Adam R. Holz | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆடம் ஆர். ஹோல்ஸ்கட்டுரைகள்

இயேசுவே பிரதானம்

எனக்கும் என் மனைவிக்கும் கண்ணியமான, இதமான காதல் திரைப்படங்கள் பிடிக்கும். அவளுக்குச் சற்று அதிகம் பிடிக்கும், எனக்கும் கொஞ்சம் பிடிக்கும். இதுபோன்ற திரைப்படங்களின் தனித்துவமே அவற்றின் மனோரம்மியமான முடிவுதான். சமீபத்தில் நாங்கள் பார்த்த ஒரு திரைப்படத்திலோ சற்று ஆட்சேபனையான அறிவுறுத்தல்கள் இருந்தன. அதில், அன்பு ஒரு உணர்வு, உன் மனதில் பட்டதைச் செய், உன் தனிப்பட்ட சந்தோஷமே பிரதானம் என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்தது. நம் உணர்வுகள் முக்கியம்தான், ஆனால் சுயத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சிகள் நீடிக்கும் திருமணங்களைக் கட்டியெழுப்பாது.

பொதுவான கலாச்சாரம், ஏற்றதாகத் தோன்றும் பல ஆலோசனைகளை அளித்தாலும் ஆழமாக ஆராய்ந்தால் அவை சிதைந்துவிடும். கொலோசெயர் 2 இல் பவுலின் மனதிலிருந்ததெல்லாம் கவனமான கருத்தாய்வு பற்றிய சிந்தனையே. அதில் அவர், “அவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) வேர்கொண்டவர்களாகவும்.. விசுவாசத்தில் உறுதிப்பட்டு (ம்)” (வ.6-7) இருப்பதே நமது கலாச்சாரத்தில் உள்ள பொய்களை இனங்காணும் வழியென்பதை அடிக்கோடிட்டுள்ளார். அத்தகைய பொய்களை அப்போஸ்தலன் லௌகிக ஞானம், மாயமான தந்திரம் என்று அழைத்து, அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயம் மற்றும் உலகவழிபாடுகள் (வ.8) மேல் கட்டப்பட்டது என்கிறார்.

ஆகவே அடுத்தமுறை நீங்கள் ஒரு திரைப்படம் பார்க்கையில், உங்களிடமோ அல்லது பிறரிடமோ “இந்த திரைப்படம் அறிவுறுத்தும் ஆலோசனை ஞானமானதா? சத்தியமென்று வேதாகமம் சொல்லுபவற்றோடு இது ஒத்துப்போகிறதா?” என்று கேட்டுக்கொள்ளுங்கள். மேலும் கிறிஸ்துவே பிரதானம் என்பதை நினைவில்கொள்ளுங்கள். அவருக்குள் மட்டுமே நாம் மெய்யான ஞானத்தையும், தேவத்துவத்தின் பரிபூரணத்தையும் (வ.9-10) காணமுடியும்.

 

ஷாலோமின் முகவர்கள்

2015 ஆம் ஆண்டில், கொலராடோவின் கொலராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள ஊழிய ஸ்தாபனங்கள், நகரச் சேவைக்காக ஒன்றிணைந்தன. மேலும் COSILoveYou (ஒரு சுவிசேஷ இயக்கம்) உதயமானது. ஒவ்வொரு இலையுதிர் காலத்தில், CityServe (நகர்ப்புற ஊழியம்) எனப்படும் நிகழ்வில், குழுவினர் சமுதாயத்திற்கு ஊழியம்  செய்யும்படி விசுவாசிகளை அனுப்புகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ஊழியத்தின்மூலம், நானும் எனது பிள்ளைகளும்  நகரத்தின் மையத்திலிருக்கும் ஒரு தொடக்கப் பள்ளிக்கு அனுப்பப்பட்டோம். அங்கே, களைகளைப் பிடுங்கி சுத்தம் செய்தோம். மேலும்  ஒரு கலைத் திட்டத்தில் பணியாற்றினோம், அதில், மலைகள் போன்ற தோற்றமளிக்க,  வண்ணமயமான பிளாஸ்டிக் டேப்பைப்  ஒரு சங்கிலி இணைப்பு வேலி மூலம் பிணைத்தோம். இது எளிமையானது, ஆனால் வியக்கத்தக்க அழகானது.

