எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மார்வின் வில்லியம்ஸ்கட்டுரைகள்

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்

பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். "ஏன் இப்படி செய்தாய்?" என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், "எனக்கு பசித்தது" என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.

ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், "அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்" (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, "புசித்துக் குடித்து" மற்றும் "தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்" (வ. 34).

நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது ​​நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை "நன்மைகளால்" (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.

அதிர்ஷ்டம்மல்ல, ஆனால் கிறிஸ்து

இப்பிரபஞ்சத்தில் சுமார் 700 குயிண்டிலியன் (7 மற்றும் 20 பூஜ்ஜியங்கள்) கிரகங்கள் உள்ளதாக டிஸ்கவர் என்ற இதழ் கூறுகிறது. ஆனால் பூமியைப் போன்ற கிரகம் வேறில்லை. வானியற்பியல் ஆராய்ச்சியாளர் எரிக் ஜாக்ரிசன், ஒரு கிரகத்தில் உயிரினம் வாழத் தேவையானது சரியான வெப்பநிலை மற்றும் நீா் வளம். அது "அதிர்ஷ்டவசமான" மண்டலத்தில் சுற்றிவரும் கிரகத்தில்தான் இவ்வாறு அமையும் எனக் கூறுகிறார். 700 குயின்டிலியன் கோள்களில், பூமியில் மட்டுமே உயிரிகள் வாழத் தகுதியாக உள்ளது எனத் தெரிகிறது. ஜாக்ரிசன் முடிவாகக் கூறும்போது, எப்படியோ பூமி்க்கு "மிகவும் அதிர்ஷ்டம்" அடித்துள்ளது என்கிறார்.

அதிர்ஷ்ட தேவதையால்  இந்தப் பிரபஞ்சம் தோன்றவில்லை, மாறாக இயேசுவின் கிரியையே காரணம் என்று பவுல் கொலோசெய சபைக்கு தீர்க்கமாக கூறியுள்ளார். அப்போஸ்தலன், கிறிஸ்துவை உலகின் சிருஷ்டிகராக முன்னிறுத்துகிறார்; "ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது" (கொலோ 1:16). இயேசு இந்த உலகத்தைப் படைத்த வல்லமையுள்ள சிருஷ்டிகர் மட்டுமல்ல, "எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது" (வ.17) என பவுல் சொல்கிறார். அதிக வெப்பமாயும், மிகவும் குளிராகவும் இல்லாமல், மனிதன் வாழ்வதற்கேற்ற ஒரு சீதோஷ்ண நிலையைக் கொண்டுள்ளது. தான் படைத்ததை, தமது பூரண ஞானத்தாலும் எல்லையில்லா வல்லமையாலும் இயேசு நிலைநிறுத்துகிறார்.

தேவனின் படைப்பின் அழகில் நாமும் பங்குடையவர்களாய் அதை அனுபவிக்கும்போது, அதிர்ஷ்ட தேவதையின் கிரியையே இது என்று எண்ணாமல், "சகல பரிபூரணமும் வாசமாயிருக்கும்" (வ.19) நோக்கமுள்ள, இறையாண்மையுள்ள, வல்லமையுள்ள அன்பானவரையே எண்ணுவோம்..

தாழ்த்தப்படுதல்

பெருமை கனவீனத்திற்கு வழிவகுக்கிறது என்பதை நார்வேயில் உள்ள ஒருவன் அறிந்துகொண்டான். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் உலக சாதனை படைத்த கார்ஸ்டன் வார்ஹோல்முவிடம், ஓடுவதற்கு ஏற்ற உடைகள் கூட அணியாத ஒருவன் தன்னுடன் போட்டிப்போடும்படி, திமிராகச் சவால் விடுத்தான். உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி செய்துகொண்டிருந்த வார்ஹோம், சவாலை ஏற்று அவனைத் தோற்கடித்தார். எல்லைக்கோட்டில், தனக்குச் சரியான துவக்கம் கிடைக்கவில்லையென்றும், மீண்டும் பந்தயம் நடத்த வேண்டுமென்றும் அவன் கூறியபோது இரண்டு முறை உலக சாம்பியனான அவர் நகைத்தார்!

"மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்" என நீதிமொழிகள் 29:23-ல் நாம் வாசிக்கிறோம். நீதிமொழிகளின் புத்தகத்தில் தேவன் அகந்தை உள்ளவர்களை நடத்தும் விதத்தைப் பற்றி எழுதுவது சாலொமோனுக்கு பிடித்த ஒன்றாகும் (11:2; 16:18; 18:12). இந்த வசனங்களில் அகந்தை அல்லது இறுமாப்பு என்ற வார்த்தைக்கு " புடைத்தல்" அல்லது "பொங்குதல்" என்று பொருள். அது தேவனுக்குரிய கனத்தை நாம் எடுத்துக்கொள்வதாகும். நாம் அகந்தைக்கொள்கையில்,  நம்மைப் பற்றி இருப்பதை விட உயர்வாக நாம் நினைக்கிறோம்.

இயேசு ஒருமுறை, "தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்" (மத்தேயு 23:12) என்றார். அவரும், சாலொமோனும் தாழ்மையையும், பணிவையும் பின்பற்ற நம்மை நடத்துகிறார்கள். இது மாய்மாலமான தாழ்மை அல்ல, மாறாக, நம்மை சரிப்படுத்தி, நம்மிடம் உள்ள அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவை என்பதை ஒப்புக்கொள்வதாகும்.  தன் வார்த்தைகளில் பதறாமல் (நீதிமொழிகள் 29:20) ஞானமாய் இருப்பதாகும்.

அவரைக் கனப்படுத்துவதற்கும் அவமானத்தைத் தவிர்ப்பதற்கும், நம்மைத் தாழ்த்திக்கொள்ளும் இதயத்தையும் ஞானத்தையும் நமக்குத் தரும்படி தேவனிடம் கேட்போம்.

இனி பாரபட்சம் இல்லை

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலி லேண்ட்ஸ்மேன் நியூயார்க்கின் மெட்ரோபொலிட்டன் ஓபரா ஆர்கெஸ்ட்ரா என்னும் இசைக்குழுவில் முக்கிய டிரம்பெட் வாசிப்பாளர் பாத்திரத்திற்காக தேர்வு செய்யப்பட்டார். அவளை தேர்வுசெய்த நீதிபதி குழுவினரின் பாரபட்சங்களை தவிர்ப்பதற்காக, தேர்வானது, முகத்தை மறைத்து திரைமறைவில் நடைபெற்றது. லேண்ட்ஸ்மேன் தனது தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டு போட்டியில் வெற்றிபெற்றார். ஆனால் அவள் திரைக்குப் பின்னால் இருந்து வெளியேறியதும், சில ஆண் நீதிபதிகள் அறையின் பின்புறம் சென்று அவளைப் புறக்கணித்தனர். அவர்கள் வேறு யாரையோ தேடிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

இஸ்ரவேலர்கள் ஒரு ராஜாவைக் கேட்டபோது, மக்களின் விண்ணப்பங்களுக்கு செவிகொடுத்து, மற்ற தேசங்களுக்கு இருப்பதுபோலவே ஒரு ராஜாவை ஏற்படுத்தினார் (1 சாமுவேல் 8:5; 9:2). ஆனால் சவுலின் ஆட்சி கீழ்படியாமையினாலும் உண்மையற்ற தன்மையினாலும் அடையாளப்படுத்தப்பட்டதால், ஒரு புதிய ராஜாவை அபிஷேகம் செய்ய தேவன் சாமுவேலை பெத்லகேமுக்கு அனுப்பினார் (16:1-13). சாமுவேல் மூத்த மகனான எலியாப்பைப் பார்த்தபோது,அவன் சரீரப்பிரகாரமாக திடகாத்திரமான இளைஞனாயிருந்ததினால் அவனை ராஜாவாக ஏற்படுத்த தீர்மானித்தார். ஆனால் தேவன் சாமுவேலின் தீர்மானத்தை விமர்சித்து, “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” (1 சாமுவேல் 16:7) என்கிறார். தேவன் தன்னுடைய ஜனத்தை வழிநடத்த தாவீதைத் தேர்ந்தெடுத்தார் (வச. 12).

மக்களின் திறன் மற்றும் அவரது நோக்கங்களுக்கான பொருத்தத்தை மதிப்பிடும்போது, தேவன் அவர்களது சுபாவங்கள், சித்தம் மற்றும் எண்ணங்களைப் பார்க்கிறார். உலகத்தையும் மக்களையும் அவர் பார்ப்பது போல் பார்க்க அவர் நம்மை அழைக்கிறார். தேவன் மக்களின் வெளிப்புற தோற்றங்களையும் அங்கீகாரங்களையும் பார்;க்கிறவரல்ல, அவர் இருதயத்தைப் பார்க்கிறவர்.

