Archives: ஜனவரி 2025

சத்தியத்தைத் தேடுதல்

தாங்கள் செய்வது தவறாயினும், மக்கள் தாங்கள் செய்வதே சரியென்று என்று முழுமையாக நம்புவதின் காரணத்தை ஆராய்கையில்; ஆசிரியர் ஜூலியா கேலெஃப், இது நம்மிலிருக்கும் ஒரு "சிப்பாய் மனநிலையுடன்" தொடர்புடையது என்றும், ஆகவே நாம் ஏற்கனவே நம்பும் ஒன்றுக்கு எதிரானவற்றிலிருந்து அதனை பாதுகாப்பதில்தான் கவனம் செலுத்துகிறோம் என்றும் பரிந்துரைக்கிறார். மாறாக, ஒரு "தேடுகிற மனப்பான்மை" தான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கேலெஃப் வாதிடுகிறார். இதன்மூலம் ஒருவர் தன் நம்பிக்கைக்கு எதிரானவற்றைப் புறக்கணிப்பதற்கு மாறாக, முழுமையான உண்மையை ஆராய்கிறார். ஆகையால், ஒரு காரியம் உங்களுக்கு ஏற்றதாகவோ, சௌகரியமானதாகவோ அல்லது இனிமையாகவோ இல்லாவிடினும் உள்ளதை உள்ளபடி துல்லியமாக உங்களால் புரிந்துகொள்ள முடியும். இந்தக் கண்ணோட்டத்தை உடையவர்கள், புரிதலில் தொடர்ந்து வளர்வதற்கேற்ற மனத்தாழ்மையைக் கொண்டுள்ளனர்.

கேலெஃபின் இந்த புரிதல், "யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்" (யாக்கோபு 1:19) என்று விசுவாசிகள் ஒரே மாதிரியான மனநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற யாக்கோபின் ஊக்கத்தை நினைவூட்டுகிறது. அவசரப்பட்டு ஆற்றும் எதிர்வினைகளால் உந்தப்படுவதற்குப் பதிலாக, மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாது (வ.20) என்பதை நினைவில் கொள்ளுமாறு இயேசுவின் விசுவாசிகளை யாக்கோபு வலியுறுத்துகிறார். அவருடைய கிருபைக்குத் தாழ்மையுடன் கீழ்ப்படிந்தால் மட்டுமே ஞானத்தில் வளர முடியும் (வ.21; தீத்து 2:11-14 ஐப் பார்க்கவும்).

நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் நம்மையல்ல, தேவனுடைய கிருபையையே  சார்ந்தது என்பதை நினைவில் கொள்ளுகையில்,  நாம் செய்வது தான் சரி என்ற மனநிலையை நாம் கைவிட்டுவிடுவோம். மேலும், நாம் எவ்வாறு வாழவேண்டும் என்றும் பிறரிடம் எவ்வாறு உண்மையான கரிசனையோடு இருக்க வேண்டும் என்பதற்கு அவருடைய வழிநடத்துதலை சார்ந்துகொள்ளலாம் (யாக்கோபு 1:25-27).

தேவன் செயல்படுவார்

கடின உழைப்பாளியான குமாஸ்தா எரின், எப்போதும் தன் வேலையைச் சிறப்பாகச் செய்தாள். ஆனால் அவர் நேர்மையற்றவர் என்று குற்றம் சாட்டப்பட்ட பின்னர், எரின் விசாரணையின் போது கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டார். எதிர்ப்பை கண்டு, ராஜினாமா செய்யவும் யோசித்தாள், ஆனால் காத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டாள். "ராஜினாமா செய்தால் நீங்கள் குற்றவாளியாக எண்ணப்படுவீர்கள்" என்று அவளிடம் கூறப்பட்டது. எனவே எரின் தரித்து, தனக்கு நீதி கிடைக்கத் தேவனிடம் ஜெபித்தாள். அதேபோல, சில மாதங்கள் கழித்து, குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டாள்.