நான் பள்ளியைக் கடந்து செல்லும் போதெல்லாம், எங்களின் எளிமையான கலைத் திட்டம் எனக்கு எரேமியா 29 ஐ நினைவூட்டுகிறது. அங்கு, தேவன் தம்முடைய ஜனங்களை அவர்கள் இருந்த நகரத்தில் குடியேறி, அதற்குச் சேவை செய்யும்படி அறிவுறுத்தினார். அவர்கள் சிறைப்பட்டுப் போயிருந்தாலும், அங்கே இருக்க விரும்பவில்லை என்றாலும் அங்ஙனமே கட்டளையிட்டார்.

தீர்க்கதரிசி, "நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்" (வ.7) என்றார்.இங்குச் சமாதானம் என்ற சொல் "ஷாலோம்" என்ற எபிரேயச் சொல்லாகும். தேவனின் நன்மையும் மீட்பும் மட்டுமே கொண்டு வரக்கூடிய முழுமையையும், செழிப்பையும் குறித்த கருத்தை இது உள்ளடக்கியது. 

ஆச்சரியப்படும் விதமாக, தேவன் நம் ஒவ்வொருவரையும் நாம் இருக்கும் இடத்திலேயே 'ஷாலோமின்' முகவர்களாக இருக்கும்படி அழைக்கிறார். செம்மைப்படுத்தவும், அவர் நமக்களித்துள்ள இடங்களில் எளிமையான, உறுதியான  வழிமுறைகளில் மீட்பைப் செயல்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம்.

மேலான மகிமை

சில நேரங்களில் வியக்கத்தக்க வகையில் ஆவிக்குரிய செய்திகள் எதிர்பாராத இடங்களில் தோன்றும். அதற்கு காமிக் புத்தகங்கள் ஒரு உதாரணம். ஸ்பைடர் மேன், அயர்ன் மேன், ஃபென்டாஸ்டிக் ஃபோர், தி ஹல்க் மற்றும் பல முக்கிய ஹீரோக்களின் பாரம்பரியத்தை கற்பனையாய் வடிவமைத்த மார்வெல் காமிக்ஸ் வெளியீட்டாளர் ஸ்டான் லீ 2018 இல் காலமானார்.

சன்கிளாஸடன் பிரபலமாகச் சிரிக்கும் அவர், பல தசாப்தங்களாக மார்வெல் காமிக்ஸில் மாதாந்திர நெடுவரிசைகளில் கையொப்பமிடும்போது, “எக்செல்சியர்” என்று எழுதுவது வழக்கம். அதற்கு “மேலான மகிமைக்கு நேராய் முன்நோக்கி செல்லுதல்” என்று அர்த்தத்தையும் விளக்கினார். 

எனக்கு அது பிடிக்கும். ஸ்டான் லீ அதை உணர்ந்தாரோ இல்லையோ, இந்த வழக்கத்திற்கு மாறான சொற்றொடரைப் பயன்படுத்துவது நிச்சயமாக பிலிப்பியர்களில் பவுல் எழுதியதைப் போலவே எதிரொலிக்கிறது. அவர் விசுவாசிகளை பின்னால் பார்க்காமல், மேலே பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்: “ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (வச. 13-14).

வருத்தம் மற்றும் கடந்தகாலத்தில் நாம் எடுத்த முடிவுகளில் நாம் எளிதில் சிக்கிக்கொள்ளலாம். ஆனால் கிறிஸ்துவில், வருந்துவதைத் துறந்து, அவர் நமக்கு அருளும் மன்னிப்பையும் நோக்கத்தையும் ஏற்றுக்கொள்வதன் மூலம் தேவனுடைய மகத்தான மகிமைக்காக மேல்நோக்கிச் செல்ல நாம் அழைக்கப்படுகிறோம்! எக்ஸெல்சியர்!

