இந்தியா முழுவதுமான சாலைப் பயணம், சில ஆபத்தான சாலைகளில் உங்களை அழைத்துச் செல்லும். முதலில், ஜம்மு காஷ்மீரில் “கில்லார்- கிஷ்த்வார் சாலை” உள்ளது. வடமேற்கு நோக்கிச் சென்றால், குஜராத்தின் டுமாஸ் கடற்கரைக்கு அருகில் நீங்கள் ஒரு பயங்கரமான அதிர்வை அனுபவிக்கக்கூடும். மத்திய இந்தியாவை நோக்கி மேலும் பயணிக்கும்போது, சத்தீஸ்கரின் பஸ்தாரில் ஓய்வெடுப்பதை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. அது ஒரு  ஆபத்தான இடம். நீங்கள் தெற்கு நோக்கிச் செல்லும்போது, தமிழகத்தின் பயங்கரமான கொல்லிமலைச் சாலையை அடைவீர்கள். நீங்கள் ஒருவேளை பயணம் செய்யாவிட்டாலும், இவைகள் இந்திய தேசத்தின் புவியமைப்பில் இருக்கக்கூடிய அபாய சாலைகள்.  

சில சமயங்களில் வாழ்க்கைப் பயணம் இப்படித்தான் இருக்கும். வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களின் கடினமான வாழ்க்கையை நாம் எளிதாக அடையாளம் காண முடியும் (உபாகமம் 2:7). வாழ்க்கை கடினமாக இருக்கலாம். அதற்கு இணையான மற்ற காரியங்களை நாம் காண்கிறோமா? நாம் நமது சொந்த பயணத்திட்டத்தை உருவாக்குகிறோம். தேவனின் வழியிலிருந்து திசை மாறுகிறோம் (1:42-43). இஸ்ரவேலர்களைப் போலவே, நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதைப் பற்றி நாம் அடிக்கடி முணுமுணுக்கிறோம் (எண்ணாகமம் 14:2). நமது அன்றாட கவலையில், நாமும் தேவனின் நோக்கங்களை சந்தேகிக்கிறோம் (வச. 11). இஸ்ரவேலர்களின் கதை நம் சொந்தக் கதையில் மீண்டும் மீண்டும் இடம்பெறுகிறது.

நாம் அவருடைய வழியைப் பின்பற்றினால், ஆபத்தான சாலைகள் நம்மை அழைத்துச் செல்லும் இடத்தை விட மிகச் சிறந்த இடத்திற்கு அவர் நம்மை அழைத்துச்செல்வார் என்று தேவன் நமக்கு உறுதியளிக்கிறார். நம் தேவைகள் ஒன்றும் குறைவுபடாது (உபாகமம் 2:7; பிலிப்பியர் 4:19). இதை நாம் ஏற்கனவே அறிந்திருந்தும், அதைச் செய்யத் தவறிவிடுகிறோம். நாம் தேவனின் பாதையை பின்பற்ற வேண்டும்.

இன்னும் சில மணிநேரம் காரில் பயணம் செய்தால், பயமுறுத்தும் கொல்லி மலையிலிருந்து “கடவுளின் சொந்த நாடு” என்று அழைக்கப்படும் கேரளாவில் உள்ள பசுமையான மற்றும் அமைதியான வயநாடுக்கு உங்களை அழைத்துச் செல்லும். தேவன் நம் பாதைகளை வழிநடத்த அனுமதித்தால் (சங்கீதம் 119:35), அவருடன் மகிழ்ச்சியுடன் பயணிப்போம். இது ஆசீர்வாதமான ஒரு பாதை!