புதையுண்ட பொக்கிஷம் – இது கேட்பதற்கு ஏதோ குழந்தைகளின் கதைப்புத்தகத்தில் வருவது போல தோன்றுகிறது. ஆனால், வினோத குணம் படைத்த, கோடீஸ்வரரான ஃபாரஸ்ட் ஃபென் இரண்டு மில்லியன் டாலர் மதிப்புடைய நகைகளும், தங்கமும் நிரம்பப்பெற்ற பெட்டகமொன்றை பாறைகள் நிறைந்த மலைப்பகுதியில் போட்டுவிட்டதாகக் கூறுகின்றார். அநேகர் அதனைத் தேடிச் சென்றனர். இந்த மறைந்த செல்வத்தைத் தேடிச் சென்ற நான்கு பேர் தங்கள் உயிரையும் இழந்தனர்.

நீதிமொழிகளை எழுதியவர் நம்மை நின்று சற்று யோசிக்குமாறு சொல்கின்றார். இத்தகையத் தேடலுக்கு உகந்ததுதானா இந்த பொக்கிஷம்? நீதிமொழிகள் 4ல் ஒரு தந்தை தன் மகனுக்கு, அவன் நன்றாய் வாழ்வதற்குத் தேவையானவற்றைக் குறித்து எழுதுகின்றார். எல்லாவற்றையும் காட்டிலும் ஞானமே தேடிக் கண்டடைய உகந்ததென குறிப்பிடுகின்றார் (வச. 7). ஞானத்தின் வழியில் ஒருவன் நடந்தால், அவன் நடைகளுக்கு இடுக்கண் வருவதில்லை, அவைகளில் ஓடினாலும் இடறமாட்டார்கள், அது அவன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்
(வச. 8-12) என்கின்றார்.

பல நூறு ஆண்டுகளுக்குப் பின் இயேசுவின் சீடனான யாக்கோபு ஞானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றார். ‘பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும், சாந்தமும் இணக்கமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும் மாயமற்றதாயுமிருக்கிறது (யாக். 3:17). நாம் ஞானத்தைத் தேடும்போது எல்லா நன்மைகளும் நம் வாழ்வில் செழித்தோங்குமெனக் குறிப்பிடுகின்றார்.

ஞானத்தைத் தேடுவது என்பது எல்லா ஞானத்திலும், அறிவிற்கும் காரணரான தேவனைத் தேடுவதற்குச் சமம். இவ்வுலகில் புதைந்துள்ள அனைத்து பொக்கிஷங்களையும் விட பரத்திலிருந்து வருகின்ற ஞானமே விலையேறப் பெற்றது.