எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

Matt Lucasகட்டுரைகள்

நெருக்கத்தின் குரல்

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் இரண்டு தளங்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிரியா நாட்டுச் சிறுமியான ஐந்து வயது ஜினான், தனது சிறிய சகோதரனைச் சுற்றியுள்ள இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியபோது மீட்புப் பணியாளர்களை அழைத்தார். “என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச்செல்லுங்கள்; நான் உங்களுக்காக எதையும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரியாகவும் இருப்பேன்” என்று அவள் நொறுங்கிய உள்ளத்தோடு அழைத்தாள்.

நெருக்கத்திலிருந்து அழைப்பது என்பது சங்கீதம் முழுதும் உள்ளது, “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” (118:5). பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எடையை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும், சவாலான உடல்நிலை, பொருளாதாரக் கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது உறவுமுறை இழப்பு போன்றவற்றின் நெருக்குதலை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.

அந்த தருணங்களில் நாம் விடுதலைக்காக தேவனிடம் பேரம் பேசலாம். ஆனால் உதவிக்காக தேவனை வற்புறுத்த வேண்டியதில்லை. அவர் பதிலளிப்பதாக உறுதியளிக்கிறார், அது நமது சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அவர் நம்முடனும் நம் அருகிலும் இருப்பார். மரணம் உட்பட வேறு எந்த ஆபத்துக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சங்கீதக்காரனோடு நாமும், “எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்” (வ.7) எனலாம்.

ஜினானும் அவளது தம்பியும் பெற்றுக்கொண்டதை போல வியத்தகு மீட்பு நமக்கு வாக்களிக்கப்படவில்லை, ஆனால் சங்கீதக்காரனை “விசாலத்திலே” (வ. 5) கொண்டு வந்த நமது உண்மையுள்ள தேவனை நாம் நம்பலாம். அவர் நம் நிலைமையை அறிந்திருக்கிறார், மரணத்திலும் அவர் நம்மை கைவிடமாட்டார்.

எளிமையான அழைப்பு

“நீ உறங்குவதற்கு முன்பு, முன் அறையை சுத்தம்செய்துவிடு” என்று என்னுடைய ஒரு மகளிடத்தில் நான் சொன்னேன். உடனே அவள், “ஏன் இதை அவள் செய்யக்கூடாது?” என்று கேட்டாள். 
இதுபோன்ற இலகுவான எதிர்ப்புகள், என்னுடைய மகள்கள் சிறியவர்களாய் இருக்கும்காலத்தில் எங்கள் வீட்டில் சாதாரணமாய் நிகழும். அவ்வாறு நிகழும்போது “உன் சகோதரிகளைக் குறித்து நீ கவலைப்படவேண்டாம், நான் உன்னை தான் செய்யச்சொன்னேன்” என்று நான் அவர்களுக்கு எப்போதும் பதில்கொடுப்பதுண்டு. 
யோவான் 21ஆம் அதிகாரத்தில், சீஷர்களுக்குள்ளும் இவ்விதமான சிந்தை இருந்ததை நாம் பார்க்கக்கூடும். பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலித்த பின்னர், இயேசு அவனை மீண்டும் மீட்டெடுத்தாா் (யோவான் 18:15-18, 25-27). இயேசு பேதுருவைப் பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” (21:19) என்று எளிய மற்றும் கடினமான ஒரு கட்டளையைக் கொடுக்கிறார். பேதுரு அவரை மரணபரியந்தம் பின்பற்றுவான் என்பதை இயேசு விவரிக்கிறார் (வச. 18-19). ஆனால் பேதுரு இயேசு சொன்னதை நிதானிப்பதற்குள், அவர்களுக்கு பின்னாக நின்றுகொண்டிருந்த, சீஷனைக் குறித்து “ஆண்டவரே, இவன் காரியம் என்ன?” (வச. 21) என்று இயேசுவிடத்தில் கேட்கிறான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக, “நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா” (யோவான் 21:22) என்று சொல்லுகிறாா்.. 
நாம் எத்தனை நேரங்களில் பேதுவைப்போல் இருக்கிறோம்! மற்றவர்களுடைய விசுவாசப்பாதையை தெரிந்துகொள்ள ஆர்வம் காண்பிக்கிறோம். தேவன் நம்மைக்கொண்டு செய்வதை பொருட்படுத்துவதில்லை. அவனுடைய வாழ்நாட்களின் இறுதியில், யோவான் 21இல் இயேசு முன்னறிவித்திருந்த மரணத்தின் விளிம்பில் பேதுரு நிற்கும்போது, இயேசுவின் அந்த எளிமையான கட்டளையை பேதுரு விவரிக்கிறான்: “நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படியே இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராகியிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” (1 பேதுரு 1:14-15). அந்த சிந்தையே, நம்மை சுற்றிலும் இருக்கிற அனைத்து காரியங்களிலிருந்து நம்முடைய பார்வையை விலக்கி, கிறிஸ்துவை நோக்கி செயல்பட நம்மை ஊக்குவிக்கிறது. 

