Archives: செப்டம்பர் 2021

உண்மை, பொய், கண்காணிப்பு

2018 பேஸ்பால் காலத்தில், களத்தில் இல்லாத விளையாட்டு வீரர்கள் இருக்கும் இடத்தில் அமர்ந்திருந்த ஒரு இளைஞனுக்கு, பயிற்சியாளர் ஒரு பந்தைக் கொடுக்க விரும்பினார். ஆனால் பயிற்சியாளர் அந்தப் பந்தை சிறுவனை நோக்கி எறியும்போது வேறொரு நபர் முந்திக்கொண்டு அதை எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்வின் காணொளி புகழ்பெற்றதாகி விட்டது. செய்தி ஊடகங்களும், சமூக ஊடகங்களும் அந்த மனிதனின் முரட்டுத்தனத்தை விமர்சித்தது. தவிர, அங்கு இருந்த பார்வையாளர்களுக்கு முழு நிகழ்வும் தெரியாது. இதற்கு முன்பு, ஒரு தவறாய் அடிக்கப்பட்ட பந்தை பிடிப்பதற்கு அந்த மனிதர் இளைஞனுக்கு உதவி செய்திருந்தார் மற்றும் அடுத்தடுத்து அவர்கள் வழியிலே வரும் பந்துகளைப் பகிர்ந்துக்கொண்டு பிடிக்க அவர்கள் ஒப்புக்கொண்டிருந்தனர். துரதிஷ்டவசமாக உண்மையான நிகழ்வு வெளிவர இருபத்து நான்கு மணி நேரம் ஆனது. அதற்குள்ளாக கலவரக் கும்பல் அந்த குற்றமற்ற மனிதரை அடித்து, காயப்படுத்திவிட்டனர்.

அநேக நேரங்களில், நாம் துணுக்குளை மட்டும் வைத்துக்கொண்டு முழு உண்மைகளும் தெரிந்துவிட்டதாக நினைக்கிறோம். நம்முடைய நவீன அரைகுறை கலாச்சாரத்தில், முழு நிகழ்வுகளையும் அறிந்துகொள்ளாமல், வியத்தகு காணொலிகளையும், கோபமூட்டும் துணுக்குகளையும் வைத்துக்கொண்டு, மக்களைக் கண்டனம் செய்வது எளிது. இருந்தாலும் “அபாண்டமான சொல்லைப் பரப்ப வேண்டாம்” (யாத். 23:1) என்று வேதாகமம் எச்சரிக்கிறது. குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன், உண்மையைத் தெரிந்துக்கொள்ள, முடிந்த அனைத்தையும் நாம் செய்து, பொய்யில் பங்கேற்காமல் இருக்க உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு விழிப்புணர்வு ஆவி மேற்கொள்ளும்போதும், உணர்வுகள் தூண்டப்படும்போதும், தீர்ப்பலைகள் பெருகும்போதும், நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தவறுசெய்யும் கூட்டத்தைப் பின்தொடர்வதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் (வச. 2).

இயேசுவில் விசுவாசிகளாயிருக்கும் நாம், அபாண்டமான சொல்லைப் பரப்பாமலிருக்க தேவன் நமக்கு உதவி செய்வாராக. ஞானத்தை வெளிப்படுத்தவும், நம்முடைய வார்த்தைகள் உண்மை என்பதை உறுதிப்படுத்த அவர் நமக்குத் தேவையானதை கொடுப்பாராக.

எதிர்பாராத விருந்தினர்

சாக் ஒரு தனிமையான ஆள். அவன் நகர வீதிகளில் நடந்து செல்லும்போது அவனை எதிர்க்கின்ற இரைச்சலை உணர்ந்தான். ஆனால் பிறகு அவனுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அலெக்ஸாந்திரியாவிலுள்ள கிளெமண்ட் என்ற திருச்சபை தலைவர், “சாக் ஒரு முக்கியமான கிறிஸ்தவத் தலைவரும், சிசெரியாவில் ஒரு சபையின் போதகருமானார்” என்றார். ஆம், இயேசுவைப் பார்க்க வேணடுமென்று காட்டத்தி மரத்தில் ஏறின, வரி வசூலிக்கும் சகேயுவைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் (லூக்கா 19:1-10).

