டேவிட் மற்றும் ஆங்கி வெளிநாடு செல்ல தேவனால் அழைக்கப்பட்டதாக உணர்ந்தனர். அவர்கள் அப்போது செய்ய நேரிட்ட ஆசீர்வாதமான ஊழியம் அதை உறுதிப்படுத்தியது. ஆனால் அவர்களின் நடவடிக்கையில் ஒரு குறை இருந்தது. டேவிட்டின் வயதான பெற்றோர் இப்போது கிறிஸ்துமஸ் பண்டிகைகளை தனியாக கொண்டாடுவார்கள்.

டேவிட் மற்றும் ஆங்கி, தனது பெற்றோர்களின் கிறிஸ்துமஸ் தனிமையை போக்குவதற்கு அவர்களுக்கு முன்னமே பரிசுகளை வாங்கிக்கொடுத்தும், பண்டிகை தினத்தன்று காலையில் போன் செய்தும் பேசினர். ஆனால் அவரது பெற்றோர் உண்மையில் விரும்பியது அவர்களோடிருப்பதைத் தான். டேவிட்டின் வருமானம் குறைவு என்பதினால், அவர்கள் எப்போதாவது தான் தங்கள் பெற்றோரின் வீட்டிற்கு வந்து செல்ல முடியும். அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? டேவிட்டுக்குக்கு ஞானம் தேவைப்பட்டது.

நீதிமொழிகள் 3 என்பது ஞானத்தைக் கண்டடைவதைக் குறித்த ஒரு பாடத்திட்டம். நம் சூழ்நிலைகளை தேவனிடம் கொண்டு செல்வதன் மூலம் ஞானத்தை நாம் எவ்வாறு பெறுவது என்பதைக் காட்டுகிறது (வச. 5-6). அன்பு, விசுவாசம் போன்று ஞானத்தின் பல்வேறு குணாதிசயங்களைக் குறித்து விவரிக்கிறது (வச. 3-4, 7-12). மேலும் அதின் நன்மைகளான சமாதானம் மற்றும் நீடித்த ஆயுள் (வச. 13-18) ஆகியவைகளையும் விவரிக்கிறது. மேலும் “நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது” (வச. 32) என்று தேவன் வலியுறுத்துகிறார். அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் தனது தீர்வுகளை பகிர்ந்துகொள்கிறார்.

ஒரு நாள் இரவு தன் பிரச்சனையைப் பற்றி ஜெபித்தபோது, டேவிட் ஒரு யோசனை செய்தார். அடுத்த கிறிஸ்மஸ் நாளில், அவரும் ஆங்கியும் தங்களின் சிறந்த ஆடைகளை அணிந்துகொண்டு, உணவு மேஜையை அலங்கரித்து, இரவு உணவைக் கொண்டுவந்துவைத்தனர். டேவிட்டின் பெற்றோரும் அவர்களுடைய வீட்டில் அவ்வாறே செய்தனர். பின்னர், ஒவ்வொரு டேபிளிலும் லேப்டாப்பை வைத்து, வீடியோ லிங்க் மூலம் ஒன்றாக உணவு அருந்தினர். ஏறக்குறைய அவர்கள் ஒரே அறையில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அது அன்றிலிருந்து ஒரு குடும்ப வழக்கமாகிவிட்டது.

தேவன் டேவிட்டுக்கு தன்னுடைய இரகசியத்தை புரிந்துகொள்ளும் ஞானத்தை அளித்தார். அவர் எங்கள் பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வை அவர் எங்களோடு மென்மையாய் பகிர்ந்துகொண்டார்.