எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சோச்சில் டிக்ஸன்கட்டுரைகள்

துதியின் கண்ணீர்

சில ஆண்டுகளுக்கு முன்னால் மருத்துவமனையில் மிகுந்த சரீர பெலவீனத்தோடு இருந்த என்னுடைய தாயாரை நான் பராமரிக்கவேண்டியிருந்தது. அவருடைய கடைசி நான்கு மாதங்கள் அவரை பராமரிக்க கர்த்தர் எனக்கு உதவிசெய்தார். அவருடைய இழப்பின் துக்கத்தை தாங்கும்பொருட்டு தேவன் என்னை பெலப்படுத்தவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். என்னுடைய இந்த பல்வேறு போராட்டங்களின் மத்தியில் தேவனை துதிக்க பிரயாசப்பட்டேன். ஆனாலும் என்னுடைய தாயார் தன்னுடைய இறுதி மூச்சை விடும் வேளையில் நான் கட்டுப்பாட்டை மீறி, “அல்லேலூயா” என்ற முணுமுணுத்தேன். சில ஆண்டுகள் கழித்து சங்கீதம் 30ஐ நான் வாசிக்கும் வரையில், அந்த இக்கட்டான வேளையில் நான் தேவனுக்கு நன்றி சொல்லி துதித்ததைக் குறித்து நான் குற்றமனசாட்சியுடன் இருந்தேன். 

ஆலயப் பிரதிஷ்டையின்போது பாடப்பட்ட இந்த சங்கீததத்தில், தாவீது தேவனுடைய கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் நன்றிசெலுத்துகிறார் (வச. 1-3). அவருடைய பரிசுத்த நாமத்தை துதியுங்கள் என்று மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறார் (வச. 4). மேலும் தேவன் கஷ்டத்தையும் நம்பிக்கையையும் எவ்விதம் ஒன்றாகப் பிணைக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார் (வச. 5). துக்கம், மகிழ்ச்சி, பாதுகாப்பு மற்றும் திகைப்பு என்று பல உணர்வுகளை பகிர்கிறார் (வச. 6-7). தேவனுடைய உதவிக்காக ஏறெடுக்கப்பட்ட அவருடைய கதறல்கள், தேவன் மீதான அவருடைய நம்பிக்கையை காண்பிக்கிறது (வச. 7-10). தாவீதின் அழுகை, நடனம், துக்கம் மற்றும் மகிழ்ச்சியின் தருணங்களோடு அவரது துதி சத்தமும் பின்னிப்பிணைக்கப்பட்டுள்ளது (வச. 11). பாடுகளை சகித்துக்கொள்வதின் இரகசியத்தையும், சிக்கலான தன்மையையும் ஒப்புக்கொள்வது போலவும், தேவனுடைய கிருபையை முற்றிலும் சார்ந்துகொண்டு, தாவீது தேவனுக்கு தன்னுடைய பக்தியை பிரதிபலித்தான் (வச. 12).

தாவீதைப் போல நாமும் “என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்” (வச. 12) என்று பாடலாம். நாம் மகிழ்ச்சியாயிருக்கிறோமோ அல்லது காயப்பட்டிருக்கிறோமோ, தேவன் மீதான நம்முடைய நம்பிக்கையை பிரதிபலிக்கச்செய்து, மகிழ்ச்சியான துதி சத்தத்தோடும் கண்ணீரின் துதிகளோடும் அவருக்கு நன்றி செலுத்தக்கடவோம். 

தேவனின் சத்தத்தை அறிதல்

பல வருட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, ஓநாய்கள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்வதற்குத் தனித்துவமான குரல்களைக் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் அறிந்துகொண்டனர். ஒரு குறிப்பிட்ட ஒலி பகுப்பாய்வு குறியீட்டைப் பயன்படுத்தி, ஒரு பெண் ஓநாயின் ஊளையில் உள்ள பல்வேறு சப்த அளவுகள் மற்றும் சுருதிகள் குறிப்பிட்ட ஓநாய்களை 100 சதவீத துல்லியத்துடன் அடையாளம் காண உதவியது என்பதை ஒரு விஞ்ஞானி உணர்ந்தார்.

