எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

Matt Lucasகட்டுரைகள்

கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி

இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, மெதடிஸ்ட் பாடல் புத்தகத்தில் முதலாவதாக வைக்கப்பட்ட பாடல் சார்லஸ் வெஸ்லியால் எழுதப்பட்ட “ஓ ஆயிரம் நாவுகள் பாடுவதற்கு” என்ற பாடலே. “ஒருவருடைய மனந்திரும்புதலின் ஆண்டுவிழா” என்றே அப்பாடல் முதலாவது தலைப்பிடப்பட்டிருந்தது. இயேசுவின் மீதான அவரது நம்பிக்கையால் தூண்டப்பட்ட தீவிரமான புதுப்பித்தலை நினைவுகூரும் வகையில் இந்த பாடல் இயற்றப்பட்டது. மனந்திரும்பி கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு தேவனுடைய குணாதிசங்களின் மகிமையைப் பறைசாற்றும் பதினெட்டு வரிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

அத்தகைய நம்பிக்கை கொண்டாடத் தகுந்தது; பகிர்ந்து கொள்ளத்தக்கது. 2 தீமோத்தேயு 2ல், பவுல் தீமோத்தேயுவை தனது விசுவாசத்தில் உறுதியாக இருக்கவும், அதைப் பகிர்ந்து கொள்வதில் விடாமுயற்சியுடன் இருக்கவும் ஊக்குவிக்கிறார். மேலும், “இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்” (வச. 8-9) என்று குறிப்பிடுகிறார். அவருடைய தெரிவுகளை இரண்டாவதாக யூகிப்பதற்குப் பதிலாக, பவுல் தீமோத்தேயுவுக்கு “தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்” (வச. 8) என்று சுவிசேஷத்தை நினைப்பூட்டுகிறார். அவர் ஆளுகை செய்வதற்காக அல்ல, ஊழியம் செய்வதற்காகவே வந்தார்; நாம் சமாதானமாய் இருக்கும்பொருட்டு உலகத்தின் பாவங்களுக்காய் அவர் மரித்தார். மரணம் ஜெயங்கொள்ளவில்லை. இயேசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார்.

மேலும் அது நம்பிக்கை கொண்டவர்களை விடுதலையை பெறுவது போல், அதின் செய்தியும் கட்டுப்பட்டு இருக்கவில்லை. சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், கல்லறைகள் போன்று மரணம் தன் ஆளுகையை செயல்படுத்தும் இடங்களில் கூட, “தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை” (வச. 9) என்று பவுல் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவில் அனைவருக்கும் நம்பிக்கை துளிர்விடுகிறது. அந்த செய்தி கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி! 

 

தாராளமான விசுவாசம்

சில ஆண்டுகளுக்கு முன்பு, அரசியல் தலைமையின் கொந்தளிப்பான மாற்றத்திற்குப் பிறகு, தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் அகதிகளை ஏற்றுக்கொள்ள எங்கள் சபையும் அழைக்கப்பட்டது. அநேக குடும்பங்கள், ஒரு சிறிய பையில் தங்களால் இயன்றதை மட்டுமே கொண்டு வந்திருந்தனர். எங்கள் சபை குடும்பங்களில் பலர் தங்கள் வீடுகளில் அவர்களை ஏற்றுக்கொண்டனர். சில வீடுகளில் இடவசதி மிகக்குறைவாகவே இருந்தது.

அவர்களுடைய விருந்தோம்பல், இஸ்ரவேலர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்தில் பிரவேசித்தபோது அவர்களுக்குத் தேவன் தந்த மூன்று கட்டளைகளைப் பிரதிபலிக்கிறது (உபாகமம் 24:19-21). விவசாயம் செய்யும் சமூகமாக, அறுவடையின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொண்டனர். அடுத்த ஆண்டு வரை தாக்குப்பிடிக்க அவர்களுக்குப் பயிர்கள் அவசியம். இதுவே தேவன், “அதைப் பரதேசிக்கும் திக்கற்றபிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக” (வ.19) என்று கட்டளையிடவும், அவரை நம்பும்படி அழைக்கவும் செய்தது. தங்களுக்கு போதுமானது உள்ளது என்று அறிந்து மட்டும் கொடுக்காமல், தேவனின் பராமரிப்பை நம்பும் உள்ளத்திலிருந்து கொடுத்து, இஸ்ரவேலர்கள் தாராள மனப்பான்மையை கடைப்பிடித்தனர்.