- மேட் லூகாஸ் 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

எங்கள் உயிரைக் காப்பாற்றும்

குறிப்பாகக் கொண்டாட்டங்களின் போது இலைகள் மற்றும் செடிகள் தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. விருந்தாளிகளை வரவேற்பதற்காகத் திருமண மண்டபத்தின் நுழைவாயிலில் ஒளிரும் விளக்குகளுடன் பின்னிப்பிணைந்த வாழை மரங்கள் கட்டப்படுகின்றன. ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட மா இலைகள் கதவுகளை அலங்கரிக்கப் பயன்படுகின்றன. வாழை இலைகள் வண்ணமயமான, பல வகை உணவைப் பரிமாற ஒரு தட்டாகப் பயன்படுத்தப்படுகின்றன. மற்றும் தேங்காய் பனை அலங்காரமாகப் பயன்படுத்தப்படுகிறது.

யூதேயாவிலும் இலைகள் அவர்களின் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததாகத் தெரிகிறது. கழுதையில் ஏறி, இயேசு எருசலேமுக்குள் நுழைந்தபோது, பஸ்கா பண்டிகை நடந்து கொண்டிருந்தது. எகிப்திலிருந்து கிடைத்த விடுதலையைக் கொண்டாட உலகம் முழுவதிலுமிருந்து யூதர்கள் ஒன்றுகூடிய நேரம் அது. கொண்டாட்டம் மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகப் பனை ஓலைகளைப் பயன்படுத்துவது ஒரு பாரம்பரியமாக இருந்தது. ரோமாபுரியின் இரும்புப் பிடியின் கீழ், யூதர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு மோசே செய்ததைப் போல, ஒரு மேசியா எழும்பி தங்களைக் காப்பாற்றுவார் என்று ஏங்கினார்கள். எனவே, நாசரேத்திலிருந்து அற்புதம் செய்பவரான இயேசு உள்ளே வந்தபோது, அது நம்பிக்கை அதிகரித்தது (வ.37). அவர்கள் பனை மரக்கிளைகளுடன் வெளியே சென்று, கைகளை அசைத்து, " ஓசன்னா!" அதாவது "எங்களை இரட்சியும்" (மத்தேயு 21:8-9) என்று ஆர்ப்பரித்தனர். ஆத்தும இரட்சகராகிய தம்முடைய குமாரன் மூலமாக ‘தங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வேண்டும்’ என்ற அவர்களுடைய விருப்பத்திற்குத் தேவன் உண்மையில் செவிகொடுத்தார்.

எதிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதை நாம் அடிக்கடி அறியாமல் இருக்கிறோம். நமது பொருளாதார, உடல் அல்லது உணர்ச்சிப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால், நாம் இரட்சிக்கப்பட்டோம் என்று நினைக்கலாம். ஆனால் நமக்குத் தேவையான உண்மையான இரட்சிப்பு நம் ஆத்தும இரட்சிப்பு. இயேசு தம்முடைய இரட்சிக்கும் வல்லமையையும் அன்பையும் நமக்குக் காட்ட மனித உருவில் வந்தார் (லூக்கா 19:10). அவர் சிலுவையில் தம்முடைய தியாகத்தின் மூலம் நம் ஆத்துமாக்களை இரட்சித்தார். அதனால் அவர் நம் மூலமாக, மீட்பருக்காக வேண்டிநிற்கும் பிறரின் ஆத்துமாக்களையும் இரட்சிப்பார்.

அன்பான கீழ்ப்படிதல்

எங்கள் திருமணத்தின்போது, எங்கள் போதகர் என்னிடம், “உன் கணவரை நேசிக்கவும், மதிக்கவும், கீழ்ப்படிவதாகவும் உறுதியளிக்கிறீர்களா? நீங்கள் இறக்கும் வரை இணைந்திருப்பீர்களா?” என்று கேட்டார். என் கணவரைப் பார்த்து, “கீழ்ப்படிதலா?” என்று நான் கிசுகிசுத்தேன். நாங்கள் எங்கள் உறவை அன்பு மற்றும் மரியாதையின் அடிப்படையில் கட்டியெழுப்பினோம். நான் உறுதியயெடுக்கவேண்டும் என்று கேட்கப்பட்ட குருட்டுத்தனமான கீழ்ப்படிதல் அல்ல. நான் கீழ்படிதல் என்ற வார்த்தையை புரிந்துகொண்டு, மனப்பூர்வமாய் சம்மதம் தெரிவித்தபோது, அந்த நிகழ்வை என்னுடைய மாமனார் தன்னுடைய கேமராவில் படம்பிடித்தார்.

