Mike Wittmer | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread - Part 2

எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மைக் விட்மெர்கட்டுரைகள்

பரலோகத் தகப்பனை அழைத்தல்

இரண்டாம் உலகப் போரின் முடிவை அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அறிவித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, மிசோரியின் கிராண்ட்வியூவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் ஒரு தொலைபேசி ஒலித்தது. தன்னுடைய விருந்தினர்களிடம் ஒப்புதல் கேட்டு, ஒரு தொண்ணூற்று இரண்டு வயதான பெண்மணி அழைப்பை எடுத்தார். அவர் பேசுவதை விருந்தினர் கேட்க நேரிட்டது, “ஹலோ... ஆம், நான் நன்றாக இருக்கிறேன். ஆம், நான் ரேடியயோவைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்... இப்போது உன்னால் முடிந்தால் என்னை வந்து பாருங்கள்... மீண்டும் சந்திக்கலாம்." வயதான பெண் தனது விருந்தினரிடம் திரும்பி, “அது என் மகன் ஹாரி. ஹாரி ஒரு அற்புதமான மனிதன்... அவன் அழைப்பார் என்று எனக்குத் தெரியும். ஏதாவது நடந்த பிறகு அவன் எப்போதும் என்னை அழைப்பான்” என்று சொன்னார்களாம். 

எவ்வளவு சாதித்தாலும், எவ்வளவு வயதானாலும், நம் பெற்றோரை அழைக்க ஏங்குகிறோம். “நன்றாகச் செய்தாய்” என்னும் அவர்களின் உறுதியான பாராட்டைப் பெறுவதற்காய். நாங்கள் பெரிதளவில் சாதித்தவர்களாய் இருக்கலாம்; ஆனால் நாம் எப்போதும் நம் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் என்பதை மறப்பதில்லை. 

துரதிர்ஷ்டவசமாக, அனைவருக்கும் தங்கள் பூமிக்குரிய பெற்றோருடன் இந்த வகையான நல்ல உறவு இருப்பதில்லை. ஆனால் இயேசுவின் மூலம் நாம் அனைவரும் தேவனை நம் தகப்பனாக பெற்று;ககொள்ள முடியும். கிறிஸ்துவைப் பின்பற்றும் நாம் தேவனுடைய குடும்பத்திற்குள் கொண்டு வரப்படுகிறோம். ஏனென்றால் நீங்கள் “அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்” (ரோமர் 8:15). நாம் இப்போது “தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே” (வச. 17). நாம் தேவனிடத்தில் அடிமையாகப் பேசவில்லை, மாறாக, இயேசு தன்னுடைய இக்கட்டான தருணத்தில் தேவனை அழைத்த “அப்பா பிதாவே” (மாற்கு 14:36) என்னும் அந்தரங்கப் பெயரைப் பயன்படுத்த சுதந்திரம் பெற்றிருக்கிறோம்.

உங்களிடம் செய்தி இருக்கிறதா? உங்களுக்கு தேவைகள் உள்ளதா? உங்கள் நித்திய வீடாய் இருப்பவரை அழையுங்கள்.

ஆராதனை வீடு

இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் குண்டுவீசித் தாக்கப்பட்டபோது, ​​பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அதன் அசல் வடிவமைப்பின்படி அதை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கூறினார். அது சிறியதாக இருக்க வேண்டும், எனவே விவாதங்கள் நேருக்கு நேர் இருக்கும். அது அரைவட்டமாக இல்லாமல் நீள்வட்டமாக இருக்க வேண்டும், அரசியல்வாதிகள் "சபையின் மையத்திற்கு வர" ஏற்றதாயிருக்கும். இது இடது மற்றும் வலதுசாரியினர் அறை முழுவதும் ஒருவரையொருவர் எதிர்கொள்ளும் பிரிட்டனின் கட்சி அமைப்பைப் பாதுகாத்தது. மேலும் கட்சிமாறுமுன் கவனமாகச் சிந்திக்கவும் வேண்டியிருந்தது. "நாம் நமது கட்டிடங்களை வடிவமைக்கிறோம், பின்னர் நமது கட்டிடங்கள் நம்மை வடிவமைக்கின்றன" என்று சர்ச்சில் முடித்தார்.

