நான்கெழுத்து நம்பிக்கை
எனக்குள் இருக்கும் அவநம்பிக்கையின் காரணமாக, நான் என் வாழ்வின் சூழ்நிலைகள் எப்படி முடியும் என்பதைக் குறித்து எதிர்மறையான முடிவையே எடுப்பேன். என்னுடைய ஒரு வேலையில் நான் எடுக்கும் முயற்சி தோல்வியைச் சந்திக்கும் போது, நான் மிக எளிதில், நான் மேற்கொள்ளும் மற்றெந்த வேலையும் வெற்றி பெறாது என்ற முடிவுக்கு வந்து விடுவேன். நான் தோல்வியைக் கண்ட வேலைக்கும் மற்ற வேலைகளுக்கும் தொடர்பேயில்லாதிருந்தும், நான் என் முடிவுகளை மாற்றிக் கொள்ள முடியாமல் தடுமாறினேன். ஐயோ! நான் பரிதாபத்துக்குரிய ஒரு தாய். என்னால் எதையுமே சரியாகச் செய்ய முடியவில்லை. ஓர் இடத்தில் நான் சந்திக்கும் தோல்வி, தேவையில்லாமல் என்னுடைய மற்றெல்லா உணர்வுகளையும் பாதிக்கிறது.
எனக்கு எளிதாக ஆபகூக்கைப் புரிந்து கொள்ள முடிகிறது. தேவன் அவருக்குக் காட்டியவற்றில் அவருடைய எண்ணம் எவ்வாறிருந்திருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. தேவனுடைய பிள்ளைகளுக்கு வரும் துன்பங்களைப் பார்த்து அவர் எத்தனை விரக்தியடைந்திருப்பார். நீண்ட வருடங்களாக, அவர்கள் துன்பத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது. காரியங்கள் மிக மோசமாக நடந்தது. மரங்களில் கனியில்லை, சாப்பிட மாமிசமில்லை, உயிர் வாழ ஒரு சுகமுமில்லை. எல்லாவற்றிலும் மோசமான விளைவுகளையே எதிர்நோக்கி அவநம்பிக்கையில் வாழும் எனக்குள், அவருடைய நான்கெழுத்து வார்த்தை ‘‘ஆனாலும்” என்னை விழிக்கச் செய்தது. ‘‘ஆனாலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்” (ஆப. 3:17-18) ஆபகூக் தேவன் எத்தகையவர் என்பதைக் கண்டு கொண்டதால், எத்தனை கஷ்டங்களை எதிர்நோக்கினாலும் அவரால் மகிழ்ச்சியாயிருக்க முடிந்தது.
ஒரு வேளை நாம் நம்முடைய பிரச்சனைகளைப் பெரியதாகப் பார்க்கத் தூண்டப்படலாம். ஆனால் ஆபகூக் மிக அதிகமான கஷ்டங்களையே சந்தித்தார். அந்த நேரத்திலும் அவரால் தேவனை மகிமைப்படுத்த முடியும் போது, நம்மாலும் முடியும். நாம் நம்பிக்கையிழந்து துயரத்தின் ஆழத்திலிருந்தாலும் நம்மைத் தூக்கியெடுக்கவல்ல தேவனை நோக்கிப் பார்ப்போம்.
