நான் கேட்கும் திறனற்றவன். ‘’ஒரு காது செவிடு. மற்றது கேட்கும் திறனற்றது’’ என என் தந்தை சொல்வது வழக்கம். எனவே நான் கேட்கும் கருவியை இரு காதுகளிலும் பொருத்தியுள்ளேன்.

சுற்றுப்புறத்தில் அதிகமாக ஒலியிருக்கும் சூழலைத் தவிர, அநேகமான நேரங்களில் இக்கருவிகள் நன்கு வேலை செய்யும். அதிக ஒலியிருக்கும் இடங்களில் என்னுடைய கேட்கும் கருவி அந்த அறையிலுள்ள அனைத்து ஒலிகளையும் ஏற்பதால் என் எதிரேயிருந்து பேசுபவரின் பேச்சைக் கேட்க முடிவதில்லை.

இதைப் போன்றதே நம்முடைய கலாச்சாரமும். அருவருப்பான ஒலிகள் தேவனுடைய மெல்லிய சத்தத்தைக் கேட்கவிடாமல் ஆழ்த்திவிடுகின்றன.  ‘‘எங்கே வார்த்தையைக் கண்டுபிடிப்பது? எங்கே வார்த்தை மீண்டும் ஒலிக்கும்? இங்கேயில்லை. இங்கே போதிய அமைதியில்லை’’ என கவிஞர் டி.எஸ்.எலியட் கேட்கிறார்.

நல்ல வேளையாக என்னுடைய கேட்கும் கருவியில், சுற்றுப்புற ஒலியை நிறுத்திவிட்டு, என் எதிரே பேசுபவரின் ஒலியை மட்டும் கேட்கக் கூடிய ஓர் அமைப்புள்ளது. இதைப் போன்று, நம்மைச் சுற்றியும் ஒலியிருந்த போதும் நம் ஆன்மாவை அமைதிப்படுத்தி கவனித்தால், தேவனுடைய மெல்லிய அமர்ந்த சத்தத்தைக் கேட்க முடியும். (1 இரா. 19:11-12).

தேவன் அனுதினமும் நம்மோடு பேசுகிறார். நம்முடைய அமைதியற்ற ஏக்கங்களின் போது நம்மை அழைக்கிறார். அவர் நம்முடைய ஆழ்ந்த கவலையிலும், முற்றுப் பெறாத நிலைகளிலும், நம் மகிழ்ச்சியில், நிறைவைக் காண முடியாத வேளைகளிலும் நம்மை அழைக்கின்றார்.

அடிப்படையில், தேவன் அவருடைய வார்த்தையின் மூலம் பேசுகின்றார். (1 தெச. 2:13). அவருடைய வேதத்தைக் கையிலெடுத்து வாசிக்கும் போது நீயும் அவருடைய சத்தத்தைக் கேட்கலாம். நீ நினைப்பதையும் விட அதிகமாக அவர் உன்னை நேசிக்கிறார். அவர் உனக்கு என்ன சொல்ல விரும்புகிறாரோ அதை நீ கேட்கும்படி விரும்புகிறார்.