பதினாறு வயது நிரம்பிய பிரேசில் தேசத்தின் ஸ்கேட்போர்ட் விளையாட்டு வீரர் பெலிப் கஸ்டாவோ, “உலகத்தின் மிகவும் புகழ்பெற்ற ஸ்கேட்போர்ட் வீரர்களில் ஒருவராக” மாறுவார் என யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். அவனுடைய தந்தை, தன்னுடைய மகன் சறுக்குப் பலகை விளையாட்டை முறையாய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அதற்கான பணம் இல்லை, ஆகையால் அவர் தன்னுடைய காரை விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு, ப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டிக்கு தன்னுடைய மகனை அழைத்துச் சென்றார். கஸ்டாவோ வெற்றிபெறும் வரை யாருக்கும் அவனைப்பற்றித் தெரியாது. அவன் பெற்ற வெற்றி அவனுக்கு ஒரு பிரமாதமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. 

கஸ்டாவோவின் தகப்பனுக்கு அவர் மகனுடைய இருதயத்தையும் ஆர்வத்தையும் கண்டுபிடிக்கும் திறன் இருந்தது. கஸ்டாவோ சொல்லும்போது, “நான் தகப்பனாய் மாறும்போது, என் தகப்பன் எனக்கு செய்ததில் 5 சதவிகிதமாவது செய்ய விரும்புகிறேன்” என்று சொன்னான். 

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஆர்வம், ஆற்றல் மற்றும் தனித்தன்மை ஆகியவற்றைக் கண்டுபிடித்து, தேவன் அவர்களை எதற்காய் ஏற்படுத்தியிருக்கிறார் எனும் பாதைக்கு நேராய் அவர்களை வழிநடத்தும்படி நீதிமொழிகள் ஆலோசனை கூறுகிறது. “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (22:6). நமக்குத் தெளிவான அல்லது தீர்க்கமான அறிவு இல்லாமல் இருக்கலாம். ஆனால் தேவ ஞானத்தோடும் (17–21) நம்முடைய கரிசனையோடும், நம் பிள்ளைகளுக்கு பெரிய பரிசை நம்மால் கொடுக்கமுடியும். அவர்கள் தேவனை நம்புவதற்கான பாதையையும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாய் நடக்கக்கூடிய எதிர்காலத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்ள நாம் உதவலாம் (3:5-6).