எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லேஸ்லி ஹோகட்டுரைகள்

தேவன் செயல்படுவார்

கடின உழைப்பாளியான குமாஸ்தா எரின், எப்போதும் தன் வேலையைச் சிறப்பாகச் செய்தாள். ஆனால் அவர் நேர்மையற்றவர் என்று குற்றம் சாட்டப்பட்ட பின்னர், எரின் விசாரணையின் போது கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டார். எதிர்ப்பை கண்டு, ராஜினாமா செய்யவும் யோசித்தாள், ஆனால் காத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டாள். "ராஜினாமா செய்தால் நீங்கள் குற்றவாளியாக எண்ணப்படுவீர்கள்" என்று அவளிடம் கூறப்பட்டது. எனவே எரின் தரித்து, தனக்கு நீதி கிடைக்கத் தேவனிடம் ஜெபித்தாள். அதேபோல, சில மாதங்கள் கழித்து, குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டாள்.

பவுல் தன்னை மிஷனரி குழுவிலிருந்து நீக்கியபோது, யோவனென்னும் மாற்கும் இவ்வாறே உணர்ந்திருக்கலாம். உண்மையில், அந்த வாலிபன் அவர்களை முன்னதாக பிரிந்திருந்தான் (அப் 15:37-38). ஆனால், ஒருவேளை அதற்காக அவர் மனம் வருந்தியிருக்கலாம், மேலும் இந்த முறை குழுவில் இணைவதை எதிர்பார்த்திருப்பார். அவர் பவுலால் தவறாக நியாயந்தீர்க்கப்பட்டதாக உணர்ந்திருக்க வேண்டும்; பர்னபா மட்டுமே அவரை நம்பினார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, பவுல் தனது கருத்தை மாற்றிக் கொண்டார். அவர், "மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்." (2 தீமோத்தேயு 4:11) என்றார். யோவனென்னும் மாற்கு, தனது நற்பெயர் மீண்டதில் நிம்மதி அடைந்திருக்க வேண்டும்.

நாம் தவறாக நியாயந்தீர்க்கப்படும்போது, ​​நாம் எப்படி உணர்கிறோம் என்பதை இயேசு புரிந்துகொள்கிறார் என்பதை நினைவில் கொள்வோமாக. அவர் பாவம் செய்யவில்லை ஆனால் பாவியென்று தீர்க்கப்பட்டார். அவர் தேவனின் குமாரனாக இருந்தபோதும், ஒரு சாதாரண குற்றவாளியை விட மோசமாக நடத்தப்பட்டார். ஆனால் அவர் தனது பிதாவின் சித்தத்தைத் தொடர்ந்து செய்தார், அவர் நியாயப்படுத்தப்படுவார் மற்றும் நீதிபரரென்று  காட்டப்படுவார் என்பதை அறிந்திருந்தார். நீங்கள் தவறாக  நியாயந்தீர்க்கப்பட்டிருந்தால், முடங்கிவிடாதீர்கள்; தேவன் அறிவார், அவருடைய நேரத்தில் செயல்படுவார்.

 

சோதிக்கப்பட்டுப் பரீட்சிக்கப்பட்டது

ஸ்டான்லி ஒரு தனியார் வாடகை வாகன ஓட்டுநராக வேலை செய்வதிலுள்ள  சுதந்திரம் மற்றும் சௌகரியம் அவருக்கு பிடித்திருந்தது. பல வசதிகள் மத்தியில், அவர் எப்போது வேண்டுமானாலும் வேலையைத் தொடங்கலாம் மற்றும் நிறுத்தலாம், மேலும் அவர் தனது நேரத்தையும் பணிகளையும் குறித்து யாருக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டியதில்லை. இருப்பினும், நேர்மாறாக அது தான் கடினமான பகுதி என்று அவர் கூறினார்.