பவுல் தன்னை மிஷனரி குழுவிலிருந்து நீக்கியபோது, யோவனென்னும் மாற்கும் இவ்வாறே உணர்ந்திருக்கலாம். உண்மையில், அந்த வாலிபன் அவர்களை முன்னதாக பிரிந்திருந்தான் (அப் 15:37-38). ஆனால், ஒருவேளை அதற்காக அவர் மனம் வருந்தியிருக்கலாம், மேலும் இந்த முறை குழுவில் இணைவதை எதிர்பார்த்திருப்பார். அவர் பவுலால் தவறாக நியாயந்தீர்க்கப்பட்டதாக உணர்ந்திருக்க வேண்டும்; பர்னபா மட்டுமே அவரை நம்பினார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, பவுல் தனது கருத்தை மாற்றிக் கொண்டார். அவர், "மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்." (2 தீமோத்தேயு 4:11) என்றார். யோவனென்னும் மாற்கு, தனது நற்பெயர் மீண்டதில் நிம்மதி அடைந்திருக்க வேண்டும்.

நாம் தவறாக நியாயந்தீர்க்கப்படும்போது, ​​நாம் எப்படி உணர்கிறோம் என்பதை இயேசு புரிந்துகொள்கிறார் என்பதை நினைவில் கொள்வோமாக. அவர் பாவம் செய்யவில்லை ஆனால் பாவியென்று தீர்க்கப்பட்டார். அவர் தேவனின் குமாரனாக இருந்தபோதும், ஒரு சாதாரண குற்றவாளியை விட மோசமாக நடத்தப்பட்டார். ஆனால் அவர் தனது பிதாவின் சித்தத்தைத் தொடர்ந்து செய்தார், அவர் நியாயப்படுத்தப்படுவார் மற்றும் நீதிபரரென்று  காட்டப்படுவார் என்பதை அறிந்திருந்தார். நீங்கள் தவறாக  நியாயந்தீர்க்கப்பட்டிருந்தால், முடங்கிவிடாதீர்கள்; தேவன் அறிவார், அவருடைய நேரத்தில் செயல்படுவார்.

 

வாய்களிலிருந்து..

உங்கள் நாய் என்ன சொல்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் எப்படி இருக்கும்? ஒரு புதிய தொழில்நுட்பம், நாய்கள் குரைக்கும் போது அவற்றின் உணர்வுகளை அனுமானிக்க உதவும்படி அவற்றின் "குரைத்தலை" அடையாளம் காண்கிறது. உயர் தொழில்நுட்பம் கொண்ட   கழுத்துப் பட்டைகள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குரைப்புகளின் தரவைப் பயன்படுத்தி, நாய்களின் குரைப்புகளில் அவை வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை அடையாளம் காணும். இந்த பட்டைகள் வார்த்தைகளை மொழிபெயர்க்காவிடினும், அவை உரிமையாளருக்கும் செல்லப்பிராணிக்கும் இடையே அதிக புரிதலை உண்டாக்குகிறது.

பிலேயாமின் கவனத்தைத் திருப்ப, தேவனும் ஒரு விலங்கைப் பயன்படுத்தினார். பிலேயாம் தனது கழுதையில் சேணம் வைத்து, தேவன் தனக்கு "நீ அவர்களோடே கூடப்போ; ஆனாலும் நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும்" (எண் 22:20) என்று அறிவுறுத்தியதற்கு பிரதியுத்தரமாக மோவாபுக்குப் போய்க்கொண்டிருந்தான். தேவதூதன் "உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதை" (வ.23) கண்டதும் கழுதை நின்றது, இதை பிலேயாம் பார்க்கவில்லை. பிலேயாம் தொடர்ந்து முன்செல்ல முயன்றான், அதனால் தேவன் மனுஷர் பாஷையில் பேசுவதற்குக் கழுதைக்கு உதவினார். ஆபத்தைப் பார்க்கும்படி பிலேயாமின் கண்கள் இறுதியாகத் திறக்கப்பட்டபோது, ​​" தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்" (வ.31). தேவனின் அறிவுரைகளுக்கு மாறாக வெகுமதி பெறவும்,  தேவஜனங்களை சபிக்கவும் தனக்கிருந்த உள்நோக்கத்தை ஒப்புக்கொண்டான் (வ.37-38). "நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்" (வ.34) என்றான்.

