பல ஆண்டுகளாக என் தாயார் ஞாயிறு வேதாகமப் பள்ளியில் பாடம் நடத்தியுள்ளார். ஒரு வாரம், தேவன் இஸ்ரவேலரை வனாந்தரத்திலே போஷித்ததை குறித்து விளக்க நினைத்தார். அக்குழந்தைகளுக்கு அக்கதை தத்ரூபமாய் இருக்க, “மன்னாவை” குறிக்கும்படியாய் ரொட்டியை சிறு துண்டுகளாக நறுக்கி, அதன் மேல் தேனைத் தடவினார். வேதத்தில், “அதன் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது” (யாத் 16: 31) என்று மன்னாவைக் குறித்து குறிப்பிட்டிருந்தபடியால் அவர் அவ்வாறு செய்தார்.

வானத்திலிருந்து வந்த மன்னாவை இஸ்ரவேலர் முதன்முதலில் தங்கள் கூடாரங்களுக்கு வெளியே பனியைப்போல தரையிலே படர்ந்திருக்க கண்டனர். “இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, ‘இது என்ன?’ என்றார்கள்” (வச. 15). மன் என்ற எபிரேய வார்த்தை “என்ன” என் பொருள்படுவதால், இதை மன்னா என்று அழைத்தார்கள். அதை அரைத்து ரொட்டி செய்யவும் பானைகளில் சமைக்கவும் அறிந்து கொண்டார்கள் (எண் 11:7-8). எது எப்படியோ, சீக்கிரத்தில் காலாவதி ஆகக்கூடியதாய் (வச. 19-20) சீராக தனித்தன்மையுடன் (வச. 14) கூடிய அதன் வருகை புதிராக இருந்தது (யாத் 16: 1,14).

சில சமயங்களில் ஆச்சரியமான வழிகளிலே நம்முடைய தேவைகளை தேவன் சந்திப்பார். அவர் செய்யப் போவதை நம்மால் கணிக்க இயலாது. இது, நம்முடைய எதிர்பார்ப்புகளுக்குள் அவர் கட்டப்பட்டவர் அல்ல என்பதையே நினைவுபடுத்துகிறது. அவர் இதை எப்படிச் செய்ய வேண்டும் என்று எண்ணுவதை விட்டு, அவர் மேல் நம்முடைய கண்களைப் பதிய வைத்து காத்திருந்தால், அவருடன் கூடிய உறவிலிருந்து சந்தோஷத்தையும் திருப்தியையும் கண்டடைவோம்.