Archives: நவம்பர் 2024

தேவனுடன் பங்காளி ஆகுதல்

என் தோழியும் அவளது கணவரும் கருத்தரிக்கச் சிரமப்பட்டபோது, ​​மருத்துவச் சிகிச்சை செய்யுமாறு மருத்துவர்கள் அவளுக்குப் பரிந்துரைத்தனர். ஆனால் என் தோழி தயங்கினாள். "நம்முடைய பிரச்சனையைத் தீர்க்க ஜெபம் போதுமல்லவா? எனக்கு உண்மையிலே மருத்துவச் சிகிச்சை அவசியமா?" எனக் கேட்டாள். தேவன் செயல்படுவதைப் பார்க்க, மனித பங்களிப்பை உணர முடியாமல் என் தோழி போராடினாள்.

இயேசு, திரளான ஜனங்களுக்கு உணவளித்த சம்பவம் இதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும் (மாற்கு 6:35-44). அந்த கதை எப்படி நிறைவடைந்தது என்பதை நாம் அறிந்திருக்கலாம்; ஆயிரக்கணக்கான மக்கள் சில அப்பம் மற்றும் மீன்களால் அற்புதமாகப் போஷிக்கப்படுகிறார்கள் (வ. 42). ஆனால் கூட்டத்திற்கு உணவளிப்பது யார் என்பதைக் கவனியுங்கள்? சீஷர்கள் (வ. 37). மேலும், யார் உணவு வழங்குகிறார்கள்? சீஷர்கள் (வ. 38). உணவை விநியோகித்து, பிறகு சுத்தம் செய்வது யார்? சீஷர்கள் (வ. 39-43). "நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள்" என்று இயேசு கூறினார் (வ. 37). இயேசு அற்புதம் செய்தார், ஆனால் சீஷர்கள் செயல்பட்டபோதுதான் அது நிகழ்ந்தது.

நல்ல பயிர் என்பது தேவனின் ஈவு (சங்கீதம் 65:9-10), ஆனால் ஒரு விவசாயி நிலத்தில் உழைத்தாக வேண்டும். இயேசு, பேதுருவிடம் "மீன் அகப்படும்" என  வாக்களித்தார், ஆனால் மீனவரும் வலைகளை வீச வேண்டியிருந்தது (லூக்கா 5:4-6). தேவனால் நம்மையன்றி பூமியைப் பராமரிக்கவும், அற்புதங்களைச் செய்யவும் முடியும். ஆனால், பெரும்பாலும்மனிதனோடு இனைந்து செயல்படவே தேவன் விரும்புகிறார்.

என் தோழியும் சிகிச்சை பெற்று, பின்னர் வெற்றிகரமாகக் கருத்தரித்தார். இது அற்புதம் நடப்பதற்கான விதிமுறை இல்லை என்றாலும், என் தோழிக்கும் எனக்கும் இது ஒரு பாடமாக இருந்தது. தேவன் நம் கரங்களில் வழங்கியுள்ள  முறைகளைக்கொண்டே, தமது அதிசயமான கிரியைகளை அடிக்கடி செய்கிறார்.

சோதனைகள் மத்தியிலும் நன்றியுடன் இருப்பது

புற்றுநோயுடனான தனது வாழ்வைப் பற்றி இணையத்தில் வெளியிடும் சக எழுத்தாளர் ஒருவரைப் பின்தொடர்ந்து, அவருக்காக ஜெபிக்கிறேன். அவள் தனது சரீர வேதனை மற்றும் சவால்கள் குறித்தும், வேத வசனங்களுடன் ஜெப விண்ணப்பங்களையும், தேவனுக்குத் துதிகளையும், இணையத்தில் மாறிமாறி பதிவிடுவாள். சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்கும்போதோ அல்லது முடி உதிர்வதால் முக்காடு அணிந்து வீட்டில் இருக்கும்போதோ, அவளது தைரியமான புன்னகையைப் பார்ப்பது அழகாக இருக்கிறது. ஒவ்வொரு சவாலிலும், சோதனைகளின் மத்தியில் தேவனை நம்பும்படி பிறரை ஊக்குவிக்க அவள் ஒருபோதும் தவறுவதில்லை.

நாம் பாடுகளினூடே நடக்கையில், ​​நன்றியுடன் இருப்பதற்கும் தேவனைத் துதிப்பதற்கும் காரணம் ஏதுமில்லாதது போலிருக்கலாம். இருப்பினும், சங்கீதம் 100, நம் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், மகிழ்வதற்கும் தேவனைத் துதிப்பதற்கும் காரணங்களைத் தருகிறது. சங்கீதக்காரன் கூறுகிறார்: “கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும் அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்” (வ.3). அவர் மேலும் கூறுகிறார், “கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது” (வ.5).