யாத்திராகமத்தில் உள்ள எட்டு அதிகாரங்கள் (அதிகாரங்கள் 24-31) ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்கான வழிமுறைகளை விவரிக்கின்றன. ஆறு (அதிகாரங்கள் 35-40) இஸ்ரவேலர் அதை எவ்வாறு செய்தனர் என்பதை விவரிக்கிறது. தேவன் அவர்களின் ஆராதனையில் அக்கறை காட்டினார். ஜனங்கள் பிராகாரத்தினுள் நுழைந்தபோது, ​​மின்னும் தங்கமும், கூடாரத்தின் வண்ணமயமான திரைச்சீலைகளும் (26:1, 31-37) அவர்களை வியப்பூட்டின. தகனபலிபீடம் (27:1-8) மற்றும் தண்ணீர்தொட்டி (30:17-21) அவர்களின் மன்னிப்பின் கிரயத்தை அவர்களுக்கு நினைவூட்டியது. வாசஸ்தலத்தில் ஒரு குத்துவிளக்கு (25:31-40), சமூகப்பத்து மேசை (25:23-30), தூபபீடம் (30:1-6), மற்றும் உடன்படிக்கைப் பெட்டி (25:10-22) ஆகியவை இருந்தன. ஒவ்வொரு பொருளும் பெரும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. 

இஸ்ரவேலுக்கு செய்ததைப் போல, தேவன் நம்முடைய ஆராதனை  ஸ்தலத்திற்கு விரிவான வழிமுறைகளை வழங்கவில்லை, ஆனால் நமது ஆராதனை எவ்விதத்திலும் குறைவானதல்ல. நாம்தான் அவர் வாசம்பண்ணும்படி பிரித்தெடுக்கப்பட்ட கூடாரமாக இருக்க வேண்டும். நாம் செய்யும் அனைத்தும் அவர் யார், அவர் என்ன செய்கிறார் என்பதை நமக்கு நினைவூட்டட்டும்.

 

வீட்டு தெய்வங்கள்

அந்த வேதபாட குழுவிலிருந்த ஆண்கள் கிட்டத்தட்ட எண்பது வயதுடையவர்கள். அவர்கள் இச்சையோடு போராடுவதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டேன். இளமையில் தொடங்கிய அந்த யுத்தம் இன்னும் நீடிக்கிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் இந்த பகுதியில் இயேசுவைப் பின்பற்றுவதாக உறுதியளித்தனர். அவர்கள் தோல்வியுற்ற தருணங்களுக்காக மன்னிப்பு கேட்டார்கள்.

தேவமனிதர்கள், வாழ்க்கையில் இன்னும் அடிப்படை சோதனைகளுக்கு எதிராக போராடுவது நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அவ்வாறு இருக்க வேண்டியதில்லை. நம் வாழ்வில் தேவனுடைய இடத்தைப் பிடிக்க எத்தனிக்கும் எதுவும் விக்கிரகமே. இதுபோன்ற காரியங்கள் முடிந்துவிட்டன என்று நாம் நினைக்கையில் மீண்டும் அவை தலைதூக்கலாம்.

