Archives: ஜூன் 2026

என்னை பயன்படுத்தும்

ஒருமுறை ஜேம்ஸ் மோரிஸ் என்ற தேவமனிதர் “கல்வி அறிவில்லாத ஆனால் ஆவிக்குரிய உற்சாக இருதயமுடைய சாதாரண மனிதர்” என்று விவரிக்கப்பட்டார். ஆனால், ஆண்டவர்அவரைப் பயன்படுத்தினதால் அவர் அகஸ்டஸ் டாப்லேடியை இயேசு கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினார். 18ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அவரே, புகழ்பெற்ற காலம்காலமாக பாடப்படும் "பிளவுண்ட மலையே" என்ற பாட்டின் ஆசிரியரான டாப்லேடி ஆவார். மேரரிஸ் பிரசங்கிக்கும்போது அகஸ்டஸ் டாப்லேடி தான் பெற்ற அனுபவத்தை இவ்வாறு விவரிக்கிறார்: “தேவனுடைய மக்களுடன் ஒரு சேமிப்பு கொட்டிலில் கூடியிருந்தபோது, தனது பெயரையே சரியாக எழுத தெரியாத ஒருவரின் ஊழியம் வாயிலாக தேவனுடைய பிள்ளையாக நான் மாற்றப்பட்டேன் என்பது மிக வியப்பானது. இது நிச்சயமாக ஆண்டவரின் செயல், அது அற்புதமானது.”

மெய்யாகவே, தேவன் வியப்பூட்டும் காரியங்களை எதிர்பாராத இடங்களிலும், நாம் “தகுதி இல்லாத” அல்லது எளியவர்கள் என எண்ணும் நபர்களாலும் நிறைவேற்றுகிறார். 1 கொரிந்தியர் 1-ல், பவுல் இயேசுவை பின்பற்றும் மக்கள், உலகத்தாரின் பார்வையில் எவ்வளவு அற்பமாய் எண்ணப்பட்டார்கள் என்பதை நினைவூட்டுகிறார்: "எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை ” (வ.26) என குறிப்பிட்டுள்ளார். ஆனால் கொரிந்திய விசுவாசிகள் மிக சாதாரணமாக இருந்தாலும், தேவனின் கிருபையினால் யாதொருவரத்திலும் குறைவில்லாதவர்களாய் மற்றும் பயனுள்ள பாத்திரங்காளக இருந்தார்கள் (வ.7). உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப் பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.(வ.27-29)“தகுதியற்றவர்களாக ”எண்ணுகிறீர்களா? கவலைப்பட வேண்டாம். இயேசு உங்களுடன் இருந்தால், மற்றும் அவரால் பயன்படவேண்டும் என்று விரும்பினால், அதுவே போதுமானது. அப்படியானால் உங்கள் இதயத்தில் நீங்கள் ஏறெடுக்க வேண்டிய ஜெபம் : “ஆண்டவரே, என்னைப் பயன்படுத்தும்! என்பதாகும். 

 

புதிதும், நிச்சயமானதும்

மூன்று ஆண்டுகளாக வீட்டுத் தேவைகளைத் தவிர, கவிதா தனக்காக எதையும் வாங்கவில்லை. கோவிட்-19 பெருந்தொற்று எனது தோழியின் வருமானத்தைப் பாதித்தது, அவள் எளிமையான வாழ்க்கை முறையை தழுவினாள். “ஒரு நாள், எனது வீட்டை சுத்தம் செய்யும் போது, எனது பொருட்கள் எவ்வளவு மோசமாகவும், பழையதாகவும் இருப்பதை கவனித்தேன். அப்போதுதான் எனக்கு புதிய பொருட்களின் அருமை புரிந்தது; அவை தரும் புத்துணர்வும் உற்சாக உணர்வும் தனிதான். என் சுற்றுப்புறமே சோர்ந்துபோய் பழையதாக தோன்றியது. எதிர்காலமே இல்லை என்பது போல் உணர்ந்தேன்” என்று பகிர்ந்துகொண்டாள்.

