வகை  |  odb

நம்மேல் தேவனின் களிகூறுதல்

எங்களுக்கு முதல் ஆண் குழந்தை பிறந்து பதினேழு மாதங்கள் கழித்து பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பெண் குழந்தையைக் குறித்து நான் அதிக மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் ஆண் குழந்தையை பராமரிப்பது குறித்து எனக்கு ஓரளவு தெரியும், பெண் குழந்தையைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்பதினால் எனக்கு சிறிய தயக்கம் இருந்தது. நாங்கள் அவளுக்கு சாரா என்று பெயரிட்டோம். அவளைத் தூங்க வைக்கும் பொறுப்பை நான் ஏற்றதால் என் மனைவி சற்று ஓய்வெடுத்தார். ஏன் என்று தெரியவில்லை, ஆனால் அவளை தூங்கப்பண்ணும்பொருட்டு நான் “நீரே என் சூர்யோதயம்” என்ற பாடலை தேர்ந்தெடுத்து பாடினேன்.அவளை என் தோள்மீது போட்டுக்கொண்டு அப்பாடலை ரசித்துப் பாடினேன். தற்போது அவளுக்கு 20 வயதாகிறது. இன்னும் அவளை சூர்யோதயம் என்றே அழைப்பது வழக்கம்.

நாம் தூதர்கள் பாடி களிகூருவார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் தேவன் களிகூர்ந்தார் என்பதை நீங்கள் கடைசியாய் கேள்விப்பட்டது எப்போது? அதிலும் அவர் உங்களைக் குறித்து களிகூர்ந்தார் என்பதை எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா? எருசலேமுக்கான செப்பனியாவின் செய்தியில், “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார் ; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (3:17) என்று கூறுகிறார். இது எருசலேமுக்கு உரைக்கப்பட்ட செய்தியாயினும், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நம் பேரிலும் தேவன் கெம்பீரமாய் களிகூருவார். அவர் எந்த பாடலைப் பாடுவார்? வேதம் அதற்கு பதில் சொல்லவில்லை. ஆனால் அந்த பாடல் நிச்சயமாய் அவருடைய அன்பிலிருந்தே உதயமாகும். எனவே அதை உண்மையானது, ஒழுக்கமானது, நீதியுள்ளது, கற்புள்ளது, அன்புள்ளது மற்றும் நற்கீர்த்தியுள்ளது என்று நம்பலாம் (பிலிப்பியர் 4:8).

தேவன் கேட்கிறாரா?

எங்களுடைய திருச்சபை ஆராதனைக் குழுவில் நான் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, என்னுடைய வேலை என்னவெனில், ஆராதனை நேரத்தில் அட்டைகளில் எழுதிக் கொடுத்த ஜெபக்குறிப்புகளுக்காய் நாங்கள் ஜெபிக்கவேண்டும். அத்தையின் சுகத்திற்காக, தம்பதியினரின் பணத்தேவைக்காய், தன் பேரப்பிள்ளை தேவனை அறிந்துகொள்வதற்காய் என்று எழுதப்பட்டிருக்கும். இந்த ஜெபத்திற்கான பதில்களைக் குறித்த சாட்சிகளை நான் அரிதாகவே கேட்க நேர்ந்தது. அதிலும் பெரும்பாலும் யார் என்றும் என்ன விண்ணப்பம் என்றும் எனக்கு தெரிவதில்லை. தேவன் அவர்களுக்கு எப்படி பதில்கொடுக்கிறார் என்பதைக் குறித்து எனக்கு தெரியவில்லை. சில வேளைகளில், அவர் என் ஜெபத்தைக் கேட்கிறாரா? என் ஜெபத்தின் விளைவாய் ஏதாகிலும் பலன் இருக்கிறதா? என்று நானே கேட்டுக்கொள்வேன்.

நம்மில் அநேகர், “கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்கிறாரா?”என்ற கேள்வியை வாழ்நாளில் பலமுறை கேட்டிருக்கிறோம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அன்னாளைப்போல பிள்ளைக்காய் தேவ சமூகத்தில் விண்ணப்பித்து, ஆண்டுகளாய் என் விண்ணப்பத்திற்கு பதில் இல்லை. ஆயினும் என்னுடைய விண்ணப்பத்தில் என் தந்தை தேவனை விசுவாசிக்க துவங்கினார். எனினும் அதை வெளிப்படையாய் பிரதிபலிக்காமல் இறந்துவிட்டார். 

நூற்றாண்டுகளாய் நடந்தேறிய வேதத்தின் சம்பவங்களில் தேவன் பல விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்துள்ளார்: இஸ்ரவேல் அடிமைத்தனத்திலிருந்து தேவனை நோக்கிக் கூப்பிட்டபோது (யாத். 2:24) ;சீனாய் மலையில் மோசேக்கு (உபாகமம் 9:19) ; கில்காலில் யோசுவாவுக்கு (யோசுவா 10:14) ; பிள்ளைக்கான அன்னாளின் வேண்டுதலின் போது (1 சாமுவேல் 1:10-17) ; சவுலிடத்திலிருந்து தப்பிப் பிழைப்பதற்கு தாவீது விண்ணப்பித்தபோது (2 சாமுவேல் 22:7) என்று பல விண்ணப்பங்களுக்கு தேவன் பதிலளித்துள்ளார். 