தேவன் தனது பிரியமான படைப்புகளின் தனித்துவமான குரல்களை அறிந்துகொண்டதற்கான பல உதாரணங்களை வேதாகமம் காட்டுகிறது. அவர் மோசேயை பெயர் சொல்லி அழைத்து நேரடியாகப் பேசினார் (யாத்திராகமம் 3:4-6). சங்கீதக்காரன் தாவீது, "நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார்" (சங்கீதம் 3:4) என்று அறிவித்தார். தேவனுடைய ஜனங்கள் அவருடைய குரலை அறிந்துகொள்வதின் அவசியத்தை அப்போஸ்தலன் பவுலும் வலியுறுத்தினார்.

எபேசிய மூப்பர்களிடம் விடைபெறும் போது, எருசலேமுக்குச் செல்லும்படி ஆவியானவர் தன்னை "கட்டாயப்படுத்தினார்" என்று பவுல் கூறினார். தேவனின் சத்தத்தைப் பின்பற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் உறுதிப்படுத்தினார், ஆனால் போகுமிடத்தில் சம்பவிப்பவற்றை அறியாதிருந்தார் (அப்போஸ்தலர் 20:22). "கொடிதான ஓநாய்கள்" சபைக்குள்ளிருந்து கூட "எழும்பி.. மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று" என்று அப்போஸ்தலன் எச்சரித்தார் (வச. 29-30). பின்னர், தேவனுடைய சத்தியத்தைப் பகுத்தறிவதில் இடைவிடாமல் விழித்திருங்கள் அவர் மூப்பர்களை ஊக்குவித்தார் (வச. 31).தேவன் நமக்குச் செவிசாய்த்து பதிலளிப்பார் என்பதை அறிந்துகொள்ளும் பாக்கியம் இயேசுவின் விசுவாசிகள் அனைவருக்கும் உண்டு. பரிசுத்த ஆவியின் வல்லமையும் நம்மிடம் உள்ளது, அவர் தேவனின் குரலை அடையாளம் காண உதவுகிறார், அது எப்போதும் வேத வார்த்தைகளுடன் ஒத்துப்போகிறது.

பாவங்களை களையெடுத்தல்

எங்கள் தாழ்வாரத்தில் தோட்டக் குழாய்க்கு அடுத்ததாக ஒரு தளிர் துளிர்ப்பதை நான் கவனித்தபோது, அதனால் என்னவாகப்போகிறது என்று புறக்கணித்தேன். ஒரு சிறிய களை எப்படி நமது புல்வெளியைக் காயப்படுத்தும்? ஆனால் வாரங்கள் செல்ல செல்ல, அந்த களை ஒரு சிறிய புதரின் அளவு வளர்ந்து எங்கள் முற்றத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதன் தேவையற்ற தண்டுகள் எங்கள் நடைபாதையின் ஒரு பகுதியில் வளைந்து மற்ற பகுதிகளில் முளைத்தன. அதன் அபாயகரமான வளர்ச்சியைப் புரிந்துகொண்ட நான், என் கணவரின் துணையோடு காட்டுக் களைகளை வேருடன் தோண்டி, களைக்கொல்லியைக் கொண்டு எங்கள் முற்றத்தைப் பாதுகாத்தேன்.

அதேபோலவே பாவத்தின் இருப்பை நாம் புறக்கணிக்கும்போது அல்லது மறுக்கும்போது, அதின் அபாயகரமான வளர்ச்சியால் நமது வாழ்வில் படர்ந்து, நமது அந்தரங்கத்தை இருளாக்கிவிடும். பாவமில்லாத நமது தேவனிடம் எவ்வளவேனும் இருளில்லை. அவருடைய பிள்ளைகளாகிய நாம், பாவங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம், அதனால் நாம் "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே" (1 யோவான் 1:7) நடக்கலாம். மனந்திரும்புதலின் மூலம், நாம் மன்னிப்பு மற்றும் பாவத்திலிருந்து விடுதலையை அனுபவிக்கிறோம் (வ. 8-10). நமக்காக இயேசுவென்னும் மிகச்சிறப்பாகப் பரிந்துபேசுகிறவர் உண்டு (2:1). அவர் நம் பாவங்களுக்கான இறுதி விலையை மனமுவந்து செலுத்தினார். ”நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற" (வச. 2) அவருடைய ஜீவரத்தமே அந்த கிரயம்.