நான் ஓட்டுநர் மட்டுமே

"அப்பா, நான் என் தோழியுடன் இரவு தங்கலாமா?" பயிற்சி முடிந்து காரில் ஏறிக் கொண்டே என் மகள் கேட்டாள். "கண்ணே, உனக்கே பதில் தெரியும். நான் ஓட்டுநர் மட்டும்தான். முடிவை நான் அறியேன், அம்மாவிடம் கேட்கலாம்" என்றேன்.

"நான் ஓட்டுநர் மட்டுமே" என்றது எங்கள் வீட்டில் நகைச்சுவையாகிவிட்டது. தினமும், நான் எங்கே இருக்க வேண்டும்? எப்போது, ​​யாரை எங்கு அழைத்துச் செல்லவேண்டும்? என்று ஒழுங்கமைக்கும் எனது மனைவியிடம் கேட்கிறேன். மூன்று யுவதிகளுடன், ஒரு "வாகன ஓட்டுநராக" இரவில் வாகனம் ஓடுவதை   இரண்டாவது வேலையாகவே உணர்கிறேன். பெரும்பாலும், நான் அறியாதவை எனக்குத் தெரியாமலேயே இருக்கும். எனவே, எல்லாவற்றையும் தீர்மானிக்கும் எசமானியுடன் நான் சரிபார்க்க வேண்டும்.

மத்தேயு 8 இல், இயேசு ஒருவரைச் சந்தித்தார், அவர் கட்டளைகளைப் பின்பற்றுதல் மற்றும் அளித்தல் குறித்து அறிந்திருந்தார். ஒரு ரோமானிய நூற்றுக்கு அதிபதியாக, அவனுக்கு கீழ்ப்பட்டவர்களுக்குக் கட்டளையிட அதிகாரம் இருப்பதைப் போலவே, இயேசுவுக்குக் குணமாக்கும் அதிகாரம் உண்டு என்பதை அவன் புரிந்துகொண்டான். “ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தும், எனக்குக் கீழ்ப்படிகிற சேவகருமுண்டு;” (வ. 8-9). கிறிஸ்து அவனுடைய விசுவாசத்தைப் பாராட்டினார் (வவ. 10,13), அவருடைய அதிகாரம் எவ்வாறு செயல்பாட்டில் இருக்கிறது என்பதை அவன் புரிந்துகொண்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

அப்படியானால் நாம் எப்படி இருக்கிறோம்? இயேசுவிடமிருந்து நமது அன்றாடப் பணிகளைப் பெற்று, அவர்மீதே நம்பிக்கை கொள்வது எவ்வாறு  இருக்கும்? ஏனென்றால், நாம் "வெறும் ஓட்டுநர்" என்று நினைத்தாலும், ஒவ்வொரு பணிக்கும் ராஜ்ய அர்த்தமும் நோக்கமும் உள்ளது.

இயேசு கறைகளை கழுவுகிறார்

வாஷிங் மெஷினில் என்னுடைய சட்டையை தேடி, “நீ என்ன வேடிக்கை காண்பிக்கிறாயா?” என்று உரக்க கத்தினேன். என் சட்டையை கண்டுபிடித்தேன். எனக்கு அதிர்ச்சியாயிருந்தது. 

என் வெள்ளை சட்டையில் மை புள்ளி இருந்தது. மையின் கறைகள் அங்கிருந்த அனைத்து ஆடைகளிலும் பரவியிருந்தது. நான் தெளிவாக என் சட்டை பைகளை சரிபார்க்கவில்லை. அதிலிருந்து கசிந்த ஒரு பேனா மை அனைத்து பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. 

