நெருக்கத்தின் குரல்
நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் இரண்டு தளங்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிரியா நாட்டுச் சிறுமியான ஐந்து வயது ஜினான், தனது சிறிய சகோதரனைச் சுற்றியுள்ள இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியபோது மீட்புப் பணியாளர்களை அழைத்தார். “என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச்செல்லுங்கள்; நான் உங்களுக்காக எதையும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரியாகவும் இருப்பேன்” என்று அவள் நொறுங்கிய உள்ளத்தோடு அழைத்தாள்.
நெருக்கத்திலிருந்து அழைப்பது என்பது சங்கீதம் முழுதும் உள்ளது, “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” (118:5). பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எடையை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும், சவாலான உடல்நிலை, பொருளாதாரக் கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது உறவுமுறை இழப்பு போன்றவற்றின் நெருக்குதலை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.
அந்த தருணங்களில் நாம் விடுதலைக்காக தேவனிடம் பேரம் பேசலாம். ஆனால் உதவிக்காக தேவனை வற்புறுத்த வேண்டியதில்லை. அவர் பதிலளிப்பதாக உறுதியளிக்கிறார், அது நமது சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அவர் நம்முடனும் நம் அருகிலும் இருப்பார். மரணம் உட்பட வேறு எந்த ஆபத்துக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சங்கீதக்காரனோடு நாமும், “எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்” (வ.7) எனலாம்.
ஜினானும் அவளது தம்பியும் பெற்றுக்கொண்டதை போல வியத்தகு மீட்பு நமக்கு வாக்களிக்கப்படவில்லை, ஆனால் சங்கீதக்காரனை “விசாலத்திலே” (வ. 5) கொண்டு வந்த நமது உண்மையுள்ள தேவனை நாம் நம்பலாம். அவர் நம் நிலைமையை அறிந்திருக்கிறார், மரணத்திலும் அவர் நம்மை கைவிடமாட்டார்.
எளிமையான அழைப்பு
“நீ உறங்குவதற்கு முன்பு, முன் அறையை சுத்தம்செய்துவிடு” என்று என்னுடைய ஒரு மகளிடத்தில் நான் சொன்னேன். உடனே அவள், “ஏன் இதை அவள் செய்யக்கூடாது?” என்று கேட்டாள்.
இதுபோன்ற இலகுவான எதிர்ப்புகள், என்னுடைய மகள்கள் சிறியவர்களாய் இருக்கும்காலத்தில் எங்கள் வீட்டில் சாதாரணமாய் நிகழும். அவ்வாறு நிகழும்போது “உன் சகோதரிகளைக் குறித்து நீ கவலைப்படவேண்டாம், நான் உன்னை தான் செய்யச்சொன்னேன்” என்று நான் அவர்களுக்கு எப்போதும் பதில்கொடுப்பதுண்டு.
யோவான் 21ஆம் அதிகாரத்தில், சீஷர்களுக்குள்ளும் இவ்விதமான சிந்தை இருந்ததை நாம் பார்க்கக்கூடும். பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலித்த பின்னர், இயேசு அவனை மீண்டும் மீட்டெடுத்தாா் (யோவான் 18:15-18, 25-27). இயேசு பேதுருவைப் பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” (21:19) என்று எளிய மற்றும் கடினமான ஒரு கட்டளையைக் கொடுக்கிறார். பேதுரு அவரை மரணபரியந்தம் பின்பற்றுவான் என்பதை இயேசு விவரிக்கிறார் (வச. 18-19). ஆனால் பேதுரு இயேசு சொன்னதை நிதானிப்பதற்குள், அவர்களுக்கு பின்னாக நின்றுகொண்டிருந்த, சீஷனைக் குறித்து “ஆண்டவரே, இவன் காரியம் என்ன?” (வச. 21) என்று இயேசுவிடத்தில் கேட்கிறான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக, “நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா” (யோவான் 21:22) என்று சொல்லுகிறாா்..
நாம் எத்தனை நேரங்களில் பேதுவைப்போல் இருக்கிறோம்! மற்றவர்களுடைய விசுவாசப்பாதையை தெரிந்துகொள்ள ஆர்வம் காண்பிக்கிறோம். தேவன் நம்மைக்கொண்டு செய்வதை பொருட்படுத்துவதில்லை. அவனுடைய வாழ்நாட்களின் இறுதியில், யோவான் 21இல் இயேசு முன்னறிவித்திருந்த மரணத்தின் விளிம்பில் பேதுரு நிற்கும்போது, இயேசுவின் அந்த எளிமையான கட்டளையை பேதுரு விவரிக்கிறான்: “நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படியே இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராகியிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” (1 பேதுரு 1:14-15). அந்த சிந்தையே, நம்மை சுற்றிலும் இருக்கிற அனைத்து காரியங்களிலிருந்து நம்முடைய பார்வையை விலக்கி, கிறிஸ்துவை நோக்கி செயல்பட நம்மை ஊக்குவிக்கிறது.
- மேட் லூகாஸ்