மணிலாவில் ஜீப்னி (பிலிப்பைன்ஸில் உள்ள பொதுப் போக்குவரத்தின் ஒரு வடிவம்) வாகன ஓட்டுநராக பணியாற்றிய லாண்டோ என்பவர், சாலையோரக் கடையில் நின்று கொட்டை வடிநீர் (காபி) அருந்தினார். கோவிட்-19 கட்டுப்பாட்டிற்கு பின்னர் தினசரி பயணிகள் மீண்டும் அதிகரிக்கத் துவங்கினர். மேலும் இன்று விளையாட்டு நிகழ்வு இருப்பதால் அதிக பயணிகள் வரக்கூடும் என்று அவர் எதிர்பார்த்தார். அவ்வாறு வந்தால், நான் இழந்த பணத்தை மீண்டும் பெறக்கூடும், என் கவலைகள் மாறக்கூடும் என்று அவர் எண்ணினார். 

அவர் தனது வாகனத்தை இயக்க முற்படும்போது, அருகில் இருந்த இருக்கையில் ரோனியைக் கண்டார். அந்த துப்புரவு தொழிலாளி, ஏதோ கவலையுடன் அமர்ந்திருந்தார். ஏதோ சொல்ல வருகிறார் என்பது போல் தோன்றியது. ஆனால் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது என்று லாண்டோ நினைத்தார். அதிக பயணிகள், அதிக வருமானம். என்னால் தாமதிக்க முடியாது. ஆனால் அவர் ரோனியை அணுகவேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை உணர்ந்தார். அதனால் அவரை அணுகி விசாரித்தார். 

கவலைப்படாமல் இருப்பது எவ்வளவு கடினம் என்பதை இயேசு புரிந்துகொண்டார் (மத்தேயு 6:25-27). எனவே நம்முடைய பரலோகத் தகப்பன் நமக்குத் தேவையானதைத் துல்லியமாக அறிந்திருக்கிறார் என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார் (வச. 32). நாம் கவலைப்படாமல், அவரை நம்பி, அவர் விரும்புவதைச் செய்வதில் நம்மை அர்ப்பணிக்கவேண்டும் என்று நினைவூட்டப்படுகிறோம் (வச. 31-33). நாம் அவருடைய நோக்கங்களைத் தழுவி, கீழ்ப்படிந்தால், “இன்றைக்கு இருந்து நாளைக்கு  அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?” என்று அவரில் நம்பிக்கைக் கொள்ளலாம் (வச. 30).  

ரோனியுடன் லாண்டோ உரையாடியதால், அவர் இயேசுவை ஏற்றுக்கொள்ளும்படிக்கு ஜெபித்தார். “அன்றும் தேவன் தனக்கு தேவையான பயணிகளைக் கொடுத்து உதவினார்” என்று லாண்டோ குறிப்பிட்டார். மேலும் “நான் அவருடைய தேவைகளை பார்த்துக்கொள்ளும்போது அவர் என் தேவைகளை சந்திக்கிறார்” என்று தேவன் தனக்கு நினைப்பூட்டியதாக அறிவிக்கிறார்.