வகை  |  odb

தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

முகநூலில் "பிடித்திருக்கிறது" என்பதற்கு அடையாளமான அந்த விருப்ப குறி பொத்தான் முகநூலின் ஆரம்பத்திலிருந்தே இருப்பது போலத் தோன்றும். ஆனால் அது 2009 இல் தான் நடைமுறைக்கு வந்தது.

இந்த 'விருப்ப' பொத்தானை வடிவமைத்த ஜஸ்டின் ரோசன்ஸ்டைன் கூறுகையில், 'ஒருவரையொருவர் கிழித்து கீழ்த்தள்ளும் உலகத்திற்கு மாறாக, ஊக்கப்படுத்தி உயர்த்தும்' ஒரு உலகை உருவாக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு, பயனாளர்களை இந்த சமூக ஊடகத்தின் அடிமையாக்கிய விளைவைக் கண்டு ரோசன்ஸ்டைன் வருந்தினார்.

ரோசன்ஸ்டைனின் இந்த படைப்பு, நமது இணைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான அடிப்படைத் தேவையை வெளிப்படுத்துவதாக நான் எண்ணுகிறேன். பிறர் நம்மை அறியவும், கவனிக்கவும், விரும்பவும் வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். 'விருப்ப' பொத்தான்தான் புதியது, ஆனால் அறிவதற்கும், அறியப்படுவதற்குமான நமது விருப்பம், தேவன் மனிதனை உண்டாக்கிய நாள் தொட்டே உள்ளது.

இன்றும், 'விருப்ப' பொத்தான் நமது விருப்பத்தைத் தனிக்கவில்லை. சரிதானே? அதிர்ஷ்டவசமாக மின்னியல் அங்கீகாரத்தை விட, மிக ஆழமாக நேசிக்கும் தேவனை நாம் ஆராதிக்கிறோம். எரேமியா 1:5 ல் தனக்கென்று தீர்க்கதரிசியை அழைக்கையில், அதில் உள்ள ஆழ்ந்த நோக்கத்தையும், பிணைப்பையும் காண்கிறோம். "நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி"

கருவுறுதலுக்கு முன்பே தீர்க்கதரிசியைத் தேவன் அறிந்திருந்தார். மேலும் அர்த்தமுள்ள, நோக்கம் நிறைந்த வாழ்க்கைக்காக அவரை வடிவமைத்தார் (வ. 8-10). நம்மை மிகவும் நெருக்கமாக அறிந்த, நேசிக்கும், விரும்பும் இந்த தகப்பனை நாம் அறிகையில், அவர் நம்மையும் ஒரு நோக்கமுள்ள வாழ்க்கைக்கு அழைக்கிறார்.

தாகமும், நன்றியுள்ளமும்

நானும்  என் இரண்டு நண்பர்களும் ஒரு மலைப்பாதையில் சாகச பயணம் செய்ய விரும்பினோம். அதற்கு முன், எங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கும் போது போதுமான தண்ணீர் இருக்கிறதா என்று நாங்கள் சந்தேகப்பட்டதுபோலவே, அது வேகமாகத் தீர்ந்தது. விளிம்பை அடைய இன்னும் சில தூரமிருந்த நிலையில் நாங்கள் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தோம். மூச்சுத் திணறி ஜெபத்துடன் சுவாசித்தோம்.  பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி வருகையில், ஒரு அதிசயம் நடந்தது. மூன்று தண்ணீர் பாட்டில்கள் பாறையில் ஒரு பிளவில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம், “உங்களுக்கு இது தேவை என்று தெரியும். மகிழுங்கள்!” என்று ஒரு குறிப்புமிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு, தேவனுக்கு நன்றி சொல்லி, மிகவும் தேவையான நீரைப் பருகி, கடைசிக் கட்டத்திற்குப் பயணித்தோம். நான் என் வாழ்நாளில் இவ்வளவு தாகமாகவும், நன்றியுடனும் இருந்ததில்லை.

