Archives: செப்டம்பர் 2025

நான் ஒன்றுமில்லை! நீ யார்?

“நான் ஒன்றுமில்லை! நீ யார்?" என்று தொடங்கும் எமிலி டிக்கின்சனின் ஒரு கவிதையில், அடையாளம் இல்லாமல் இருப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை விடுத்து, யாரோ ஒருவராய் தாங்கள் இருக்கவிரும்பும் மக்களின் சிந்தையை அவர் சவால்விடுகிறார். “யாரோ ஒருவராய் இருப்பதற்கு ஏன் மந்தமாக உணரவேண்டும்! – தவளைபோல் யாரோ ஒருவராய் வாழ்வதற்கு ஏன் யோசிக்கிறோம்.”

யாரோ ஒருவராய் வாழ்வதற்கான தேவையை விட்டுவிடுவதில் ஏற்படும் சுதந்திரத்தை அனுபவிப்பது என்பது பவுல் அப்போஸ்தலரின் சாட்சியை நினைவுபடுத்துகிறது. பவுல் இயேசுவை சந்திக்கும் முன்பு, வெளியரங்கமாய் மக்களை ஈர்க்கும் மத அங்கீகாரங்களையும் மாம்சத்தின் மீது நம்பிக்கை வைப்பதற்கான நியாயமான காரணங்களையும் பவுல் கொண்டிருந்தார் (பிலிப்பியர் 3:4).

ஆனால் இயேசுவை சந்தித்த பின்பு அனைத்தும் மாறியது. கிறிஸ்துவின் தியாகமான அன்பின் ஊடாய் தன்னுடைய மார்க்க ரீதியான சாதனைகளை பார்க்க பழகிய பவுல், “என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், ... கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்... (வச. 8) என்று அறிக்கையிடுகிறார். “நான் அவரை... அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்” (வச. 10) வாழ்வதே தன்னுடைய வாழ்க்கையின் முதன்மைக் குறிக்கோள் என்று சொல்லுகிறார்.

யாரோ ஒருவராய் நாம் மாற முயற்சிப்பது மந்தமான வாழ்க்கை. ஆனால் கிறிஸ்துவின் தியாகமான அன்பின் நிழலில் நம்முடைய சுயத்தை இழப்பது என்பது, ஜீவியத்தை புதுப்பிக்கும் புதுவாழ்வை நமக்கு அறிமுகப்படுத்துகிறது (வச. 9).

“எல்லாம் எனக்கு எதிராய் இருக்கிறது”

“இன்று காலையில் பணத்திற்கு பெரிய மதிப்பு இருப்பதாக நான் நினைத்ததுண்டு. ஆனால் இப்போது என்னிடத்தில் ஒரு டாலர் கூட இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” முன்னாள் அமெரிக்க அதிபர் யுலிஸஸ் கிராண்ட் தனது வாழ்நாள் சேமிப்பை ஒரு வியாபார கூட்டாளியின் மோசடியால் மொத்தமாய் இழந்தபோது இவ்வார்த்தைகளை கூறினார். சில மாதங்களுக்குப் பிறகு, கிராண்டிற்கு குணப்படுத்த முடியாத புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவரது குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாய் உதவுவதற்கு தீர்மானித்த அவர், அவரது நினைவுக் குறிப்புகளை எழுதி வெளியிடுவதற்காக எழுத்தாளர் மார்க் ட்வைன் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார். அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அதை முடித்தார்.

கடுமையான கஷ்டங்களைச் சந்தித்த மற்றொரு நபரைப் பற்றி வேதம் நமக்குச் சொல்கிறது. யாக்கோபு தனது மகன் யோசேப்பை “துஷ்டமிருகம்.. பட்சித்துப்போட்டது” (ஆதியாகமம் 37:33) என்று நம்பினான். பின்னர் அவரது மகனான சிமியோன் அந்நிய தேசத்தால் சிறைபிடிக்கப்பட்டான். மேலும் தன்னுடைய குமாரனான பென்யமீனும், தன்னிடத்திலிருந்து போய்விடுவானோ என்று யாக்கோபு அஞ்சினான். “இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது” என்று சொல்லி கதறுகிறான் (42:36).