இத்தகைய விருந்தோம்பல், அவர்களும் “எகிப்திலே அடிமையாயிருந்ததை” (வ.18, 22) நினைவூட்டுவதாகவும் இருந்தது. அவர்கள் ஒரு காலத்தில் நசுக்கப்பட்டு, ஆதரவற்றிருந்தனர். அவர்களின் உதாரத்துவம் அவர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த தேவனின் கிருபையை நினைவூட்டுவதாக இருந்தது.

இயேசுவின் விசுவாசிகளும் உதாரத்துவமாய் இருக்கும்படி வலியுறுத்தப்படுகிறார்கள். “அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே” (2 கொரிந்தியர் 8:9) என்று பவுல் நமக்கு நினைப்பூட்டினார். அவர் நமக்களித்ததால் நாமும் அளிக்கிறோம். 

 

கடந்த மற்றும் நிகழ்கால தேவன்

நாங்கள் எங்கள் குடும்பமாய் வளர்ந்த ஓரிகான் நகரத்தை விட்டுவந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. நாங்கள் அங்கு சிறந்த நினைவுகளை உருவாக்கினோம். அந்த இடத்திற்கு திரும்பி மீண்டும் வந்தபோது, நான் மறந்துவிட்ட தருணங்களை அது எனக்கு நினைவூட்டியது. எங்கள் பெண்கள் கால்பந்து விளையாட்டுகள், எங்கள் பழைய வீடு, தேவாலயக் கூட்டங்கள் மற்றும் எங்கள் நண்பர்களின் மெக்சிகன் உணவகம் என்று பல நினைவுகள் எனக்கு ஏற்பட்டது. இப்போது நகரம் முழுவதுமாய் மாறிவிட்டது. ஆனால் அங்கு வருவது உகந்தது என்று என்னை நம்பவைக்க போதுமான நண்பர்கள் எனக்கு அங்கு இருந்தார்கள்.

இஸ்ரவேலர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டபோது, உறவுகள், அடையாளங்கள் மற்றும் கலாச்சாரத்தின் பரிச்சயத்தை அவர்கள் தவறவிட நேரிட்டது. தேவனுக்கு விரோதமாக கலகம் செய்ததற்காக சிறையிருப்புக்கு சென்றதை அவர்கள் மறந்துவிட்டார்கள். கள்ளத் தீர்க்கதரிசிகள், அவர்களிடம் இரண்டு ஆண்டுகளுக்குள் அவர்கள் வீடு திரும்புவார்கள் என்று கூறியபோது (எரேமியா 28:2-4; 29:8-9), அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். சீக்கிரம் அவர்கள் சொந்த தேசத்திற்கு திரும்பிவிடுவார்கள் என்ற பொய்யான தீர்க்கதரிசனத்தைக் கேட்பது அவர்களுக்கு இலகுவாய் இருந்தது.

கள்ளத் தீா்க்கதரிகளையும் அவர்களின் பொய்யான வாக்குறுதிகளையும் தேவன் அனுமதிக்கவில்லை. “உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை மோசம்போக்கவொட்டாதிருங்கள்” (29:8) என்று தேவன் அவர்களை எச்சரிக்கிறார். அவர் தன்னுடைய ஜனத்தைக் குறித்து அழகான திட்டம் வைத்திருக்கிறார். அவைகள் நம்பிக்கையையும் எதிர்காலத்தையும் வாக்குப்பண்ணும் மேன்மையான திட்டங்கள் (வச. 11). அவர்களின் நிலைமை சவாலானது, கடினமானது மற்றும் புதியது. ஆனால் தேவன் அவர்களுடன் இருந்தார். “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” (வச. 13) என்று அவர்களிடம் சொல்லுகிறார். “நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன்” (வச. 14) என்று கர்த்தர் சொல்லுகிறார். நம்முடைய பழைய மேன்மையான நினைவுகளை நினைக்கும்போது அது நம்மை சோர்வடையச் செய்துவிடுகிறது. தேவன் இப்போது என்ன செய்கிறார் என்பதைத் தவறவிடாதீர்கள். அவர் வாக்குத்தத்தங்களை நிச்சயமாய் நிறைவேற்றுவார்.

நெருக்கத்தின் குரல்

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் இரண்டு தளங்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிரியா நாட்டுச் சிறுமியான ஐந்து வயது ஜினான், தனது சிறிய சகோதரனைச் சுற்றியுள்ள இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியபோது மீட்புப் பணியாளர்களை அழைத்தார். “என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச்செல்லுங்கள்; நான் உங்களுக்காக எதையும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரியாகவும் இருப்பேன்” என்று அவள் நொறுங்கிய உள்ளத்தோடு அழைத்தாள்.