வேதத்தில், தனது மாமனாகிய லாபானிடமிருந்தும், சகோதரன் ஏசாவிடமிருந்தும் யாக்கோபு காப்பாற்றப்படுகிறார். அவர் தேவனை ஆராதிக்கவும், அவருடைய பல ஆசீர்வாதங்களைக் கொண்டாடவும் பெத்தேலுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். ஆனால் அவருடைய குடும்பம் யாக்கோபு அடக்கம் செய்ய வேண்டிய அந்நிய தெய்வங்களை இன்னும் வைத்திருந்தது (ஆதியாகமம் 35:2-4). யோசுவா புத்தகத்தின் முடிவில், இஸ்ரவேல் தங்கள் எதிரிகளைத் தோற்கடித்து கானானில் குடியேறிய பிறகு, "அப்படியானால் இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற அந்நிய தேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள்" (யோசுவா 24:23) என்று அவர்களை அறிவுறுத்த வேண்டியிருந்தது. தாவீது ராஜாவின் மனைவி மீகாள் விக்கிரகங்களை வைத்திருந்தாள், அவனைக் கொல்ல வந்த வீரர்களை ஏமாற்றுவதற்காக அவனுடைய படுக்கையில் ஒன்றை வைத்திருந்தாள்.  (1சாமுவேல் 19:11-16).

நாம் நினைப்பதை விட விக்கிரகங்கள் மிகவும் பெரியதானவை. தேவன் அதிக பொறுமையுடன் இருக்கிறார். விக்கிரகங்களிடம் திரும்புவதற்கான சோதனைகள் வரும், ஆனால் தேவனின் மன்னிப்பு பெரியது. நாம் இயேசுவுக்காகப் பிரிக்கப்படுவோமாக. நம்முடைய பாவங்களை விட்டு விலகி, அவரில் மன்னிப்பைக் கண்டடைவோமாக.

நமது ஆவிக்குரிய முனையை பெலப்படுத்தல்

ராக்கி திரைப்படங்கள் ஓர் குத்துச்சண்டை வீரரின் கதையைச் சொல்கிறது. அவர் ஹெவிவெயிட் சாம்பியனாவதற்கு சாத்தியமில்லாத முரண்பாடுகளை முறியடித்து, எப்படி வாழ்க்கையில் ஜெயித்தார் என்பதை சொல்கிறது. ராக்கி திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில், வெற்றியடைந்த ராக்கி தனது சொந்த சாதனைகளால் ஈர்க்கப்படுகிறார். தொலைக்காட்சி விளம்பரங்கள் அவரின் உடற்பயிற்சி நேரத்தை வீணாக்கின. அதின் விளைவாய் அவருடைய எதிர்தரப்பினர் மூலம் குத்துச்சண்டையில் தோல்வியை தழுவுகிறார். மீண்டும் சுதாரித்து, தன்னுடைய பழைய நிலைக்கு எவ்வாறு வருகிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.

ஆவிக்குரிய அர்த்தத்தில் சொல்லவேண்டுமாகில், யூதாவின் ராஜா ஆசா தனது சண்டை முனையை இழந்துவிட்டான். அவனது ஆட்சியின் ஆரம்பத்தில், அவன் கடினமான முரண்பாடுகளை எதிர்கொண்டு தேவனை நம்பினான். வலிமைமிக்க கூஷியர்கள் தாக்கத் தயாரானபோது, “எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்” (2 நாளாகமம் 14:11) என்று ஆசா ஜெபித்தான். தேவன் அவனுடைய ஜெபத்திற்குப் பதிலளித்தார். யூதேயா தேசம் அவர்களுடைய எதிரிகளை மேற்கொண்டது (வச. 12-15).

பல ஆண்டுகளுக்குப் பிறகு, யூதேயா மீண்டும் அச்சுறுத்தப்பட்டது. இம்முறை ஆசா தேவனை புறக்கணித்து, அந்நிய தேசத்து ராஜாவிடம் உதவிகேட்கிறான் (16:2-3). அது அவனுக்கு நன்றாகத் தோன்றியது. ஆனால் தேவன் மகிழ்ச்சியடையவில்லை. அவன் தேவனை நம்புவதை நிறுத்திவிட்டதாக அனானி தீர்க்கதரிசி ஆசாவிடம் கூறினான் (வச. 7-8). அவன் ஏன் முன்போல் இப்போது தேவனை நம்பவில்லை?

