு முன்பே என் சொந்த வேகத்தை உருவாக்க முயற்சிக்கிறேன் என்று எனக்குத் தோன்றுவதற்கு முன்பே நான் அதை உணர்ந்தேன்.
இயேசு அது தெரியும். நம் நாட்கள் ஒன்றோடு ஒன்று மோதி, இடைவிடாத அவசரக் கடலாக மாறும் என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே அவர் “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” (மத்தேயு 6:33) என்று அறிவுறுத்துகிறார்.
இயேசுவின் வார்த்தைகளை ஒரு கட்டளையாக கேட்பது இயற்கையானது. அவைகள் கட்டளைகளே. மத்தேயு 6இல், நாளுக்கு நாள் அதிகரிக்கும் இவ்வுலகின் அதிகமான கவலையை (வச. 25-32) பரிமாறிக்கொள்ள இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். தேவன் அவருடைய மாபெரும் கிருபையால், நம் எல்லா நாட்களிலும் நமக்கு உதவிசெய்கிறார். அவருடைய பார்வையில் வாழ்க்கையை நாம் பார்க்க அணுகுவதற்கு முன்பாக, பதினெட்டாம் இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே அவர் நமக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.