"இந்த வேலையில், திருமணத்திற்குப் புறம்பான கள்ள உறவை வளர்ப்பது மிகவும் எளிதானது. நான் பல வகையான பயணிகளை அழைத்துச் செல்கிறேன். ஆனால், என் மனைவி உட்பட யாருக்கும் நான் ஒவ்வொரு நாளும் எங்கே இருக்கிறேன் என்று தெரியாது" என்று அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இது எதிர்ப்பதற்கு எளிதான சலனம் அல்ல, மேலும் அவரது சக ஓட்டுநர்கள் பலர் அதற்கு அடிபணிந்துள்ளனர் என்று அவர் விளக்கினார். "தேவன் என்னைக்குறித்து என்ன நினைப்பார், என் மனைவி எப்படி உணருவாள் என்று நிதானிப்பதே என்னைத் தடுக்கிறது" என்றும் அவர் கூறினார்.

நம் ஒவ்வொருவரையும் படைத்த நம் தேவன்; நமது பலவீனங்கள், ஆசைகள் மற்றும் நாம் எவ்வளவு எளிதில் சோதிக்கப்படுகிறோம் என்பதை அறிவார். ஆனால், 1 கொரிந்தியர் 10:11-13 நமக்கு நினைவூட்டுவது போல, நாம் அவரிடம் உதவி கேட்கலாம். “தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” என்று பவுல் கூறுகிறார். அந்த "தப்பிக் கொள்ளும்படியான போக்கு" என்பது விளைவுகளைப் பற்றிய ஆரோக்கியமான பயம், உணர்வுள்ள மனசாட்சி, வேத வசனங்களை நினைவில் கொள்வது, தக்க சமயத்தில் கவனச்சிதறல் அல்லது வேறு ஏதாவது இருக்கலாம். நாம் தேவனிடம் பெலனைக் கேட்கும்போது, ​​ஆவியானவர் நம்மைச் சோதிக்கும் விஷயங்களிலிருந்து நம் கண்களைத் திருப்பி, அவர் நமக்குக் கொடுத்திருக்கும் பொறுப்பான வழியை நோக்கிப் பார்க்க உதவுவார்.

தேவனின் நேரம்

வேறொரு நாடு செல்ல, தனது திட்டமிடப்பட்ட பயணத்தை விமலா எதிர்நோக்கிக் கொண்டிருந்தாள். ஆனால், வழக்கம் போல் அவள் முதலில் அதற்காக ஜெபித்தாள். "இது ஒரு விடுமுறை பயணம்தானே, இதற்காக ஏன் நீ தேவனிடம் ஆலோசிக்க வேண்டும்?" என்று ஒரு நண்பர் குறிப்பிட்டார்.  இருப்பினும், விமலா எல்லாவற்றையும் தேவனிடம் அர்ப்பணிப்பதை விசுவாசித்தாள். இம்முறை, பயணத்தை ரத்து செய்யுமாறு அவர் ஏவுவதை அவள் உணர்ந்தாள். அப்படியே செய்தாள். அவள் அங்கே இருக்க வேண்டிய நேரத்தில், அந்த நாட்டில் ஒரு பெருந்தொற்று பரவியதைப் பின்னரே அறிந்தாள். "தேவனே என்னைப் பாதுகாப்பதை உணர்ந்தேன்" என்று குறிப்பிட்டாள்.

வெள்ளம் வடிந்த பிறகு, நோவாவும் அவருடைய குடும்பமும் பேழையில் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் காத்திருக்கையில்  தேவனின் பாதுகாப்பை அவர் நம்பியிருந்தார். பத்து மாதங்களுக்கும் மேலாக ஒத்துழைத்த பிறகு, அவர் வெளியேற ஆர்வமாக இருந்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, " பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று" மற்றும் " பூமி காய்ந்திருந்தது" (ஆதியாகமம் 8:13-14). ஆனால், நோவா தான் பார்த்ததை மட்டும் நம்பவில்லை; மாறாக, தேவன் அவரிடம் சொன்னபோதுதான் அவர் பேழையை விட்டு வெளியேறினார் (வ.15-19). நீண்ட காத்திருப்புக்குத் தேவனிடம் நல்ல காரணம் இருப்பதாக அவர் நம்பினார்; ஒருவேளை பூமி இன்னும் முற்றிலும் ஏற்றதாயில்லாமல் இருந்திருக்கலாம்.

