மெய்யான சுதந்திரம்
ஜானகி, கோவையில் உள்ள கிராமம் ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்தார். பல ஆண்டுகளுக்கு முன், 14 வயதில் திருமணமான கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்து, பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைகளைக் குறித்த பாகுபாடு காரணமாக, அவரது குடும்பத்தினர் குழந்தையை அருகிலுள்ள ஆற்றில் போட்டுவிட விரும்பினர். குடும்பத்தாரின் கொடூர எண்ணத்தை அறிந்த ஜானகி, குழந்தையையும் தாயையும் கூட்டிக்கொண்டு, மறைமுகமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார். தாய்க்கு தங்குமிடம், பாதுகாப்பு மற்றும் வேலைகளை தனது சொந்த வீட்டில் ஏற்படுத்திக்கொடுத்தார். அவர்களும் ஜானகியின் குடும்பத்தில் ஒரு அங்கமாய் மாறிவிட்டனர். ஜானகி அந்தக் குழந்தையைக் காப்பாற்றியது மட்டுமின்றி, அதின் எதிர்காலத்தில் அது ஒரு மருத்துவராய் மாறுவதற்கும் உதவினார்.
ஒருவருக்கொருவர் இரக்கம் செய்யும்படிக்கு, வேதம் அவ்வப்போது நமக்கு அறிவுறுத்தினாலும், சில சமயங்களில் நம்முடைய சொந்த கவலைகளை கடந்து செல்வது கடினம். தேவனை ஆராதிக்காமலும் பிறருக்கு சேவை செய்யாமலும், புசித்து குடித்து மகிழ்ந்திருந்த (சகரியா 7:6) இஸ்ரவேலை, சகரியா தீர்க்கதரிசி கண்டித்தார். தங்களுடைய உடைமைகளை மற்றவர்களோடு பகிர்ந்து வாழ்வதை புறக்கணித்து, மற்றவர்களுடைய தேவையை பொருட்படுத்த தவறினர். சகரியா, “நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து, விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும்,” (வச. 9-10) இருங்கள் என்று அறிவுறுத்துகிறார்.
நம் சொந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது இயல்பு என்றாலும், மற்றவர்களின் தேவைகளை பொருட்படுத்தும்படிக்கு நம்முடைய விசுவாசம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. தேவனிடத்தில் அநேக ஆஸ்திகள் இருக்கிறது. அந்த நிறைவில் சிலவற்றை மற்றவர்களுக்குக் கொடுக்க நம்மைப் பயன்படுத்துகிறார்.
இடுக்கமான வாசல் உணவகம்
சுவையான நொருக்குத் தீனிகள், பாலாடைக் கட்டிகள், இறைச்சி என்று அனைத்து வகை சுவையான உணவுகளும் இந்த இடுக்கமான வாசல் உணவகத்தில் உங்களுக்கு காத்திருக்கிறது. தைவானிய நகரமான தைனான் என்ற ஊரிலிருக்கும் இந்த உணவகம், பார்ப்பதற்கு சுவரைக் குடைந்து ஓட்டை ஏற்படுத்தியதுபோலவே இருக்கும். அதின் நுழைவாயில் வெறும் 40 செ.மீ அகலமே கொண்டது. ஒரு சராசரி உடல்வாகு கொண்ட நபர் சிரமப்பட்டு உள்ளே போகலாம். இருப்பினும், அந்த உணவகம் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த இடுக்கமான வாசல் லூக்கா 13:22-30இல் குறிப்பிடப்பட்டதற்கு ஒத்திருக்குமா? சிலர் இயேசுவைப் பார்த்து, “இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ” (வச.23) என்று கேட்கின்றனர். அதற்கு இயேசு, “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்” (வச.24) என்று சவால் விடுகிறார். இரட்சிக்கப்பட்டவர்கள் பட்டியலில் நீங்கள் இடம்பெற்றிருக்கிறீர்களா? என்று இந்த ஒப்புமையை பயன்படுத்தி யூதர்களின் ஆணவத்தை இயேசு சுட்டிக்காட்டுகிறார். தாங்கள் ஆபிரகாமின் சந்ததி என்றும், நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளுகிறவர்கள் என்பதினால் தாங்கள் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிப்போம் என்று யூதர்களில் பலர் எண்ணியிருந்தனர். ஆனால், “வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு” (வச. 25) ஒன்றும் செய்ய இயலாது என்பதினால் அவர்களை முன்பாகவே செவிகொடுக்கும்படி எச்சரிக்கிறார்.
