Archives: 13/02/2018

ஆசீர்வாத கிண்ணம்

நான் எனது கம்ப்யூட்டரில் எழுதிக் கொண்டிருந்த போது, இமெயில் வருவதைத் தெரிவிக்கும் ஒலி எழும்பி என் கவனத்தை ஈர்த்தது. சாதாரணமாக இத்தகைய ஒலி எழும்பும் போது நான் அந்த இமெயிலைப் பார்க்கும்படி தூண்டப்பட்டாலும் அதைத் தவிர்த்து விடுவது வழக்கம். ஆனால் இந்த மெயிலில் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு ‘’நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்’’ என்பது என்னைக் கவர்ந்தது.

ஆர்வமுடன் நான் அதைத் திறந்து பார்த்து, மிகத் தொலைவிலுள்ள என் சிநேகிதி, என்னுடைய குடும்பத்திற்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லியிருந்ததைக் கண்டேன். ஒவ்வொரு வாரமும் அவள் ஒரு குடும்பத்தினரின் படம் ஒன்றினை அவளது ‘ஆசீர்வாதக் கிண்ணமான’ சாப்பாட்டு மேஜையில் வைத்து அந்தக் குடும்பத்திற்காக ஜெபிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். நான் உங்களை நினைக்கிற பொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் (பிலி. 1:6) என எழுதியிருந்தாள். அத்தோடு தேவனுடைய அன்பை பிறரோடு பகிர்ந்து கொள்ளும் எங்களுடைய சுவிசேஷப் பணியின் பங்குதாரர் என்பதையும் முக்கியப்படுத்தியிருந்தாள்.

அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பு சபையினருக்கு எழுதிய இந்த வார்த்தைகள், என் சிநேகிதி விருப்பத்தோடு எடுத்துக் கொண்ட முயற்சியால் என்னுடைய இமெயிலில் வந்தது. இது எனக்களித்த மகிழ்ச்சி, முதலாம் நூற்றாண்டில் இக்கடிதத்தைப் பெற்ற வாசகர்கள் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகமாயிருந்தது. பவுல் தன்னோடு சுவிசேஷகப் பணி செய்தவர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார்;. உங்கள் விசுவாசம் உலகெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசு கிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் (ரோ. 1:8) என்பதைப் போன்ற வாசகங்களை அவருடைய அநேக கடிதங்களில் நாம் காணலாம்.

முதலாம் நூற்றாண்டிலே பவுல் தன்னோடு பணி புரிந்தவர்களை ஆசீர்வதித்து ஜெபத்தோடு ஒரு நன்றியையும் அனுப்புவதைக் காண்கின்றோம். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் என்னுடைய சிநேகிதி ஓர் ஆசீர்வாத கிண்ணத்தின் மூலம் என்னுடைய வாழ்வில் ஒரு மகிழ்ச்சியைத் தந்தாள். இன்று நம்மோடு இயேசுவின் சுவிசேஷப் பணியில் உதவுபவர்களுக்கு நாம் எப்படி நன்றி தெரிவிக்கப் போகிறோம்?

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஆவிக்குரிய சுவடை விட்டுச்செல்லுதல்

பதின்ம வயதினர்களாக, எங்களுடைய அம்மா இயேசுவை ஏற்றுக்கொள்ள தீர்மானித்த முடிவை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவருக்குள் நாங்கள் கண்ட மாற்றங்களை எங்களால் மறுக்க முடியவில்லை. அவரிடத்தில் அதிக மனநிறைவும் மகிழ்ச்சியும் காணப்பட்டது. திருச்சபையிலும் உண்மையாய் ஊழியம்செய்ய ஆரம்பித்தார். வேதத்தைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு அதிகம் இருந்ததினால் வேதாகமக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். சில வருடங்களுக்குப் பிறகு, என் சகோதரி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தாள். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து நானும் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, என் தந்தையும் எங்களுடன் சேர்ந்தார். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் என் அம்மாவின் தீர்மானம் எங்களுடைய குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரையும் படிப்படியாய் பாதித்தது. 

அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு தனது கடைசி நிருபத்தை எழுதி, இயேசுவின் மீதான விசுவாசத்தில் நிலைத்திருக்க ஊக்குவித்தபோது, தீமோத்தேயுவின் ஆவிக்குரிய பாரம்பரியத்தைக் குறித்து குறிப்பிடுகிறார். “அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்” (2 தீமோத்தேயு 1:5). 

அம்மாக்கள் மற்றும் பாட்டிகளே, உங்கள் முடிவுகள் தலைமுறைகளை பாதிக்கலாம்.

தீமோத்தேயுவின் அம்மாவும் பாட்டியும் எவ்வளவு அழகாக அவருடைய விசுவாசத்தை வளர்க்க உதவினார்கள். அதனால் அவர் தேவனுடைய அழைப்பிற்கு பாத்திரவானாய் மாறினார். 

இந்த அன்னையர் தினத்திலும் இதற்கு பின்னரும், இயேசுவைப் பின்பற்ற முடிவு செய்த தாய்மார்களை கௌரவிப்போம்.

நம் அன்புக்குரியவர்களுக்காக ஆவிக்குரிய சுவடை விட்டுச் செல்வோம்.