பாவத்தை விவரிக்க வேதம் பெரும்பாலும் கறை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. ஒரு கறை துணியில் ஊடுருவி, அவற்றை அழிக்கிறது. எரேமியா தீர்க்கதரிசி மூலம் தேவன் பாவத்தை விவரித்தார். அதன் கறை அவர்களின் தூய்மைக்கு அப்பாற்பட்டது என்பதை நினைவூட்டுகிறது: “நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (எரேமியா 2:22). 

அதிர்ஷ்டவசமாக, பாவம் நம்மை முழுவதுமாய் ஆளுகை செய்யப் போவதில்லை. ஏசாயா 1:18ல், பாவத்தின் கறையிலிருந்து நம்மைச் சுத்திகரிக்க முடியும் என்ற தேவனின் வாக்குறுதியை நாம் கேட்கிறோம்: “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.”

என் சட்டையில் இருந்து மை கறையை வெளியே எடுக்க முடியவில்லை. என் பாவத்தின் கறையை என்னால் அகற்றவும் முடியாது. அதிர்ஷ்டவசமாக, 1 யோவான் 1:9 வாக்களித்தபடி, தேவன் நம்மை கிறிஸ்துவில் சுத்திகரிக்கிறார்: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”

 

தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

முகநூலில் "பிடித்திருக்கிறது" என்பதற்கு அடையாளமான அந்த விருப்ப குறி பொத்தான் முகநூலின் ஆரம்பத்திலிருந்தே இருப்பது போலத் தோன்றும். ஆனால் அது 2009 இல் தான் நடைமுறைக்கு வந்தது.

இந்த 'விருப்ப' பொத்தானை வடிவமைத்த ஜஸ்டின் ரோசன்ஸ்டைன் கூறுகையில், 'ஒருவரையொருவர் கிழித்து கீழ்த்தள்ளும் உலகத்திற்கு மாறாக, ஊக்கப்படுத்தி உயர்த்தும்' ஒரு உலகை உருவாக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு, பயனாளர்களை இந்த சமூக ஊடகத்தின் அடிமையாக்கிய விளைவைக் கண்டு ரோசன்ஸ்டைன் வருந்தினார்.

ரோசன்ஸ்டைனின் இந்த படைப்பு, நமது இணைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான அடிப்படைத் தேவையை வெளிப்படுத்துவதாக நான் எண்ணுகிறேன். பிறர் நம்மை அறியவும், கவனிக்கவும், விரும்பவும் வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். 'விருப்ப' பொத்தான்தான் புதியது, ஆனால் அறிவதற்கும், அறியப்படுவதற்குமான நமது விருப்பம், தேவன் மனிதனை உண்டாக்கிய நாள் தொட்டே உள்ளது.

இன்றும், 'விருப்ப' பொத்தான் நமது விருப்பத்தைத் தனிக்கவில்லை. சரிதானே? அதிர்ஷ்டவசமாக மின்னியல் அங்கீகாரத்தை விட, மிக ஆழமாக நேசிக்கும் தேவனை நாம் ஆராதிக்கிறோம். எரேமியா 1:5 ல் தனக்கென்று தீர்க்கதரிசியை அழைக்கையில், அதில் உள்ள ஆழ்ந்த நோக்கத்தையும், பிணைப்பையும் காண்கிறோம். "நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி"

கருவுறுதலுக்கு முன்பே தீர்க்கதரிசியைத் தேவன் அறிந்திருந்தார். மேலும் அர்த்தமுள்ள, நோக்கம் நிறைந்த வாழ்க்கைக்காக அவரை வடிவமைத்தார் (வ. 8-10). நம்மை மிகவும் நெருக்கமாக அறிந்த, நேசிக்கும், விரும்பும் இந்த தகப்பனை நாம் அறிகையில், அவர் நம்மையும் ஒரு நோக்கமுள்ள வாழ்க்கைக்கு அழைக்கிறார்.