நம் வாழ்வின் தீர்மானங்களைக் குறித்து நாம் ஜெபிக்கையில், ​​நமக்குத் தேவன் அளித்த மனத்திறனை பயன்படுத்தி, அவருடைய வழிநடத்துதலுக்காகக் காத்திருக்கும்போது; ​​நம்முடைய ஞானமான சிருஷ்டிகர்  நமக்கு எது சிறந்தது என்பதை அறிவார் என்று அவருடைய நேரத்தை நம்பலாம். சங்கீதக்காரன் கூற்றுப்படி, “நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்..என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது” (சங்கீதம் 31:14-15).

தேவனில் நம்பிக்கை

ராஜேஷ் தனது மூன்றாண்டு படிப்புக்காகப் பல்கலைக்கழகத்திற்கு வந்து, மலிவான விடுதி அறையை தேர்ந்தேடுத்தபோது, தன் செயலின் விளைவை அறியவில்லை. "அது பயங்கரமாக இருந்தது, அறையும் அதன் குளியலறையும் மிக மோசமாக இருந்தன" என்று அவர் விவரித்தார். ஆனால் அவரிடம் கொஞ்சப் பணமே இருக்க, வேறு வழியில்லை. "என்னால் இயன்றதெல்லாம் மூன்று ஆண்டுகளில் திரும்பிச் செல்ல எனக்கு ஒரு நல்ல வீடு உண்டு, எனவே நான் இங்கேயே தங்கி எனது நேரத்தை நன்றாகப்  பயன்படுத்துவேன்" என்று அவர் நிச்சயித்துக்கொண்டதாகக் கூறினார்.

ராஜேஷின் கதை, "பூமிக்குரிய கூடாரமாகிய" (2 கொரிந்தியர் 5:1) மரிக்கக்கூடிய உடலில் வாழ்வதற்கான அன்றாட சவால்களைப் பிரதிபலிக்கிறது, இவ்வுடல் "ஒழிந்துபோம்"  (1 யோவான் 2:17) உலகில் இயங்குகிறது. வாழ்க்கை நம்மீது வீசும் பல சிரமங்களைச் சமாளிக்கப் போராடி, இவ்வாறு "நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்" (2 கொரிந்தியர் 5:4)

ஒரு நாள் நாம் அழியாத, உயிர்த்தெழுந்த சரீரத்தைப் பெறுவோம் என்ற உறுதியான நம்பிக்கைதான் நம்மைத் தொடர்ந்து நடத்துகிறது; அது “நம்முடைய பரம வாசஸ்தலம்" (வ. 4). இப்போது இருக்கும் புலம்பலும் விரக்தியும்  இல்லாத உலகில் வாழ்வோம் (ரோமர் 8:19 -22).  இந்த நம்பிக்கைதான் தேவன் அன்பாய் வழங்கியிருக்கும் இந்த நிகழ்கால வாழ்க்கையைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள நமக்கு உதவுகிறது. அவர் நமக்குக் கொடுத்திருக்கும் வளங்களையும் திறமைகளையும் பயன்படுத்த அவர் நமக்கு உதவுவார், அதனால் நாம் அவருக்கும் பிறருக்கும் ஊழியம் செய்யலாம். "அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்." (வ. 9).

தேவன் கட்டுப்படுத்துகிறார்

அது ஏன் ஒரே நேரத்தில் எல்லாம் சம்பவிக்கிறது என்று விமலாவுக்கு புரியவில்லை. நிகழ்ந்தது போதாதென்று, அவளது மகளுக்குப் பள்ளியில் கால் முறிந்தது, மேலும் அவளும் கடுமையான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டாள். இவ்வாறு நிகழ நான் என்ன செய்தேன்? விமலா வியந்தாள். அவளால் செய்ய முடிந்ததெல்லாம் தேவனிடம் பெலனைக் கேட்பதுதான்.