நம்முடைய குடும்ப பின்னணிய பெருமையும், நம்முடைய நற்கிரியைகளும் தேவனோடு நம்மை ஒப்புரவாக்காது. இயேசுவில் நாம் வைக்கும் விசுவாசம் மட்டுமே நம்மை பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் தப்புவிக்கும் (எபேசியர் 2:8-9; தீத்து 3:5-7). வாசல் இடுக்கமானது, ஆனால் அநேகர் கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு விசாலமாய் அமைந்திருக்கிறது. இந்த இடுக்கமான வாசல் வழியாய் அவருடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்த அவர் இன்று நம்மை அழைக்கிறார்.
நன்றி, ஆனால் வேண்டாம்!
இந்தியாவில் மனநலம் குன்றிய பிள்ளைகளுக்காய் நடத்தப்படும் கிறிஸ்தவ பள்ளியொன்றிற்கு மாநகராட்சி வாரியத்திலிருந்து பெரும் நன்கொடை அளிக்கப்பட்டது. அதில் எந்த வில்லங்கமும் இல்லை என்று அறிந்த பின்னரே, அந்த தொகையை அவர்கள் பெற்றுக்கொண்டனர். ஆனால் பின்நாளில் மாநகராட்சி வாரியம், அந்த தொகைக்கான பிரதிநிதித்துவம் கோரியது. உடனே, அந்த பள்ளியின் இயக்குனர் அந்தத் தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டார். பள்ளியின் கொள்கையை விட்டுக்கொடுக்க அவருக்கு மனதில்லை. “தேவனுடைய சேவையை, தேவனுடைய வழியில் செய்வது மிகவும் அவசியம்” என்று அவர் கூறுகிறார்.
நமக்கு வரும் உதவியை நிராகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் இதுவும் ஒன்று. வேதாகமத்தில் வேறொன்றைப் பார்க்க முடியும். சிறையிருப்பிலிருந்து, யூதர்கள் மீண்டு திரும்பியதும், அவர்களுடைய ஆலயத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு கோரேசு ராஜாஅனுமதியளித்தான் (எஸ்றா 3). “உங்களோடேகூட நாங்களும் கட்டுவோம்; உங்களைப் போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம்” (4:2) என்று மற்றவர்கள் சொல்லும்போது இஸ்ரவேலின் தலைவர்கள் அதை நிராகரித்தனர். அவர்கள் ஒருவேளை அந்த உதவியை ஏற்றுக்கொண்டிருந்தால், ஆலயத்தை மீண்டும் கட்டும் முயற்சியில் தோல்வியடைந்திருப்பர். ஏனென்றால், அவர்கள் விக்கிரக ஆராதனைக்காரர்கள் என்பதினால், அவர்களின் விக்கிரக ஆராதனை உள்ளே புகுந்திருக்கக்கூடும். இஸ்ரவேலர்கள் சரியான தீர்மானத்தை எடுத்தனர். ஆகையால் எதிர்ப்பாளர்கள் ஆலயக்கட்டுமானப் பணியை தங்களால் முடிந்த அளவிற்கு தடை செய்தனர்.
பரிசுத்த ஆவியின் துணையோடும், விசுவாசிகளின் ஞானமான ஆலோசனையோடும் நாம் பகுத்தறிந்து செயல்பட பழகலாம். ஆவிக்குரிய வாழ்க்கையை பாதிக்கக்கூடிய சிநேகிதமான வாய்ப்புகளைத் தவிர்க்கவேண்டும். ஏனென்றால் தேவனுடைய பணியை தேவனுடைய வழியில் செய்யும்போது எந்த நன்மையும் குறைவுபடாது.