மரத்தில் ஏறுவதற்கு எது அவரைத் தூண்டியது? வரி வசூலிப்பவர்கள் துரோகிகளாகக் கருதப்பட்டனர். ஏனென்றால் ரோம அரசாங்கத்திற்கு சேவை செய்ய தங்கள் சொந்த மக்களிடமே மிக அதிகமாக இவர்கள் வரி வசூலித்தனர். அவர்களையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு நற்பண்பு இயேசுவிடம் இருந்தது. தன்னையும் இயேசு ஏற்றுக்கொள்வாரா என்று சகேயு நினைத்திருக்கக் கூடும். அவன் குள்ளனாயிருந்தப்படியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணமுடியவில்லை (லூக்கா 19:3). ஒருவேளை இயேசுவைப் பார்க்க அவன் காட்டத்தி மரத்தில் ஏறியிருக்கலாம். 

இயேசுவும் சகேயுவைத் தேடிக்கொண்டிருந்தார். இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துப் பார்த்து, அவனைக் கண்டு “சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கி வா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும்” என்றார் (வச. 5). இப்படி தள்ளப்பட்ட ஒருவரின் வீட்டிற்கு விருந்தினராகப் போவது மிகவும் அவசியம் என்று இயேசு எண்ணினார். கற்பனை செய்துப் பாருங்கள்! உலகத்தின் இரட்சகர் இயேசு, சமுதாயத்தில் தள்ளப்பட்டவருடன் நேரம் செலவிட விரும்பினார். 

ஒருவேளை நம்முடைய இருதயம், உறவுகள், அல்லது வாழ்க்கை சீர்படவேண்டுமோ, சகேயுவைப் போல நமக்கும் நம்பிக்கை உண்டு. நாம் அவரிடத்தில் திரும்பும்போது இயேசு ஒருபோதும் நம்மை புறக்கணிக்கமாட்டார். உடைந்ததையும், இழந்ததையும் அவர் திரும்பத் தந்து, நம்முடைய வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொடுப்பார். 

கிறிஸ்துவுக்குள் உடையாமலிப்பது

லூயி செம்பரெனியுடைய இராணுவ விமானம் இரண்டாம் உலகப்போரின் போது கடலில் மோதியது. அதிலிருந்த பதினொரு பேர்களில் எட்டுப் பேர் மரித்தனர். லூயி மற்றும் மற்ற இரண்டு பேரும் உயிர்காக்கும் படகில் ஏறிக்கொண்டனர். அவர்கள் அந்தப் படகில் இரண்டு மாதங்கள், சுறாக்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொண்டு, புயல்களைக் கடந்து, எதிராளி போர் விமானங்களின் குண்டுவீச்சிலிருந்து வரும் தோட்டாக்களிலிருந்து தப்பித்து, மீன்களையும், பறவைகளையும் பச்சையாக சாப்பிட்டுக் கொண்டு திரிந்துக்கொண்டிருந்தனர். கடைசியாக ஒரு தீவில் அவர்கள் இறங்கினவுடன் கைதுசெய்யப்பட்டனர். இரண்டு ஆண்டுகளாக லூயி அடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, இரக்கமின்றி போர்க்கைதியாக வேலை செய்தார். அவருடைய குறிப்பிடத்தக்க கதை “அன்புரோக்கன்” என்ற புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 

வேதாகமத்திலுள்ள உடைக்கப்படமுடியாத கதாபாத்திரங்களில் எரேமியாவும் ஒருவர். எதிராளிகளின் சதிச்செயல்களை சகித்துக்கொண்டார் (எரேமியா 11:18), கசையால் அடிக்கப்பட்டு, காவலிலே போடப்பட்டார் (20:2), அடிக்கப்பட்டு காவற்கிடங்கில் போடப்பட்டார் (37:15-16), கயிறுகளால் கட்டி உளையிலே இறக்கிவிட்டார்கள் (38:6). தேவன் அவரைக் காக்கும்படி அவரோடு கூட இருப்பதாக வாக்குபண்ணினதால் அவர் உயிர்பிழைத்தார் (1:8). “நான் உன்னை விட்டு விலகுவதில்லை, உன்னை என்றும் கைவிடுவதில்லை” (எபிரெயர் 13:5) என்று தேவன் அதேபோல ஒரு வாக்குத்தத்தத்தை நமக்கும் கொடுத்திருக்கிறார். எரேமியாவையோ, நம்மையோ, பிரச்சனை வராதபடி காப்பாற்றுவேன் என்று வாக்களிக்கவில்லை; மாறாக, பிரச்சனைகளைக் கடக்க நம்மோடுகூட இருப்பதாக வாக்களித்திருக்கிறார். 