விமலா அனுபவித்ததை காட்டிலும் வலியும் இழப்பும் மிக அதிகமான பேரழிவும் தன்னை ஏன் தாக்கியது என்று யோபுக்கு தெரியவில்லை. அவரது ஆத்துமாவுக்கு எதிரான ஆவிக்குரிய யுத்தத்தை அவர் அறிந்திருந்ததாக எந்த அறிகுறியும் இல்லை. சாத்தான் யோபுவின் விசுவாசத்தைச் சோதிக்க விரும்பினான், அவர் எல்லாவற்றையும் இழந்தால் அவர் தேவனை விட்டு விலகுவார் என்றான் (யோபு 1:6-12). பேரழிவு ஏற்பட்டபோது, ​​யோபின் நண்பர்கள் அவர் செய்த பாவங்களுக்காக அவர் தண்டிக்கப்படுகிறார் என்று வலியுறுத்தினார்கள். அது உண்மையல்ல, ஆனால் அவர் "ஏன் நான்?" என்று ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். தேவன்  அதை அனுமதித்தார் என்பது அவருக்குத் தெரியாது.

யோபின் கதை துன்பத்தையும் விசுவாசத்தையும் பற்றி ஒரு ஆற்றல்மிகு படிப்பினையை வழங்குகிறது. நம் வலிக்கான காரணத்தை நாம் கண்டுபிடிக்க முயலலாம், ஆனால் நம் வாழ்நாளில் நாம் புரிந்து கொள்ளாத வகையில் திரைக்குப் பின்பாக ஒரு பெரிய சம்பவம் இருக்கலாம்.

யோபுவைப் போலவே, தேவன் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார் என்று நமக்குத் தெரிந்தவற்றைப் பற்றிக்கொள்ளலாம். அவ்வாறு சொல்வது எளிதான காரியம் அல்ல, ஆனால் அவருடைய வேதனையின் மத்தியில், யோபு தேவனை நோக்கி, அவருடைய சர்வ வல்லமையில் நம்பிக்கை வைத்தார்: “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” (வ. 21). என்ன நடந்தாலும், நமக்குப் புரியாதபோதும் நாமும் தேவன் மீது நம்பிக்கை வைப்போமாக.

 

சிறிய வழிகளில்

எல்சி புற்றுநோயால் தாக்கப்பட்டபோது, இயேசுவுடன் பரலோகத்தில் ஜீவிக்க செல்லுவதற்கு தயாராக இருந்தார். ஆனால் அவள் அந்த வியாதியிலிருந்து குணமடைந்தாள். தேவன் ஏன் தன் உயிரைக் காப்பாற்றினார் என்று அவளை யோசிக்க வைத்தது. “நான் என்ன நல்லது செய்ய முடியும்? என்னிடம் அதிக பணமோ திறமையோ இல்லை, என்னால் நடக்க முடியாது. நான் உங்களுக்கு எப்படி பயனுள்ளதாக இருக்க முடியும்?” என்று அவள் தேவனிடம் கேட்டாள். 

பின்னர் மற்றவர்களுக்கு சேவை செய்ய சிறிய, எளிய வழிகளைக் கண்டறிந்தார். அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் அவளுடைய வீட்டை சுத்தம் செய்கிறவர்களின் தேவையை அறிந்தாள். அவள் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்தாள். அவ்வப்போது பணத்தைக் கொடுத்தாள். இந்த ரொக்கப் பரிசுகள் சிறியதாக இருந்தபோதிலும், அவை தொழிலாளர்களுக்கு உதவி செய்ய நீண்ட தூரம் சென்றன. அவள் அவ்வாறு செய்யும்போது, தேவன் அவளுக்கு கொடுப்பதை அவள் கண்டாள்: நண்பர்களும் உறவினர்களும் அவளுக்கு பரிசுகளையும் பணத்தையும் கொடுத்து மற்றவர்களுக்கு உதவிசெய்ய அவளைத் தூண்டினர்.

அவள் தனது கதையைப் பகிர்ந்து கொண்டபோது, 1 யோவான் 4:19இல் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்ற அழைப்பை எல்சி எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார் என்பதை என்னால் சிந்திக்க முடியவில்லை: “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.” மேலும் அப்போஸ்தலர் 20:35, “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” என்று நினைப்பூட்டுகிறது. 