வேதாகமத்தின் பக்கங்களிலும், பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலிலும், பிறரின் ஞானமான ஆலோசனைகளிலும் தேவன் நமக்குக் கொடுக்கும் அறிவுரைகளுக்கு வெளிப்புறமாக மட்டுமல்ல, முழுமனதோடு நாம் செவிசாய்ப்போமாக.

 

வேதவசனங்கள் வெளிப்படுத்துவது என்ன

ஏப்ரல் 1817 இல், இங்கிலாந்தின் க்ளௌசெஸ்டர்ஷையரில் ஒரு தன்னிலையிழந்த இளம் பெண், அயல்நாட்டு ஆடைகளை அணிந்துகொண்டு, புரியாத பாஷையில் பேசிக்கொண்டிருந்தாள். அவளைப்  பிச்சைக்காரி என்று கருதி, அதிகாரிகள் அவளைச் சிறையில் அடைத்தனர். இருப்பினும், அவள் ஜாவாசு தீவைச் சேர்ந்த இளவரசி கராபூ என்று சிறை அதிகாரிகளை நம்ப வைத்தாள். உண்மையில் அவள் மேரி வில்காக்ஸ் என்ற பணிப்பெண் என்பதை விருந்தினர் மாளிகை பணியாளர் ஒருவர் வெளிப்படுத்தும் வரை சமூகம் அவளை ராணிபோல பத்து வாரங்கள்  நடத்தியது.

இந்த இளம் பெண் எப்படி ஒரு முழு சமூகத்தையும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு ஏமாற்றினார் என்று நாம் ஆச்சரியப்படலாம். ஆனால், 2 யோவான் புத்தகம் ஏமாற்றுவது ஒன்றும் புதிதல்ல என்று நம்மை எச்சரிக்கிறது, அது குறிப்பிடுவது போல் "அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்” (1:7). இவர்கள், இயேசு கிறிஸ்து "மாம்சத்தில்" வந்தார் என்பதை மறுப்பவர்கள் (வ.7), அல்லது கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிறவர்கள் (வ.9)  வேதாகமம் இன்று நமக்குப் போதுமானதாக இல்லை என்று அறிவிக்கிறார்கள். இந்த இரண்டு வகையான வஞ்சகர்களும் நாம் நம் "செய்கைகளின் பலனை" (வ.8) இழந்துபோகும்படி செய்யலாம் மற்றும் அவர்களின் துர்க்கிரியைகளுக்குப் பங்குள்ளவனாயிருக்கும்படி நம்மை ஏமாற்றலாம் (வ.11).

யாரும் ஏமாற்றப்படுவதை விரும்புவதில்லை. க்ளௌசெஸ்டர்ஷையர் மக்கள், சில ஆடைகள் மற்றும் உணவுகள் தவிர அதிகம் இழக்கவில்லை. ஆனால் பாவம் மற்றும் வஞ்சகத்தின் விளைவுகள் நம்மை அச்சுறுத்திக்கொண்டே இருக்கின்றன என்று வேதாகமம் சொல்கிறது. நாம் வேதாகமத்தில் ஈடுபாடு கொள்ளுகையில், ​​“அவருடைய கற்பனைகளின்படி நடப்ப(தால்)தே” (வ.6) வஞ்சகத்திற்குத் தப்பிக்கத் தேவன் நமக்கு உதவுவார்.