நேரடி அறிவுரைகள்
என்னுடைய இரண்டாவது குழந்தை, ‘‘பெரிய படுக்கையில் அவளுடைய சகோதரியின் அறையில் தூங்குவதற்கு மிகவும் ஆவலாயிருப்பாள். ஒவ்வொரு இரவும் நான் பிரிட்டாவை போர்வைக்குள் மூடியபின், அவளுடைய படுக்கையில் இருக்கும்படி கண்டிப்பான அறிவுரைகளை வழங்கி, தவறினால் அவளைத் தொட்டில் கட்டிலுக்கு அனுப்பிவிடுவதாக எச்சரிப்பேன். ஒவ்வொரு இரவும் நான் அவளை கூடத்தில் கண்டுபிடித்து மீண்டும், தைரியமிழந்த என்னுடைய அன்பு மகளை அவளுடைய தொட்டிலுக்கு வழி நடத்த வேண்டியிருந்தது. சில ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கத்தைக் குறித்து தெரிந்து கொண்டேன். தன்னுடைய அறையைப் பகிர்ந்து கொள்ள விரும்பாத மூத்த சகோதரி, ஒவ்வொரு நாளும் பிரிட்டாவிடம் அம்மா அவளைக் கூப்பிடுவதாகக் கேட்கிறது எனச் சொல்வாள். பிரிட்டா தன்னுடைய சகோதரியின் வார்த்தையை நம்பி, என்னைத் தேடி வந்து, இப்படியாக மீண்டும் தன்னுடைய தொட்டில் கட்டிலினுள் வந்து சேர்ந்து விடுவாள்.
தவறான சத்தத்திற்குச் செவி கொடுக்கும் போது பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். தேவன் ஒரு மனிதனை பெத்தேலுக்கு அனுப்பி, அவர் சார்பாக பேசும் படி சொல்கிறார். தேவன் தெளிவான கட்டளைகளை அவனுக்குக் கொடுக்கிறார். நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும் போன வழியாய்த் திரும்பாமலும் இரு (1 இரா. 13:9) என கட்டளையிடுகிறார். யெரொபெயாம் அவனைத் தன்னோடு உணவருந்தும்படி அழைக்கின்றான். ஆனால் தீர்க்கதரிசி மறுத்து, தேவனுடைய அறிவுரையைப் பின்பற்றினான். ஆனால் கிழவனான ஒரு தீர்க்கதரிசி அவனை உணவருந்த அழைத்தபோது அம்மனிதன் முதலில் மறுக்கிறான். பிற்பாடு வற்புறுத்தப்படும் போது அவன் சாப்பிட்டு விடுகிறான். அங்கிருந்த மூத்தவர்கள் தேவதூதன் அவனைச் சாப்பிடக் கூறியதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டார்கள். நான் என்னுடைய மகள் பிரிட்டா அவள் விரும்பிய பெரிய கட்டிலில் தூங்கட்டும் என்று விரும்பியது போல, தேவனுடைய அறிவுரைக்குச் செவி கொடுக்காத அம்மனிதனைக் குறித்து தேவனும் வருந்தியிருப்பார் என நான் நினைக்கிறேன்.
நாம் தேவனை முற்றிலுமாக நம்ப வேண்டும். அவருடைய வார்த்தைகளே நம் வாழ்விற்கு பாதையைக் காட்டும். நாம் அவற்றைக் கவனிக்கவும் கீழ்ப்படியவும் ஞானமாயிருக்க வேண்டும்.
நியாயத்தீர்ப்பிற்கு மேம்பட்ட இரக்கம்
என்னுடைய குழந்தைகள் சண்டையிட்டுக் கொண்டு என்னிடம் வந்து ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டினர். நான் ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியே பிரித்து, அவரவர் பிரச்சனையைச் சொல்லும்படி கேட்டேன். இருவரிடமுமே தவறு இருந்தமையால் எங்களின் உரையாடலின் முடிவில் ஒவ்வொருவரிடமும் தன்னுடைய உடன்பிறப்பின் இச்செயலுக்குத் தகுந்த நியாயமான நடவடிக்கை என்ன எடுக்கலாம் என்று கேட்ட போது இருவருமே உடனடியாக ஒரு தண்டனையைக் கொடுக்க வேண்டுமென்று கூறினர். அவர்கள் ஆச்சரியப்படும்படியாக நான் அவரவர் தன் உடன் பிறப்புக்கு எந்த தண்டனையைக் கொடுக்கும்படி விரும்பினார்களோ அதை அவர்களுக்கே கொடுத்தேன். உடனே ஒவ்வொரு குழந்தையும் இது நியாயமற்றது. நாங்கள் மற்றவருக்கு கொடுக்க நினைத்த தண்டனை எங்களுக்கே வந்தது. இது அடுத்தவருக்குத்தான் கொடுக்கப்பட வேண்டிய தண்டனை எனப் புலம்பினர்.