ஆனால் அவன் எண்ணியது தவறு. அவனுடைய குமாரனாகிய யோசேப்பு உயிரோடிருக்கிறான் என்பதையும், தன்னுடைய குடும்பத்தை பாதுகாக்கும் பணியில் தேவன் திரைக்கு பின்னாலிருந்து செயல்படுகிறார் என்பதையும் பின்னர் அறிகிறான். நம்முடைய கடினமான சூழ்நிலைகளிலும் தேவனுடைய கரத்தை பார்க்கமுடியாவிட்டாலும், தேவனை ஏன் நம்பவேண்டும் என்பதை இக்கதை நமக்கு வலியுறுத்துகிறது.

அமெரிக்க அதிபர் கிராண்டின் நினைவுக் குறிப்புகள் பெரும் வெற்றியைப் பெற்றது. மேலும் அவருடைய குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்தனர். அதைப் பார்ப்பதற்கு அவர் உயிரோடில்லையெனினும், அவருடைய மனைவி அதை நேர்த்தியாய் அனுபவிக்க நேர்ந்தது. நம்முடைய பார்வை குறைவுள்ளது. ஆனால் தேவனுடைய பார்வை அப்படியில்லை. இயேசு நம்முடைய நம்பிக்கையாய் இருக்கும்போது, “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? (ரோமர் 8:31). அவர் மீது நம்முடைய நம்பிக்கையை இன்று வைப்போம்.

அதிகப்படியான தயவு

துரித உணவு ஹோட்டல் ஊழியர் கெவின் ஃபோர்டு இருபத்தேழு வருடங்களில் ஒரு மாற்றத்தையும் தவறவிடவில்லை. அவரது பல ஆண்டுகள் செய்த சேவையை நினைவுகூரும் வகையில் அவர் பெற்ற ஒரு எளிமையான பரிசுக்காக அவரது பணிவான நன்றியைக் காட்டும் வீடியோ வெளியான பிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு தங்கள் பொருளாதாரத்தின் மூலம் அன்பை காண்பிக்க ஒன்று திரண்டனர். “இது ஒரு கனவு நனவாகும் தருணம்” என்று அவர் அதைக் குறித்து சொல்லுகிறார். ஒரே வாரத்தில் 2,50,000 டாலர்கள் நிதி திரட்டப்பட்டது.

சிறைபிடித்து கொண்டுபோகப்பட்ட யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனும் மிகவும் இரக்கமுள்ளவனாயிருந்தான். பாபிலோனிய ராஜாவின் கருணையால் அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்பு அவர் முப்பத்தேழு ஆண்டுகள் சிறையில் அடைபட்டு இருந்தார். “யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி... அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய ஆசனத்தைத் தன்னோடே பாபிலோனில் இருந்த ராஜாக்களுடைய ஆசனங்களுக்கு மேலாகவைத்து” (எரேமியா 52:31-32) அவனை கனப்படுத்தினான். யோயாக்கீனுக்கு புதிய பதவியும், புதிய வஸ்திரமும், புதிய வீடும் கொடுக்கப்பட்டது. அவனுடைய புதிய வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.

இந்த கதையானது, கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் விசுவாசிக்கிற கிறிஸ்தவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும்போது அவர்களின் ஆவிக்குரிய ஜீவியத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதை சித்தரிக்கிறது. அவர்கள் மரண இருளிலிருந்து ஜீவனுக்கும் வெளிச்சத்துக்கும் கொண்டுவரப்படுவர். தேவனுடைய அதிகப்படியான இரக்கத்தினால் அவர்கள் தேவனுடைய குடும்பத்திற்கு வரவேற்கப்படுகிறார்கள்.

ஆசீர்வாதமான முகமூடி

தொற்றுநோயின் நாட்களில் முகமூடி அணியும் சட்டம் சற்று தளர்த்தப்பட்டதால், என்னுடைய மகளுடைய பள்ளி போன்ற முக்கியமான இடங்களில் கூட அவற்றை எடுத்துச் செல்ல மறந்து நான் சிரமப்பட்டேன். ஒரு நாள் எனக்கு முகமூடி தேவைப்பட்டபோது, எனது காரில் ஒரு முகமூடி இருந்ததை கண்டேன். அதில் “ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்று வாசகம் எழுதப்பட்டிருந்ததால், அதை அணிவதற்கு தயங்கி, காரிலேயே வைத்திருந்தேன்.

