இங்கிலாந்து தேசத்தில் நார்த்தாம்டன் என்ற இடத்தில், ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் வில்லியம் கேரி. அவர் சிறுவனாக இருந்த போது ஒரு சுகவீனமானப் பையனாக இருந்தார். அவருடைய எதிர்காலத்தை அவர் பிரகாசமாக நினைத்ததேயில்லை. ஆனால். தேவன் அவருக்கு வேறு ஒரு திட்டம் வைத்திருந்தார். எல்லாக் குறைகளின் மத்தியிலும் அவர் இந்தியாவுக்கு வந்தார். இங்கு அவர் மிகப் பெரிய சமுதாயச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். வேதாகமத்தை அநேக இந்திய மொழிகளில்  பெயர்த்தார். அவர் தேவனையும் மக்களையும் நேசித்தார். தேவனுக்காக அநேகக் காரியங்களை நிறைவேற்றினார்.

ஈசாயின் மகனான தாவீது ஒரு சாதாரண இளம்வாலிபன். தன் வீட்டின் இளைய மகன். அவன் பெத்லகேமின் மலைகளில் யாராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு மேய்ப்பனாயிருந்தான் (1 சாமு. 16:11-12). ஆனால், தேவன் தாவீதின் இருதயத்தைக் கண்டார். அவனுக்கு ஒரு திட்டத்தை வைத்திருந்தார். சவுல் தேவனுக்குக் கீழ்படியாததால் தேவன் அவனை புறக்கணித்தார். சாமுவேல் தீர்க்கதரிசி சவுலுக்காக துக்கத்தோடிருந்தபோது, தேவன் சாமுவேலை அழைத்து வேறொரு ராஜாவை அபிஷேகம் பண்ணும்படி, ஈசாயின் மகனைக் காண்பிக்கின்றார்.

சாமுவேல் எலியாப்பின் வசீகரத்தையும், அவனுடைய சரீர வளர்ச்சியையும் கண்டபோது, “கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்படுகிறவன் இவன்தான்” என எண்ணினான் (வச. 6) ஆனால், தேவன் ஒரு இராஜாவைத் தேர்ந்தெடுக்கும் திட்டமும் செயலும், சாமுவேலின் பார்வையிலிருந்து வேறுபட்டது. ஈசாயின் ஒவ்வொரு மகனையும் தேவன் நிராகரித்தார். இளையவனையே தேர்ந்தெடுத்தார். தாவீதை அரசனாகத் தேர்ந்தெடுத்தது, அவனுடைய திறனின் அடிப்படையிலல்ல. வெறுமனே வெளித் தோற்றத்தைப் பார்த்தும் எடுத்த முடிவில்லை. ஓர் இளம் மேய்ப்பனிடம் தன் ஜனங்களுக்கும், தன் தேசத்திற்கும் கொடுக்கும்படியாக என்ன இருக்கக் கூடும்?

தேவன் நம் உள்ளங்களையறிவார். அவர் நமக்கு ஒரு திட்டத்தை வைத்திருக்கின்றார் என்பதை நினைக்கும் போது எத்தனை ஆறுதலாகவுள்ளது.