நம்முடைய சோதனை எதுவாக இருந்தாலும், நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குத் தேவன் சமீபமாய்  இருக்கிறார் (34:18) என்பதை அறிந்து நாம் ஆறுதலடையலாம் . ஜெபத்திலும் வேதவாசிப்பிலும் தேவனுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறோமோ, அவ்வளவு அதிகமாக “அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரி(ப்போம்)யுங்கள்” (100:4) . நம் தேவன் உண்மையுள்ளவராக இருப்பதால், குறிப்பாக நாம் கடினமான காலங்களில் இருக்கும்போது கூட நாம், "கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பா(டலாம்)டுங்கள்" (வ.1).

சுபாவ மாற்றம்

மரண தருவாயிலிருந்த, பதினேழாம் நூற்றாண்டின் இலக்கண அறிஞர் டொமினிக் பௌஹர்ஸின் படுக்கையைச் சுற்றி, அவர் குடும்பம் கூடியிருந்தது. அவர் இறுதியாக சுவாசித்து கொண்டிருக்கையில், “நான் சாகப்போகிறேன் அல்லது நான் மரிக்க போகிறேன்; இரண்டு வாக்கியங்களுமே சரியானது" என்றாராம். மரணப் படுக்கையில் இலக்கணத்தைப் பற்றி யார் கவலைப்படுவார்கள்? வாழ்நாள் முழுவதும் இலக்கணத்தின் மீது அக்கறை கொண்ட ஒருவரால் மட்டுமே சாத்தியம்.

நாம் முதுமையை அடையும் நேரத்தில், நாம் பெரும்பாலும் நம் விருப்பங்களில் வாழ்ந்திருப்போம். நல்லதோ கெட்டதோ, நமது விருப்பங்கள் பழக்கங்களாக உருமாறி, பின்னர் குணாதிசயமாக வடிவெடுக்கும் நீண்ட ஆயுட்காலம் நமக்கு இருந்தது. நாம் எப்படிப்பட்டவர்களாக வேண்டுமென்று தெரிவு செய்தோமோ, அப்படியே ஆனோம்

நம் குணம் இளமையாகவும், நெகிழ்வாகவும் இருக்கும்போது பக்திவிருத்திக் கேதுவான பழக்கங்களை வளர்ப்பது எளிது. “இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.” (2 பேதுரு 1:5-7) என்று பேதுரு வலியுறுத்துகிறார். இந்த நற்பண்புகளை நடைமுறைப்படுத்துங்கள், மேலும் "நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும்பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்" (வ.11).

பேதுருவின் பட்டியலில் உள்ள எந்த குணாதிசயங்கள் உங்களில் அதிகமாக உள்ளன? எந்த குணங்களுக்கு இன்னும் கவனம் தேவை? நாம் யாராகிவிட்டோம் என்பதை நாம் உண்மையில் மாற்ற முடியாது, ஆனால் இயேசுவால் முடியும். உங்களை மாற்றவும், பெலப்படுத்தவும் அவரிடம் கேளுங்கள். இது மெதுவான, கடினமான பயணமாக இருக்கலாம், ஆனால் நமக்குத் தேவையானதைச் சரியாக வழங்குவதில் இயேசு நிபுணர். உங்கள் குணத்தை மாற்றும்படி அவரிடம் கேளுங்கள், அதனால் நீங்கள் மேலும் மேலும் அவரைப் போல் ஆகுவீர்கள்.

ஷாலோமின் முகவர்கள்

2015 ஆம் ஆண்டில், கொலராடோவின் கொலராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள ஊழிய ஸ்தாபனங்கள், நகரச் சேவைக்காக ஒன்றிணைந்தன. மேலும் COSILoveYou (ஒரு சுவிசேஷ இயக்கம்) உதயமானது. ஒவ்வொரு இலையுதிர் காலத்தில், CityServe (நகர்ப்புற ஊழியம்) எனப்படும் நிகழ்வில், குழுவினர் சமுதாயத்திற்கு ஊழியம்  செய்யும்படி விசுவாசிகளை அனுப்புகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ஊழியத்தின்மூலம், நானும் எனது பிள்ளைகளும்  நகரத்தின் மையத்திலிருக்கும் ஒரு தொடக்கப் பள்ளிக்கு அனுப்பப்பட்டோம். அங்கே, களைகளைப் பிடுங்கி சுத்தம் செய்தோம். மேலும்  ஒரு கலைத் திட்டத்தில் பணியாற்றினோம், அதில், மலைகள் போன்ற தோற்றமளிக்க,  வண்ணமயமான பிளாஸ்டிக் டேப்பைப்  ஒரு சங்கிலி இணைப்பு வேலி மூலம் பிணைத்தோம். இது எளிமையானது, ஆனால் வியக்கத்தக்க அழகானது.