பிழைகளிலிருந்து கற்றுக்கொள்ளுதல்

1929 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தை வீழ்த்தியது போன்ற எதிர்கால நிதித் தவறுகளைத் தவிர்க்க உதவும் வகையில், ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் தவறுகளின் நூலகம் என்று ஒன்று (டுiடிசயசல ழக ஆளைவயமநள) நிறுவப்பட்டது. அடுத்த தலைமுறை பொருளாதார வல்லுனர்களுக்கு கல்வி கற்பதற்கு உதவும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களின் தொகுப்பை இது உள்ளடக்கியுள்ளது. நூலகத்தின் கண்காணிப்பாளர்களின் கூற்றுப்படி, “புத்திசாலி மக்களும் முட்டாள்தனமான செயல்களைச் செய்கிறார்கள்” என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஒரே வழி, தங்களுடைய முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதுதான் என்று அந்த கண்காணிப்பாளர்கள் நம்புகிறார்கள்.

சோதனையை மேற்கொள்வதற்கும், நிலையான ஆவிக்குரிய ஜீவியத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், தேவ ஜனங்கள் கடந்த காலத்தில் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதே சிறந்த வழி என்று பவுல் கொரிந்தியர்களுக்கு அறிவுறுத்துகிறார். அவ்வாறு செய்வதின் மூலம் அவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தை மேன்மைப் பாராட்டாமல், இஸ்ரவேலர்களின் தோல்விகளிலிருந்து ஞானத்தைக் கற்றுக்கொள்ள அவர்களை மாதிரிகளாய் பயன்படுத்துகிறார். இஸ்ரவேலர்கள் விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டு, விபச்சாரம் செய்து, தேவனுடைய சித்தத்திற்கும் நோக்கத்திற்கும் விரோதமாக முறுமுறுத்து, தேவன் ஏற்படுத்திய தலைமைத்துவத்திற்கு விரோதமாக கலகம்பண்ணினார்கள். அவர்களுடைய பாவத்தின் காரணமாக, அவர்கள் அவருடைய சிட்சையை அனுபவிக்க நேர்ந்தது (1 கொரிந்தியர் 10:7-10). இஸ்ரவேலின் தவறுகளை மீண்டும் செய்வதைத் கிறிஸ்தவர்கள் தவிர்க்கும்பொருட்டு, பவுல் இந்த வரலாற்று “உதாரணங்களை” வேதத்திலிருந்து முன்வைக்கிறார் (வச. 11).

தேவனுடைய உதவியோடு, அவருக்கு கீழ்படிதலை வெளிப்படுத்தும் பொருட்டு, நம்முடைய தவறுகளிலிருந்தும் மற்றவர்களுடைய தவறுகளிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள பிரயாசப்படுவோம். 

ஜீவ கிரீடம்

பன்னிரண்டு வயதான லீஅடியானெஸ் ரோட்ரிகஸ்-எஸ்பாடா, 5-கே ஓட்டத்திற்கு (3 மைல்களுக்கு மேல்) தாமதமாகிவிடுமோ என்று கவலைப்பட்டார். அரை-மராத்தானில் பங்கேற்பாளர்களுடன் (13 மைல்களுக்கு மேல்!) அவள் தொடங்கும் நேரத்துக்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே, ஓட்டப்பந்தய வீரர்களின் குழுவுடன் கிளம்பினாள். லீஅடியானெஸ் மற்ற ஓட்டப்பந்தய வீரர்களோடு ஓடுக்கொண்டிருக்கையில், அவர்களுக்கு சிறிது முன்னிலையில் இருந்தாள். நான்காவது மைலில், இறுதிக்கோடு அவளுடைய கண்களுக்கு தென்படாததால், அவள் நீண்ட மற்றும் கடினமான பந்தயத்தில் பங்கேற்றிருப்பதாக உணர்ந்தாள். அவள் ஆட்டத்தைக் கைவிடுவதற்குப் பதிலாக, தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தாள். இந்த திடீர் ஓட்டப்பந்தய வீராங்கணை தனது 13.1-மைல் பந்தயத்தை நிறைவு செய்து, ஆட்டத்தை நிறைவுசெய்த 2,111 பேர்களில் 1,885வது இடத்தைப் பிடித்தார். இதுவே விடாமுயற்சி!

