நான் இயேசுவை ஏற்றுக்கொண்ட பின்பு, எனது தாயாருக்கு சுவிசேஷம் அறிவித்தேன். இயேசுவை ஏற்றுக்கொள்வர் என நான் எதிர்பார்க்க, அவரோ ஒருவருடமாய் என்னோடு பேசவில்லை. கிறிஸ்தவர்களுடன் அவருக்கு ஏற்பட்ட சில மனவருத்தத்தினால், அவர்களை அவர் நம்புவதில்லை. அவருக்காய் நான் ஜெபித்து, வாராவாரம் அவரை சந்தித்தேன். பரிசுத்த ஆவியானவர் என்னை தேற்றினார். தாயாரோ மௌனமாகவே இருந்தார். கடைசியாய் அவர் என் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்க துவங்க, நான் அவரை நேசிக்கவும், வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் அவருக்கு இயேசுவைக் குறித்து சொல்ல ஆரம்பித்தேன். நாங்கள் ஒப்புரவாகி, சில மாதங்களுக்கு பின், நான் மாறிவிட்டதாக என் தாயார் கூறினார். ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து, என் தாயார் இயேசுவை ஏற்றுக்கொண்டார். அதினால் எங்கள் உறவு இன்னும் ஆழமானது.
கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்து என்னும் மேன்மையான பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. பவுல் அப்போஸ்தலர், “அவரை அறிகிற அறிவின் வாசனையை” (2 கொரிந்தியர் 2:14) பிரசித்தப்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அதாவது சுவிசேஷத்தைக் கேட்கிறவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறவர்கள் கிறிஸ்துவின் சுகந்த வாசனையாய் இருக்கிறார்கள் என்றும் அதை நிராகரிப்பவர்கள் மரணத்தைத் தெரிந்துகொள்ளுகிறார்கள் என்றும் அறிவிக்கிறார் (வச.15-16).
நாம் இயேசுவை ஏற்றுக்கொண்ட பின்பு, மற்றவர்களை நேசித்து அவர்களின் வாழ்வை மாற்றக்கூடிய சத்தியத்தை பறைசாற்றும் பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். கடினமான மற்றும் தனிமையான தருணங்களிலும் கூட நம் தேவையை அவர் சந்திப்பார் என்று நாம் அவரை நம்பலாம். எந்த விளைவுகளை ஏற்படுத்தினாலும் சரி, சுவிசேஷத்தை பகிர்வது எப்போதுமே ஏற்றது