உறவுகளை ஒப்புரவாக்குதல்
சிறுவயதில் நானும் என் சகோதரியும் அடிக்கடி மோதிக் கொண்டேயிருப்போம். அதில் ஒரு குறிப்பிட்ட தருணம் என் நினைவில் இன்னும் இருக்கிறது. நாங்கள் இருவரும் சத்தத்தை உயர்த்தி ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருந்தவேளையில், அவள் சொன்ன ஒரு காரியம் என்னால் மன்னிக்கவே முடியாத வகையில் இருந்தது. எங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பகைமையைக் கண்ட என் பாட்டி, “தேவன் உங்களுக்கு வாழ்க்கையில் ஒரேயொரு சகோதரியைத் தான் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பரிவு காண்பிக்க பழக வேண்டும்” என்று ஒருவரையொருவர் நேசிக்க வேண்டிய எங்களது பொறுப்பை எங்களுக்கு எடுத்துச் சொன்னார். எங்களை அன்பினாலும் புரிதலினாலும் நிரப்பும்பொருட்டு தேவனிடத்தில் நாங்கள் ஜெபித்தபோது, ஒருவரையொருவர் நாங்கள் எந்தவிதத்தில் காயப்படுத்தினோம் என்பதையும் எப்படி மன்னிக்கவேண்டும் என்பதையும் தேவன் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.
கோபத்தையும் கசப்பையும் உள்ளுக்குள் வைத்திருப்பது சாதாரணமாய் தெரியலாம். ஆனால் தேவனின் துணையோடு நம்முடைய எரிச்சலின் ஆவியை விட்டுவிட்டு, தேவன் கொடுக்கும் சமாதானத்தை நாம் உணரவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (எபேசியர் 4:31). இந்த மாம்சத்தின் உணர்வுகளுக்கு அடிமைப்படாமல், கிறிஸ்துவை மாதிரியாய் வைத்து, ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை மன்னித்ததுபோல, நாமும் ஒருவருக்கொருவர் மன்னிப்பை செயல்படுத்துவோம் (வச. 32). நமக்கு மன்னிப்பது கடினமாய் தோன்றினால், அவர் ஒவ்வொரு நாளும் நமக்கு அருளும் கிருபையை நாம் சார்ந்துகொள்வோம். நாம் எத்தனை முறை விழுந்தாலும், அவர் கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை (புலம்பல் 3:22). தேவன் நம்முடைய இருதயங்களில் இருக்கும் கசப்பை நீக்குவதற்கு நமக்கு உதவிசெய்வார். அதினால் நாம் நம்பிக்கையோடு அவருடைய அன்பிற்கு உட்பட்டவர்களாய் நிலைத்திருப்போம்.

மலைமுகடுகளின் பாதை
ஒரு கவிஞரும், ஆன்மீக எழுத்தாளருமான கிறிஸ்டினா ரோசெட்டி, தனக்கு எதுவும் எளிதில் வரவில்லை என்பதை உணர்ந்தார். அவள் தனது வாழ்நாள் முழுவதும் மனச்சோர்வு மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார். அவளுடைய வாழ்க்கையில் மூன்று நிச்சயதார்த்தங்கள் நிறுத்தப்பட்ட துக்கத்தை தாங்கினார். இறுதியில் அவள் புற்றுநோயால் மரித்துப்போனாள்.
தாவீது இஸ்ரவேலின் ராஜரீகத்தில் அமர்த்தப்பட்டபோது, அவன் ஒரு வெற்றிகரமான போர்வீரனாக அடையாளப்படுத்தப்பட்டான். ஆனால் அவனுடைய வாழ்நாள் முழுவதிலும் அவன் பாடுகளை சகிக்கவேண்டியிருந்தது. அவனுடைய ஆட்சியின் இறுதியில், அவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாயிருந்த நபர்களோடு சேர்ந்து அவனுடைய சொந்த குமாரனே அவனுக்கு விரோதமாய் திரும்பினான் (2 சாமுவேல் 15:1-12). ஆகையினால் தாவீது ஆசாரியனாகிய அபியாத்தார், சாதோக் மற்றும் தேவனுடைய உடன்படிக்கை பெட்டியையும் எடுத்துக்கொண்டு எருசலேமை விட்டு ஓடினான் (வச. 14,24).
அபியாத்தார் தேவனுக்கு பலிகளை செலுத்திய பின்பு, தாவீது ஆசாரியர்களைப் பார்த்து, “தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார்” (வச. 25) என்று சொன்னான். அவனுடைய குழப்பத்தின் மத்தியிலும் தாவீது, “(தேவன்) உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்” (வச. 26). அவனால் தேவனை நம்ப முடியும் என்பதை அறிந்திருந்தான்.
