கவிஞர், ஓவியர் மற்றும் அச்சுத் தயாரிப்பாளருமான வில்லியம் பிளேக் தமது மனைவி கேத்ரினுடன் நாற்பத்தைந்து வருட திருமண வாழ்க்கையை அனுபவித்தார். அவர்களது திருமண நாள் முதல் 1827 இல் அவர் இறக்கும் வரை, அவர்கள் அருகருகே அமர்ந்திருந்து வேலை செய்தனர். கேத்ரின் வில்லியமின் ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டுவார். அவர்கள் வறுமை மற்றும் பல வாழ்க்கை சவால்களையும் இணைந்தே மேற்கொண்டுள்ளனர். அவரது மரணமடைந்த கடைசி வாரத்தில் அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும், பிளேக் தமது ஓவியத்தில் மும்முரமாய் இருந்தார். அவர் தீட்டிய கடைசி ஓவியம், அவருடைய மனைவியின் முகமே. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கேத்ரின் தமது கணவரின் பென்சில் ஒன்றைக் கையில் பிடித்தபடி இறந்திருந்தார். 

பிளேக்ஸின் இந்த துடிப்பான காதலானது உன்னதப்பாட்டு புத்தகத்தில் இடம்பெற்றுள்ள நேசத்தை பிரதிபலிக்கிறது. இந்த பாடல்கள் திருமணத்தின் தாக்கத்தை வலியுறுத்தக்கூடியது. ஆதித்திருச்சபை விசுவாசிகள், இது இயேசுவை பின்பற்றுகிறவர்கள் மீது அவருடைய தணிக்கமுடியாத அன்பு என்றும் வியாக்கியானம் செய்தனர். “நேசம் மரணத்தைப்போல் வலிது” (8:6) என்று உன்னதப்பாட்டு உருவகப்படுத்துகிறது. மரணம் என்பது கடைசியும் தப்பிக்கமுடியாததுமான ஒன்றாய் இருப்பதுபோல நேசமும் இருக்கிறது. இந்த நேசத்தின் தழல் “அக்கினித் தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது” (வச. 6). மற்ற அக்கினித் தழலைப்போன்று, இதை எளிதில் அணைக்கமுடியாது. “திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது” என்று இந்த நேசத்தின் வலிமை வலியுறுத்தப்படுகிறது (வச. 7). 

நம்மில் யார் தான் உண்மையான நேசத்தை விரும்பமாட்டார்கள்? நாம் உண்மையான நேசத்தை எதிர்பார்க்கும்போதெல்லாம், தேவனிடத்தில் வந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் ஆழமான தணியாத அன்பை பெறமுடியும். அதின் தழல் அக்கினி தழல் போன்று வலியது.