ஜோ தன்னுடைய வேலையிலிருந்து எட்டு வாரம் “இடைவெளியில்”, இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் படி வந்தான், அது அவனுக்கு விடுமுறை நாட்கள் அல்ல. அவனுடைய வார்த்தையில் கூறினால், “வீடற்றவர்களோடு, அவர்களில் ஒருவராய், பசியோடு, சோர்வுற்றவர்களாய், மறக்கப் பட்டவர்களாய் வாழ்வது எப்படி இருக்கும் என்பதை உணர்வதற்கு” வந்திருந்தான். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, முதன் முறையாக தெருவில் வசித்த அநுபவம் ஜோவிற்கு ஏற்பட்டது. அப்பொழுது அவன் வேலையில்லாதவனாய், தங்குவதற்கு இடமில்லாதவனாய் அந்த பட்டணத்திற்கு வந்திருந்தான். பதின்மூன்று நாட்களாக சிறிதளவு உணவு, உறக்கத்தோடு தெருவில் வாழ்ந்தான். இப்படியாக தேவன் அவனை தயாரித்து, பல ஆண்டுகளாக தேவையிலிருப்போருக்கு உதவும் படி வைத்துள்ளார்.

இயேசு இப்புவிக்கு வந்த போது, தான் இரட்சிக்கும்படி தேடி வந்த மக்களின் அநுபவங்களைப் பகிர்ந்து கொள்ள தெரிந்து கொண்டார். “பிள்ளைகள் மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்களாய் இருக்க, அவரும் அவர்களைப் போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும் படிக்கு… அப்படியானார்” (எபி. 2:14). பிறப்பிலிருந்து மரணம் வரை, கிறிஸ்துவின் மனித அநுபவத்தில், பாவத்தைத் தவிர வேறு எதுவும் குறைவுபடவில்லை (4:15). அவர் பாவத்தை ஜெயித்ததினால், நாம் சோதனைக்குள்ளாகும் போது, அவர் உதவி செய்ய வல்லவராய் இருக்கின்றார்.

எனவே, இயேசு இப்புவியின் பாடுகளுக்கு புதிதானவர் அல்ல, நம்மை இரட்சிக்கும்படி வந்தவர், நம்மோடு தொடர்பில் இருக்கின்றார், அவர் நம்மீது ஆழ்ந்த அக்கரையுள்ளவராய் இருக்கின்றார், நம்முடைய வாழ்வில் எது வந்த போதும், நம்மை நம்முடைய எதிரியான பிசாசானவனிடமிருந்து மீட்டவர் (2:14), நமது மிகப் பெரிய தேவையின் போது உதவுவதற்கு நம்மருகிலே இருக்கின்றார்.