பல ஆண்டுகளாக, கீழ்ப்படிதல் என்ற வார்த்தைக்கான எனது எதிர்ப்பும், கணவன்-மனைவி இடையே உள்ள நம்பமுடியாத சிக்கலான உறவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தேவன் எனக்குக் காண்பித்தார். கீழ்ப்படிதல் என்றால் “அடிபணிக்கப்பட்ட” அல்லது “கட்டாயமான சமர்ப்பணம்” என்று நான் புரிந்திருந்தேன். இந்த புரிதலை வேதாகமம் ஆதரிக்கவில்லை. மாறாக, வேதாகமத்தில் உள்ள கீழ்ப்படிதல் என்ற வார்த்தை, நாம் தேவனை நேசிக்கக்கூடிய பல வழிகளை வெளிப்படுத்துகிறது. நானும் என் கணவரும் முப்பது வருட திருமண வாழ்க்கையை கொண்டாடிய போது, பரிசுத்த ஆவியின் வல்லமையால் நாங்கள் இன்னும் இயேசுவையும், ஒருவரையொருவரையும் அதிகமாய் நேசிக்க கற்றுக்கொண்டிருக்கிறோம்.

“நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” (யோவான் 14:15) என்று இயேசு சொன்னதின் மூலம், வேதவசனங்களுக்குக் கீழ்ப்படிவது அவருடன் தொடர்ந்து அன்பான மற்றும் நெருக்கமான உறவின் விளைவாக இருக்கும் என்று அவர் நமக்குக் காண்பித்துள்ளார் (வச. 16-21). இயேசுவின் அன்பு தன்னலமற்றது, நிபந்தனையற்றது; ஒருபோதும் வலுக்கட்டாயமானதோ அல்லது தவறானதோ அல்ல. நம்முடைய எல்லா உறவுகளிலும் நாம் அவரைப் பின்பற்றி கனப்படுத்தும்போது, அவருக்குக் கீழ்ப்படிவதை ஞானமான, அன்பான நம்பிக்கை மற்றும் ஆராதனையின் விளைவாகக் காண பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுவாராக. 

ஆனந்த கண்ணீர்

ஓர் நாள் காலையில் வீட்டை விட்டு வெளியேறிய சஞ்சய், தன்னுடைய சில நண்பர்கள் பலூன்களுடன் காத்திருந்ததைக் கண்டார். அவனுடைய நண்பன் அட்வித் முன்பாக வந்து, அவனிடத்தில் ஒரு கவரை கொடுப்பதற்கு முன்பாக, “உன்னுடைய கவிதைகளை ஓர் போட்டிக்கு அனுப்பி வைத்தோம்” என்றான். அந்த கவரின் உள்ளே “முதல் பரிசு” என்று எழுதப்பட்ட ஓர் அட்டை இருந்தது. விரைவில் அனைவரும் சேர்ந்த ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். சஞ்சயின் நண்பர்கள் ஓர் அழகான காரியத்தைச் செய்து, அவருடைய எழுத்துத் திறமையை உறுதிப்படுத்தினர்.

மகிழ்ச்சிக்காக அழுவது ஓர் முரண்பாடான அனுபவம். கண்ணீர் பொதுவாக வலிக்கான பதில், மகிழ்ச்சி அல்ல. மகிழ்ச்சி பொதுவாக சிரிப்புடன் வெளிப்படுத்தப்படுகிறது, கண்ணீரினால் அல்ல. இத்தாலிய உளவியலாளர்கள், நாம் ஆழமாக நேசிக்கப்படுவதை உணரும்போது அல்லது ஓர் முக்கிய இலக்கை அடையும்போது, ஆழ்ந்த தனிப்பட்ட அர்த்தத்தின்போது மகிழ்ச்சியின் கண்ணீர் வரும் என்று குறிப்பிட்டுள்ளனர். மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்வின் அர்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது என்ற முடிவுக்கு இது வழிவகுத்தது.

இயேசு சென்ற இடமெல்லாம் ஆனந்தக் கண்ணீர் பெருகுவதை நான் கற்பனை செய்கிறேன். குருடனாகப் பிறந்தவனின் பெற்றோர் இயேசு அவனைக் குணமாக்கியபோது (யோவான் 9:1-9), அல்லது மரியாள் மற்றும் மார்த்தாள், தங்கள் சகோதரனை மரணத்திலிருந்து எழும்பிய பிறகு (11:38-44) மகிழ்ச்சியில் அழாமல் எப்படி இருந்திருக்கக்கூடும்? தேவனுடைய ஜனம் ஓர் மறுசீரமைக்கப்பட்ட வாழ்க்கைக்கு கொண்டுவரப்படும்போது, “அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழி நடத்துவேன்” (எரேமியா 31:9) என்று தேவன் சொல்லுகிறார்.

மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்க்கையின் அர்த்தத்தை நமக்குக் காட்டினால், வரவிருக்கும் அந்த மகிமையான நாளை கற்பனை செய்துபாருங்கள். நம் முகங்களில் கண்ணீர் வழியும்போது, அவருடன் நெருக்கமாக வாழ்வதே வாழ்க்கையின் அர்த்தம் என்பதை சந்தேகமின்றி அன்று நாம் அறிவோம்.