நன்றாய் வாழ்தல்
வாழ்பவர்களுக்கான இலவச மரண ஊர்வலம். தென்கொரியாவில் இப்படி ஒரு சேவையை ஒரு அமைப்பு செய்துவருகிறது. 2012இல் அந்த அமைப்பு துவங்கியதிலிருந்து 25000க்கும் மேற்பட்ட இளைஞர் முதல் ஓய்வுபெற்றவர் வரையிலும் தங்கள் மரணத்தைப் பொருட்படுத்தினால் நலமாய் வாழமுடியும் என்று முன்வந்து அதில் ஈடுபட்டுள்ளனர். அதின் அலுவலர்கள் இதுபோன்ற உருவகப்படுத்தப்பட்ட மரண ஊர்வலங்கள் மக்களுக்குள் ஜீவியத்தின் மேன்மையையும், நன்றியுணர்ச்சியையும், பிரிந்திருக்கும் குடும்பங்களிடையே மன்னிப்பின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது என்கின்றனர்.
இந்த வார்த்தைகள் பிரசங்கி புத்தகத்தின் ஆசிரியராகிய ஞானியின் வார்த்தைகளை நினைவுபடுத்துகிறது. “இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்;உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்” (பிரசங்கி 7:2). மரணம் என்பது வாழ்க்கையில் சொற்ப தன்மையையும் நாம் வாழப்போவது கொஞ்ச காலம் என்பதையும் அதிலே மற்றவர்களை நேசிப்பதின் அவசியத்தையும் நமக்கு வலியுறுத்துகிறது. அது பணம், உறவுகள், மகிழ்ச்சி போன்ற தேவன் கொடுக்கும் ஆசீர்வாதங்களிலிருந்து நம்முடைய பிடியைத் தளர்த்தி, நம்முடைய பொக்கிஷங்களை பரலோகத்தில் சேர்த்துவைக்க ஊக்குவிக்கிறது. “அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை” (மத்தேயு 6:20).
மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும் நம் கதவை தட்டக்கூடும். அது நம் பெற்றோரைச் சந்திக்கும் நம் சந்திப்பை ஒத்திவைப்பதையோ, தேவனுக்கு ஊழியம் செய்யும் நம் திட்டங்களை தள்ளிவைப்பதையோ, அல்லது நம் பிள்ளைகளோடு நேரம் செலவழிக்கத் தவறுவதையோ மதியீனம் என்று வலியுறுத்துகிறது. கர்த்தரின் உதவியோடு நம் வாழ்க்கையை ஞானமாய் வாழப் பழகுவோம்.
எதிர்பாராத விருந்தினர்
சாக் ஒரு தனிமையான ஆள். அவன் நகர வீதிகளில் நடந்து செல்லும்போது அவனை எதிர்க்கின்ற இரைச்சலை உணர்ந்தான். ஆனால் பிறகு அவனுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அலெக்ஸாந்திரியாவிலுள்ள கிளெமண்ட் என்ற திருச்சபை தலைவர், “சாக் ஒரு முக்கியமான கிறிஸ்தவத் தலைவரும், சிசெரியாவில் ஒரு சபையின் போதகருமானார்” என்றார். ஆம், இயேசுவைப் பார்க்க வேணடுமென்று காட்டத்தி மரத்தில் ஏறின, வரி வசூலிக்கும் சகேயுவைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் (லூக்கா 19:1-10).
மரத்தில் ஏறுவதற்கு எது அவரைத் தூண்டியது? வரி வசூலிப்பவர்கள் துரோகிகளாகக் கருதப்பட்டனர். ஏனென்றால் ரோம அரசாங்கத்திற்கு சேவை செய்ய தங்கள் சொந்த மக்களிடமே மிக அதிகமாக இவர்கள் வரி வசூலித்தனர். அவர்களையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு நற்பண்பு இயேசுவிடம் இருந்தது. தன்னையும் இயேசு ஏற்றுக்கொள்வாரா என்று சகேயு நினைத்திருக்கக் கூடும். அவன் குள்ளனாயிருந்தப்படியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணமுடியவில்லை (லூக்கா 19:3). ஒருவேளை இயேசுவைப் பார்க்க அவன் காட்டத்தி மரத்தில் ஏறியிருக்கலாம்.
இயேசுவும் சகேயுவைத் தேடிக்கொண்டிருந்தார். இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துப் பார்த்து, அவனைக் கண்டு “சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கி வா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும்” என்றார் (வச. 5). இப்படி தள்ளப்பட்ட ஒருவரின் வீட்டிற்கு விருந்தினராகப் போவது மிகவும் அவசியம் என்று இயேசு எண்ணினார். கற்பனை செய்துப் பாருங்கள்! உலகத்தின் இரட்சகர் இயேசு, சமுதாயத்தில் தள்ளப்பட்டவருடன் நேரம் செலவிட விரும்பினார்.