நெருக்கத்திலிருந்து அழைப்பது என்பது சங்கீதம் முழுதும் உள்ளது, “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” (118:5). பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எடையை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும், சவாலான உடல்நிலை, பொருளாதாரக் கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது உறவுமுறை இழப்பு போன்றவற்றின் நெருக்குதலை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.

அந்த தருணங்களில் நாம் விடுதலைக்காக தேவனிடம் பேரம் பேசலாம். ஆனால் உதவிக்காக தேவனை வற்புறுத்த வேண்டியதில்லை. அவர் பதிலளிப்பதாக உறுதியளிக்கிறார், அது நமது சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அவர் நம்முடனும் நம் அருகிலும் இருப்பார். மரணம் உட்பட வேறு எந்த ஆபத்துக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சங்கீதக்காரனோடு நாமும், “எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்” (வ.7) எனலாம்.

ஜினானும் அவளது தம்பியும் பெற்றுக்கொண்டதை போல வியத்தகு மீட்பு நமக்கு வாக்களிக்கப்படவில்லை, ஆனால் சங்கீதக்காரனை “விசாலத்திலே” (வ. 5) கொண்டு வந்த நமது உண்மையுள்ள தேவனை நாம் நம்பலாம். அவர் நம் நிலைமையை அறிந்திருக்கிறார், மரணத்திலும் அவர் நம்மை கைவிடமாட்டார்.

எளிமையான அழைப்பு

“நீ உறங்குவதற்கு முன்பு, முன் அறையை சுத்தம்செய்துவிடு” என்று என்னுடைய ஒரு மகளிடத்தில் நான் சொன்னேன். உடனே அவள், “ஏன் இதை அவள் செய்யக்கூடாது?” என்று கேட்டாள். 
இதுபோன்ற இலகுவான எதிர்ப்புகள், என்னுடைய மகள்கள் சிறியவர்களாய் இருக்கும்காலத்தில் எங்கள் வீட்டில் சாதாரணமாய் நிகழும். அவ்வாறு நிகழும்போது “உன் சகோதரிகளைக் குறித்து நீ கவலைப்படவேண்டாம், நான் உன்னை தான் செய்யச்சொன்னேன்” என்று நான் அவர்களுக்கு எப்போதும் பதில்கொடுப்பதுண்டு. 
யோவான் 21ஆம் அதிகாரத்தில், சீஷர்களுக்குள்ளும் இவ்விதமான சிந்தை இருந்ததை நாம் பார்க்கக்கூடும். பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலித்த பின்னர், இயேசு அவனை மீண்டும் மீட்டெடுத்தாா் (யோவான் 18:15-18, 25-27). இயேசு பேதுருவைப் பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” (21:19) என்று எளிய மற்றும் கடினமான ஒரு கட்டளையைக் கொடுக்கிறார். பேதுரு அவரை மரணபரியந்தம் பின்பற்றுவான் என்பதை இயேசு விவரிக்கிறார் (வச. 18-19). ஆனால் பேதுரு இயேசு சொன்னதை நிதானிப்பதற்குள், அவர்களுக்கு பின்னாக நின்றுகொண்டிருந்த, சீஷனைக் குறித்து “ஆண்டவரே, இவன் காரியம் என்ன?” (வச. 21) என்று இயேசுவிடத்தில் கேட்கிறான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக, “நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா” (யோவான் 21:22) என்று சொல்லுகிறாா்.. 
நாம் எத்தனை நேரங்களில் பேதுவைப்போல் இருக்கிறோம்! மற்றவர்களுடைய விசுவாசப்பாதையை தெரிந்துகொள்ள ஆர்வம் காண்பிக்கிறோம். தேவன் நம்மைக்கொண்டு செய்வதை பொருட்படுத்துவதில்லை. அவனுடைய வாழ்நாட்களின் இறுதியில், யோவான் 21இல் இயேசு முன்னறிவித்திருந்த மரணத்தின் விளிம்பில் பேதுரு நிற்கும்போது, இயேசுவின் அந்த எளிமையான கட்டளையை பேதுரு விவரிக்கிறான்: “நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படியே இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராகியிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” (1 பேதுரு 1:14-15). அந்த சிந்தையே, நம்மை சுற்றிலும் இருக்கிற அனைத்து காரியங்களிலிருந்து நம்முடைய பார்வையை விலக்கி, கிறிஸ்துவை நோக்கி செயல்பட நம்மை ஊக்குவிக்கிறது. 

