சில ஆண்டுகளுக்கு முன்பாக, எங்களுடைய மகன்களுடன் சால்மன் ஆற்றங்கரையில் உள்ள “திரும்பி வரமுடியாத ஆறு” (“River of No Return”) எனும் பெயர் கொண்டகைவிடப்பட்ட பண்ணை ஒன்றில் ஒரு வாரமளவும் தங்கினோம்.

ஒரு நாள், பண்ணையை சுற்றிப்பார்க்கையில், மரப்பலகையில் பெயர்பதிந்திருந்த பழம்பெரும் கல்லறை ஒன்றைக் கண்டேன். காலப்போக்கில், பலகையில் இருந்த குறிப்புகள் முற்றுமாய் அழிந்திருந்தது. யாரோ ஒருவர் வாழ்ந்தார், மரித்தார் – இப்போது மறக்கப்பட்டார். அந்த கல்லறை காட்சி ஒருவிதத்தில் எனக்கு கவலையளித்தது. வீட்டுக்குத் திரும்பியதும், அந்த இடம் மற்றும் பண்ணையின் வரலாற்றை வாசிக்கலானேன். ஆனாலும், அந்த கல்லறையில் புதைக்கப்பட்ட நபரைப் பற்றிய எந்த தகவலையும் பெறமுடியவில்லை.

நம்மில் சிறப்புற வாழ்ந்தவர்கள் நூறாண்டு காலம் நினைவுகூறப்படுவார்கள் என்று சொல்வதுண்டு. எஞ்சினோர் எளிதில் மறக்கப்படுவர். கடந்த தலைமுறையினரை குறித்த நினைவுகள், குறிப்பாக அந்த மரப்பலகை எழுத்துகளை போல் சீக்கிரம் மறைந்துபோகும். ஆனாலும் நம்முடைய மரபு தேவனுடைய குடும்பத்தின் மூலமாகத் தொடர்ந்துகொண்டே வருகிறது. நம் வாழ்நாட்களிலே நாம் தேவனையும், மற்றவர்களையும் அன்புகூர்ந்த சரித்திரம் தொடர்கிறது. மல்கியா 3:16-17, நமக்கு சொல்வது,
“…கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

தாவீதைப் பற்றி பவுல் குறிப்பிடுகையில், “தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து.. (அப். 13:36) என்று சொல்லப்பட்டுள்ளது. அவரைப் போலவே, நாமும் தேவன்மேல் அன்புகூர்ந்து நம்முடைய தலைமுறையில் நாம் தேவனுக்கு ஊழியம் செய்துவிட்டு நினைக்கப்படுவதை அவரிடம் விட்டுவிடுவோம். “அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.