தேவன் கொடுத்த சுபாவம் மற்றும் வரங்கள்

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஓர் கல்லூரி ஓய்வு விடுதிக்குச் சென்றேன், அங்கு எல்லோரும் ஆளுமைத் தேர்வைப் பற்றி பேசினர். சில ஆங்கில குறியீட்டு எண்களைச் சொல்லி, இது தான் தங்களுடைய ஆளுமை என்று சொல்லிக்கொண்டனர். நானும் விளையாட்டிற்காய், வாய்க்கு வந்த சில எழுத்துக்களைச் சொல்லி, இது தான் என்னுடைய ஆளுமை என்று கிண்டலடித்தேன். 

அப்போதிருந்து, மேயர்-பிரிக்ஸ் மதிப்பீடு எனப்படும் ஆளுமைத் தேர்வைப் பற்றி நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவைகள் நம்மையும் மற்றவர்களையும் புரிந்துகொள்வதற்கு உதவமுடியும் என்பதால், அதை கவர்ச்சிகரமானதாக நான் காண்கிறேன். நாம் அவற்றை அதிகமாய் பயன்படுத்த அவசியம் இல்லை எனினும், அவை நம்மை உருவாக்கி வளர்ப்பதற்கு தேவன் பயன்படுத்தும் ஓர் கருவியாய் நிச்சயமாய் இருக்கக்கூடும். 

நம் ஆளத்துவத்தை கண்டறியும் சோதனைகளை வேதம் வழங்கவில்லை. ஆனால் தேவனுடைய பார்வையில் ஒவ்வொரு நபரின் தனித்துவத்தையும் இது உறுதிப்படுத்துகிறது (சங்கீதம் 139:14-16; எரேமியா 1:5 ஐப் பார்க்கவும்). மேலும் சிறந்த ஆளத்துவத்தையும் வரங்களையும் தேவன் நமக்கு அருளிசெய்து அவருடைய இராஜ்யத்தில் மற்றவர்களுக்கு ஊழியம்செய்ய நம்மை ஊக்குவிக்கிறதையும் இது காண்பிக்கிறது. ரோமர் 12:6ல், பவுல், “நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே..” என்று இக்கருத்தை ஆமோதிக்கிறார். 

அந்த வரங்கள் நம்முடைய சுய ஆதாயத்திற்காக அல்லவென்றும், கிறிஸ்துவின் சரீரமான திருச்சபைக்கு ஊழியம் செய்யும் நோக்கத்தோடே நமக்கு அருளப்படுகிறது என்று பவுல் வலியுறுத்துகிறார் (வச. 5). இது நமக்குள் உள்ளும் புறம்பும் கிரியை நடப்பிக்கும் அவருடைய கிருபை மற்றும் நன்மையின் வெளிப்பாடாகும். தேவனுடைய ஊழியத்தின் பயன்படும் பாத்திரமாய் திகழுவதற்கு அவை நமக்கு அழைப்புவிடுக்கிறது. 

 

என் அவிசுவாசம் நீங்க உதவிடும்

இதைக் கூறியவர் யாா் எனத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள், அது: அன்னை தெரசா. இந்தியாவின் கொல்கத்தாவில் வாழும் ஏழைகளுக்காக அயராத தொண்டராக பணியாற்றியவர் அன்னை தெரசா. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தனது விசுவாசத்தோடு ஒரு தீவிரமான அமைதியாக நடத்தினார். 1997 இல் அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது குறிப்புகளின் சில பகுதிகள், "கம் பி மை லைட்" என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டபோதுதான் அப்போராட்டம் வெளிச்சத்திற்கு வந்தது.

தேவன் இல்லை என்ற எழும் நமது சந்தேகங்கள் அல்லது உணர்வுகளை நாம் எவ்வாறு கையாள்கிறோம்? அந்த தருணங்கள் பிறரைக் காட்டிலும் சில  விசுவாசிகளை அதிகமாகப் பாதிக்கக் கூடும். வாழ்வின் சில தருணங்களில், இயேசுவின் உண்மையுள்ள விசுவாசிகள் பலர் இந்த சந்தேகத்தை அனுபவிக்க நேரிடும்.

