தேவனே, உமக்கு செவிகொடுக்கிறேன்!
தாயாரின் மடியில் அமர்ந்திருந்த குழந்தை கிரஹாமின் முதல் செவிப்புலன் கருவியை மருத்துவர்கள் அவரது காதில் பொருத்தியபோது, அசௌரியத்தால் நெருக்கப்பட்டான். மருத்துவர் அந்த சாதனத்தை இயக்கிய சில நிமிடங்களில், கிரஹாம் அழுகையை நிறுத்தினான். அவன் கண்கள் விரிந்தன. அவன் புன்னகைத்தான். தனது தாயின் குரல் அவனை ஆறுதல்படுத்துவதையும், ஊக்கப்படுத்துவதையும், அவன் பெயரை அழைப்பதையும் அவனால் கேட்க முடிந்தது.
குழந்தை கிரஹாம் தனது தாய் பேசும் சத்தத்தைக் கேட்டான். ஆனால் அவருடைய குரலை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்றும் அவருடைய வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதற்கு அவனுக்கு உதவி தேவைப்பட்டது. இதேபோன்ற கற்றல் செயல்முறைக்கு இயேசு ஜனங்களை அழைக்கிறார். நாம் கிறிஸ்துவை நம் இரட்சகராக ஏற்றுக்கொண்டவுடன், அவர் நன்றாக அறிந்த மற்றும் தனிப்பட்ட முறையில் வழிநடத்துதலை பெறும் ஆடுகளாக மாறுகிறோம் (யோவான் 10:3). நாம் அவருடைய சத்தத்தைக் கேட்பதையும், செவிசாய்ப்பதையும் பயிற்சி செய்யும்போது, நாம் அவரை நம்புவதற்கும் கீழ்ப்படிவதற்கும் பிரயாசப்படுகிறோம் (வச. 4).
பழைய ஏற்பாட்டில், தேவன் தீர்க்கதரிசிகள் மூலம் பேசினார். புதிய ஏற்பாட்டில், மாம்சத்தில் உதித்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்வின் மூலம் ஜனங்களோடு நேரடியாக இடைபட்டார். இன்று நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்தி அவற்றை நேர்த்தியாய் புரிந்துகொள்ளச் செய்யும் தெய்வீக வார்த்தைகளை வேதத்தில் இடம்பெறச்செய்திருக்கும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமைக்கு நாம் பாத்திரவான்களாக்கப்பட்டுள்ளோம். வேதத்தின் மூலமாகவும் அவருடைய ஜனத்தின் மூலமாகவும் இயேசு நம்மிடத்தில் பேசுகிற வேளையில், ஜெபத்தின் மூலம் நாம் அவருடன் தொடர்புகொள்ள முடியும். வேதத்தின் வார்த்தைகளுடன் எப்போதும் ஒத்துப்போகும் தேவனுடைய சத்தத்தை நாம் அடையாளம் காணும்போது, “தேவனே, நான் உம் சத்தத்தைக் கேட்கிறேன்” என்று நன்றியுடன் துதி செலுத்தக்கூடும்.

கிரியைகளும் சத்தியமும்
நானும் என் கணவரும் திருமணம் செய்து கொண்ட பிறகு, எனது தாய் மாமா எனது குடும்ப வரலாற்றை எங்களிடம் கூறினார். எனது தாத்தா பள்ளி ஒன்றின் பள்ளி முதல்வராக இருந்த போதிலும் அந்த வருமானம் அவரது ஏழு பிள்ளைகளுக்கு போதுமானதாக இல்லை என்று விளக்கினார். ஆயினும்கூட, அவர் தனது மூத்த குழந்தைகளின் உயர் கல்வியில் முதலீடு செய்தார், அவர்கள் கல்லூரிக்குச் செல்லும்போது பெரும்பாலும் மாமாக்கள் அல்லது அத்தைகளுடன் தங்கினர். இந்த மூத்தவர்கள் சம்பாதிக்கத் தொடங்கியபோது, அவர்கள் தங்கள் இளைய உடன்பிறப்புகளின் கல்விக்கு ஆதரவளிக்கத் தொடங்கினர். "நாங்கள் ஒருவருக்கொருவர் உதவுகிறோம், உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால் நீங்கள் எங்களிடம் வரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மற்றவர்களுக்குத் தேவைப்படும்போது அவர்களுக்கு உதவவும் தயாராக இருக்கிறோம்" என்று அவர் உற்சாகமாகக் கூறினார்.
யோவானும் தனது நிருபத்தில், "பிள்ளைகளே" என்று அழைத்தவர்களுக்கு இதே போன்ற அறிவுரைகளை வழங்குகிறார். அவர், "என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்" (வ.18) என்று எழுதுகிறார். இயேசு தனக்கென்று ஒன்றும் செய்யாமல் நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தபோது நம்மீது கொண்டிருந்த அன்பை அவர் நமக்கு நினைவூட்டுகிறார் (வ.16). உண்மையில், "அன்பு இன்னதென்று" (வ.16) என்றால் இயேசுவின் செயலே என்று யோவான் கூறுகிறார். அதை மனதில் கொண்டு யோவான், விசுவாசிகளை தங்கள் "பொருள் உடைமைகளை" ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள அழைத்தார் (வ.17). ஒரு விசுவாசி, இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? என்று யோவான் கேட்கிறார்.