நம் தேவன் முற்றிலும் நம்பகமானவர். அவருடைய கண்கள் “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி” பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது (வச. 9). நாம் முற்றிலும் தேவனை சார்ந்துகொண்டு, நம்முடைய ஆவிக்குரிய முனையை சரியாய் வைத்திருக்கும்போது, அவருடைய பெலனை உணரலாம்.

 

கிறிஸ்துவில் கனிதரும் விசுவாசிகள்

சிண்டி ஒரு தொண்டு நிறுவனத்தில் தனது புதிய வேலைக்காக உற்சாகப்பட்டாள். மாற்றத்தை ஏற்படுத்த அரிய வாய்ப்பு. ஆனால் அவளுடைய சகபணியாளர்கள் அப்படியில்லை என்பதை அவள் விரைவில் கண்டுபிடித்தாள். தங்கள் நிறுவனத்தின் பணியை கேலி செய்தார்கள் மற்றும் லாபகரமான வேலைகளுக்கு வேறு இடங்களில் தேடியதால், மோசமான செயல்திறனுக்காக சாக்கு கூறினர். சிண்டி இந்த வேலைக்கு விண்ணப்பித்திருக்கவே வேண்டாம் என்றென்னினாள். தொலைவில் அற்புதமாக தோன்றியது அருகிலோ ஏமாற்றமளித்தது.

இன்றைய கதையில் (மாற்கு 11:13) குறிப்பிடப்பட்டுள்ள அத்தி மரத்தில் இயேசுவுக்கிருந்த பிரச்சனையும் இதுதான். இது பருவத்தின் ஆரம்பத்தில் இருந்தது, ஆனால் மரத்தின் இலைகள் அது ஆரம்பகால அத்திகளைக் கொண்டிருப்பதாக குறிக்கிறது. இல்லை, மரத்தில் இலைகள் துளிர்விட்டன, ஆனால் அது இன்னும் காய்க்கவில்லை. ஏமாற்றமடைந்த இயேசு, "இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கடவன்" (வச.14) என்று மரத்தை சபித்தார். மறுநாள் காலையில் மரம் வேரோடே பட்டுப்போயிருந்தது (வச. 20).

கிறிஸ்து ஒருமுறை நாற்பது நாட்கள் உபவாசம் இருந்தார், ஆகவே உணவு இல்லாமல் எப்படி இருக்க வேண்டும் என்று அவரறிவார். அத்தி மரத்தை சபிப்பது அவரது பசிக்காக இல்லை. இது ஒரு பொருள் பாடம். இந்த மரம் இஸ்ரவேலை குறிக்கிறது, அது மெய்யான மதத்தின் வேர்களை கொண்டிருந்தது, ஆனால் நோக்கத்தை இழந்துவிட்டது. அவர்கள் தேவனுடைய குமாரனாகிய தங்கள் மேசியாவைக் கொல்லப் போகிறார்கள். அவர்கள் எவ்வளவு கணியற்றிருந்திருக்க வேண்டும்?

தூரத்திலிருந்து நாம் அழகாகத் தோன்றலாம், ஆனால் இயேசு அருகில் வருகிறார், அவருடைய ஆவியால் மட்டுமே விளைவிக்கப்படும் கனியைத் தேடுகிறார். நமது கனிகள் கண்கவரும்வண்ணம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் அது இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அன்பு, சந்தோஷம் மற்றும் கடினமான காலங்களில் சமாதானம் போன்றவை (கலாத்தியர் 5:22). ஆவியானவரை சார்ந்து, இயேசுவுக்காக எப்போதும் கனி கொடுக்கலாம்.