வேதாகமத்தில் உள்ள அழகான ஆனால் முரண்பாடான ஜெபம் ஒன்று ஒரேசமயத்தில் விசுவாசத்தையும் அவிசுவாசத்தையும் வெளிப்படுத்துவதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மாற்கு 9-ல், அசுத்த ஆவியினால் அலைக்கழிக்கப்படும் சிறுவனுடைய தகப்பனை இயேசு சந்திக்கிறார் (வ. 21). இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும் என்றார். (விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் வ. 23) உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்றான். (v. 24).

உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் இந்த நேர்மையான விண்ணப்பமானது சந்தேகத்துடன் போராடுபவர்கள், அதனைத் தேவனிடம் கொடுக்கவும், அவர் நம் விசுவாசத்தை பலப்படுத்தி நாம் கடந்து செல்லும் ஆழமான இருண்ட பள்ளத்தாக்குகளுக்கு மத்தியில் நம்மைத் தாங்கிக்கொள்கிறார் என்றும் நம்பும்படிக்கும் அழைக்கிறது.

கிறிஸ்துவில் அமைதியான உண்மை

அவரை நான் முதலில் பார்க்கவில்லை. 

நான் தங்கியிருந்த ஹோட்டலில் காலை உணவு சாப்பிடுவதற்காக நான் கீழே இறங்கிவந்தேன். உணவு உண்ணும் அந்த அறையில் அனைத்தும் சுத்தமாக இருந்தது. உணவு மேசைகள் பதார்த்தங்களினால் நிரம்பியிருந்தன. குளிர்சாதன பெட்டி நிரம்பியிருந்தது. பாத்திரம் கொள்கலன் நிரம்பியிருந்தது. அனைத்தும் சரியாக இருந்தது. 

அப்போது நான் அவரைப் பார்த்தேன். ஒரு கவனிக்கப்படாத நபர் அவைகள் ஒவ்வொன்றையும் நிரப்பிக்கொண்டேயிருந்தார். அவைகளை துடைத்து சுத்தம் செய்தார். அவர் யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. ஆனால் நான் அதிக நேரம் அமர்ந்திருந்தேன், மேலும் நான் ஆச்சரியப்பட்டேன். அந்த மனிதர் மிக வேகமாக வேலை செய்து கொண்டிருந்தார். எல்லாவற்றையும் கவனித்து, யாருக்கும் ஏதாவது தேவைப்படுமுன் அனைத்து பாத்திரங்களையும் நிரப்பிக்கொண்டேயிருந்தார். உணவு சேவையில் அனுபவம் வாய்ந்தவராக, அவர் தன் வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்துவதை நான் கவனித்தேன். இந்த மனிதர் உண்மையாக வேலை செய்ததால் அந்த இடத்தில் அனைத்தும் சரியாக இருந்தது.

இந்த நபர்; உன்னிப்பாக வேலை செய்வதைப் பார்த்து, தெசலோனிக்கேயர்களுக்கு பவுல் சொன்ன வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன்: “அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும்வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்” (1 தெசலோனிக்கேயர் 4:12). உண்மையாய் வேலை செய்யும் ஒருவன் மற்றவர்களுடைய மதிப்புக்கு எவ்விதத்தில் பாத்திரமாகக்கூடும் என்பதை அறிந்த பவுல், ஒரு சிறிய சேவையின் மூலம் சுவிசேஷத்தை நாம் எவ்வாறு கண்ணியத்துடனும் நோக்கத்துடனும் சொல்ல முடியும் என்பதை வலியுறுத்துகிறார்.  