எல்சி கொடுத்தாள், ஏனென்றால் அவள் தேவனிடத்திலிருந்து பெற்றாள். அவள் கொடுத்ததைப் போலவே ஊக்கமும் பெற்றாள். ஆயினும்கூட, அன்பான, நன்றியுள்ள இதயம் மற்றும் தன்னிடம் இருப்பதைக் கொடுக்கத் தயாராக இருப்பதை விட அவளிடமிருந்து கொஞ்சம் அதிகமாகவே தேவைப்பட்டது. தேவன் கொடுக்கல்-வாங்கல் என்ற நல்லொழுக்க வட்டத்தில் அதிகமாய் அவளை பெருகச்செய்தார். அவர் நம்மை வழிநடத்தும் போது, கொடுத்து உதவ நன்றியுள்ள மற்றும் தாராள மனதைக் கொடுக்கும்படி அவரிடம் கேட்போம்!

 

கர்த்தருடைய புயத்தில்

அந்தத் துளையிடும் கருவியின்  சத்தம் ஐந்து வயது சாராவை பயமுறுத்தியது. அவள் பல் மருத்துவரின் நாற்காலியில் இருந்து குதித்து ஓடி மீண்டும் உள்ளே வருவதற்கு மறுத்துவிட்டாள். சூழ்நிலையைப் புரிந்துகொண்டு தலையசைத்தவாறே, பல் மருத்துவர் அவளுடைய தந்தையைப் பார்த்து, “நீங்கள் நாற்காலியில் ஏறி அமருங்கள்” என்று கூறினார். ஜேசனும், சிகிச்சை எவ்வளவு இலகுவானது என்பதை காண்பிப்பதற்காக மருத்துவர் தன்னை ஏறி அமரும்படிக்கு சொல்லுகிறார் என்று எண்ணி, நாற்காலியில் ஏறி அமர்ந்தார். ஆனால், மருத்துவர் அவளிடம் திரும்பி, “இப்போது மேலே ஏறி அப்பாவின் மடியில் உட்காரு” என்றார். அவளது தந்தை இப்போது அவளை உறுதியளிக்கும் கரங்களில் ஏந்தியிருப்பதால், சாரா முற்றிலும் நிதானமாகிவிட்டாள். இப்போது பல் மருத்துவரால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கமுடிந்தது. 

அன்று, ஜேசன் தன் பரலோகத் தகப்பனின் பிரசன்னத்தின் ஆறுதலைப் பற்றிய ஓர் சிறந்த பாடத்தைக் கற்றுக்கொண்டார். “சில வேளைகளில் நாம் கடந்துசெல்லவேண்டிய துயரமான பாதையினூடாய்  தேவன் நம்மை நடத்திச்செல்வார்.” ஆனால் “நான் உன்னோடேகூட இருக்கிறேன்” என்று அவர் விளங்கப்பண்ணுகிறார். 

 சங்கீதம் 91, தேவனுடைய ஆறுதலான பிரசன்னத்தையும் வல்லமையையும் பற்றிக் கூறுகிறது. அவை நம்முடைய சோதனைகளை எதிர்கொள்ள நமக்கு பெலனை அளிக்கிறது. அவருடைய வல்லமையின் கரத்தில் பாதுகாப்பாய் இருப்பது நமக்கு ஆறுதல் அளிக்கிறது. அதே போன்று அவரை நேசிப்பவர்களுக்கு “அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்” (வச. 15) என்று வாக்களிக்கப்படுகிறது. 

வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பல சவால்கள் மற்றும் சோதனைகள் உள்ளன. மேலும் நாம் தவிர்க்க முடியாமல் வலியையும் துன்பத்தையும் கடந்து செல்லவேண்டியிருக்கும். ஆனால் தேவனுடைய வல்லமையின் கரங்கள் நம்மைச் சுற்றியிருப்பதால், நம் நெருக்கடிகளையும் சூழ்நிலைகளையும் நாம் தாங்கிக்கொள்ள முடிகிறது. மேலும் நாம் அவரில் வளரும்போது, நம் விசுவாசத்தைப் பலப்படுத்துவாராக.

பரலோகத்தில் எஜமானன்

சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம் 2022 இல், புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்கள் அனைவருக்கும் மாதம் ஒருநாள் ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தது. எவ்வாறாயினும், அந்த நாட்களில் தங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்று முதலாளிகள் கவலைப்பட்டனர். பராமரிப்புக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் இதை தீர்க்க கூடும் என்றாலும், ஓய்வின் அவசியத்தை பொருட்படுத்தாத அவர்களின் அணுகுமுறை அவ்வளவு சுலபமாகத் தீர்வு காணவில்லை.