தாராளமான அன்பு

விமானத்தில் என்னருகே அமர்ந்தவள்; தான் மதம் சாராதவள் என்றும், நிறைய கிறிஸ்தவர்கள் வசிக்கும் நகரத்திற்கு குடிபெயர்ந்திருப்பதாகவும் என்னிடம் கூறினாள். அவளது அயலகத்தாரில் அதிகமானோர் திருச்சபையின் வழிபாட்டிற்கு செல்வதாக அவள் குறிப்பிடுகையில், ​​அவளுடைய அனுபவத்தைப் பற்றி நான் கேட்டேன். அவர்களின் பெருந்தன்மைக்கு தன்னால் ஒருபோதும் கைமாறு செய்ய முடியாது என்றார். தனது ஊனமுற்ற தந்தையை புதிய நாட்டிற்கு அழைத்து வந்தபோது, ​​அவளுடைய அண்டை வீட்டார் அவளது வீட்டிற்கு ஒரு சாய்வுதளத்தை உருவாக்கி, மருத்துவமனை படுக்கை மற்றும் மருத்துவப் பொருட்களை தானமாக வழங்கினர். அவள், "கிறிஸ்தவனாக இருப்பது ஒருவரை அன்பானவராக ஆக்குகிறது என்றால், எல்லோரும் கிறிஸ்தவராக வேண்டும்" என்றாள்.

இயேசு என்ன நம்பினாரோ அதையே அவள் சொன்னாள், "இவ்விதமாக மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது" (மத்தேயு 5:16). பேதுரு இயேசுவின் கட்டளையை கேட்டு அதையே அறிவித்தார், "புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்" (1 பேதுரு 2:12).

இயேசுவை விசுவாசிக்காத நம் அயலகத்தாருக்கு நாம் எதை நம்புகிறோம், ஏன் நம்புகிறோம் என்று புரியாமல் இருக்கலாம். நமது தாராளமான அன்பை இன்னும் அவர்களால் புரிந்து கொள்ள முடியாத வரை, நமது நம்பிக்கையை திணிக்க வேண்டாம். மேலும் அவள் தன்னுடைய கிறிஸ்தவ அயலகத்தார், தான் அக்கறைகொள்ளவிட்டாலும், "அவர்களில் ஒருவராக" அவளிடம் கரிசனைகொள்வதை கண்டு வியந்தாள். கிறிஸ்துவினிமித்தம் தான் நேசிக்கப்படுவதை அறிந்திருந்தாள், மேலும் தேவனுக்கு நன்றி கூறுகிறாள். அவள் இன்னும் அவரை நம்பவில்லை, ஆனால் மற்றவர்கள் நம்புவதால் அவள் நன்றியுள்ளவளாக இருக்கிறாள்.

அந்நியரை உபசரித்தல்

"எவ்ரிதிங் சாட் இஸ் அன்ட்ரூ" என்ற புத்தகத்தில், டேனியல் நயேரி தனது தாய் மற்றும் சகோதரியுடன் சித்திரவதையிலிருந்து தப்பிக்க, ஒரு அகதி முகாம் மூலம் அமெரிக்காவின் பாதுகாப்பான இடத்திற்கு ஒடி வந்த கொடூரமான பயணத்தை விவரிக்கிறார். அவர்களுக்கு நிதி உதவிசெய்ய, முன்பின் தெரியாத ஒரு வயதான தம்பதியினர் முன்வந்தனா். பல ஆண்டுகள் கழிந்தும், டேனியல் அதைக் கிரகிக்கக் கூடாமல்,  "உங்களால் நம்ப முடிகிறதா? கண்மூடித்தனமாக அதைச் செய்தனர். நாங்கள் சந்தித்ததே இல்லை. நாங்கள் தீயவர்களாக இருந்திருந்தால், அதற்கான விலைக்கிரயத்தை அவர்கள் கொடுத்திருக்க வேண்டும். என் வாழ்வில் அதுபோன்ற துணிச்சல், இரக்கம் மற்றும் தீவிரத்தைக் கண்டதேயில்லை" என்று எழுதுகிறார்.

இப்படிப்பட்ட கரிசனையைப் பிறர் மீது நாம் காட்டும்படி தேவன் விரும்புகிறார். அந்நியரிடம் இரக்கமாயிருக்கும்படி, இஸ்ரவேலரிடம் தேவன் கூறினார். "நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே" (லேவியராகமம் 19:34). இயேசுவுக்குள்ளான புறஜாதி விசுவாசிகளுக்கு (நம்மில் பெரும்பாலானோர்) "அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், … புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள் (எபேசியர் 2:12) என்று நினைவூட்டினார். ஆகவே, யூதரும் புறஜாதியுமான முன்பு அந்நியராயிருந்த நம் அனைவர்க்கும், "அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்" (எபிரெயர் 13:2) என அவர் கட்டளையிடுகிறார்.