நம்முடைய பாவம் தேவனால் சுட்டிக்காட்டப்படும்போது, ​​நாம் மறுப்பு, தவிர்ப்பு அல்லது பொறுப்பிலிருந்து விலகுவதைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் நாம் ஒப்புக்கொண்டு மனந்திரும்பும்போது, நாம் அவரோடும் பிறரோடும் கொண்டிருக்கும் உறவிற்குத் தீங்கு விளைவிக்கும் பாவங்களை அவர் களையெடுக்கிறார்.

ஜெபக்குறிப்பு அட்டைகள்

புத்தக ஆசிரியர்களுக்கான ஒரு கலந்துரையாடலில் நானும் பணியாற்றிய போது, ​​என் தோழி ஒரு அஞ்சல் அட்டையைக் கொடுத்தாள் அதன் பின்புறம் தன் கைப்பட எழுதிய ஜெபம் ஒன்றும் இருந்தது. அவள், அந்த கலந்துரையாடலில் இருந்த ஆசிரியர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்ததாகவும், ஒவ்வொரு அட்டையிலும் குறிப்பிட்ட ஜெபத்தை எழுதி, எங்களிடம் கொடுத்தபோது தானும் ஜெபித்ததாகவும் கூறினாள். எனக்கான அவளுடைய தனிப்பட்ட செய்தியால் பிரமிப்படைந்த நான், என் தோழி மூலம் என்னை ஊக்குவித்த தேவனுக்கு நன்றி கூறினேன். பின்னர் நானும் அவளுக்காக ஜெபித்தேன். நிகழ்ச்சியின்போது வலி மற்றும் சோர்வுடன் நான் போராடியபோது, ​​அந்த ஜெபக்குறிப்பு அட்டையை வெளியே எடுத்தேன். அதை மீண்டும் படித்தபோது தேவன் என் ஆவிக்குப் புத்துணர்ச்சி அளித்தார்.

பிறர் வாழ்க்கையை உறுதிப்படுத்தும் ஜெபத்தின் தாக்கத்தை அப்போஸ்தலர் பவுல் அறிந்திருந்தார். " வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும்" (எபேசியர் 6:12) போராடத் தயாராகும்படி விசுவாசிகளை அவர் வலியுறுத்தினார். அவர் இடைவிடாத மற்றும் நோக்கம் நிறைந்த ஜெபங்களை ஊக்குவித்தார், அதே சமயம் நாம் ஒருவருக்கொருவர் பரிந்து பேசும் மன்றாட்டு ஜெபத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். பவுலும் தமக்கு தைரியம் உண்டாகத்  தமது சார்பான ஜெபங்களையும் கோரினார். "சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக, நான் தைரியமாய் என் வாயைத்திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்கு கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்." (வச. 19-20).

நாம் ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கும்போது, ​​பரிசுத்த ஆவியானவர் நமக்கு ஆறுதல் அளித்து, நமது தீர்மானங்களைப் பலப்படுத்துகிறார். நமக்கு அவரும், பிறரும் தேவை என்று அவர் உறுதிப்படுத்துகிறார், ஒவ்வொரு ஜெபத்தையும் அவர் கேட்கிறார் என்று உறுதியளிக்கிறார்.  மௌனமாகவோ, சொல்லப்பட்டதோ அல்லது அட்டையில் எழுதப்பட்டதோ அவர் ஜெபங்களுக்குத் தமது பரிபூரண சித்தத்தின்படி பதிலளிக்கிறார்.

என்னால் கற்பனை செய்யத்தான் கூடும்

ஆராதனை பாடல் குழுவினர் "என்னால் கற்பனை செய்ய மட்டுமே முடியும்" என்ற பாடலை பாட தொடங்கியபோது, நான் ஒரு பெண்ணின் பின்னால் தேவாலய பீடத்தில் அமர்ந்தேன். அந்த பெண்ணின் இனிமையான குரல் என்னுடன் இசைந்துபோக,  என் கைகளை உயர்த்தி நான் தேவனைத் துதித்தேன். அவளுடைய சரீர பெலவீனங்களைப் பற்றி என்னிடம் சொன்ன பிறகு, அவளுடைய வரவிருக்கும் புற்றுநோய் சிகிச்சையின் போது நாங்கள் ஒன்றாக ஜெபம் செய்ய முடிவு செய்தோம்.