நான் பள்ளியைக் கடந்து செல்லும் போதெல்லாம், எங்களின் எளிமையான கலைத் திட்டம் எனக்கு எரேமியா 29 ஐ நினைவூட்டுகிறது. அங்கு, தேவன் தம்முடைய ஜனங்களை அவர்கள் இருந்த நகரத்தில் குடியேறி, அதற்குச் சேவை செய்யும்படி அறிவுறுத்தினார். அவர்கள் சிறைப்பட்டுப் போயிருந்தாலும், அங்கே இருக்க விரும்பவில்லை என்றாலும் அங்ஙனமே கட்டளையிட்டார்.

தீர்க்கதரிசி, "நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்" (வ.7) என்றார்.இங்குச் சமாதானம் என்ற சொல் "ஷாலோம்" என்ற எபிரேயச் சொல்லாகும். தேவனின் நன்மையும் மீட்பும் மட்டுமே கொண்டு வரக்கூடிய முழுமையையும், செழிப்பையும் குறித்த கருத்தை இது உள்ளடக்கியது. 

ஆச்சரியப்படும் விதமாக, தேவன் நம் ஒவ்வொருவரையும் நாம் இருக்கும் இடத்திலேயே 'ஷாலோமின்' முகவர்களாக இருக்கும்படி அழைக்கிறார். செம்மைப்படுத்தவும், அவர் நமக்களித்துள்ள இடங்களில் எளிமையான, உறுதியான  வழிமுறைகளில் மீட்பைப் செயல்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம்.

ஞானமான தெரிந்தெடுப்பு

மறைந்த எனது தாயாரின் வீட்டை விற்கவா? என் அன்பான, விதவை தாயார் இறந்த பிறகு, அந்த முடிவு என் இதயத்தை பாரமாக்கியது. பாச உணர்வு, என் உணர்வுகளை ஆண்டது. இருப்பினும், நானும் என் சகோதரியும் இரண்டு வருடங்களாக அவரது காலி வீட்டைச் சுத்தம் செய்து, பழுது பார்த்தோம். அதை விற்பனைக்கேற்றதாக மாற்றினோம். இது 2008 இல் நடந்தது, மேலும் உலகளாவிய பொருளாதார மந்தநிலையால் வாங்குபவர்கள் இல்லை. நாங்கள் விலையைக் குறைத்துக்கொண்டே இருந்தோம் ஆனால் விற்பனையாகவில்லை. பிறகு, ஒரு நாள் காலையில் என் வேதாகமத்தைப் படிக்கும் போது, ​​இந்தப் பகுதி என் கண்ணில் பட்டது: "எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு" (நீதிமொழிகள் 14:4).

இந்த நீதிமொழி, விவசாயத்தைப் பற்றிப் பேசுகிறது, ஆனால் அதன் செய்தியில் நான் பேராவல் கொண்டேன். ஒரு ஆளில்லாத தொழுவம் சுத்தமாக இருக்கும், ஆனால் குடியிருப்போரின் "ஜனசடுதி " இருந்தால் மட்டுமே அது பயிர் அறுவடை இருக்கும். எங்களுக்கோ அந்த அறுவடை லாபம் மற்றும் குடும்ப மரபாக இருக்க வேண்டும். என் சகோதரியை அழைத்து, “அம்மா வீட்டை நாமே வைத்துக் கொண்டால் என்ன? நாம் அதை வாடகைக்கு விடலாம்" என்றேன்.

இந்த முடிவு எங்களை ஆச்சரியப்படுத்தியது. அம்மாவின் வீட்டை முதலீடாக மாற்றும் திட்டம் எங்களிடம் இல்லை. ஆனால் வேதாகமம், ஆவிக்குரிய வழிகாட்டியாக மட்டுமின்றி, நடைமுறைக்கேற்ற ஞானத்தையும் வழங்குகிறது. தாவீது ஜெபித்தபடி, “கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்” (சங்கீதம் 25:4).

எங்கள் விருப்பப்படி, நனையும் என் சகோதரியும் பல அன்பான குடும்பங்களுக்கு அம்மாவின் வீட்டை வாடகைக்கு விடும் பாக்கியம் பெற்றோம். மேலும் வேதம் நம் தீர்மானங்களை முடிவெடுக்க உதவுகிறது என்ற வாழ்வை மாற்றும் இந்த சத்தியத்தையும் நாங்கள் கற்றுக்கொண்டோம். "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது" (சங்கீதம் 119:105) என்று சங்கீதக்காரன் எழுதினான். நாம் தேவனுடைய வெளிச்சத்தில் நடப்போமாக.