இந்தியாவில் இருந்த இரண்டு சகோதரிகள் பார்வையற்றவர்கள். அவர்களின் தந்தை கடின உழைப்பாளியாக இருந்தார். ஆனால் அவர்களுக்கு பார்வையை அளிக்கும் அறுவை சிகிச்சையை செய்ய அவருக்கு வசதியில்லை. பின்னர் குறுகிய கால மருத்துவ பணிக்காக ஒரு டாக்டர்கள் குழு அவர்களின் பகுதிக்கு வந்தனர். அவர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் விளைவாக,  காலையில், செவிலியர்கள் தங்கள் கண் கட்டுகளை அவிழ்க்கும்போது, பார்வையற்ற அந்த பெண்கள் மகிழ்ச்சியோடு சிரித்தனர். அதில் ஒருவள், “அம்மா, நான் பார்க்கிறேன்! என்னால் பார்க்க முடிகிறது!” என்று ஆனந்த கூச்சலிட்டாள். 

பிறப்பிலிருந்தே முடவனாக இருந்த ஒருவன், தேவாலய வாசலில் தனது வழக்கமான இடத்தில் அமர்ந்து பிச்சை கேட்டான். பேதுரு தன்னிடம் பணம் ஏதுமில்லை, ஆனால் அவரிடம் அதைவிட சிறந்த ஒன்று இருந்ததாய் கூறினார். “நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட” (அப்போஸ்தலர் 3:6) என்று சொன்னார். அந்த மனிதன் “குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூடத் தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்” (வச. 8).

பார்வை பெற்ற அந்த சகோதரிகளும், சுகம் பெற்ற அந்த முடவனும், தங்கள் நன்றியுணர்வை வெளிப்படையாய் பிரதிபலித்தனர். அந்த சகோதரிகள் ஆச்சரியத்தில் வியப்படைந்தனர். அந்த முடவன் துல்லி குதித்து நடந்தான். 

உங்கள் சொந்த திறன்களைக் கருத்தில்கொள்ளுங்கள். நீங்கள் அற்புதவிதமாக குணமடைந்திருந்தால், இந்த திறன்களை நீங்கள் எப்படி ஆச்சரியமாய் அனுபவித்திருப்பீர்கள்? அவற்றை எப்படி வித்தியாசமாகப் பயன்படுத்தியிருப்பீர்கள்? இப்போது இதை கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் இயேசுவை நம்பினதினால், அவர் உங்களை ஆவிக்குரிய ரீதியில் குணமாக்கியுள்ளார். அவர் உங்கள் பாவங்களிலிருந்து உங்களை மீட்டெடுத்தார். 

நம்மை உருவாக்கி காப்பாற்றியவருக்கு நன்றி செலுத்துவோம். அவர் நமக்கு வழங்கிய அனைத்தையும் அவருக்கு அர்ப்பணிப்போம்.