1985 ஆம் ஆண்டு, அன்டொனி ரே ஹின்டன் என்பவர், இரண்டு உணவக மேலாளர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார், அவர் இக்குற்றத்தைச் செய்ததாக பொய்க் குற்றம் சாட்டப்பட்டார். அவர், இந்த கொலைகள் நடந்த போது, அவ்விடத்திலிருந்து பல மைல்களுக்கு அப்பால் இருந்தார், ஆனாலும் அவர் குற்றவாளியென தீர்க்கப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டார். அவருடைய விசாரணையின் போது, ரே தன் மீது பொய் குற்றம் சாட்டியவர்களை மன்னித்தார், தனக்கு இந்த அநீதி இழைக்கப் பட்ட போதும், தனக்குள் மகிழ்ச்சியிருப்பதாகக் கூறினார். “என்னுடைய மரணத்திற்குப் பின், நான் பரலோகத்தை அடைவேன், நீ எங்கு சென்று கொண்டிருக்கின்றாய்?” என்று கேட்பார்.

சாவின் வரிசையில் நின்றுகொண்டிருந்த ரே ஹின்டனுக்கு வாழ்க்கை கடினமாயிருந்தது.  சிறைச்சாலையின் விளக்குகள் ஒளிர்ந்து, மற்றவர்களுக்கு மின் நாற்காலியில் மரணத் தண்டனை நிறைவேற்றப்படுவதைக் காட்டியது, தனக்கும் நடைபெறக் காத்திருப்பதை அது தெரிவித்தது. பொய்யைக் கண்டுபிடிக்கும் சோதனைக்கு ரே உட்படுத்தப்பட்டார், ஆனால் அதின் முடிவுகள் புறக்கணிக்கப்பட்டன. அவர் சந்தித்த அநேக அநீதச்செயல்களில் ஒன்று அவரை மீண்டும் விசாரணைக்குட்படுத்தியது.

கடைசியாக, 2015ஆம் ஆண்டு, அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம், ரேயின் மீதிருந்த தீர்ப்பை மாற்றியது. அவர் ஏறத்தாள முப்பது ஆண்டுகளாக, சாவின் வரிசையில் நின்றுகொண்டிருந்தார். தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார் என்பதற்கு அவருடைய வாழ்வு ஒரு சாட்சியாக அமைந்தது. இயேசு கிறிஸ்துவின் மீது அவருக்கிருந்த விசுவாசம், அவருடைய சோதனைகளுக்கு அப்பால் ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது (1 பேது. 1:3-5), அவருக்கிழைக்கப்பட்ட அநீதத்தின் மத்தியிலும் அசாதரணமான மகிழ்ச்சியை அநுபவித்தார் (வச. 8). “நான் சிறைச்சாலையில் இருந்தபோதும், எனக்குள் இருந்த இந்த மகிழ்ச்சியை அவர்களால் எடுத்துவிட முடியவில்லை” என்று ரே விடுதலையான போது கூறினார். இந்த மகிழ்ச்சி, தேவன் மீது அவருக்கிருந்த உண்மையான விசுவாசத்தை நிரூபித்தது (வச. 7-8).

மரண வரிசையிலுமா மகிழ்ச்சி? இதன் நுணுக்கத்தை அறிந்து கொள்வது கடினம் தான். இது நம்மை தேவனுக்கு நேராகத் திருப்புகின்றது. அவரை நாம் கண்களால் காணமுடியாவிட்டாலும், அவர் நம்மோடு இருக்கின்றார், நம்முடைய துன்ப நேரங்களில் நம்மைத் தாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கின்றார்.