சில மாதங்களுக்குப் பிறகு, வனிதா என்னிடம் தன்னுடைய மரண பயத்தைப் பற்றிச் சொன்னாள். அவளது மருத்துவமனை படுக்கையில் சாய்ந்துகொண்டு, அவளது தலைக்கு அருகில் என் தலையைச் சாய்த்து, மெல்லிய குரலில் ஜெபித்து, அமைதியாக எங்கள் பாடலைப் பாடினேன். சில நாட்களுக்குப் பிறகு வனிதா இயேசுவை நேருக்கு நேர் ஆராதிக்கையில், அவள் எப்படி இருப்பாள் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.

அப்போஸ்தலராகிய பவுல் மரணத்தை எதிர்நோக்கியிருந்த தமது வாசகர்களுக்கு ஆறுதல் தரும் உறுதியை அளித்தார் (2 கொரிந்தியர் 5:1). நித்தியத்தின் இந்தப் பக்கத்தில் அனுபவிக்கும் துன்பங்கள் வேதனை நிறைந்தவைதான், ஆனால் நம்முடைய நம்பிக்கையானது பரலோக வாசஸ்தலத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது, அதுவே இயேசுவுடனான நம்முடைய நித்திய வாழ்வு (வ. 2-4). அவருடன் வாழும் நித்திய ஜீவனுக்காக ஏங்கும்படி தேவன் நம்மை வடிவமைத்திருந்தாலும் (வ. 5–6), அவருடைய வாக்குத்தத்தங்கள் நாம் இப்போது அவருக்காக வாழும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவே தரப்பட்டுள்ளன (வ. 7-10).

நாம் இயேசுவைப் பிரியப்படுத்த வாழ்கையில், அவர் திரும்பி வருவதற்காக அல்லது நம்மை வீட்டிற்கு அழைப்பதற்காகக் காத்திருக்கும்போது, ​​அவருடைய நிலையான பிரசன்னத்தின் சமாதானத்தில் நாம் மகிழ்ச்சியடையலாம். நாம் பூமிக்குரிய உடலை விட்டு நித்தியத்தில் இயேசுவோடு சேரும் தருணத்தில் நாம் என்ன அனுபவிப்போம்? நாம் கற்பனை செய்ய மட்டுமே முடியும்!

முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்கள்

எனது கணவர் எங்கள் மகனின் லிட்டில் லீக் பேஸ்பால் அணிக்கு பயிற்சியளித்தபோது, அந்த ஆண்டின் இறுதியில் பங்கேற்ற வீரர்களுக்கு விருந்தளித்து, அவர்களின் முன்னேற்றத்தை ஒத்துக்கொண்டார். அதில் டஸ்டின் என்னும் ஒரு இளம் விளையாட்டு வீரர் என்னிடத்தில் வந்து, “நாங்கள் இன்று விளையாட்டில் தோற்றோமல்லவா?” என்று கேட்டான். 

“ஆம், ஆகிலும் உங்களால் இயன்றதை நீங்கள் செய்தீர்கள் என்று நாங்கள் பெருமையடைகிறோம்” என்று சொன்னேன். 

“எனக்கு புரிகிறது, ஆனாலும் நாங்கள் தோற்றுவிட்டோமல்லவா?” என்று கேட்டான். 

நான் தலையசைத்தேன். 

“ஆனாலும் நான் ஏன் ஜெயித்ததுபோல உணர்கிறேன்?” என்று டஸ்டின் கேட்டான். 

“ஏனென்றால் நீ ஜெயிக்கிறவன்” என்று புன்முறுவலோடு அவனுக்கு பதிலளித்தேன். 

டஸ்டினைப் பொறுத்தவரையில் தன்னால் முடிந்தவரை போராடியும் தோல்வியடைந்துவிட்டால் அது தோல்வியே என்னும் மனப்பான்மையில் இருந்தான். கிறிஸ்தவர்களாகிய நம்முடைய யுத்தம் விளையாட்டு மைதானத்தில் நிறைவடையாது. இருப்பினும், வாழ்க்கையின் கடினமான கட்டத்தை நமது மதிப்பின் பிரதிபலிப்பாகப் பார்க்க அடிக்கடி தூண்டப்படுகிறோம். 