ஒருவேளை நம்முடைய இருதயம், உறவுகள், அல்லது வாழ்க்கை சீர்படவேண்டுமோ, சகேயுவைப் போல நமக்கும் நம்பிக்கை உண்டு. நாம் அவரிடத்தில் திரும்பும்போது இயேசு ஒருபோதும் நம்மை புறக்கணிக்கமாட்டார். உடைந்ததையும், இழந்ததையும் அவர் திரும்பத் தந்து, நம்முடைய வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொடுப்பார்.
கர்த்தருடைய நடத்துதல்
குறிப்பிட்ட ஒரு கிராமத்திலிருந்து நாங்கள் துணிகரமாய் காட்டுக்குள் வெகுதூரம் பயணம் மேற்கொண்டோம். சில மாதங்கள் கடந்தபின், தண்ணீரின் மெல்லிய ஓசை எங்கள் காதுகளில் தொனித்தது. வேகமாய் நடக்கத் தொடங்கின எங்களை விரைவில் கருத்த மலைகளுக்கு இடையிலிருந்த வெண்மையான நீரோட்டம் வரவேற்றது. மெய்சிலிர்க்கவைக்கும் ஒரு காட்சி!
நாங்கள் அந்த இன்பச் சுற்றுலாவை அனுபவிக்க எண்ணி, எங்களுடைய பயணத்திற்கு துணைபுரிந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலரை நாங்கள் திருப்பி அனுப்பிவிட்டோம். நல்ல திட்டம் தான். ஆனால் சாப்பாட்டிற்கு என்ன செய்வது? நாங்கள் எதுவும் கொண்டுவரவில்லை. என்னுடைய நண்பர்கள் அருகிலிருந்த காட்டுக்குள் சென்று சில பழங்கள், காய்கறிகள், மீன்கள் என்று சேகரித்து வந்தனர். அந்த ஆகாரம் எங்களுக்கு புதிதாயிருந்தது. ஆனால் மிக சுவையாய் தெரிந்தது.
தேவனுடைய சிரு~;டிப்பில் நம் தேவைகள் அளவுக்கு அதிகமாய் இறைந்து கிடக்கிறது. அதற்கு ஆதாரமாய், “பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது” (ஆதியாகமம் 1:12) என்பதை எடுத்துக்கொள்ளலாம். “விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும் விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும்” (வச. 29) உண்டாக்கி, அவைகளை தேவன் நமக்கு ஆகாரமாய் கொடுத்திருக்கிறார்.
உன் தேவைகளுக்காய் தேவனை நம்புவது சிலவேளைகளில் கடினமாய் தோன்றுகிறதா? நீங்கள் இயற்கையை ரசிக்கும் ஒர் நடைபயணம் மேற்கொள்ளலாமே? உங்கள் பார்வையில் தென்படுவது இயேசுவின் உறுதியான வார்த்தைகளை நினைவுபடுத்தட்டும்: “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்” (மத்தேயு 6:31-32).
யாருக்கு தெரியும்?
சீன பாரம்பரிய கதைகளின்படி, ஒரு மனிதர் தன்னுடைய விலை உயர்ந்த குதிரைகளில் ஒன்றை தொலைத்துவிட்டார், அவருடைய அந்த இழப்பிற்கு அண்டைவீட்டார் வருத்தத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இந்த மனிதருக்கு பெரிதாக அக்கறை இல்லை. யாருக்கு தெரியும் இது எனக்கு நல்லதாக கூட இருக்கலாம்? என்றார் அவர். ஆச்சர்யமாக, தொலைந்த குதிரை வீடு திரும்பும்போது, தன்னுடன் வேறொரு குதிரையுடன் திரும்பியது. அதற்கு அண்டைவீட்டார் அவரை வாழ்த்தினார், அதற்கு அவர் யாருக்கு தெரியும் இது எனக்கு கெட்டதாககூட இருக்கலாம்? என்றார். அதற்கு ஏற்ற போலவே அவருடைய மகன் புதிய குதிரையின்மீது சவாரி செய்யும் போது கீழே விழுந்து காலை உடைத்து கொண்டான். ராணுவத்திலிருந்து ஆட்கள் அந்த கிராமத்திற்கு வந்து உடல் தகுதியான அனைத்து ஆண்களையும் போரில் சண்டையிட ஆள் சேர்க்க ஆரம்பிக்கும் வரை இது ஒரு துரதிருஷ்டம் போல தோன்றியது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருடைய மகன் சேர்க்கப்படவில்லை. அதுவே அவனுடைய உயிரை மரணத்திலிருந்து பாதுகாத்தது.