சங்கீதக்காரனுக்கு மலையேறிய அனுபவம் இல்லை. ஆனால் ஒரு மானுக்குத் தாகமெடுக்கையில் எவ்வாறு செயல்படும் என்பதை அவர் அறிந்திருந்தார்.  (சங்கீதம் 42:1) தாகத்தாலும், பசியாலும், மானானது உயிர் பிழைப்பதற்காக நீரோடையை வாஞ்சித்துக் கதறுகிறது போல , "என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" (வ.1) என தேவனுக்கான அவனது விருப்பத்தை அவன் வெளிப்படுத்துகிறான்.

மிகவும் தேவையான நீரைப் போலவே, தேவன் நமக்கு எப்போதும் இருக்கும் உதவியாளர். நாம் அவருக்காக ஏங்குகிறோம், ஏனெனில் அவர் நமது சோர்ந்துபோன வாழ்க்கைக்குப் புதுப்பிக்கப்பட்ட பெலனையும், புத்துணர்ச்சியையும் தருகிறார், அனுதின பயணத்தில் எதுவாயிருந்தாலும்  நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

 

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, ​​​​சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், ​​அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், ​​அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, ​​இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம்.

 

தாராளமாக கொடுக்கப்பட்டது மற்றும் பகிரப்பட்டது

நானும் என் மனைவியும் எங்கள் உயர்கல்வியை முடித்தபோது, ​​குறைந்த வட்டி விகிதத்தில் ஒருங்கிணைக்க வேண்டிய கடன் நிறைய இருந்தது. நாங்கள் உள்ளூர் வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்தோம், ஆனால் நாங்கள் நீண்ட காலமாக அந்த நகரத்தில் வசிக்கவோ, வேலையோ  செய்யவில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டோம். சில நாட்களுக்குப் பிறகு, எங்கள் சபையின் மூப்பராக இருந்த என் நண்பரிடம் நடந்ததைச் சொன்னேன். "நான் இதை என் மனைவியிடம் குறிப்பிட விரும்புகிறேன்," என்று அவர் போகும்போது சொல்லிவிட்டுச் சென்றார்.

சில மணி நேரம் கழித்து,அலைபேசி அழைத்தது. அது என் நண்பன்தான், “நானும் என் மனைவியும் உனக்குத் தேவையான பணத்தை வட்டியில்லாக் கடனாகக் கொடுக்க விரும்புகிறோம்,” என்று அவர் முன்வந்தார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, அதனால், "அப்படி உங்களிடம் நான் கேட்கக் கூடாது" என்று பதிலளித்தேன். "நீ கேட்கவில்லை!" என் நண்பர் தமாஷாகப் பதிலளித்தார். அவர்கள் இரங்கி எங்களுக்குக் கடனைக் கொடுத்தார்கள், நானும் என் மனைவியும் எங்களால் முடிந்தவரை விரைவாகத் திருப்பிச் செலுத்தினோம்.

இந்த நண்பர்களின் தாராள குணத்திற்குத் தேவன் மீதான அவர்களின் அன்பே  காரணமென்று நான் நம்புகிறேன். "இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்" (சங்கீதம் 112:5) என்று வேதாகமம் சொல்வதுபோல, கர்த்தரை நம்புகிறவர்களின் இருதயம் "திடனாயிருக்கும்" ,"உறுதியாயிருக்கும்" (வச. 7-8) .ஆகவே அவர்களின் வாழ்வில் நடக்கும் எல்லா நன்மைகளுக்கும் தேவன் தான் ஆதாரம் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

தேவன் நமக்கு வாழ்வையும் மன்னிப்பையும் கொடுப்பதில் தாராளமாக இருக்கிறார். நாமும் அவருடைய அன்பையும் நமக்குள்ளவற்றையும்  தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் தாராளமாக இருப்போம்.