பவுல் அப்போஸ்தலர், தேவனுடைய பிள்ளைகளாகிய நம்முடைய தற்போதைய பாடுகளுக்கும் வரப்போகிற மகிமைக்கும் இருக்கும் தொடர்பை உறுதிசெய்கிறார். இயேசு தன்னையே நமக்காய் ஒப்புக்கொடுத்து, பாவத்துடனான நம்முடைய யுத்தத்தில் நமக்காய் யுத்தம் செய்து, அவரைப் போல மாறுவதற்கு தொடர்ந்து நம்மில் கிரியை செய்கிறார் (ரோமர் 8:31-32). நாம் உபத்திரவத்தையும் பாடுகளைகளையும் சந்திக்க நேரிட்டாலும், தேவனுடைய நிலையான அன்பு நம்மை உறுதியாய் நிற்க நமக்கு உதவிசெய்யும் (வச. 33-34).

அவருடைய பிள்ளைகளாய், பாடுகளை மேற்கொள்வதின் நிமித்தம் நம்முடைய சுயமதிப்பை விளங்கச்செய்யலாம். நம்முடைய வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாம் வழியில் தடுமாறலாம், ஆனால் நாம் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் நம்மை அடையாளப்படுத்துவோம் (வச. 35-39).

மீட்புப்பணி

ஆஸ்திரேலியாவில் இருக்கும் பண்னை விலங்குகள் மீட்பு நிறுவனத்தின் தன்னார்வல ஊழியர்கள், 34 கிலோ எடைகொண்ட அழுக்கு கம்பளி தோலுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆட்டை மீட்டனர். அந்த ஆடானது ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக தொலைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று கண்டறிந்தனர். அதின் மேலிருக்கும் இறுகிய கம்பளித் தோலை கவனமுடன் வெட்டியெடுத்தனர். அதின் பாரங்கள் இறக்கிவைக்கப்பட்டு புஷ்டியான ஆகாரத்தை சாப்பிட, அதின் கால்கள் வலுவடையத் துவங்கியது. அதை மீட்டவர்களுடனும் சரணாலயத்தில் இருந்த மற்ற விலங்குகளுடனும் அது பழகுவதை மிகவும் ஆரோக்கியமாய் எண்ணியது. 

சங்கீதக்காரன் தாவீது, அதிக பாரத்தைச் சுமந்து தொலைக்கப்பட்டவராய், மீட்பின் அவசியத்தை எதிர்பார்த்திருக்கும் வேதனையை புரிந்துகொண்டான். சங்கீதம் 38இல், தாவீது தேவனிடத்தில் மன்றாடுகிறான். அவன் தனிமைப்படுத்தப்பட்டவனாய், கைவிடப்படுதலையும் ஆதரவற்ற நிலைமையையும் அனுபவித்தான் (வச. 11-14). ஆகிலும் அவன் விசுவாசத்தோடு, “கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்” என்று ஜெபித்தான். தாவீது அவனுடைய இக்கட்டான சூழ்நிலையையும் மாம்ச பெலவீனத்தையும் மறுக்கவில்லை (வச. 16-20). ஆகிலும் அவனுடைய தேவன் சரியான நேரத்தில் அவனுக்கு சகாயஞ்செய்ய இறங்குவார் என்று நம்பியிருந்தான் (வச. 21-22). 

நாம் சரீரப்பிரகாரமான, மன ரீதியான, மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பாரங்களால் அழுத்தப்படுவதாக உணரும்போது, தேவன் நம்மை உண்டாக்கியதிலிருந்து தீர்மானித்திருந்த மீட்புப்பணியின் மூலம் நம்மை மீட்பதற்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். நாம் அவரை நோக்கி, “என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்” (வச. 22) என்று விண்ணப்பித்து மன்றாடலாம். 