1 யோவான் 5:14ன்படி, நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார். செவிகொடுக்கிறார் என்றால், கூர்ந்து கவனித்து கேட்டதற்கேற்றபடி பதில் கொடுக்கிறார் என்று அர்த்தம். 

கர்த்தர் செவிகொடுக்கிறவர் என்று சரித்திரத்தில் தேவ ஜனத்திற்கு இருந்த நம்பிக்கையை இன்று நாம் தேவ சமுகத்திற்கு போகும்போது தரித்துக்கொள்வோம். அவர் நம் விண்ணப்பத்திற்கு செவிகொடுக்கிறவர். 

உபத்திரவத்தின் நோக்கம்

“இது என்னுடைய தவறாய் இருக்க வாய்ப்பில்லை என்று சொல்லவருகிறீர்களா?” அந்த பெண்மணியின் வார்த்தைகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்களுடைய திருச்சபையில் சிறப்பு பிரசங்கியாராய் நின்று, என்ன பிரசங்கிப்பது என்பதைக் குறித்து கலந்தாலோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர், “எனக்கு நாள்பட்ட நோய் உள்ளது, அதற்காக நான் ஜெபித்து, உபவாசம் இருந்து, என் பாவங்களை அறிக்கையிட்டு, நோய் தீர இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன். ஆனாலும் அந்த நோய் என்னை விட்டு அகன்றபாடில்லை, ஆகையால் அது என் பாவமாகவே இருக்கவேண்டும்” என்று சொன்னார்.

அந்த பெண்ணின் அறிக்கைக்காய் நான் வேதனைப்பட்டேன். பிரச்சனையைத் தீர்க்கும் ஆவிக்குரிய சூத்திரம் செயல்படவில்லை என்பதை அறிந்ததும், அவள் தன்னையே குற்றப்படுத்திக்கொள்ளுகிறாள். உபத்திரவத்திற்கு இதுபோன்ற சூத்திரங்கள் செல்லுபடியாகாது என்பது காலாகாலமாய் நிரூபிக்கப்பட்ட ஒன்று. 

நீங்கள் உபத்திரப்படுகிறீர்களென்றால் ஏதேனும் பாவம் செய்திருக்கவேண்டும் என்று கருதுவது மிகவும் பழைய சூத்திரம். யோபு தனக்குண்டான கால்நடைகள், பிள்ளைகள், மற்றும் சரீர பெலன் ஆகியவற்றை இழந்து நிர்க்கதியாய் நின்றபோது, அவனுடைய நண்பர்கள் இந்த சூத்திரத்தை பயன்படுத்தினர். யோபுவின் பாவத்தை சந்தேகித்த எலிப்பாஸ், “சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ?” என்று கேட்கிறார் (யோபு 4:7). பில்தாத்தும், யோபுவின் குமாரர்கள் மரித்ததற்கு காரணம் அவர்களுடைய பாவமே என்று குற்றப்படுத்துகிறார் (8:4). யோபுவின் உபத்திரவத்திற்கான சரியான காரணத்தை அறிய முற்படாமல் (1:6-2:10), அவர்களுடைய இலகுவான சூத்திரங்களை வைத்து அவனை நியாயந்தீர்த்ததினால் தேவனுடைய கடிந்துகொள்ளுதலுக்கு பாத்திரவான்களாகின்றனர் (42:7). 

அழியக்கூடிய இந்த உலகத்தில் உபத்திரவம் என்பது வாழ்க்கையின் ஓர் அங்கம். யோபுவைப் போல அதை தேவன் ஏன் நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார் என்பதை ஒருவேளை நாம் அறியாமலிருக்கலாம். ஆனால் நீங்கள் அனுபவிக்கும் அந்த வலியைக் கடந்து தேவன் உங்கள் வாழ்க்கையில் ஒரு நோக்கம் வைத்திருக்கிறார். இலகுவான சூத்திரங்களை நம்பி சோர்ந்துபோகாதீர்கள். 

பிரித்தெடுத்தல்

“டக் டக்ஸ்” அல்லது “ஆட்டோ” என்று சொல்லப்படுகிற இந்தியாவின் மூன்று சக்கர வாகனங்கள் பெரும்பாலானவர்கள் பயணத்திற்கு வசதியாக இருக்கும். சென்னையில் வாழும் மாலா என்னும் பெண், ஆட்டோவை ஒரு மிஷன் பணித்தளமாய் பார்த்தாள். ஒரு நாள் ஆட்டோவில் ஏறி, சகஜமாய் பழகி, மார்க்கத்தைப் பற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஓட்டுநர் ஒருவரைக் கண்டாள். அடுத்த முறை அவரை சந்திக்கும்போது அவருக்கு சுவிசேஷத்தை சொல்லிவிட வேண்டும் என்றுஅவள் இருதயத்தில் தீர்மானித்தாள்.

“தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய” என்ற பவுலின் அறிக்கையோடே ரோமர் நிருபம் துவங்குகிறது (ரோமர் 1:1). சுவிசேஷத்தைக் குறிக்கும் “இவாஞ்சிலியோன்” என்னும் கிரேக்கப் பதத்திற்கு “நற்செய்தி” என்று பொருள். தேவனுடைய சுவிசேஷத்தைக் கூறுவதே தன்னுடைய நோக்கம் என்பதை பவுல் கூறுகிறார். 

அந்த நற்செய்தி என்ன? அது தேவனுடைய குமாரனைக் குறித்த நற்செய்தி என்று ரோமர் 1:3 சொல்லுகிறது. அந்த நற்செய்தியே, இயேசு! நம்முடைய பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை விடுதலையாக்கவே இயேசு வந்திருக்கிறார் என்னும் செய்தியை அறிவிக்கும் பாத்திரங்களாய் தேவன் நம்மை தெரிந்தெடுத்திருக்கிறார். என்னே தாழ்மையான சத்தியம்!

நற்செய்தியை பகிர்ந்துகொள்வது, கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சிலாக்கியம். மற்றவர்களை இந்த விசுவாசத்திற்கு உட்படுத்த நாம் கிருபை பெற்றிருக்கிறோம் (வச.5-6). நாம் ஆட்டோவில் பயணித்தாலும் அல்லது எங்கே இருந்தாலும், நம்மை சுற்றியுள்ள மக்களிடம் சுவிசேஷத்தின் ஆச்சரியமான செய்தியை பகிர்ந்துகொள்ள தேவன் நம்மை பிரித்தெடுத்திருக்கிறார். மாலாவைப் போல ஒவ்வொரு நாளும் இயேசுவைக் குறித்த நற்செய்தியை அறிவிக்க நாமும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள பிரயாசப்படுவோம். 

சோதித்தல்

முதன்முறையாக என்னுடைய மகன்களை 14,000 அடி உயரமுள்ள மலையேற்றத்திற்கு கூட்டிச்செல்லும்போது அவர்கள் சற்று பதட்டமாய் காணப்பட்டனர். அவர்களால் அதைச் செய்ய முடியுமா? அவர்கள் அந்த சவாலுக்கு ஒத்துக்கொண்டார்களா? என்னுடைய இளைய மகன், வழியில் நின்று அதிக நேரம் ஓய்வெடுத்தான். “அப்பா, இனி மேல் என்னால் போகமுடியாது” என்று திரும்ப திரும்பச் சொன்னான். ஆனால் இந்த பயணம் அவர்களுக்கு நன்மையானது என்று நம்பினேன், அவர்கள் என்னை நம்பவேண்டும் என்றும் விரும்பினேன். தன்னால் இனி போகவே முடியாது என்று கூறிய என்னுடைய மகன், சிகரத்தின் உச்சிக்கு ஒரு மைல் தொலைவில் எங்களை முந்திக்கொண்டு ஆர்வமாய் ஓடினான். அவனுடைய பயத்தின் மத்தியிலும் அவன் என்னை நம்பினதைக் குறித்து அவன் சந்தோஷப்பட்டான்.

மலையேற்றத்தின்போது ஈசாக்கு தன் தகப்பன் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் குறித்து நான் வியப்படைவதுண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக தன் மகனின் மீது கத்தியை ஓங்கிய ஆபிரகாம் தன் தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் குறித்து நான் அசந்துவிட்டேன் (ஆதியாகமம் 22:10). அவனுடைய குழப்பமான, பதைபதைக்கும் நிலையிலும் ஆபிரகாம் கீழ்ப்படிந்தான். அதிர்ஷ்டவசமாய் ஒரு தேவ தூதன் அவனைத் தடுத்துவிட்டான். “பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே” (வச.12) என்றும் சொன்னான். ஈசாக்கு மரிப்பது தேவ சித்தமல்ல. 

இந்த சம்பவத்தையும் நம் வாழ்க்கையையும் கவனத்துடன் ஒப்பிடும்போது, துவக்க வரிகளை நினைவுகூருவது அவசியம்: “தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்” (வச. 1). இந்த சோதனையின் மூலம் ஆபிரகாம் எந்த அளவிற்கு தேவனை விசுவாசித்தான் என்பதை அறிந்துகொண்டான். தேவனுடைய அன்பான இருதயத்தையும் அவருடைய தேவையை சந்திக்கும் குணத்தையும் புரிந்துகொண்டான். 

நம்முடைய குழப்பமான, இருளான, சோதிக்கப்படும் தருணங்களில் நம்மைக் குறித்தும் தேவனைக் குறித்தும் நாம் கற்றுக்கொள்ளுகிறோம். மேலும் அந்த சோதனைகளின் மூலம் தேவன் மீது இன்னும் ஆழமான நம்பிக்கை வைக்க முடியும்.