அதிர்ஷ்டத்தில் கஷ்டங்களும் ஆசீர்வாதமாக இருக்கும் மற்றும் நேர்எதிராகவும் இருக்கும் என்பதை போதிக்கும் சீன பழமொழிக்கு பின்னால் உள்ள கதை இதுதான். இந்த பண்டைய ஞானம் பிரசங்கி 6:12 உடன் நெருங்கிய இணைப்பு கொண்டது. அதில் அதன் ஆசிரியர்: ஒரு நபரின் வாழ்க்கைக்கு எது நல்லதென்று யாருக்கு தெரியும்? எதிர்காலம் என்ன வைத்திருக்கிறதென்று உண்மையில் நம் யாருக்கும் தெரியாது. துன்பத்தில் கண்டிப்பாக நல்ல பலன்களும் உண்டு, செழிப்பில் கண்டிப்பாக தீய விளைவுகளும் உண்டு, என்பதை கவனிக்கிறார்.
ஒவ்வொரு நாளும் புதிய சந்தர்ப்பங்களை, மகிழ்ச்சிகளை மற்றும் வேதனைகளை அளிக்கிறது. தேவனுடைய அன்புக்குரிய பிள்ளைகளாக நாம் அவருடைய இறையாண்மையில் இளைப்பாறலாம், நல்ல மற்றும் மோசமான நேரங்களிலும் நாம் அவரை நம்பலாம், “தேவன் இவ்விரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார்” (7:14). நம் வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளிலும் அவர் நம்முடன் இருக்கிறார் மற்றும் அவருடைய அன்புள்ள அக்கறையை நமக்கு வாக்குப்பண்ணி இருக்கிறார்.
அந்தக் கணங்களை பொக்கிஷமாகச் சேகரித்து வையுங்கள்
சூ டாங்க்போ என்பவர் சீனாவிலுள்ள மிகப் பெரிய கவிஞரும், கட்டுரை எழுதுபவரும் ஆவார். அவர் நாடு கடத்தப்பட்டிருந்த போது, முழு நிலவைப் பார்த்த போது, தன்னுடைய சகோதரனை நினைத்து, ஒரு பாடல் எழுதினார். “நாம் மகிழ்ச்சியடைகின்றோம் வருத்தப்படுகின்றோம், சேகரிக்கின்றோம் விட்டுவிடுகின்றோம், அப்படியே நிலாவும் வளர்கின்றது, தேய்கின்றது. காலம் செல்லும் போது, எதுவுமே நேர்த்தியாக இருப்பதில்லை” என்று எழுதினார். “நாம் நேசிப்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வார்களாக, இந்த அழகிய காட்சியை நாம் இருவரும், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், ரசிக்கின்றோம்” என்று எழுதினார்.
அவர் எழுதிய இப்பாடலின் கருத்தை நாம் பிரசங்கி புத்தகத்தில் காண்கின்றோம். போதகர் என்று அழைக்கப்படும் அதன் ஆசிரியர் (1:1), “அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு,………………..தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு (வ.3:4-5) என்பதைக் காண்கின்றார். இரண்டு எதிர் எதிரான காரியங்களை இணைத்துக் கூறும் ஆசிரியர், சீன கவிஞரைப் போன்று, எல்லா நல்ல காரியங்களும் கண்டிப்பாக ஒரு முடிவிற்கு வரும் என்று கூறுகின்றார்.
இவ்வுலகில் எதுவுமே நிலையானது அல்ல, என்பதற்கு அடையாளம், தேய்பிறை மற்றும் வளர் பிறை என்கின்றார். தேவன் உருவாக்கிய இந்த உலகத்தில் அனைத்துப் படைப்புகளையும் தன் வார்த்தையால் உருவாக்கினார். தேவன் தான் படைத்த யாவற்றையும் பார்க்கின்றார், “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” (வ.11).