- மேட் லூகாஸ் 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பரலோகம் பாடுகிறது

அந்த உயர்நிலைப் பள்ளி பாடகர்கள் அர்ஜென்டினா பாடலான “எல் சியோலோ கான்டா அலெக்ரியா” பாடியபோது அவர்களின் குரல்களில் மகிழ்ச்சி பொங்கியது. அதை ரசித்தேன், ஆனால் எனக்கு ஸ்பானிஷ் தெரியாததால் பாடல் வரிகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் பாடகர் குழு “அல்லேலூயா!” என்று மகிழ்ச்சியுடன் பிரகடனப்படுத்த தொடங்கியதும், எனக்கு பரீட்சயமான அந்த வார்த்தையை விரைவிலேயே என் செவியில் விழுந்தது. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மொழிகளில் ஒரே மாதிரியாக ஒலிக்கும் தேவனுக்கான துதிப் பிரகடனமான “அல்லேலூயா” என்பதைத் திரும்பத் திரும்பக் கேட்டேன். பாடலின் பின்னணியை அறிய ஆவலுடன், நிகழ்ச்சிக்குப்பின் இணையத்திற்குச் சென்றேன், “பரலோகம் சந்தோஷத்தால் பாடுகிறது” என்று மொழிபெயர்க்கப்பட்டதைக் கண்டுபிடித்தேன்.

வெளிப்படுத்துதல் 19 இல் உள்ள ஒரு கொண்டாட்டம் நிறைந்த பத்தியில், அந்தப் பாடலில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைநிலையின் ஒரு துளி நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது; பரலோகம் முழுவதும் மகிழ்ச்சி! புதிய ஏற்பாட்டின் கடைசிப் புத்தகத்தில் அப்போஸ்தலன் யோவான் எதிர்காலத்தைப் பற்றிய தரிசனத்தில், தேவனுக்கு நன்றி தெரிவிக்கும் மகத்தான ஜனத்திரள் மற்றும் தேவதூதர்கள் பரலோகத்தில் கூடியிருந்ததைக் கண்டார். தீமையையும் அநீதியையும் வென்ற தேவனின் வல்லமையையும், முழு பூமியின் மீதும் அவருடைய ஆளுகையையும், அவருடன் என்றென்றும் வாழும் நித்திய வாழ்க்கையையும் அந்த பாடல் குழுவின் குரல்கள் கொண்டாடுகிறது என்று யோவான் எழுதினார். மீண்டும் மீண்டும், பரலோகவாசிகள் அனைவரும் “அல்லேலூயா!” அல்லது “தேவனைத் துதியுங்கள்!” என்று அறிவிக்கிறார்கள் (வ. 1, 3, 4, 6).

ஒரு நாள் “சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து” (5:9) வரும் மக்கள் தேவனின் மகிமையை அறிவிப்பார்கள். மேலும் மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு மொழியிலும் நம் குரல்கள் அனைத்தும் ஒன்றாக “அல்லேலூயா!” என்று முழங்கும்.

 

ஒருவருக்கொருவர் உதவுங்கள்

அவ்வளவாகப் பிரபலமாகாத பயிற்சியகத்தை சேர்ந்த கிரிக்கெட் அணியினர் கிரிக்கட் மண்டல போட்டிக்காகக் களம் இறங்கியபோது, அரங்கிலிருந்த ரசிகர்கள் தோல்வியடையக்கூடிய அந்த அணிக்கு ஆரவாரம் செய்து ஊக்குவித்தனர். இந்த அணி முதல் சுற்றில் வெற்றிபெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் வென்றனர். இப்போது அவர்களுடன் இசைக்குழு இல்லையென்றாலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்கைகள் பிரிவிலிருந்து அவர்களின் பள்ளி கீதம் ஒலிக்கக் கேட்டனர். இப்போது வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர்களின் எதிரணியின் இசைக்குழுவினர், போட்டி முடியும் சில நிமிடங்களுக்கு முன்புதான் இவர்களின் பள்ளி பாடலைக் கற்றுக்கொண்டனர். அந்த இசைக்குழுவினர் தங்களுக்குத் தெரிந்த பாடல்களை வெறுமனே வாசித்திருக்கலாம், ஆனால் அவர்கள் மற்றொரு பள்ளி மற்றும் மற்றொரு குழுவிற்கு உதவ அந்த பாடலைக் கற்றுக்கொண்டனர்.