இப்போது தனக்கென ஒரு குடும்பத்துடன் வளர்ந்துள்ள டேனியல், தங்களுக்கு உதவிய ஜிம் மற்றும் ஜீன் டாவ்சனை, "அவ்வளவு கிறிஸ்தவ தன்மையோடு இருந்தனர், அகதிகளின் குடும்பத்தை தங்களுக்கு வீடு கிடைக்கும் வரை தங்களோடு வாழ அனுமதித்தனர்" பாராட்டுகிறார்.

தேவன் அந்நியரை ஏற்றுக்கொள்கிறார், அவர்களை ஏற்றுக்கொள்ளுமாறு நம்மையும் தூண்டுகிறார்.

தழும்புகளிலிருந்து கற்றுக்கொள்ளுதல்

ஃபே அவள் வயிற்றில் உள்ள தழும்புகளைத் தொட்டாள். உணவுக்குழாய்-வயிற்று புற்றுநோயை அகற்ற இன்னுமொரு அறுவை சிகிச்சையை அவள் தாங்கவேண்டியிருந்தது. இந்த நேரத்தில் மருத்துவர்கள் அவளது வயிற்றின் ஒரு பகுதியை எடுத்து, அதில் அவர்களுடைய வேலையின் அளவை அடையாளம் தெரிந்துகொள்வதற்காக ஒரு சிறு பகுதியை தைக்காமல் விட்டுவிட்டனர். அவள் தனது கணவரிடம், “வடுக்கள், புற்றுநோயின் வலியை அல்லது குணமாகுதலின் துவக்கத்தைக் குறிக்கின்றன. எனது இந்த வடுக்களை குணமாகுதவலின் அடையாளமாக நான் தேர்வு செய்கிறேன்” என்று சொன்னாள்.

யாக்கோபு இரவு முழுவதும் தேவனோடு போராடிய பின்பு, இதுபோன்ற ஒரு தேர்வை தெரிந்தெடுத்தான். கர்த்தருடைய மனுஷன் யாக்கோபின் தொடை சந்தை பிடிக்க, யாக்கோபு சுளுக்கின் நிமித்தம் சோர்வாகவும் தளர்வுடனும் காணப்பட்டான். சில மாதங்களுக்குப் பிறகு, யாக்கோபு தனது இடுப்பை மென்மையாய் நீவியபோது அவன் எதைப் பிரதிபலித்தான் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?

இந்த போராட்டம் நடைபெற்றதற்கு பின்னணியாக, அவரது பல வருட வஞ்சகத்திற்காக அவன் வருத்தத்தால் நிரப்பப்பட்டானா? கர்த்தருடைய தூதன் அவன் யார் என்ற உண்மை விளங்கும் வரைக்கும் அவனை ஆசீர்வதிக்க மறுத்தார். பின்பு யாக்கோபு, தான் குதிங்காலை பிடித்தவன் என்ற உண்மையை ஒப்புக்கொண்டார் (ஆதியாகமம் 25:26 ஐப் பார்க்கவும்). அவர் தனது சகோதரன் ஏசாவையும் மாமனார் லாபானையும் தந்திரமாக கையாண்டு, அவர்கள் மூலம் ஆதாயம் பெறுகிறான். யாக்கோபோடு போராடிய கர்த்தருடைய தூதன், அவன் தேவனோடும் மனிதனோடும் போராடி மேற்கொண்டபடியால், அவனுக்கு இஸ்ரவேல் என்று பெயர் சூட்டுகிறான் (வச. 28).