தன்னுடைய உடைமைகளைப் பதுக்கி வைப்பது விவேகமானது என்று உலகம் நமக்குச் சொல்கிறது. ஆனால் இவை பிறர்க்குச் சேவை செய்யக் கொடுக்கப்பட்ட வரங்கள் என்று வேதாகமம் சொல்கிறது (1 பேதுரு 4:10). உறவினராகவோ, நண்பராகவோ, சக சீடராகவோ அல்லது அந்நியராகவோ யாரேனும் ஒருவர் தேவையில் இருப்பதைக் கண்டால், செயலாலும் உண்மையாலும் அவர்களை நேசிப்போம். அவ்வாறு செய்வதன் மூலம், நம்மில் இருக்கும் தேவனின் அன்பை மற்றவர்களுக்குக் காட்டுகிறோம்.

பிறரை நேசிப்பதன் மூலம் தேவனை நேசி
ஆல்பா குடும்பம் பதின்மூன்று மாத இடைவெளியில் ஒரே மாதிரியான இரண்டு இரட்டையர்களைப் பெற்றெடுக்கும் அரிய நிகழ்வை அனுபவித்தது. அவர்கள் தங்கள் பெற்றார் கடமைகளையும் வேலைகளையும் எப்படி சமாளித்தார்கள்? அவர்கலருகே இருந்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் உதவினர். இரண்டு தாத்தா பாட்டிகளும் பகலில் ஒரு இரட்டைக் குழந்தைகளைப் பராமரித்தனர், அதனால் பெற்றோர்கள் வேலை செய்து காப்பீட்டிற்கு பணம் செலுத்தலாம். ஒரு நிறுவனம் ஒரு வருடத்திற்கான அணையாடைகளை வழங்கியது. தம்பதியரின் சக பணியாளர்கள் தங்கள் தனிப்பட்ட விடுப்புநாட்களில் உதவினர். “எங்கள் சுற்றத்தார் இல்லாமல் நாங்கள் அதை செய்திருக்க முடியாது,” என்று அவர்கள் கூறினார்கள். உண்மையில், ஒரு நேரடி நேர்காணலின் போது, சக தொகுப்பாளினி தனது மைக்கைக் கழற்றிவீசி, குறுநடை போடும் குழந்தைக்குப்பின் ஓடினார்; நண்பர்களைப்போல தன் பங்காற்றினார்!
மத்தேயு 25:31-46 இல், நாம் பிறருக்கு சேவை செய்கையில், தேவனைச் சேவிக்கிறோம் என்பதைக் குறிக்க இயேசு ஒரு உவமையைச் சொல்கிறார். பசித்தோருக்கு உணவு, தவித்தோர்க்கு தண்ணீர், வீடற்றவர்களுக்கு உறைவிடம், நிர்வாணிகளுக்கு உடைகள், நோயுற்றோருக்குக் குணமளித்தல் (வ. 35-36) உள்ளிட்ட சேவைச் செயல்களைப் பட்டியலிட்ட பிறகு, இயேசு, “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (வ.40) என்று முடிக்கிறார்.
நம்முடைய இரக்கத்தை உண்மையாக பெறுவது இயேசுவேயென்று கற்பனை செய்வது, நமது சுற்றுப்புறங்களிலும்; குடும்பங்களிலும்; சபைகளிலும்; உலகிலும் சேவை செய்வதற்கான உண்மையான உந்துதலாகும். பிறரின் தேவைகளுக்கு தியாகமாக நாம் செலவிட அவர் நம்மை உணர்த்துகையில், நாம் அவருக்குச் சேவை செய்கிறோம். நாம் பிறரை நேசிக்கையில், நாம் தேவனை நேசிக்கிறோம்.