ஆதித்திருச்சபை முதலாம் நூற்றாண்டில் உபத்திரவத்தை சந்தித்தபோது, பல கிறிஸ்தவர்கள் தங்கள் ஓட்டத்தை நிறுத்திக்கொள்ள தீர்மானித்தனர். ஆனால் அவர்களை தொடர்ந்து ஓடும்படிக்கு யாக்கோபு அவர்களை ஊக்கப்படுத்தினார். அவர்கள் சோதனையை பொறுமையோடே சகித்தால், தேவன் இரட்டிப்பான ஆசீர்வாதங்களை அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்குப்பண்ணுகிறார் (யாக்கோபு 1:4,12). முதலாவதாக, “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (வச. 4). இரண்டாவது, இம்மையிலும் மறுமையிலும் வாழும் வாழ்க்கையில் தேவனுடைய மகிமையில் இருக்கும் வாய்ப்பான ஜீவக்கிரீடத்தை தருவேன் என்று வாக்குப்பண்ணுகிறார் (வச. 12).

கிறிஸ்தவ ஓட்டத்தின் இடையில், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ஓட்டத்தின் கடினத்தை உணர்ந்து இது தங்களுக்கான ஓட்டமில்லை என்று ஓட்டத்தை நிறுத்திக்கொள்ள விழைகின்றனர். ஆனால் தேவன் நமக்குத் தேவையானதை கொடுப்பதால், நாம் விடாமுயற்சியுடன் ஓடிக்கொண்டேயிருக்க முடியும்.

தேவனுடைய மீட்பு

ஒரு இரக்கமுள்ள தன்னார்வலர் அவரது துணிச்சலான செயலுக்காக “காக்கும் தூதன்” என்று அழைக்கப்பட்டார். ஜேக் மன்னா ஒரு வேலை தளத்தில் சோலார் பேனல்களை நிறுவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஐந்து வயது சிறுமியைக் காணாமல் எல்லோரும் தேடிக்கொண்டிருக்க, இவரும் அக்குழுவில் சேர்ந்துகொண்டனர். அக்கம்பக்கத்தினர் அவர்களது கேரேஜ்கள் மற்றும் முற்றங்களில் தேடியபோது, மன்னா அவளை அருகிலுள்ள காட்டுப் பகுதியில் தேடினார். அங்கு புதைமணலில் சிக்கியயிருந்த சிறுமியை அவர் கண்டுபிடித்து, அவளை அந்த இக்கட்டான நிலையில் இருந்து வெளியே இழுத்து, அவளுடைய தாயிடத்தில் பத்திரமாய் ஒப்படைத்தார். 

அந்தச் சிறுமியைப் போலவே தாவீதும் மீட்கப்பட்டார். அவருடைய இருதயத்திலிருந்து எழும்பிய கதறலுக்கு தேவன் பதிலளிக்க, தாவீது “பொறுமையுடன்” (சங்கீதம் 40:1) காத்திருக்கிறார். தேவனும் பதிலளித்தார். தேவன் அவருடைய கூக்குரலுக்கு செவிகொடுத்து, “பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து” (வச. 2) அவனை தூக்கியெடுத்து காப்பாற்றியதின் மூலம் பதிலளித்தார். தாவீதின் வாழ்க்கைக்கு உறுதியான அடித்தளத்தை அளித்தார். வாழ்க்கையின் சேற்றுச் சதுப்பு நிலத்திலிருந்து கடந்த கால மீட்புகள், துதி பாடல்களைப் பாடுவதற்கும், எதிர்காலச் சூழ்நிலைகளில் தேவனை நம்புவதற்கும், மற்றவர்களுடன் அவருடைய சத்தியத்தைப் பகிர்ந்துகொள்வதற்கும் அவனது ஆர்வத்தை வலுப்படுத்தியது (வச. 3-4).

