“அது தெரிகிறதா?” என என்னைக் கேட்டவாறே, என் தாத்தாவின் பழைய கடிகாரத்தை பழுதுபார்த்தவர் அதிலிருந்த சிறிய, நுட்பமான ஒரு குறியீட்டை ஒளிரும் வெளிச்சத்தில் காட்டினார். “சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பழுதுபார்த்த ஒருவர் இதைக் குறித்திருக்கலாம், இதை “சாட்சிக் குறி” என்பர். இக்கடிகாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை நான் அறிவதற்கு இது உதவுகிறது” என்றார்.

பழங்காலங்களில் பழுது கையேடுகள், தொழில்நுட்ப குறிகள் இல்லாததால், இதுபோன்ற நகரும் பாகங்களில் ஏற்படும் பழுதுகளை கண்டறிய, நுட்பமான “சாட்சி குறிகள்” அதை எதிர்காலத்தில் பழுதுபார்ப்பவர்களுக்கு உதவியது. அது நேரத்தை மிச்சமாக்கும் செயல் மட்டுமல்ல. எதிர்காலத்தில் அதை பழுதுபார்ப்பவர்களுக்கு செய்யப்படும் ஒரு தயவான உதவி.

மற்றவர்களுக்கு உதவிசெய்வதின் மூலம் இந்த உடைக்கப்பட்ட உலகத்தில் நம்முடைய “சாட்சிக் குறியை” விட்டுச் செல்லுமாறு வேதம் நம்மை ஊக்குவிக்கிறது. ரோம திருச்சபைக்கு பவுல் அப்போஸ்தலர், “நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்” (ரோமர் 15:2) என்று எழுதுகிறார். இதுவே நமக்கு பொறுமையையும், ஆறுதலையும் அளிக்கும் தேவனின் (வச. 6) நல்ல உதாரணம். இது பரலோகத்திலும் பூலோகத்திலும் ஒரு நல்ல குடிமகனாய் வாழ்வதைக் குறிக்கிறது.
நம் “சாட்சி குறிகள்” அற்பமாய் தோன்றலாம், ஆனால் யாரோ ஒருவரின் வாழ்வில் முக்கிய திருப்பத்தை அது உண்டாக்கும். ஊக்குவிக்கும் வார்த்தைகள், தேவையின்போது செய்யப்படும் பண உதவி, கரிசணையோடு பிறர் குறைகளைக் கேட்பது போன்ற இரக்கச் செயல்கள் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும். தேவனுக்கென ஒரு குறியீட்டை நீங்கள் யாரோ ஒருவருடைய வாழ்வில் இன்று உண்டாக்க தேவன் உங்களுக்கு உதவுவாராக.