தேவனின் வார்த்தையின் வல்லமை

1968 கிறிஸ்துமஸுக்கு முந்தின தினமன்று, அப்பல்லோ 8 என்கிற விண்கலத்தின் விண்வெளி வீரர்களான பிராங்க் போர்மன், ஜிம் லொவெல் மற்றும் பில் ஆண்டர்ஸ் ஆகியோர் சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்த முதல் மனிதர்களானார்கள். சந்திரனை பத்துமுறை சுற்றிவந்த அவர்கள், சந்திரன் மற்றும் பூமியின் புகைப்படங்களை அனுப்பினர். ஒரு நேரடி ஒலிபரப்பின்போது, அவர்கள் மாறிமாறி ஆதியாகமம் 1 ஐ வாசித்தனர். இதின் நாற்பதாம் ஆண்டின் நினைவு விழாவில், போர்மன் "கிறிஸ்துமஸுக்கு முந்தின தினமன்று, ஒரு மனித சத்தத்தைக் கேட்க இதுவரையில்லாத பெருங்கூட்டம் கூடுமென்றும், அவர்களுக்குப் பொருத்தமான எதையாகிலும் பேச வேண்டும் என்பதே நாசா இட்ட ஒரே கட்டளை"' என்றார். இந்த சரித்திர புகழ்வாய்ந்த ஒலிப்பதிவைக் கேட்டவர்களுக்கு அப்பல்லோ 8ன் விண்வெளி வீரர்கள் பேசின வேதாகம வசனங்கள் இன்றும் ஜனங்களின் இதயத்தில் சத்திய விதைகளாய் விதைக்கப்படுகின்றன.

தேவன், ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக, "உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்" (ஏசாயா 55:3) என்றார். தனது இரட்சிப்பின் இலவச ஈவை வெளிப்படுத்தி, நாம் நமது பாவங்களிலிருந்து மனந்திரும்பி அவரது இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற அழைக்கிறார் (வ.6–7). அவருடைய நினைவுகள் மற்றும் செயல்களின்மீது தனக்கு மாத்திரம் இருக்கும் தெய்வீக அதிகாரத்தை அறிவிக்கும் தேவன், அவை நமது புரிந்துகொள்ளுதலுக்கு மிகவும் அப்பாற்பட்டது என்கிறார் (வ.8–9). ஆயினும், வாழ்வை மாற்றும் அவரது வேதாகம வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை நமக்கும் அளிக்கிறார். அவை இயேசுவையே நமக்குக் காண்பித்து, தமது ஜனங்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அவரே ஆதாரம் என்பதை உறுதிப்படுத்துகின்றன (வ.10–13).

நற்செய்தியைப் பகிரப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவ பிதா தமது பூரண சித்தத்தின்படி குறித்த காலத்தில் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுகிறார்.

ஒருவருக்கொருவர் ஊக்குவித்தல்

 மருத்துவ ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்த ஒரு வாரத்திற்குப் பின்  சோர்ந்துபோய் நான் சோபாவில் அமர்ந்தேன். எதைக்குறித்தும் சிந்திக்கப் பிடிக்கவில்லை, யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை, ஜெபிக்கவும் முடியவில்லை. சந்தேகமும், ஊக்கமின்மையும் என்னை அமிழ்த்த, தொலைக்காட்சியைப் பார்த்தேன். அதில் வந்த விளம்பரம் ஒன்றில், ஒரு சிறுமி தன் தம்பியிடம், "நீ சிறந்த வீரன்" என்றாள். அவ்வாறே அவனை அவள் தொடர்ந்து ஊக்கமளிக்கையில், அச்சிறுவன் சிரித்தான். நானும் சிரித்தேன் .

தேவஜனங்கள் எப்போதுமே மனமடிவினாலும், சந்தேகத்தாலும்  பாதிக்கப்பட்டனர்.  தேவனுடைய சத்தம் பரிசுத்த ஆவியானவரால் மனிதருக்குக்  கேட்கும் என்பதை உறுதிப்படுத்தும் சங்கீதம் 95 ஐ மேற்கோள்காட்டி, எபிரெய நிருபத்தின் ஆக்கியோன் இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தர பயணத்தில் செய்த தவறுகளை விசுவாசிகள் தவிர்க்கும்படி எச்சரிக்கிறார் (எபிரெயர் 3:7–11). "சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில்  ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்." என்றும் "நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள் (ஊக்கமளியுங்கள்)" என்றும் எழுதினார் (வ.12–13).

நம்முடைய நம்பிக்கை கிறிஸ்துவில்  இருக்க, நமக்குத் தேவையான உதவி. நாம் நீடிய பொறுமையோடு இருப்பதற்குத் தேவையான பெலனை விசுவாசிகளின் ஐக்கியம் மூலம் பெற்றுக் கொள்கிறோம் (வ.13). ஒருவர் சந்தேகிக்கையில், மற்றொருவர் அவரை  உறுதிப்படுத்தி உத்தரவாதம் செய்யலாம். இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்த,  தேவஜனமாகிய நமக்குத் தேவனே பெலனளிக்கிறார்.