பொருளாதாரச் சிக்கல்கள், திருமணக் குழப்பங்கள், பற்றாக்குறை போன்ற வாழ்க்கைச் சவால்களில் நாம் நம்மைக் காணும்போது, தேவனிடம் கூக்குரலிட்டு, அவருடைய கிரியைக்காய் பொறுமையுடன் காத்திருப்போம் (வச. 1). அவர் ஜீவிக்கிறார். ஆபத்துக் காலத்தில் எங்களுக்கு உதவவும், நிற்க உறுதியான இடத்தை வழங்கவும் தயாராக இருக்கிறார்.

தேவனிடம் சரணடைதல்

தங்களுக்கு தாங்களே உதவி செய்துகொள்கிறவர்களுக்கு தேவன் உதவுவதில்லை. அவரை நம்பி சார்ந்துகொள்வபவர்களுக்கே தேவன் உதவிசெய்கிறார். சுவிசேஷயத்தை மையமாயக் கொண்ட வெற்றிகரமான தொலைக்காட்சித் தொடரான “தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்” என்ற தொடரில் இயேசுவாக நடிக்கும் ஜோனத்தன் ரூமி, இதை 2018 ஆம் ஆண்டு மே மாதம் உணர்ந்தார். லாஸ் ஏஞ்சல்ஸில் எட்டு வருடங்களாக வசித்த ரூமி, கிட்டத்தட்ட உடைந்துபோன நிலைமையில் இருந்தார். இருந்த உணவை உட்கொண்டு, வேறு வேலை ஏதும் கிடைக்காமல் தவித்தார். அவர் தன்னுடைய இருதயத்தை தேவனுடைய பாதத்தில் ஊற்றி, தனது ஜீவியத்தை தேவனிடத்தில் சரணடையச் செய்தார். “நான் சரணடைகிறேன், நான் சரணடைகிறேன்” என்ற வார்த்தைகளை சொல்லி ஜெபித்தார். அந்த நாளின் மாலையில், அவர் தபாலில் நான்கு காசோலைகளைப் பெற்றுக்கொண்டார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட படத்தில் இயேசுவின் கதாப்பாத்திரத்தில் நடிக்க தெரிந்தெடுக்கப்பட்டார். தன்னை விசுவாசிப்பவர்களுக்கு தேவன் உதவிசெய்வார் என்பதை ரூமி கண்டுபிடித்தார்.

“பொல்லாதவர்கள்" (சங்கீதம் 37:1) மீது பொறாமை கொள்வதற்கும் வருத்தப்படுவதற்கும் பதிலாக, எல்லாவற்றையும் தேவனிடம் ஒப்படைக்கும்படி சங்கீதக்காரன் நமக்கு அழைப்பு விடுக்கிறார். நாம் அவரை மையமாக வைத்து, நன்மை செய்யவும் மனமகிழ்ச்சியாயிருப்பதற்கும் தேவன் நமக்கு கட்டளையிடுகிறார் (வச. 3-4). மேலும் நம்முடைய ஆசைகள், பிரச்சனைகள், கவலைகள் மற்றும் தினசரி அனைத்தையும் அவரிடம் சரணடையுங்கள். தேவன் நம்மை வழிநடத்தி நமக்கு சமாதானத்தை அருளுவார் (வச. 5-6). கிறிஸ்தவர்களாக, நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கும் அதிகாரம் அவருடையது. 

நாம் தேவனிடத்தில் சரணடைந்து அவரையே நம்புவோம். அவர் நம்முடைய வாழ்க்கையில் கிரியை நடப்பித்து, தேவயான மாற்றத்தை கொண்டுவருவார்.

உன்னிடத்திலுள்ளதை கிறிஸ்துவுக்காய் பயன்படுத்து

2001 இல் நிறுவப்பட்ட “சூவிங் ஹால் ஆஃப் ஃபேம”; பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது “தையல் கல்வி மற்றும் தயாரிப்பு மேம்பாடு மூலம் தனித்துவமான மற்றும் புதுமையான பங்களிப்புகளுடன் வீட்டு தையல் துறையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய” நபர்களை அங்கீகரிக்கிறது. 2005இல் இந்த நிறுவனத்தில் சேர்க்கப்பட்ட மார்த்தா புல்லென் போன்ற நபர்கள் இதில் உள்ளடங்குவர். அவள் “நீதிமொழிகள் 31 ஆம் அதிகாரத்தின் குணசாலியான ஸ்திரீயாய் அங்கீகரிக்கப்பட்டவர்… அவளுடைய வலிமை, உத்வேகம் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு யார் காரணம் என்பதை அவள் பகிரங்கமாய் சாட்சியிடத் தவறவில்லை.”