அன்று நான் பார்த்த மனிதர் கிறிஸ்தவ விசுவாசியா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவரது அமைதியான விடாமுயற்சி, கிறிஸ்துவுக்காக அமைதியான உண்மையுடன் வாழ என்னை ஊக்குவித்தது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

மாற்றத்தின் விளையாட்டு

1963 ஆம் ஆண்டு மார்ச் இரவில், இரண்டு கல்லூரி கூடைப்பந்து வீரர்கள் கருப்பு வெள்ளை பிரிவினைவாதத்தின் வெறுப்பை மீறிக் கைகுலுக்கி, மிசிசிப்பி மாநில வரலாற்றில் முதல் முறையாக முழு வெள்ளை ஆண்கள், ஒருங்கிணைந்த அணிக்கு எதிராக விளையாடியது. லயோலா பல்கலைக்கழகம் சிகாகோவிற்கு எதிராக  "மாற்றத்தின் விளையாட்டு" என்றழைக்கப்பட்ட அந்த தேசிய போட்டியில் பங்கேற்க, அவர்களின் மாநிலத்தை விட்டு வெளியேற வீரர்களைத் தடுக்க மிசிசிப்பி மாகாண குழு முயன்றது. அதேபோல லயோலாவின் கறுப்பின வீரர்கள் இதற்கிடையில், அனைத்து போட்டிகளிலும் இன அவதூறுகளை அனுபவித்தனர். நொறுக்குத்தீனிகளையும், பனிக்கட்டிகளையும் அவர்கள் மீது மற்றவர்கள் வீசினார்கள், மேலும் பயணத்தின் போது பல எதிர்ப்புகளையும் எதிர்கொண்டனர்.

ஆனாலும் இளைஞர்கள் விளையாடினார்கள். லயோலா அணியினர், மிசிசிப்பி அணியினரை 61-51 என்ற புள்ளிகணக்கில் தோற்கடித்தனர், மேலும் லயோலா இறுதியில் தேசிய பட்டத்தையும் வென்றது. ஆனால் அந்த இரவில் உண்மையில் வென்றது எது? வெறுப்பிலிருந்து அன்பை நோக்கி நகர்தலே வென்றது. இயேசு போதித்தது போல், "உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்" (லூக்கா 6:27) என்ற தேவனுடைய அறிவுரை வாழ்க்கையை மாற்றும் கருத்தாக இருந்தது.

கிறிஸ்து கற்பித்தபடி நம் எதிரிகளை நேசிக்க, மாற்றத்திற்கான அவரது புரட்சிகரமான கட்டளைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். பவுல், "ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், புது சிருஷ்டியாயிருக்கிறான்: பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17) என்றது போல, நம்மில் உள்ள பழையதை அவருடைய புதிய வழி எப்படித் தோற்கடிக்கிறது? அன்பினால்தான்.  ஒருவருக்கொருவர் அன்புடன் இருப்பதின் மூலம் இறுதியாக அவரைக் காணலாம்.

மேலானவைகளுக்காக ஓடுதல்

என் தோழி இரா அலைபேசியில் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து நான் நொறுங்கிப்போனேன். உக்ரைனின் முற்றுகையிடப்பட்ட தலைநகரான கீவிலுள்ள தனது வீட்டை விட்டு வெளியேறிய சில நாட்களுக்குப் பிறகு 2022 இல், ஒரு ஓட்டபந்தயத்தை முடித்த பிறகு தனது நாட்டின் கொடியை உயர்த்தி பிடித்து அப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் எழுதினார், " நாம் அனைவரும் வாழ்வென்னும் மாரத்தானில் இயன்றமட்டும் சிறப்பாக ஓடுகிறோம். இந்நாட்களில் இன்னும்கூட சிறப்பாக ஓடுவோம். நமது இதயங்களில் அணையாத ஒன்றைப் பற்றிக்கொள்வோம்”. தொடர்ந்து வந்த நாட்களில், அவள் குறிப்பிட்டுச்சொன்ன ஓட்டத்தை பல வழிமுறைகளில் ஓடுவதைக் கண்டேன்.  அவள் தன் நாட்டில் துன்பப்படுபவர்களுக்காக எப்படி ஜெபிப்பது மற்றும் ஆதரவளிப்பது என்று எங்களுக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இராவின் வார்த்தைகள், எபிரெயர் 12ல் விசுவாசிகள் "பொறுமையோடே ஓடக்கடவோம்" (வ.1)  என்ற அழைப்புக்கு புதிய ஆழத்தைக் கொண்டுவந்தது. அந்த அழைப்பு அதிகாரம் 11 இன் விசுவாச வீரர்களின் பட்டியலைத் தொடர்கிறது. “மேகம் போல இத்தனை திரளான சாட்சிகளான” (12:1) அவர்கள் தைரியமாக எல்லா சூழ்நிலைகளிலும் வாழ்ந்தனர். தங்கள் உயிர் போகும் ஆபத்திலும் கூட நீடியபொறுமையான விசுவாசத்தோடு (11:33-38) தங்கள் கண்களுக்குத் தூரமான, என்றும் அழியாத நித்திய காரியங்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தனர் (வ.13).