என்னுடைய குழந்தைகள் இரக்கமில்லாத நியாயத் தீர்ப்பைக் காண்பிக்கின்றனர். அதை தேவன் எதிர்க்கின்றார் (யாக். 2:13). பணம் படைத்தவர்களுக்கு அல்லது யாரேனும் ஒருவருக்குப் பாரபட்சமாக நிற்பதைக் காட்டிலும் நாம் பிறரை நம்மைப் போல நேசிக்க வேண்டும் என தேவன் நம்மிடம் விரும்புகிறார் (வச. 8) என்பதை யாக்கோபு நினைப்பூட்டுகின்றார். நாம் பிறரை நம்முடைய சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வதும் அல்லது நமக்கு லாபமில்லாத ஒருவரை உதாசீனப்படுத்துவதற்குப் பதிலாக, நாம் எத்தனை அதிகமாக தேவனிடமிருந்து நன்மைகளைப் பெற்றிருக்கிறோம். மன்னிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நினைத்து செயல்படுபவராக, நம்முடைய இரக்கத்தை அவர்களுக்குக் காண்பிப்போம் என யாக்கோபு அறிவுரைக் கூறுகிறார்.
தேவன் அவரது இரக்கத்தை நமக்குத் தாராளமாகக் கொடுத்துள்ளார். நாம் மற்றவர்களோடு கொண்டுள்ள தொடர்புகளில் நம் தேவன் நம்மீது காட்டியுள்ள இரக்கத்தை நினைத்து அதனைப் பிறருக்குக் கொடுப்போம்.
முன்னேற்பாடான குழு
என்னுடைய சிநேகிதி தான் இருக்கும் பட்டணத்தை விட்டு இடம் பெயர்ந்து 1000 மைல்களுக்கப்பாலுள்ள வேறொரு பட்டணத்திற்குச் செல்ல தயாரானாள். அவளும், அவளுடைய கணவரும் புதிய இடத்தில் குடியேறுவதற்கான வேலைகளை தங்களுக்குள்ளே பிரித்துக் கொண்டனர். அவர் புதிய குடியிருப்பில் பொருட்களை அடுக்குவதையும், அவள் தங்கள் உடைமைகளைக் கட்டுவதையும் எடுத்துக் கொண்டனர். புதிய குடியிருப்பை முன் பார்வையிடாமலேயே அல்லது வீடு தேடுவதில் பங்கு பெறாமலேயே எப்படி இடம் பெயர முடிகிறது என்று அவளுடைய திறமையை வியந்தேன். அவளுடைய சவாலை அவள் ஒத்துக் கொண்டதோடு அவள் சொன்னாள், தன்னுடைய கணவனை நம்புவதாகவும், தன்னுடைய விருப்பம், தேவைகள் யாவையும் இருவரும் சேர்ந்திருந்த இந்த வருடங்களில் அவர் நன்கு தெரிந்து கொண்டு, என்னை கவனித்து வருகிறார் எனவும் பதிலளித்தாள்.