எந்த வாசகமும் இல்லாத முகமூடியை அணிவதற்கு நான் விரும்புவேன். ஆனால் அந்த முகமூடியில் வாசகம் மிகவும் பெரிதாய் எழுதப்பட்டிருந்தது. ஆனால் எனக்கு வேறுவழியில்லை என்பதினால் அதை அணிந்துகொண்டேன். பள்ளியில் வரவேற்பாளரிடம் என் கோபத்தை வெளிப்படுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது, என் முகமூடியில் இருந்த வாசகத்தின் காரணமாக நான் சற்று தயங்கி, சுதாரித்துக்கொண்டேன். என் முகமூடியில் ஆசீர்வதிக்கும் வார்த்தைகளை மிளிரச்செய்து, பார்ப்பவர்களிடம் வெறுப்பைக் காண்பிக்கும் பாசாங்கு செய்வதற்கு நான் விரும்பவில்லை.

என் முகமூடியில் தென்பட்ட அந்த வார்த்தைகள் கிறிஸ்துவின் சாட்சியாய் நாம் இருக்கவேண்டியதின் அவசியத்தை நமக்கு வலியுறுத்தினாலும், மற்றவர்களோடு நாம் பொறுமையாய் இருக்கவேண்டியதின் முக்கியத்துவத்தை வேதத்தின் வார்த்தைகள் என் இருதயத்தில் உணர்த்தின. கொரிந்தியருக்கு பவுல் எழுதும்போது, “நீங்கள்... கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல… இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது” ( 2 கொரிந்தியர் 3:3) என்று சொல்லுகிறார். நமக்கு ஜீவனை அருளும் ஆவியானவர், “அன்பு, சந்தோஷம், சமாதானம்” மற்றும் “நீடிய பொறுமை” (கலாத்தியர் 5:22) ஆகியவற்றை பெற்றுக்கொள்ள நமக்கு துணைசெய்வாராக. நமக்குள் கிரியை செய்யும் அவருடைய பிரசன்னத்தினால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.

தேவனை அறிதல்

நான் அயர்லாந்திற்குச் சென்றபோது, மூன்று இலைகள் கொண்ட ஏராளமான அலங்கார ஷாம்ராக்ஸைக் கண்டு வியந்தேன். அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆடைகள், தொப்பிகள், நகைகள் என்று எல்லாவற்றிலும் இந்த சிறிய பச்சை இலைகளின் வடிவங்கள் தென்பட்டது.

அயர்லாந்து முழுவதும் பிரபலமாயிருக்கும் ஒரு தாவரம் என்பதைக் காட்டிலும், இந்த ஷாம்ராக்ஸ_கள் பல தலைமுறைகளுக்கு திரித்துவத்தை பிரதிபலிக்கும் எளிமையான வழிமுறையாக இருந்துள்ளது. திரித்துவம் என்பது ஒரே கர்த்தர்த்துவத்துக்குள் இருக்கும் மூன்று நபர்களை பிரதிபலிக்கிறது: பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர். திரித்துவத்தை விளக்கும் அனைத்து மனித முயற்சிகளும் போதுமானதாக இல்லாதபட்சத்தில், மூன்று இலைகளால் ஆன இந்த தாவரத்தை வைத்து அதை புரிந்துகொள்ளும் முயற்சி பயனுள்ளதாய் இருக்கிறது.

திரித்துவம் என்னும் வார்த்தை வேதாகமத்தில் இடம்பெறவில்லை. ஆனால் திரித்துவத்தின் மூன்று நபர்களும் ஒருசேர இடம்பெறும் ஒரே சம்பவம் வேதாகமத்தில் இருக்கிறது. தேவ குமாரனாகிய இயேசு ஞானஸ்நானம் எடுக்கும் வேளையில், பரிசுத்த ஆவியானவர் வானத்திலிருந்து புறாவைப்போல இறங்கிவர, பரலோகத்திலிருக்கிற பிதாவாகிய தேவன் “நீர் என்னுடைய நேசக்குமாரன்” (மாற்கு 1:11) என்று சத்தமிடுவதைப் பார்க்கமுடியும்.

அயர்லாந்து மக்கள் தேவனைக் குறித்து மற்றவர்களுக்கு அறிவிக்க இந்த ஷாம்ராக்ஸ் தாவரத்தை உதாரணமாய் பயன்படுத்திக்கொள்கின்றனர். திரித்துவத்தைக் குறித்து நாம் இன்னும் ஆழமாய் அறிந்துகொள்ளும்போது, தேவனைக் குறித்த நம்முடைய அறிவு விஸ்தாரமாக்கப்பட்டு, “ஆவியோடும் உண்மையோடும்” (யோவான் 4:24) அவரை நாம் தொழுதுகொள்ளச் செய்கிறது.