இந்த தையல் இயக்கமானது 21ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் இந்த இயக்கமானது முதலாம் நூற்றாண்டில் இஸ்ரவேல் தேசத்தில் இருந்துள்ளது. தபீத்தாள் என்னும் பேர்கொண்ட பெண் இந்த குணத்திற்கு பாத்திரவானாய் இருந்துள்ளாள். இவள் ஒரு கிறிஸ்துவின் விசுவாசி. தன்னுடைய சமுதாயத்தில் வாழ்ந்த ஏழை விதவைகளுக்கு அங்கிகளையும் வஸ்திரங்களையும் தைத்து உதவிசெய்துவந்தவள் (அப்போஸ்தலர் 9:36,39). அவள் வியாதிப்பட்டு மரித்தபின்பு, பேதுரு மூலமாய் அவளை உயிரோடு எழுப்பக்கூடுமோ என்று எண்ணி அவரை அழைத்துகொண்டுவந்தனர். அவர் வந்தபோது, அழுதுகொண்டிருந்த விதவைகள் தபீத்தாள் தைத்துக்கொடுத்த அங்கீகளையும் வஸ்திரங்களையும் அவரிடத்தில் காண்பித்தனர் (வச. 39). அவள் தன்னுடைய ஊரிலிருந்த மக்களுக்கு எப்போதும் உதவிசெய்தாள் என்பதற்கு இந்த வஸ்திரங்களே ஆதாரம் (வச. 36). தேவனுடைய வல்லமையினால் தபீத்தாள் மீண்டும் உயிரோடு எழுப்பப்பட்டாள். 

தேவன் நம்முடைய திறமைகளைப் பயன்படுத்தி நம்முடைய சமுதாயத்தையும் உலகத்தையும் கட்டியெழுப்பும் அழைப்பை நமக்கு அருளியிருக்கிறார். நாம் நம்முடைய திறமைகளை கிறிஸ்துவின் சேவைக்காய் அர்ப்பணிப்போம். அவர் நம்முடைய அன்பான இருதயத்தையும் ஜீவியத்தையும் எவ்வண்ணமாய் ஒன்றாக தைக்கிறார் என்பதை பார்ப்போம் (எபேசியர் 4:16).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் 'மாண்டடம்' அதாவது "கட்டளை" என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: "நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்." (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, ​​நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.

கிறிஸ்துவில் கனிதரும் விசுவாசிகள்

சிண்டி ஒரு தொண்டு நிறுவனத்தில் தனது புதிய வேலைக்காக உற்சாகப்பட்டாள். மாற்றத்தை ஏற்படுத்த அரிய வாய்ப்பு. ஆனால் அவளுடைய சகபணியாளர்கள் அப்படியில்லை என்பதை அவள் விரைவில் கண்டுபிடித்தாள். தங்கள் நிறுவனத்தின் பணியை கேலி செய்தார்கள் மற்றும் லாபகரமான வேலைகளுக்கு வேறு இடங்களில் தேடியதால், மோசமான செயல்திறனுக்காக சாக்கு கூறினர். சிண்டி இந்த வேலைக்கு விண்ணப்பித்திருக்கவே வேண்டாம் என்றென்னினாள். தொலைவில் அற்புதமாக தோன்றியது அருகிலோ ஏமாற்றமளித்தது.

இன்றைய கதையில் (மாற்கு 11:13) குறிப்பிடப்பட்டுள்ள அத்தி மரத்தில் இயேசுவுக்கிருந்த பிரச்சனையும் இதுதான். இது பருவத்தின் ஆரம்பத்தில் இருந்தது, ஆனால் மரத்தின் இலைகள் அது ஆரம்பகால அத்திகளைக் கொண்டிருப்பதாக குறிக்கிறது. இல்லை, மரத்தில் இலைகள் துளிர்விட்டன, ஆனால் அது இன்னும் காய்க்கவில்லை. ஏமாற்றமடைந்த இயேசு, "இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கடவன்" (வச.14) என்று மரத்தை சபித்தார். மறுநாள் காலையில் மரம் வேரோடே பட்டுப்போயிருந்தது (வச. 20).