லூயி தேவனுடைய பாதுகாப்பைக் கண்டுக்கொண்டார். போருக்குப் பின் தன்னுடைய வாழ்க்கையை தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார். தன்னை சிறைப்பிடித்தவர்களை மன்னித்து, சிலரை கிறிஸ்துவுக்குள் நடத்தினார். நாம் எல்லா பிராச்சனைகளையும் தவிர்க்கமுடியாவிட்டாலும், நாம் அவைகளோடு தனிமையாக அவதிப்பட வேண்டியதில்லை என்று லூயி உணர்ந்தார். இயேசுவோடு அவைகளை நாம் எதிர்கொண்டால் நாம் உடைக்கப்பட முடியாதவர்களாகி விடுவோம்.

கிறிஸ்துவின் நற்கந்தம்

ஒரு கிராம ஊழியரை எனக்குத் தெரியும். அவருடைய இரண்டு பேரன்களும் என்னுடைய சிறந்த நண்பர்கள். அவர் நகரத்திலுள்ள கடைக்குச் செல்லும்போது, அங்கு அவர் அறிமுகமானவர்களோடு அரட்டை அடிக்கும்போதும் நாங்கள் அவரைப் பின்தொடர்ந்துக்கொண்டிருப்போம். அவர்கள் எல்லாருடைய பெயர்களையும், அவர்களுடைய கதைகளையும் அவர் அறிந்திருந்தார். அவர் அங்கும் இங்கும் நின்று சுகவீனமாயிருக்கும் குழந்தையைப் பற்றியோ, பிரச்சனையான திருமணத்தைப் பற்றியோ கேட்டு ஒரு சில உற்சாகமூட்டும் வார்த்தைகளைப் பேசுவார். அவர் வேதத்தைப் பகிர்ந்துக்கொண்டு தேவைப்பட்டால் அவர்களுக்காக ஜெபிப்பார். நான் அந்த மனுஷனை ஒருபோதும் மறக்கமாட்டேன். அவர் ஒரு சிறப்பானவர். அவர் ஒருபோதும் யாரிடத்திலும் தன்னுடைய விசுவாசத்தைத் திணிக்கமாட்டார். அதை அப்படியே விட்டுவிடுவார்.  

பவுல் குறிப்பிடும் “நற்கந்தம்” இந்த வயதான போதகரிடம் இருந்தது (2 கொரிந்தியர் 2:15). “கிறிஸ்துவை அறிகிற அறிவின் வாசனையை” (வச. 14) பரப்புவதற்கு தேவன் அவரைப் பயன்படுத்தினார். அவர் இப்போது தேவனிடம் சென்று விட்டார். ஆனால் அவருடைய நறுமணம் லொமேட்டா நகரம் முழுவதும் வீசிக்கொண்டிருக்கிறது.

“சாதாரண மக்கள் யாரும் இல்லை. மனிதனோடு பேசுவது வெறுமையாய் போகாது என்று சி.எஸ்.லூயிஸ் எழுதியிருக்கிறார். இதை மற்றொரு வழியில் கூறும்போது, ஒவ்வொரு மனித தொடர்புக்கும் நித்திய பின்விளைவுகள் உண்டு. நம்முடைய விசுவாசம் மற்றும் மென்மையான வாழ்க்கையின், அமைதியான சாட்சியின் மூலம் அல்லது சோர்வுற்ற ஆத்துமாவுக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளை கூறுவதின் மூலமும், நம்மை சுற்றியிருக்கிற மக்களின் வாழ்க்கையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த ஒவ்வொரு நாளும் நமக்கு வாய்ப்புகள் உள்ளன. கிறிஸ்துவைப் போல வாழும் வாழ்க்கை மற்றவர்களிடத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.