கிறிஸ்டினா ரோசெட்டி தேவனை நம்பினாள். அவளுடைய வாழ்க்கை நம்பிக்கையோடு நிறைவடைந்தது. நாம் கடந்து செல்லும் பாதையானது, மலைமுகடுகளாய் தென்படலாம். ஆனால் அங்கே நம்மை விரிந்த கைகளோடு வரவேற்கும் நம்முடைய பரமபிதா நமக்காய் காத்திருக்கிறார்.

துதியின் கண்ணீர்
சில ஆண்டுகளுக்கு முன்னால் மருத்துவமனையில் மிகுந்த சரீர பெலவீனத்தோடு இருந்த என்னுடைய தாயாரை நான் பராமரிக்கவேண்டியிருந்தது. அவருடைய கடைசி நான்கு மாதங்கள் அவரை பராமரிக்க கர்த்தர் எனக்கு உதவிசெய்தார். அவருடைய இழப்பின் துக்கத்தை தாங்கும்பொருட்டு தேவன் என்னை பெலப்படுத்தவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். என்னுடைய இந்த பல்வேறு போராட்டங்களின் மத்தியில் தேவனை துதிக்க பிரயாசப்பட்டேன். ஆனாலும் என்னுடைய தாயார் தன்னுடைய இறுதி மூச்சை விடும் வேளையில் நான் கட்டுப்பாட்டை மீறி, “அல்லேலூயா” என்ற முணுமுணுத்தேன். சில ஆண்டுகள் கழித்து சங்கீதம் 30ஐ நான் வாசிக்கும் வரையில், அந்த இக்கட்டான வேளையில் நான் தேவனுக்கு நன்றி சொல்லி துதித்ததைக் குறித்து நான் குற்றமனசாட்சியுடன் இருந்தேன்.
ஆலயப் பிரதிஷ்டையின்போது பாடப்பட்ட இந்த சங்கீததத்தில், தாவீது தேவனுடைய கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் நன்றிசெலுத்துகிறார் (வச. 1-3). அவருடைய பரிசுத்த நாமத்தை துதியுங்கள் என்று மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறார் (வச. 4). மேலும் தேவன் கஷ்டத்தையும் நம்பிக்கையையும் எவ்விதம் ஒன்றாகப் பிணைக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார் (வச. 5). துக்கம், மகிழ்ச்சி, பாதுகாப்பு மற்றும் திகைப்பு என்று பல உணர்வுகளை பகிர்கிறார் (வச. 6-7). தேவனுடைய உதவிக்காக ஏறெடுக்கப்பட்ட அவருடைய கதறல்கள், தேவன் மீதான அவருடைய நம்பிக்கையை காண்பிக்கிறது (வச. 7-10). தாவீதின் அழுகை, நடனம், துக்கம் மற்றும் மகிழ்ச்சியின் தருணங்களோடு அவரது துதி சத்தமும் பின்னிப்பிணைக்கப்பட்டுள்ளது (வச. 11). பாடுகளை சகித்துக்கொள்வதின் இரகசியத்தையும், சிக்கலான தன்மையையும் ஒப்புக்கொள்வது போலவும், தேவனுடைய கிருபையை முற்றிலும் சார்ந்துகொண்டு, தாவீது தேவனுக்கு தன்னுடைய பக்தியை பிரதிபலித்தான் (வச. 12).
தாவீதைப் போல நாமும் “என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்” (வச. 12) என்று பாடலாம். நாம் மகிழ்ச்சியாயிருக்கிறோமோ அல்லது காயப்பட்டிருக்கிறோமோ, தேவன் மீதான நம்முடைய நம்பிக்கையை பிரதிபலிக்கச்செய்து, மகிழ்ச்சியான துதி சத்தத்தோடும் கண்ணீரின் துதிகளோடும் அவருக்கு நன்றி செலுத்தக்கடவோம்.

தேவன் நம்மோடு பேசுகிறார்
அறியாத ஒரு எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. பொதுவாய் அதுபோன்ற அழைப்புகளை நான் எடுப்பதில்லை. ஆனால் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அதில் பேசிய நபர், ஒரு சிறிய வேதாகம செய்தியை ஒரு நிமிடத்தில் பகிர்ந்துகொள்ளலாமா என்று கேட்டார். அவர் வெளிப்படுத்தல் 21:3-5இல் உள்ள “கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்” என்ற வசனத்தைக் குறிப்பிட்டு, இயேசுவைக் குறித்தும் அவர் நமக்குக் கொடுக்கும் நிச்சயத்தைக் குறித்தும் குறிப்பிட்டார். நான் இயேசுவை ஏற்கனவே என் சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டேன் என்று சொன்னேன். அவர் அதை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. நான் அவரோடு சேர்ந்து ஜெபிக்க அவர் விரும்பினார். அவர் எனக்காய் ஜெபிக்கும்போது, என்னுடைய ஊக்கத்திற்காகவும் பெலத்திற்காகவும் ஜெபித்தார்.
