வாழ்க்கைப் பாதை எப்பொழுதும் கடினமானதே. தேவன் எப்பொழுதும் இலகுவான பாதையிலே நடத்துவார் என்று நாம் எதிர்பார்த்தோமானால், நாம் பயணிக்கும் பாதை கடினமாகும் பொழுது தேவனிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக்கொள்வோம்.

நீங்கள் எப்பொழுதாவது அவ்வாறு செய்ய நினைத்திருந்தீர்களானால், இஸ்ரவேல் மக்களை நினைத்துக் கொள்ளுங்கள். பல நூறு ஆண்டுகளாக எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று, வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு பயணம் செய்தபொழுது, தேவன் எளிதான நேர்வழியில் அவர்களை நடத்தவில்லை. “பெலிஸ்தரின் தேசவழியாய் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தவில்லை” (யாத். 13:17). அதற்கு மாறாக வனாந்தர மார்க்கமாக கடினமான பாதை வழியாய் நடத்தினார். குறுக்குப்பாதையில் செல்வதைத் தவிர்த்து, யுத்தத்தைக் காணவிடாமல் வழிநடத்தினார் (வச.17). ஆனால், சுற்றுப்பாதையின் வழியாகச் சென்றபொழுது மாபெரும் கிரியைகளைக் கண்டார்கள்.

வனாந்தர மார்க்கமாக தம்மை பின்பற்றும்படி அழைத்த, அந்த நீண்ட பயணம் செய்த காலத்தில் அவர்களைப் போதித்து பக்குவமடையச் (முதிர்ச்சியடைய) செய்தார். இலகுவான பாதை வழியாகச் சென்றிருந்தால் அது பேராபத்திற்குள் வழிநடத்தியிருக்கும். ஆனால் சுற்றுப்பாதையில் சென்ற நீண்ட பயணம் இஸ்ரவேல் மக்கள் வெற்றிகரமாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரிக்க அவர்களை ஆயத்தப்படுத்தியது.

நம் தேவன் உண்மையுள்ளவர். ஆகையால், எப்படிப்பட்ட காரியங்களை நாம் எதிரிட நேர்ந்தாலும் நம்மை வழிநடத்த அவரையே முற்றிலும் சார்ந்திருக்கலாம். எதற்காக இந்தப்பாதையின் வழியாக நம்மை நடத்துகிறார் என்பதை நாம் அறியாதிருக்கலாம். ஆனால் அந்தப்பாதையின் வழியாகச் செல்லும்பொழுது, விசுவாசத்தில் நாம் வளரவும், முதிர்ச்சியை அடையவும் அவர் நமக்கு உதவுவார் என்று முற்றிலும் அவரையே சார்ந்திருக்கலாம்.