கர்த்தருடைய புயத்தில்
அந்தத் துளையிடும் கருவியின் சத்தம் ஐந்து வயது சாராவை பயமுறுத்தியது. அவள் பல் சிகிச்சைக்கான நாற்காலியில் இருந்து குதித்து ஓடி மீண்டும் உள்ளே வருவதற்கு மறுத்துவிட்டாள். சூழ்நிலையைப் புரிந்துகொண்டு தலையசைத்தவாறே, பல் மருத்துவர் அவளுடைய தந்தையைப் பார்த்து, “நீங்கள் நாற்காலியில் ஏறி அமருங்கள்” என்று கூறினார். ஜேசனும், சிகிச்சை எவ்வளவு இலகுவானது என்பதை காண்பிப்பதற்காக மருத்துவர் தன்னை ஏறி அமரும்படிக்கு சொல்லுகிறார் என்று எண்ணி, நாற்காலியில் ஏறி அமர்ந்தார். ஆனால், மருத்துவர் அவளிடம் திரும்பி, “இப்போது மேலே ஏறி அப்பாவின் மடியில் உட்காரு” என்றார். அவளது தந்தை இப்போது அவளை உறுதியளிக்கும் கரங்களில் ஏந்தியிருப்பதால், சாரா முற்றிலும் நிதானமாகிவிட்டாள். இப்போது பல் மருத்துவரால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கமுடிந்தது. அன்று, ஜேசன் தன் பரலோகத் தகப்பனின் பிரசன்னத்தின் ஆறுதலைப் பற்றிய ஓர் சிறந்த பாடத்தைக் கற்றுக்கொண்டார். “சில வேளைகளில் நாம் கடந்துசெல்லவேண்டிய துயரமான பாதையினூடாய் தேவன் நம்மை நடத்திச்செல்வார்.” ஆனால் “நான் உன்னோடேகூட இருக்கிறேன்” என்று அவர் விளங்கப்பண்ணுகிறார்.
சங்கீதம் 91, தேவனுடைய ஆறுதலான பிரசன்னத்தையும் வல்லமையையும் பற்றிக் கூறுகிறது. அவை நம்முடைய சோதனைகளை எதிர்கொள்ள நமக்கு பெலனை அளிக்கிறது. அவருடைய வல்லமையின் கரத்தில் பாதுகாப்பாய் இருப்பது நமக்கு ஆறுதல் அளிக்கிறது. அதே போன்று அவரை நேசிப்பவர்களுக்கு “அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்” (வச. 15) என்று வாக்களிக்கப்படுகிறது. வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பல சவால்கள் மற்றும் சோதனைகள் உள்ளன. மேலும் நாம் தவிர்க்க முடியாமல் வலியையும் துன்பத்தையும் கடந்து செல்லவேண்டியிருக்கும். ஆனால் தேவனுடைய வல்லமையின் கரங்கள் நம்மைச் சுற்றியிருப்பதால், நம் நெருக்கடிகளையும் சூழ்நிலைகளையும் நாம் தாங்கிக்கொள்ள முடிகிறது. மேலும் நாம் அவரில் வளரும்போது, நம் விசுவாசத்தைப் பலப்படுத்துவாராக.
தாராளமான அன்பு
விமானத்தில் என்னருகே அமர்ந்தவள்; தான் மதம் சாராதவள் என்றும், நிறைய கிறிஸ்தவர்கள் வசிக்கும் நகரத்திற்கு குடிபெயர்ந்திருப்பதாகவும் என்னிடம் கூறினாள். அவளது அயலகத்தாரில் அதிகமானோர் திருச்சபையின் வழிபாட்டிற்கு செல்வதாக அவள் குறிப்பிடுகையில், அவளுடைய அனுபவத்தைப் பற்றி நான் கேட்டேன். அவர்களின் பெருந்தன்மைக்கு தன்னால் ஒருபோதும் கைமாறு செய்ய முடியாது என்றார். தனது ஊனமுற்ற தந்தையை புதிய நாட்டிற்கு அழைத்து வந்தபோது, அவளுடைய அண்டை வீட்டார் அவளது வீட்டிற்கு ஒரு சாய்வுதளத்தை உருவாக்கி, மருத்துவமனை படுக்கை மற்றும் மருத்துவப் பொருட்களை தானமாக வழங்கினர். அவள், “கிறிஸ்தவனாக இருப்பது ஒருவரை அன்பானவராக ஆக்குகிறது என்றால், எல்லோரும் கிறிஸ்தவராக வேண்டும்” என்றாள்.
இயேசு என்ன நம்பினாரோ அதையே அவள் சொன்னாள், “இவ்விதமாக மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:16). பேதுரு இயேசுவின் கட்டளையை கேட்டு அதையே அறிவித்தார், “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்” (1 பேதுரு 2:12).
இயேசுவை விசுவாசிக்காத நம் அயலகத்தாருக்கு நாம் எதை நம்புகிறோம், ஏன் நம்புகிறோம் என்று புரியாமல் இருக்கலாம். நமது தாராளமான அன்பை இன்னும் அவர்களால் புரிந்து கொள்ள முடியாத வரை, நமது நம்பிக்கையை திணிக்க வேண்டாம். மேலும் அவள் தன்னுடைய கிறிஸ்தவ அயலகத்தார், தான் அக்கறைகொள்ளவிட்டாலும், “அவர்களில் ஒருவராக” அவளிடம் கரிசனைகொள்வதை கண்டு வியந்தாள். கிறிஸ்துவினிமித்தம் தான் நேசிக்கப்படுவதை அறிந்திருந்தாள், மேலும் தேவனுக்கு நன்றி கூறுகிறாள். அவள் இன்னும் அவரை நம்பவில்லை, ஆனால் மற்றவர்கள் நம்புவதால் அவள் நன்றியுள்ளவளாக இருக்கிறாள்.