அந்த அழைப்பானது வேதத்தில் இடம்பெற்றுள்ள, சிறுவன் சாமுவேலின் அழைப்பை எனக்கு நினைவுபடுத்தியது (1 சாமுவேல் 3:4-10). சாமுவேல் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, அது ஆசாரியனாகிய ஏலியின் சத்தம் என்று நினைத்துக்கொண்டான். ஆனால் ஏலியின் ஆலோசனையின் பேரில் கடைசி முறை தேவனுடைய சத்தத்தைக் கேட்ட மாத்திரத்தில், “சொல்லும்; அடியேன் கேட்கிறேன்” (வச. 10) என்று பதில் சொன்னான். அதுபோல இரவும் பகலும் தேவன் நம்மோடு பேசக்கூடும். நாம் அவருடைய சத்தத்தை உடனே அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென்றால், அவருடைய சமூகத்தில் அதிக நேரம் செலவழிக்கிறவர்களாய் இருக்கவேண்டும்.
அந்த அழைப்பை நான் வேறொரு கோணத்திலும் சிந்தித்தேன். நாம் மற்றவர்களுக்கு தேவனுடைய தூதுவர்களாகவும் செயல்பட நேரிடலாம். நாம் மற்றவர்களுக்கு எந்தவிதத்தில் உதவிசெய்யக் கூடும் என்று எண்ணத் தோன்றலாம். தேவனுடைய ஆலோசனையோடு, யாரையாவது தொலைபேசியில் அழைத்து, “நான் உங்களுக்காக இன்று ஜெபிக்கலாமா?” என்ற கேட்க முற்படலாம்.

வாய்ப்பை பயன்படுத்திக்கொள்
இருபது வயது நிரம்பிய ஷின் யி, பல்கலைக்கழகத்திற்கு போவதற்கு முன்னர் தன்னுடைய மூன்று மாத விடுமுறையில், இளைஞர் ஊழிய இயக்கத்தில் சேர்ந்து ஊழியம் செய்ய விரும்பினாள். ஆனால் கோவிட்-19 தொற்று பரவிய நாட்களில் ஒருவரையொருவர் நேரில் சந்திப்பது சாத்தியமில்லாததாய் தோன்றியது. ஆனால் ஷின் யி விரைவில் அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தார். “நாங்கள் வழக்கம் போல் தெருக்கள், வணிக வளாகங்கள், துரித உணவு மையங்கள் போன்ற இடங்களில் மாணவர்களைச் சந்திக்க முடியவில்லை. ஆனால் நாங்கள் ஸ_ம் செயலி வழியாக கிறிஸ்தவ மாணவர்களுடன் ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கவும், மற்ற மக்களிடம் தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம்” என்று சொன்னாள்.
அப்போஸ்தலர் பவுல் தீமோத்தேயுவை செய்யும்படிக்கு உற்சாகப்படுத்தியதை ஷின் யி செய்தாள்: “சுவிசேஷகனுடைய வேலையைச் செய்” (2 தீமோத்தேயு 4:5). கேட்கப்படவேண்டிய சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும் (வச. 3-4) என்று பவுல் தொடர்ந்து எச்சரிக்கிறார். ஆகையால் தீமோத்தேயு “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ண” ஆயத்தமானான். “எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்ல” (வச. 2) தீமோத்தேயு தயாரானான்.
நாம் எல்லோருக்கும் சுவிசேஷக அழைப்போ அல்லது பிரசங்கம்பண்ணும் பிரத்யேகமான அழைப்போ இல்லாதபோதிலும், நம்மை சுற்றியிருக்கிற மக்களுக்கு சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளலாம். இயேசுவை நம்பாமல் அவிசுவாசிகள் அழிந்துபோகின்றனர். விசுவாசிகளுக்கு பெலனும் உற்சாகமும் தேவைப்படுகிறது. தேவனுடைய உதவியோடு, சமயம் வாய்த்தாலும் வாய்க்கவிட்டாலும் திருவசனத்தை ஜாக்கிரதையாய் பிரசங்கம்பண்ணுவோம்.