மேலறையில் இயேசு தன்னுடைய சீஷர்களோடு தான் காட்டிக்கொடுக்கப்பட போவதையும், அவருடைய மரணத்தையும் குறித்துப் பேசினார். இயேசுவின் இவ்வுலக வாழ்வின் இருண்ட மணி நேரங்களைக் குறித்தும், அவருடைய சீடர்களையும் விட்டு விட்டு போய் விடுவார் என்பதையும் குறித்து இயேசு கூறுகின்றார். அவர்களிடம், தான் அவர்களுக்கு பரலோகத்தில் ஓர் இடத்தை ஆயத்தம் செய்யப் போவதாக உறுதியளித்து அவர்களைத் தேற்றினார். என்னுடைய சிநேகிதியின் கணவர் அவர்களுடைய புதிய வீட்டை அவர்கள் குடும்பத்திற்காக ஆயத்தம் பண்ணியது போல, இயேசுவும் அவருடைய பிள்ளைகளுக்கு ஒரு வீட்டை ஆயத்தம் செய்கின்றார். சீடர்கள் இயேசுவிடம் கேள்விகள் கேட்ட போது, அவர் அவர்களுக்கு தீர்க்கதரிசன நிறைவேறலையும் அவர் செய்த அற்புதங்களையும் அவர்கள் கண்டதையும் நினைப்பூட்டுகிறார். அவர்கள் இயேசுவின் சாவு, பிரிவின் நிமித்தம் வருத்தமடைந்தபோதும், அவர்களிடம் தான் அவர்களுக்குச் சொன்ன யாவும் நிறைவேறும் என வாக்களிக்கிறார்.
நம்முடைய இருண்ட நேரங்களின் மத்தியில் நாம் அவரை நம்பும்போது, அவர் நம்மை நன்மையான ஓரிடத்திற்கு நம்மை வழி நடத்துவார். நாம் அவரோடு நடக்கும் போது, அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார் என்பதை மேலும் உணர்ந்து, அவரை நம்ப கற்றுக் கொள்வோம்.
உள்ளே என்ன இருக்கிறது
“உள்ளே என்ன இருக்கிறதென்று பார்க்க விரும்புகிறாயா?” என என் சிநேகிதி கேட்டாள். அவளுடைய மகளின் சிறிய கரங்களிலிருந்த மிகப் பழங்கால முறையில், பழைய துணியால் தைக்கப்பட்ட ஒரு பொம்மையை, நான் பாராட்டியிருந்தேன். உடனே ஆர்வத்துடன் அதனுள்ளே என்ன இருக்கிறது என்பதைக் காண விரும்பி, ஆம் என பதிலளித்தேன். அவள் அந்த பொம்மையை, தலைகீழாகப் பிடித்து, அதன் பின்புறம் தைக்கப்பட்டிருந்த நளினமான இணைப்பானைத் திறந்தாள். அந்த துணியால் ஆன உடம்பிலிருந்து எமிலி ஒரு பொக்கிஷத்தை வெளியேயெடுத்தாள்; அது இருபது ஆண்டுகளுக்கு முன்பாக அவளுடைய குழந்தைப் பருவத்தில் அவள் நேசித்து வைத்திருந்த பழைய துணியால் ஆன ஒரு பொம்மை. வெளியேயுள்ள பொம்மை வெறும் கூடுதான். உள்ளேயுள்ள இந்த முக்கிய உட்பகுதி தான் அந்த பொம்மைக் கூட்டிற்கு உறுதியையும் வடிவத்தையும் கொடுத்துள்ளது.
கிறிஸ்துவின் வாழ்வு, சாவு, உயிர்ப்பு ஆகியவற்றைக் குறித்த உண்மையை ஒரு பொக்கிஷமாக விளக்குகிறார் அப்போஸ்தலனாகிய பவுல். இந்த பொக்கிஷம் தேவனுடைய ஜனங்களின் பெலவீனமான மனிதத்துவத்தில் சுமக்கப்படுகிறது. இந்த பொக்கிஷம் அவர் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு நினைக்க முடியாத துன்பங்களிலும் அவருடைய பணியைத் தொடர்வதற்குப் பெலனளிக்கிறது. அப்படிச் செய்யும் போது அவருடைய ஒளியும், அவருடைய வாழ்வும் மனிதனின் பெலவினங்களாகிய உடைப்புகள் வழியே பிராகாசிக்கிறது. பவுல், நாம் சோர்ந்து போகாதிருக்க நம்மை ஊக்கப்படுத்துகின்றார்
(2 கொரி. 4:16).