வேதாகமத்தில் உள்ள சற்றே வித்தியாசமான ஒரு புத்தகத்தால் கவிதா உற்சாகம் கொண்டாள். எருசலேம் பாபிலோனிடம் வீழ்ந்த பிறகு, எரேமியாவால் எழுதப்பட்ட புலம்பல், தீர்க்கதரிசியும், ஜனங்களும் அனுபவித்த துயரத்தின் ஆறா காயத்தை விவரிக்கிறது. எனினும், துயரத்தின் விரக்தியின் மத்தியிலும், நம்பிக்கைக்கான உறுதியான அடித்தளம் உள்ளது; அது தேவனின் அன்பு. “அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்” (3:22-23) என்று எரேமியா எழுதினார்.

ஒவ்வொரு நாளினூடும் தேவனின் ஆழமான அன்பு எப்பொழுதுமே புதிதாக உண்டாயிருப்பதை கவிதா உணர்ந்தாள் . எதிர்நோக்குவதற்கு இனி எதுவும் இல்லை என்று சூழ்நிலைகள் நம்மை உணர்த்தும்போதும், அவருடைய உண்மைத்தன்மையை நாம் சிந்தித்து, அவர் நம்மைப் போஷிப்பதை ஆவலுடன் எதிர்நோக்கலாம். நம் நம்பிக்கை வீண் போகாது என்பதையறிந்து, நாம் நிச்சயமாகத் தேவனில் நம்பிக்கை கொள்ளலாம் (வ. 24-25). ஏனெனில் அந்த நம்பிக்கை அவருடைய உறுதியான அன்பாலும், இரக்கத்தாலும் காக்கப்படுகிறது.

“தேவனின் அன்பு எப்படியோ ஒவ்வொரு நாளிலும் எனக்குப் புதிதாயுள்ளது. ஆகவே நான் நம்பிக்கையோடு எதிர்நோக்குவேன்” என்கிறாள் கவிதா. 

 

 

வன்கண்ணை முறியடித்தல்

மாலதி வீட்டை விட்டு வெளியில் வரும் போதெல்லாம், குறிப்பாக விசேஷங்களுக்கு அலங்கரித்துக் கொள்ளும்போது, அம்மா கவலையுடன், கட்டாயமாக முகத்தில் எங்காவது ஒரு கரும்புள்ளி வைப்பாள். அவளுடைய அம்மா தொடர்ந்து அவளைக் கவனித்து, "வன்கண்ணை" தடுக்க சடங்குகளைச் செய்தார். தமிழில் த்ரிஷ்டி அல்லது ஹிந்தியில் நாசர் என்று அழைக்கப்படும் "வன்கண்" இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் அஞ்சப்படுகிறது. மாலதியின் அம்மாவைப் போலவே, யாராவது தங்களைப் பொறாமையுடன் பார்க்கும் போதெல்லாம், அவர்களுக்கு ஏதாவது தீங்கு நேரிடும் என்று பலர் பயப்படுகிறார்கள்.

அறியாத பயம் நம்மை முடக்கும் போது, மூடநம்பிக்கையின் அடிப்படையிலான விரைவான தீர்வுகளைத் தேடலாம். ஆனால், தீமோத்தேயுவின் ஆசிரியர் இவை பிசாசுகளின் உபதேசம் என்கிறார் (வ.1). விசுவாசிகளுக்கும் "கட்டுக்கதைகளுக்கும்" (வ.7) சம்பந்தமில்லை என்று ஆசிரியர் எச்சரிக்கிறார். மூடநம்பிக்கைகள் மற்றும் கதைகள் போன்ற நமக்குப் பயத்தை ஏற்படுத்தும் இந்த விஷயங்கள் இயேசுவை விசுவாசிக்கும் நம்மில் எவ்வளவேனும் இருக்கக்கூடாது (வ.3-7). மாறாக, நாம் தேவபக்தியுடன் இருக்கவும், தேவனைச் சார்ந்திருக்கவும் நம்மைப் பயிற்றுவிக்க வேண்டும் (வ.7). ஏனெனில், கிறிஸ்து தனது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் சாத்தானை வென்றபோது, அவர் இருளின் வல்லமைகளை என்றென்றும் தோற்கடித்தார். நாம் பயப்பட வேண்டியதில்லை, "ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்" (வ11).