இயேசுவின் விசுவாசிகள் அனைவரும் அவ்வாறே வாழ அழைக்கப்பட்டுள்ளனர். விரிவடையும் வளர்ச்சியும், அமைதியுமான ஷாலோமெனும் சமாதானமான தேவனுடைய ராஜ்யத்திற்காக நாம் எதையும் இழக்கலாம். ஏனெனில் கிறிஸ்துவின் முன்மாதிரியும் வல்லமையும் தான் நம்மைத் தாங்குகிறது (12:2-3).

நண்பர்கள் மற்றும் எதிரிகள்

அறிஞர் கென்னத்.இ.பெய்லி, சர்வதேச கூடுகையில் ஒரு வித்தியாசமான போக்கைப் பின்பற்றிய ஒரு ஆப்பிரிக்க நாட்டின் தலைவரைப் பற்றிக் கூறினார். அவர் இஸ்ரேலுடனும் அதைச் சுற்றியுள்ள நாடுகளுடனும் நல்ல உறவை ஏற்படுத்தினார். இந்த ஆபத்தான சமநிலையை அவரது நாடு எவ்வாறு கையாள்கிறது என்று யாரோ அவரிடம் கேட்டபோது, ​​அவர் "எங்கள் நண்பர்களை நாங்கள் தேர்வு செய்கிறோம். எங்கள் எதிரிகளை [எங்களுக்காக] தேர்ந்தெடுக்க எங்கள் நண்பர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை” என்று பதிலளித்தார்.

அது புத்திசாலித்தனமானது மற்றும் யதார்த்தமான நடைமுறை. அந்த ஆப்பிரிக்க நாடு சர்வதேச அளவில் முன்மாதிரியாக இருந்ததை போல, பவுல் தன் வாசகர்களும் தனிப்பட்ட விதத்தில் செய்ய ஊக்குவித்தார். கிறிஸ்துவால் மாற்றப்பட்ட வாழ்க்கையின் குணாதிசயங்களைப் பற்றிய நீண்ட விளக்கத்தின் மத்தியில், “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். ரோமர் 12:18” என்றார். நாம் பிறரிடம் கொண்டிருக்கும் உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்படி, நம் எதிரிகளை நாம் நடத்தும் விதம் கூட (வவ. 20-21) தேவன் மீதான நமது நம்பிக்கை மற்றும் சார்ந்திருப்பை வெளிப்படுத்துகிறதென வலியுறுத்துகிறார்.

எல்லோருடனும் சமாதானமாக வாழ்வது எப்போதும் சாத்தியமாகாது (ஆகையால்தான், பவுல் "கூடுமானால்" என்கிறார்). ஆனால் தேவனுடைய ஞானம் நம் வாழ்க்கையை வழிநடத்த அனுமதிப்பதே இயேசுவின் விசுவாசிகளாகிய நமது பொறுப்பு (யாக்கோபு 3:17-18), அதனால் நம்மைச் சுற்றியுள்ளவர்களோடு சமாதானம் செய்பவர்களாக நாம் உறவாடுகிறோம் (மத்தேயு 5:9). சமாதான பிரபுவைக் கௌரவிக்க இதைவிட வேறு என்ன வழி இருக்க முடியும்?