இணையதளம், தொலைக்காட்சி, வானொலி, அலைபேசி மற்றும் மடிக்கணினி போன்ற சாதனங்கள் மூலம் உலகச் செய்திகள் நம்மை தாக்குகின்றன. பெரும்பாலான செய்தி குற்றம், தீவிரவாதம், போர் மற்றும் பொருளாதார பிரச்சனைகளையே விவரிப்பதாக இருக்கிறது. ஆனாலும், ஒரு மருத்துவ சாதனை அல்லது போரினால் ஏற்பட்ட வடுகள் நிறைந்த இடங்களில் சமாதானத்திற்கேதுவான நடவடிக்கைகள் போன்ற நல்ல செய்திகளும், துயரமும், விரக்தியுமான, இருளான நேரங்களில் படையெடுத்து வருகின்றன.

பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு சோர்வுற்றிருந்த ஜனங்களுக்கு பெரிதான நம்பிக்கையை கொண்டு வந்த இரண்டு மனிதர்களைப் பற்றி வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டிலே குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

இரக்கமற்ற ஒரு வல்லமையான தேசத்தை பார்த்து வருகிற தேவனுடைய நியாயத்தீர்ப்பை விவரிக்கும் பொழுது, “இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது” (வச. 1:15) என்று நாகூம் கூறினார். அச்செய்தி கொடுமையினால் ஒடுக்கப்பட்டிருந்த மக்களுக்கு நம்பிக்கை அளித்தது.

“சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன (ஏசா. 52:7) என்று ஏசாயா புத்தகத்திலும் அதற்கொத்த வார்த்தைகளை காணலாம்.

முதல் கிறிஸ்துமஸ் அன்று தேவதூதர் மேய்ப்பர்களைப் பார்த்து, “பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (லூக். 2:10-11). அவரே உங்கள் மேசியா! என்று கூறிய பொழுது, நாகூம் மற்றும் ஏசாயாவின் நம்பிக்கையளிக்கும் தீர்க்கதரிசன வார்த்தைகள் இறுதியாக நிறைவேறிற்று. நம் வாழ்வில் இதுவரையில் கூறப்பட்ட செய்திகளிலே அதிமுக்கியமான தலைப்புச்செய்தி-இரட்சகராகிய கிறிஸ்து பிறந்துள்ளார் என்பதே!