எனவே, எபேசியரில் பவுல் சொல்வது போல், பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய் நம்மைப் பாதுகாக்கும் விசுவாசத்தின் கேடகம் உட்பட, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை (எபேசியர் 6:14-17) அணிவோம். சத்துரு நம்மை வெல்ல முடியாது, நிச்சயமற்ற எதிர்காலத்தைக் குறித்தும் நாம் பயப்படத் தேவையில்லை, ஏனென்றால் சத்துருவை வென்ற இயேசுவே வெற்றியாளர் (1 யோவான் 5:18). 

 

பலப்பரீட்சை

 

நம்மில் பெரும்பாலோர் கயிறு இழுக்கும் போட்டியை நன்கு அறிந்திருப்போம். இது ஒரு நீண்ட கயிறு கொண்டு, ஒரு மையக் கோட்டை தாண்டும்படி ஒன்றை ஒன்று இழுக்கும் இரு குழுவை உள்ளடக்கியது. அதை இன்னும் வேடிக்கையாக மாற்ற, சில நேரங்களில், ஒரு மண் குழி அல்லது குளிர்ந்த நீர்த் தொட்டி நடுவில் இருக்கும், இதனால் தோல்வியடைந்த அணி அதில் விழும். வெற்றிக்கு உடல் வலிமை மட்டும் போதாது. அதற்குக் கவனம், உறுதிப்பாடு மற்றும் திறமையும் தேவை.

நாமும் இதுபோன்ற பலப்பரீட்சையில் இருப்பதாக பவுல் கூறுகிறார். ஆனால் நாம் வேடிக்கைக்காக விளையாடுவதைப் போலல்லாமல், நமது போராட்டம் "துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும்" (வ.12) இருக்கிறது. நாம் ஒரு ஆவிக்குரிய பலப்பரீட்சையில் இருக்கிறோம், நம் எதிரிகள் நம்மைத் தோற்கடித்து பாவத்தின் அழுக்குக்குள் நம்மை விழ வைக்க விரும்புகிறார்கள். கிறிஸ்து ஏற்கனவே சிலுவையில் பொல்லாதவனைத் தோற்கடித்துவிட்டார் என்ற உறுதியுடன் "தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்" (வ.13) என்று இந்த ஆவிக்குரிய பலப்பரீட்சைக்கு ஆயத்தப்படும்படி பவுல் நம்மை அழைக்கிறார். வலுவாக இருந்து வெற்றி பெற, மனித பலம் அல்லது நல்ல நோக்கங்கள் உதவாது. நாம் தேவனை நாடி, அவரையே சார்ந்திருக்க வேண்டும். பவுல் சொல்வது போல், நாம் "கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் " (வ.10) பலப்பட வேண்டும். "பிசாசின் தந்திரங்களோ" "பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களோ" இவற்றை நாமே சமாளிப்பது கடினம் (வ.11-16). அதிர்ஷ்டவசமாக, நாமே சமாளிக்கவும் வேண்டாம். தேவன் அருளும் பெலனையும் உத்தியையும் நாம் பெற்றுக்கொள்ளலாம் (வ.11). நாம் அவரிடம் செல்லும்போது, அவர் நமக்கு "சத்தியம்" என்ற கவசத்தைத் தருகிறார். நமது பாதங்களுக்கு “சமாதானத்தின் சுவிசேஷம்” பொருத்தப்படுகின்றன. மேலும் நாம் "விசுவாச" கேடகத்தால் பாதுகாக்கப்படுகிறோம். உண்மையில், ஆவிக்குரிய பலப்பரீட்சையின் மூலம் உறுதியாக நிற்க அவருடைய வார்த்தை நமக்கு உதவுகிறது (வ.14-17).