மற்றவர்களை கவனமாக நடத்துவது ஒரு புதிய பிரச்சினை அல்ல. அப்போஸ்தலனாகிய பவுல், வேலையாட்கள் தங்கள் எஜமானர்களின் சொத்தாகக் கருதப்பட்ட காலத்தில் வாழ்ந்தார். ஆயினும்கூட, கிறிஸ்துவின் சாயலுள்ள குடும்பங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த சபைக்கான அவரது அறிவுறுத்தல்களின் கடைசி வரியில், எஜமானர்கள் தங்கள் ஊழியர்களை "செவ்வையாய்" நடத்த வேண்டும் என்று கூறுகிறார் (கொலோசெயர் 4:1). மற்றொரு மொழிபெயர்ப்பு, "அவர்களுக்கு நியாயம் செய்யுங்கள்" என்கிறது.

"மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே" (3:24) பணியாற்றும்படி வேலைகாரர்களுக்கு பவுல் சொல்வது போல், எஜமானர்களுக்கும் "பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று" (4:1) அவர்கள் மீதான இயேசுவின் அதிகாரத்தை நினைவுபடுத்துகிறார். கிறிஸ்துவின் அதிகாரமே இறுதியானது என்று வாழ கொலோசெய விசுவாசிகளை ஊக்குவிப்பதே அவரது நோக்கம். நாம் எஜமானாக அல்லது பணியாளனாக இருந்தாலும், நம் வீடுகள் அல்லது சமூகங்களில் மற்றவர்களுடன் நாம் நடப்பதில், "நீதியும் செவ்வையுமாய்" (வ.1) இருக்க நமக்கு உதவுமாறு தேவனிடம் கேட்கலாம்.

கிறிஸ்துவுக்குள் பூரணமாய் சரணடைதல்

1920 ஆம் ஆண்டில், ஒரு சீன போதகரின் ஆறாவது மகனான ஜான் சுங், அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க உதவித்தொகை பெற்றார். அவர் உயர்ந்த மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார். முதுகலை படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றார். ஆனால் அவர் தனது படிப்பைத் தொடரும்போது, தேவனை விட்டு விலகிச் சென்றார். பின்னர், 1927இல் ஒரு இரவு, அவர் தனது வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தார் மற்றும் ஒரு போதகராகும் அழைப்பைப் பெற்றார். 

பல அதிக ஊதியம் பெறும் வாய்ப்புகள் அவருக்கு சீனாவில் மீண்டும் காத்திருந்தன. ஆனால் அவருடைய இலட்சியங்களை ஒதுக்கி வைக்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டார். அவரது அர்ப்பணிப்பின் அடையாளமாக, அவர் தனது பெற்றோருக்கு கனம்செலுத்தும் நோக்கத்தோடு தனது பிஎச்டி சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற அனைத்து விருதுகளையும் கடலில் வீசினார்.

தம்முடைய சீடராக மாறுவது பற்றி இயேசு சொன்னதை ஜான் சங் புரிந்துகொண்டார்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36). நாம் நம்மையே வெறுத்து, கிறிஸ்துவையும் அவருடைய வழிநடத்துதலையும் பின்பற்றுவதற்காக நமது பழைய வாழ்க்கையை விட்டு மனம்திரும்பும்போது (வச. 34-35), அவரைப் பின்பற்றுவதிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் தனிப்பட்ட ஆசைகளையும் பொருள் ஆதாயத்தையும் தியாகம் செய்ய தோன்றும். 

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளாக, ஜான் தனது தேவன் கொடுத்த பணியை முழு மனதுடன் நிறைவேற்றினார். சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு நற்செய்தியை அறிவித்தார். நாம் எப்படி? நாம் பிரசங்கிகளாகவோ அல்லது மிஷனரிகளாகவோ இருக்க அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை எங்கு ஊழியம் செய்ய அழைக்கிறாரோ, அவருடைய ஆவி நம்மில் கிரியை செய்வதால், நாம் அவருக்கு முழுமையாக சரணடைவோமாக.