அநேக ஆண்டுகளுக்கு முன்பு நான் பனிச்சறுக்கலைக் கற்றுக் கொண்டிருந்த போது, எளிதான இறக்கங்களில் செல்லும் போது நான் என்னுடைய மகன் ஜோஷைப் பின் தொடர்ந்து செல்வேன். என்னுடைய கண்கள் அவன் மீதேயிருக்க, அவன் அந்த மலைத் தொடரில் ஒரு செங்குத்தான குன்றில் திரும்பியதைக் கவனிக்கத் தவறிவிட்டேன். அப்பொழுது நான் என்னுடைய கட்டுப்பாட்டை இழந்து, ஒரு பக்கம் சரிந்தவனாக குழியில் இறங்கிவிட்டேன்.

நாம் எத்தனை எளிதில் பாவமாகிய சரிவில் வழுக்கிச் சென்று விடுகிறோம் என்பதை சங்கீதம் 141 காட்டுகின்றது. அத்தகைய சரிவில் விழாதபடி நம்மை எச்சரிக்கவே ஜெபம் உதவுகின்றது. “என் இருதயத்தைத்துன்மார்க்கத்திற்கு இணங்க வொட்டாதேயும்” (வச. 4) என்ற விண்ணப்பம் கர்த்தருடைய ஜெபத்தைப் போன்றே அமைந்துள்ளது. “எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும்” (மத். 6:13). இந்த ஜெபத்தைக் கேட்டு பதிலளிக்க தேவன் நல்லவராயிருக்கின்றார்.

இந்த சங்கீதத்தில் மற்றுமொரு கிருபையளிக்கும் நபரைக் காண்கிறோம். அது ஓர் உண்மையான நண்பன். “நீதிமான் என்னைத் தயவாய்க் குட்டி, என்னைக் கடிந்து கொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப் போலிருக்கும்; என் தலை அதை அல்லத் தட்டுவதில்லை” (சங். 141:5).

சோதனைகள் நாம் அறியாமலே நம்மை விழத்தள்ளுகின்றன. நாம் தவறாகச் செல்கின்றோம் என்றறியாமலேயே நீண்ட தூரம் சென்று விடுகிறோம். உண்மையான நண்பன் தன் நோக்கத்தில் உறுதியாயிருப்பவன். “சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்” (நீதி. 27:6). கடிந்து கொள்ளலை ஏற்றுக் கொள்வதற்குக் கடினமாயிருக்கும். ஆனால் அந்தக் கடிந்து கொள்ளலை ஓர் அன்பின் செயலாகப் பார்க்கக் கூடுமானால் அது நம்மை மீண்டும் கீழ்ப்படிதலின் பாதைக்கு வழி நடத்தும் அபிஷேகம் போலிருக்கும்.

ஓர் உண்மையான நண்பன் மூலம் நாம் உண்மைக்கு நேராக வழி நடத்தப் படுவோமாக. ஜெபத்தின் மூலம் தேவனைச் சார்ந்து கொள்.