பிரபலமான அமெரிக்க தொலைக்காட்சி திறமைக்கான போட்டியான America’s Got Talent நிகழ்ச்சியின் ஒரு பகுதியில், ​​ஐந்து வயது சிறுமி ஒருவர் மிகவும் உற்சாகத்துடன் பாடினார். நடுவர்களில் ஒருவர் ஒரு 1930 ல் இருந்த பிரபல குழந்தை பாடகர் மற்றும் நடனக் கலைஞருடன் இந்த குழந்தையை ஒப்பிட்டார். ஷெர்லி டெம்பல் உங்களுக்குள் எங்கேயோ வாழ்கிறார் என்று அவர் குறிப்பிட்டார். அதற்கு அவளுடைய எதிர்பாராத பதில்: “ஷெர்லி டெம்பல் அல்ல. இயேசு!”

அந்த சிறுமியின் ஆழ்ந்த புரிதலைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். ஏனெனில், அவளுடைய சந்தோஷம் அவளுக்குள் வாழ்ந்த இயேசுவிடமிருந்து வந்தது. அவரை விசுவாசிக்கிற அனைவருமே தேவனோடு நித்திய ஜீவனுக்கான வாக்குத்தத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் இயேசு தம்முடைய ஆவியினூடாக அவர்களில் வாழ்கிறார் என்பதையும் வேதவசனங்கள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன. எங்கள்    இருதயங்கள் இயேசுவின் வாசஸ்தலமாகின்றன (கொலோசெயர் 1:27; எபேசியர் 3:17).

நம்முடைய இருதயங்களிலுள்ள இயேசுவின் பிரசன்னம் நன்றியுணர்வுக்கான எண்ணற்ற காரணங்களால் நம்மை நிரப்புகிறது (கொலோசெயர் 2: 6-7). நோக்கம் மற்றும் ஆற்றலுடன் வாழும் திறனை அவர் கொண்டுவருகிறார் (1:28-29). கொண்டாட்டம் மற்றும் போராட்ட காலங்கள் இரண்டிலும், எல்லா சூழ்நிலைகளின்  மத்தியிலும் அவர் நம் இதயங்களில் மகிழ்ச்சியை வளர்க்கிறார் (பிலிப்பியர் 4:12-13). நாம் அனைத்தையும் பார்க்க முடியாவிட்டாலும் கூட தேவன் சகலத்தையும் நன்மைக்கேதுவாக நடப்பிக்கிறார் என்ற நம்பிக்கையை கிறிஸ்துவின் ஆவி நம் இருதயங்களுக்கு அளிக்கிறது (ரோமர் 8:28). நம்மைச் சுற்றியுள்ள குழப்பங்கள் எதுவாக இருந்தாலும் அதன் மத்தியில் ஆவியானவர் சமாதானத்தைத் தருகிறார் (கொலோசெயர் 3:15).

நம்முடைய இருதயங்களில் வாழும் இயேசுவிடமிருந்து வரும் நம்பிக்கையுடன் அவருடைய பிரசன்னத்தை பிரகாசிக்க நம்மால் அனுமதிக்க முடியும் இதனால் மற்றவர்களால் கவனிக்காமல் இருக்க முடியாது.