கடந்த டிசம்பர் மாதத்தில் நான் என் குடும்பத்தோடு மலைப் பகுதிக்குச் சென்றோம். நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுதும் வெப்பமண்டலப் பகுதியிலேயே வாழ்ந்ததால் முதல் முறையாக நாங்கள் உறைந்த பனியையும்  அதன் அற்புத அழகையும் காண முடிந்தது. வெள்ளை போர்வை போர்த்தியதைப் போல காட்சியளித்த வயல் வெளிகளைக் கண்ட எனது கணவர், “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல வெண்மையாகும்” (ஏசா. 1:18) என்ற வசனத்தைக் குறிப்பிட்டார்.

சிவேரென்பதின் அர்த்தம் என்ன என்பதை எங்களுடைய மூன்று வயது மகள் கேட்டதோடு, “சிவப்பு நிறம் கெட்டதா? எனவும் கேட்டாள். பாவம் என்பது தேவன் வெறுக்கும் காரியம் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், இந்த வசனம் வெறும் நிறத்தை மட்டும் குறிப்பிடவில்லை, இங்கு தீர்க்கதரிசி விளக்குவது என்னவெனின், ஆழ்ந்த சிவப்பு நிறச்சாயம் ஒரு சிறிய பூச்சியின் முட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆடைகள் இந்த ஆழ்ந்த சிவப்பு சாயத்தில் இருமுறை சாயமேற்றப்படுகின்றன. எனவே இந்த நிறம் நிரந்தரமாக ஒட்டிவிடுகிறது. மழையோ, அல்லது எப்படித் துவைப்பதாலேயும் அந்த நிறத்தை எடுக்க முடியாது. பாவமும் அப்படியே தான். மனித முயற்சியால் நம் பாவத்தை நீக்க முடியாது. அது இருதயத்தில் பதிந்து விடும்.

தேவனால் மட்டுமே இருதயத்தை பாவத்திலிருந்து சுத்திகரிக்க முடியும். இந்த மலையைப் பார்க்கும் போது, ஒரு வியத்தகு தூய வெண்மையைக் காண்கிறோம். ஆழ்ந்த சிவப்பில் சாயமிடப்பட்ட ஒரு துணியைத் தேய்ப்பதாலோ அல்லது எந்த நிற நீக்கியினாலோ இந்த தூய வெண்மையைக் கொண்டு வரவேமுடியாது. பேதுருவின் போதகத்தை நாம் பின்பற்றும் போது, ‘உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பி குணப்படுங்கள்” (அப். 3:20) தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்து நமக்கு ஒரு புது வாழ்வைத் தருகிறார். இயேசு கிறிஸ்துவின் தியாகம் மட்டுமே நமக்கு ஒரு தூய உள்ளத்தைத் தர முடியும். இது எத்தனை பெரிய ஈவு.