கிறிஸ்து ஒருமுறை நாற்பது நாட்கள் உபவாசம் இருந்தார், ஆகவே உணவு இல்லாமல் எப்படி இருக்க வேண்டும் என்று அவரறிவார். அத்தி மரத்தை சபிப்பது அவரது பசிக்காக இல்லை. இது ஒரு பொருள் பாடம். இந்த மரம் இஸ்ரவேலை குறிக்கிறது, அது மெய்யான மதத்தின் வேர்களை கொண்டிருந்தது, ஆனால் நோக்கத்தை இழந்துவிட்டது. அவர்கள் தேவனுடைய குமாரனாகிய தங்கள் மேசியாவைக் கொல்லப் போகிறார்கள். அவர்கள் எவ்வளவு கணியற்றிருந்திருக்க வேண்டும்?

தூரத்திலிருந்து நாம் அழகாகத் தோன்றலாம், ஆனால் இயேசு அருகில் வருகிறார், அவருடைய ஆவியால் மட்டுமே விளைவிக்கப்படும் கனியைத் தேடுகிறார். நமது கனிகள் கண்கவரும்வண்ணம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் அது இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அன்பு, சந்தோஷம் மற்றும் கடினமான காலங்களில் சமாதானம் போன்றவை (கலாத்தியர் 5:22). ஆவியானவரை சார்ந்து, இயேசுவுக்காக எப்போதும் கனி கொடுக்கலாம்.

அடிப்படையை தவறவிடுதல்

பல தசாப்தங்களாக, துரித உணவு வகையில் மெக்டொனால்ட் நிறுவனம் தனது குவார்ட்டர் பவுண்டர் பர்கர் கொண்டு ஆண்டது. 1980 களில் அதின் போட்டி நிறுவனம் தனது அற்புதமான திட்டத்தால் அதனை வீழ்த்த நினைத்தது. ஏ அண்ட் டபுள்யு நிறுவனம் மெக்டொனால்டை விட பெரிதான தர்ட் பவுண்ட் பர்கரை அதே விலைக்கு விற்றது. மேலும் அதின் ருசிக்காக பல விருதுகளையும் வென்றது. ஆனால் அது நிலைக்கவில்லை. அதை வாங்க ஆளில்லை. இறுதியில், அவர்கள் அதை மெனுவிலிருந்து எடுத்துவிட்டனர். தர்ட் பவுண்ட் பர்கர் குவார்ட்டர் பவுண்டர் பர்கரை விட சிரியதென்று நுகர்வோர் தவறாய் புரிந்துகொண்டதே அதின் தோல்விக்கு காரணமென்று ஒரு ஆராய்ச்சி அறிக்கையிட்டது.

அடிப்படைகளை தவறவிடுவது எவ்வளவு எளிது என்று இயேசு எச்சரித்தார். மதத் தலைவர்கள், அவர் சிலுவையில் அறையப்பட்ட வாரத்தில் அவரை இழிவுபடுத்த திட்டமிட்டனர், ஏழு முறை விதவையான ஒரு பெண்ணைப் பற்றி ஒரு விசித்திரமான, கற்பனையான காட்சியை முன்வைத்தனர் (மத்தேயு 22:23-28).  இந்த சிக்கலான தடுமாற்றம் ஒரு பிரச்சனையே இல்லை என்று இயேசு பதிலளித்தார். மாறாக, அவர்கள்  "வேதத்தையும் தேவனின் வல்லமையையும்" அறியவில்லை என்பதுதான் அவர்களின் பிரச்சனை (வச. 29). வேதவசனங்களின் நோக்கம் தர்க்கரீதியாகவும் தத்துவப் புதிர்களுக்கும் பதிலளிப்பதில்லை என்று இயேசு வலியுறுத்தினார். மாறாக, இயேசுவை அறியவும் நேசிக்கவும், அவரில் "நித்திய ஜீவனை" பெறவும் நம்மை வழிநடத்துவதே அவைகளின் முதன்மையான நோக்கம் (யோவான் 5:39). தலைவர்கள் தவறவிட்ட அடிப்படைகள் இவையே.

நாம் அடிக்கடி அடிப்படைகளையும் தவறவிடுகிறோம். உயிரோடிருக்கும் இயேசுவை கண்டுகொள்வதே வேதத்தின் முக்கிய நோக்கம். அதைத் தவறவிட்டால் மனவேதனையே மிஞ்சும்