 

கிறிஸ்துவோடு நிலைத்திருத்தல்

”தி பெல்லோஷிப் ஆப் த ரிங்” என்ற திரைப்படத்தில் கன்டாஃல்ப் த கிரே, சாருமான் தி வைட்டை எதிர்கொண்டபோது, அவர் மத்திய பூமியை பாதுகாக்க வேண்டிய செயலை செய்ய தவறிவிட்டார் என்பது தெளிவாகிறது. மேலும், சாருமன் சௌரோனுடன் கூட்டணி வைத்தான்! டேல்கியனின் உன்னதமான படைப்பை அடிப்படையாகக் கொண்ட அத்திரைப்படத்தின் இந்தக் காட்சியில், இரண்டு முன்னாள் நண்பர்கள், நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சாருமான் மட்டும் தன்னுடைய வழியில் உறுதியாய் நின்று தனக்குத் தெரிந்ததைச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். 

சவுல் ராஜாவுக்கும் தன்னுடைய வழியில் உறுதியாய் நிற்பதில் சிக்கல் இருந்தது. அவருடைய ஆட்சியில் ஓர் கட்டத்தில் “அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்குத் துரத்தி விட்டான்” (1 சாமுவேல் 28:3). இது ஓர் நல்ல நடவடிக்கை. ஏனென்றால் மாயவித்தை காரியங்களில் ஈடுபடுவது கர்த்தருக்கு அருவருப்பானது (உபாகமம் 18:9-12) என்று ஏற்கனவே தேவன் அறிவித்திருந்தார். ஆனால் அவர் சில தோல்விகளை சந்தித்த பின்பு, பெலிஸ்தியர்களோடு யுத்தம்செய்தால் தேவன் தனக்கு வெற்றியைத் தருவாரா என்ற சவுலின் விண்ணப்பத்திற்கு தேவன் பதிலளிக்காதபோது, “அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்” (1 சாமுவேல் 28:7). சவுல் செய்யவேண்டியதை தவிர்த்து, முற்றிலும் தலைகீழானதை செய்ய விழைகிறான். 

அதிலிருந்து ஆயிரம் ஆண்டுகள் கழித்து, இயேசு தம் சீஷர்களைப் பார்த்து, “உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்” (மத்தேயு 5:37) என்று சொல்லுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதற்கு நாம் நம்மை அர்ப்பணித்திருந்தால், நம்முடைய சத்தியங்களைக் கடைப்பிடிப்பதும் உண்மையாக இருப்பதும் இன்றியமையாதது. தேவன் நமக்கு கிருபையளிப்பதால் அவற்றை செய்வதில் நாம் உறுதியோடு செயல்படுவோம். 

 

நம்மைக் காத்துக்கொள்ள முயற்சித்தல்

பல ஆண்டுகளுக்கு முன்பு, நியூயார்க் நகரம் “பாதுகாப்பாக இருங்கள், ஸ்டே புட்” என்ற விளம்பரப் பிரச்சாரம், மின்தூக்கியில் சிக்கிக்கொள்பவர்களின் அறிவூட்டலுக்காக ஏறெடுக்கப்பட்டது. அவ்வாறு சிக்கிக்கொண்ட பயணிகள் பயத்தில் மின்தூக்கியின் கதவை திறக்கமுயன்றபோதும், வேறு வழிகளில் வெளியேற முயன்றபோதும் உயிரிழக்க நேரிட்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். உதவிக்கு அழைப்பதற்கும், அவசரகால பதிலளிப்பவர்கள் வரும் வரை காத்திருப்பதற்கும் அலாரம் பொத்தானைப் பயன்படுத்துவதே அத்தருணத்தில் சிறந்த செயல்திட்டமாகும்.

அப்போஸ்தலனாகிய பவுல் மிகவும் வித்தியாசமான மீட்புத் திட்டத்தை விவரித்தார். பாவத்தினால் பின்னாக இழுக்கப்படுபவர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் அமைந்தது. அவர் எபேசியர்களுக்கு “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்” (எபேசியர் 2:1) என்று அவர்களுடைய முழுமையான ஆவிக்குரிய உதவியற்ற தன்மையை பவுல் அவர்களுக்கு நினைவுபடுத்தினார். அவர்களும் பிசாசுக்கு கீழ்படிந்து அந்த வலையிலே சிக்கியிருந்தனர் (வச. 2). இதன் விளைவாக அவர்கள் தேவனுடைய கோபாக்கினைக்கு ஆளாகினர். ஆனால் அவர் அவர்களை ஆவிக்குரிய இருளில் சிக்கவைக்கவில்லை. அந்தகார இருளில் இருந்த  நீங்கள் “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” (வச. 5,8) என்று பவுல் எழுதுகிறார். தேவனுடைய மீட்பு நம்முடைய விசுவாசத்தில் பிரதிபலிக்கப்படுகிறது. விசுவாசம் என்றால் நம்மை நாமே மீட்டுக்கொள்ள முடியாது என்று தேவனிடத்தில் உதவிகோருவது என்ற அர்த்தம். 

தேவனுடைய கிருபையால், பாவத்தின் வலையில் இருந்து மீட்கப்படுவது நம்மிடம் இருந்து உருவானது அல்ல. இது இயேசுவின் மூலமாக நமக்கருளப்பட்ட “தேவனுடைய ஈவு” (வச. 8).