வாழ்வில் எது நடக்கும் என்பதை நம்மால் கூறமுடியாது. சில வேளைகளில் வேதனை தரும் பிரிவுகளாலும் நிறையலாம். ஆனால் அனைத்துமே தேவனுடைய கண்காணிப்பில் தான் நடைபெறுகின்றது என்பதை மனதில் கொள்வோம். நம்முடைய வாழ்வை மகிழ்ச்சியோடு தொடர்வோம், அதில் ஏற்பட்ட மகிழ்ச்சி மற்றும் கெட்ட காரியங்களை பொக்கிஷமாக வைத்துக் கொள்வோம், ஏனெனில், நம்முடைய அன்பு தேவன் நம்மோடு இருக்கின்றார்.
மீட்கப்பட வேண்டும்
ஆல்டி என்ற வாலிபன் இந்தோனேஷியாவிலிருந்து 125 கிலோமீட்டர் (கிட்டத்தட்ட 78 மைல்கள்) தொலைவிற்கு அப்பால், சுலவேசி என்ற தீவில் தன்னந்தனியாக, ஒரு மிதக்கும் மீன் பிடி குடிசையில் வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது, குடிசையைத் தாக்கிய வலிமையான காற்று, நங்கூரத்தோடு அக்குடிசையை கடலில் தூக்கி எறிந்தது. 49 நாட்கள் ஆல்டி சமுத்திரத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டான். ஒவ்வொரு முறை அவன் ஒரு கப்பலைப் பார்க்கும் போதும், தன்னுடைய விளக்கை ஏற்றி, மாலுமியின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தான், ஆனால் ஏமாற்றத்தைத் தான் சந்தித்தான். நலிந்து காணப்பட்ட அந்த வாலிபன் மீட்கப் படும் முன்னர் ஏறத்தாள 10 கப்பல்கள் அவனைக் கடந்து சென்றன.
ஒரு நியாயசாஸ்திரியிடம் இயேசு, காப்பாற்றப் படவேண்டிய ஒரு மனிதனைக் குறித்த, ஓர் உவமையைச் சொன்னார் (லூக். 10:25). இரண்டு மனிதர்கள் – ஓர் ஆசாரியனும், ஒரு லேவியனும் தங்களின் பிரயாணத்தின் போது காயப்பட்டு கிடந்த ஒரு மனிதனைக் காண்கின்றனர். அவனுக்கு உதவுவதற்குப் பதிலாக, அவர்கள் “பக்கமாய் விலகிப் போயினர்” (வ. 31-32). ஏன் அவ்வாறு சென்றனர் என்பதற்கான காரணம் கூறப்படவில்லை. இருவருமே மதப்பற்றுடையவர்கள், எனவே நிச்சயமாக, பிறனை நேசி என்ற தேவனுடைய கட்டளையை அறிந்திருக்க வேண்டும் (லேவி.19:17-18). ஆனால், அவர்கள் அதனை மிகவும் ஆபத்தானது என்று கருதியிருக்கலாம், அல்லது மரித்துப்போன உடலைத் தொடுவதன் மூலம், தீட்டுப்பட்டவர்கள் ஆலயத்தில் பணிசெய்யக் கூடாது என்ற யூத சட்டத்தை மீற நேரிடும் என்று எண்ணியிருக்கலாம். ஆனால் இதற்கு மாறாக யூதர்கள், இழிவாகக் கருதும் சமாரியன் ஒருவன் உயர்ந்த காரியத்தைச் செய்கின்றான். அவன் தேவையிலிருக்கும் அந்த மனிதனைப் பார்க்கின்றான், தன்னலமின்றி அவனைப் பாதுகாக்கின்றான்.
இயேசு, தன்னைப் பின்பற்றுகின்றவர்களிடம் “நீயும் போய் அந்தப்படியே செய்” (லூக்.10:37) என்கின்ற கட்டளையோடு தன்னுடைய போதனையை முடிக்கின்றார். பிறருக்கு உதவி செய்வதில் கஷ்டங்கள் இருந்தாலும், அன்போடும் முழுமனத்தோடும் உதவி செய்ய தேவன் நமக்கு உதவி செய்வாராக.