யாக்கோபின் இந்த தொடைச்சுளுக்கானது அவனது பழைய வஞ்சக வாழ்க்கையின் முடிவையும் தேவனுடனான அவனது புதிய வாழ்க்கையின் துவக்கத்தையும் குறிக்கிறது. அதாவது, யாக்கோபின் முடிவையும் இஸ்ரவேலின் துவக்கத்தையும் குறிக்கிறது. தேவன் அவன் மூலமாய் பலமாய் கிரியை செய்யும் அளவிற்கு, அவனது அந்த தளர்வானது தேவன் மீது முற்றிலுமாய் சாய்ந்துகொள்வதற்கு அவனுக்கு வழிவகுத்தது.

தேவன் போதுமானவர்

எலன், பண நெருக்கடியில் இருந்தாள். எனவே கிறிஸ்மஸ_க்கு கிடைக்கும் போனஸ் பெற்றதில் மகிழ்ச்சியடைந்தாள். அவள் பெற்றுக்கொண்ட பணம் அவளுடைய தேவைக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் அவள் அந்த பணத்தை வங்கியில் போடும்போது, அவனுக்கு மற்றுமொரு ஆச்சரியம் காத்திருந்தது. கிறிஸ்மஸ் பரிசாக, வங்கி தனது ஜனவரி மாத அடமானத் தொகையை தனது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ததாக அவளுக்கு அறிவிக்கப்பட்டது. இப்போது அவளும் அவளுடைய கணவரும் மற்ற செலவுகளை செய்யலாம். இன்னும் யாராவது ஒருவரை கிறிஸ்மஸ் பரிசுடன் ஆச்சரியப்படுத்தக்கூடும்.

நாம் எதிர்பார்ப்பதை விட தேவன் நம்மை ஆசீர்வதிக்க அவருக்கு வழி தெரியும். நகோமி தனது கணவன் மற்றும் குமாரர்களின் மரணத்தால் கசப்பாகவும் உடைந்தும் இருந்தாள் (ரூத் 1:20-21). அவளது அவநம்பிக்கையான அந்த சூழ்நிலையை போவாஸ் மாற்றினார். போவாஸ் நகோமியின் மருமகளை மறுமணம் செய்து, அவர்கள் தங்குவதற்கான வீட்டையும் கொடுத்தார் (4:10).

நகோமி எதிர்பார்த்ததும் அதுதான். ஆனால் பின்னர் தேவன் ரூத்துக்கும் போவாஸ{க்கும் ஒரு குமாரனைக் கொடுத்து ஆசீர்வதித்தார். நாகோமிக்கு “ஆத்துமாவுக்கு ஆறுதல்செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்” (வச. 15) என்று பேரன் கொடுக்கப்படுகிறான். அது அவளுக்கு மிகவும் போதுமானதாக இருந்திருக்கும். அதைப் பார்த்த பெத்லகேமின் ஸ்திரீகள், “நகோமிக்கு ஒரு ஆண் பிள்ளை பிறந்தது!” (வச. 17) என்று சொன்னர்கள். பின்னர் சின்ன ஓபேத் வளர்ந்து, “தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பனாய்” ஆனார் (வச. 17). நகோமியின் குடும்பம் வரலாற்றில் மிக முக்கியமான வம்சமான இஸ்ரவேலின் ராஜ வம்சத்தைச் சேர்ந்தது! அதுவே போதுமானதாக இருந்திருக்கும். இருப்பினும், தாவீது இயேசுவின் முற்பிதாவாய் மாறினார்.

நாம் கிறிஸ்துவை விசுவாசித்தால், நகோமியின் ஆசீர்வாதங்கள் நமக்கும் கிட்டும். அவர் நம்மை மீட்கும் வரையில் நம்மிடத்தில் எதுவும் இல்லை. இப்போது நாம் நம் தகப்பனால் முழுவதுமாய் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளோம். அவர் மற்றவர்களை ஆசீர்வதிக்க நம்மை ஆசீர்வதிப்பார். இது நம்மடைய தேவையைக் காட்டிலும் அதிகமானது.