இந்த இசைக்குழுவின் செயல்கள் பிலிப்பியரில் விவரிக்கப்பட்டுள்ள ஒற்றுமையை அடையாளப்படுத்துவதைக் காணலாம். பவுல் பிலிப்பியில் உள்ள ஆரம்பக்கால சபையாருக்கும் இன்று நமக்கும், ஒற்றுமையில் அல்லது “ஏக சிந்தை(யுடன்)” (பிலிப்பியர் 2:2) வாழச் சொன்னார், குறிப்பாக அவர்கள் கிறிஸ்துவில் ஒன்றுபட்ட காரணத்தால். இதைச் செய்ய, சுயநலமான நோக்கத்தை விட்டுவிட்டு, பிறர் நலனை தங்கள் சொந்த நலன்களுக்கு முன்னதாக கருத்தில் கொள்ளும்படி அப்போஸ்தலன் அவர்களை ஊக்குவித்தார். நம்மை விடப் பிறரை முக்கியத்துவப்படுத்துவது இயல்பாகவே வராமல் இருக்கலாம், ஆனால் கிறிஸ்துவை அவ்வாறே நாம் பிரதிபலிக்கலாம். பவுல், “ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” (வ.3) என்று எழுதினார். நம்மீது மட்டுமே கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, தாழ்மையுடன் “பிறருக்கானவகளையும் நோக்கு(வது)வானாக” (வ.4) சிறந்தது.

நாம் எப்படி மற்றவர்களைத் தாங்கக் கூடும்? அவர்களுக்கு எதிரானதைச் செய்வதோ அல்லது அவர்களுக்குத் தேவையானதை வழங்குவதோ என்பதை அவர்களின் ஆர்வங்களைக் கவனமாகப் பரிசீலிப்பதன் மூலமே நிறைவேற்றமுடியும். 

 

கும்பத்திற்கு மேலானதாக

செல்வா ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் முழுநேர பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவரது மூத்த சகோதரன் மோகன் மகிழ்ச்சியடைந்தார், ஆனால், சகோதரர்களாக, சிறுவயதில் செல்வாவை அவர் எவ்வாறு புழுதியில் தள்ளி சண்டையில் வெல்வார் என்பதைச் சொல்லி அவரையறியாமலேயே கிண்டல் செய்தார். செல்வா வாழ்க்கையில் வெகுதூரம் முன்னேறிவிட்டார், எனினும் அவர் எப்போதும் மோகனின் சிறிய தம்பியாகவே இருப்பார்.

நீங்கள் மேசியாவாகவே இருந்தாலும் குடும்பத்தால் மதிக்கப்படுவது கடினம். இயேசு நாசரேத்தின் மக்களிடையே வளர்ந்தார், எனவே அவர் விசேஷித்தவர் என்று நம்புவதற்கு அவர்கள் சிரமப்பட்டனர். ஆனாலும் அவர்கள் அவரை கண்டு வியந்தனர். “இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது? இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா?” (மாற்கு 6:2-3). இயேசு, “தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான்” (வ. 4) என்று குறிப்பிட்டார். இவர்கள் இயேசுவை நன்கு அறிந்திருந்தனர், ஆனால் அவர் தேவனின் குமாரன் என்பதை அவர்களால் நம்பி ஏற்க முடியவில்லை.

ஒருவேளை நீங்கள் ஒரு ஆவிக்குரிய குடும்பத்தில் வளர்க்கப்பட்டிருக்கலாம். உங்கள் ஆரம்பக்கால நினைவுகளில் சபைக்குச் செல்வதும், பாடல்களைப் பாடுவதும் நிறைந்திருக்கலாம். இயேசு எப்போதும் ஒரு குடும்பத்தாரைப் போலவே உணர்ந்தார். நீங்கள் அவரை விசுவாசித்துப் பின்பற்றினால், இயேசு உங்கள் குடும்பத்தினர். அவர் “(நம்மை) சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்” (எபிரெயர் 2:11). தேவனின் குடும்பத்தில் இயேசு நம் மூத்த சகோதரர் (ரோமர் 8:29) இது ஒரு பெரிய பாக்கியம், ஆனால் நம்மிடையேயான நெருக்கம் அவரை சாதாரணமானவராகக் காட்டலாம். ஒருவர் குடும்பத்தினராக இருப்பதால் அவர்கள் விசேஷித்தவர் அல்ல என்று அர்த்தமல்ல.

இயேசு நமது குடும்பத்தினரும், குடும்பத்தினரை விட மேலானவர் என்பதிலும் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா? இன்று நீங்கள் அவரைப் பின்தொடரும்போது, அவர் மேலும் நெருக்கமானவராகவும், மேலும் விசேஷித்தவராகவும் உங்களுக்கு மாறுவாராக.