டாக்டர் கேரி கிரீன்பர்க் என்பவர் உலகத்தில் இருக்கும் கடற்கரை மணல்களை மிக பெரிதாகப் புகைப்படம் எடுத்திருக்கிறார். மண்ணில் கலந்திருக்கும் துகள்கள், கிளிஞ்சல்கள், பவளத் துகள்கள் ஆகியவற்றில் உள்ள பலவிதமான வண்ணங்கள் ஆச்சரியப்படும் விதத்தில் இருந்தது. நாம் கண்களில் காணும் மணலை விட அநேகக் காரியங்கள் அதில் இருப்பதாக அவர் கண்டறிந்தார். மணலைக் குறித்து கண்டறியும் கனிம பகுப்பாய்வில் (arenology), மண்ணரிப்பு மற்றும் அதின் கரையோர பாதிப்புகள் ஆகியவைகளை கண்டறிவர். சிறிய மணல்துகள் கூட மிக அரிய தகவலைக் கொடுக்க முடியும். 

அதேபோன்று, ஒரு சிறிய ஜெபம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வரப்போகிற தேவனுடைய இராஜ்யத்தில் ஜெபத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி வேதம் வெளிப்படுத்துகிறது. வெளிப்படுத்தல் 8ஆம் அதிகாரத்தில், யோவான், “சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும்” செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கத்தை கையில் பிடித்திருந்த தேவ தூதனைக் காண்கிறார். “பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின” (வச. 3,5). 

நெருப்பினாலும் ஜெபத்தினாலும் நிறைக்கப்பட்ட தூபவர்க்கத்தை அந்த தூதன் பூமியிலே கொட்டியபோது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள், கடைசி நாட்களையும் கிறிஸ்துவின் வருகையையும் அறிவிக்கும் எக்காளத்தை ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள் (வச. 6).

சிலவேளைகளில் நம்முடைய ஜெபம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக நாம் நம்ப மறுக்கலாம். ஆனால் தேவன் அவற்றை தவறவிடுவதில்லை. அதை அவருடைய இராஜ்யத்தை ஸ்தாபிக்கும் நோக்கத்திற்கு பயன்படுத்துகிறார். நாம் அற்பமானது என்று எண்ணுகிற சிறிய ஜெபத்தை, அவர் பூமியை அசைக்கும் வலிமையுள்ளதாய்ப் பார்க்கிறார்!