அந்த ‘உள்ளான’ பொம்மையைப் போன்று நம்பிக்கையுள்ள சுவிசேஷமாகிய பொக்கிஷம் நமது வாழ்விற்கு ஒரு நோக்கத்தையும் மன பெலத்தையும் கொடுக்கிறது. தேவனுடைய பெலன் நம்மூலம் வெளிப்படும்போது, இது தேவனுடைய “உள்ளே என்ன இருக்கிறது?” என்ற கேள்வியைக் கேட்கச் செய்யும். அப்பொழுது நாம் நம் உள்ளத்தைத் திறந்து, உள்ளேயிருக்கிறது வாழ்வு தரும் கிறிஸ்துவின் இரட்சிப்பாகிய வாக்குத்தத்தத்தை வெளிப்படுத்துவோம்.
மீண்டும் ஆரம்பித்தல்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முடிவுற்று டிசம்பர் மாதக் கடைசியை அடைந்தபோது, என்னுடைய எண்ணங்கள் வரப்போகும் ஆண்டிற்கு நேராகத் திரும்பின. என்னுடைய குழந்தைகள் பள்ளி விடுமுறையில் இருந்ததால், எங்களுடைய அன்றாடக வேலைகள் சற்று நிதானமாகச் சென்றபோது, நான் கடந்த ஆண்டு என்னை எங்கு கொண்டுவந்துள்ளது எனவும், அடுத்த ஆண்டு என்னை எங்கு கொண்டு, செல்லுமென்ற நம்பிக்கையைக் குறித்தும் சிந்திக்கலானேன். நான் செய்த தவறுகளை எண்ணிய போது சிலவேளைகளில் அந்நினைவுகள் வேதனையையும், மன வருத்தத்தையும் கொடுத்தன. ஆனாலும் புதிய ஆண்டின் துவக்கத்தின் எதிர்நோக்கல் என்னுள்ளத்தை நம்பிக்கையாலும் எதிர்பார்ப்புகளாலும் நிறைத்தது. பழைய ஆண்டு எவ்வாறு இருந்தாலும் இப்பொழுது எனக்கு ஒரு புதிய துவக்கத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக எண்ணினேன்.
என்னுடைய இந்த புதிய ஆரம்பத்தின் எதிர்பார்ப்பு எழுபது ஆண்டுகள் பாபிலோனில் சிறைப்பட்டிருந்த இஸ்ரவேலரை பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் யூதேயாவிலுள்ள தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பிச் செல்லுமாறு விடுவித்தபோது அவர்களுக்கிருந்த நம்பிக்கையை ஒப்பிடும்போது அற்பமானதாக உணர்ந்தேன். முந்திய பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இஸ்ரவேலரை அவர்களின் நாட்டை விட்டு வெளியேற்றினான். ஆனால் கர்த்தர் கோரேஸின் ஆவியை ஏவினதினால் அவன் இஸ்ரவேலரை எருசலேமிற்குப் போய் தேவனுடைய ஆலயத்தைக் கட்டும்படி அவர்களை விடுவித்தான் (எஸ்றா 1:2-3). மேலும், நேபுகாத்நேச்சார் தேவனுடைய ஆலயத்திலிருந்து எடுத்துவந்த பொக்கிஷங்களையும் கோரேஸ் திருப்பிக்கொடுத்தான். தங்கள் பாவத்தின் விளைவாக நீண்ட காலம் பாபிலோனில் கஷ்டங்களைச் சகித்தபின்பு தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள், தேவன் அவர்களுக்கு கொடுத்த தேசத்தில் ஒரு புதிய வாழ்வைத் துவங்கினார்கள்.
நமது கடந்த காலம் எவ்வாறிருந்தாலும் பொருட்படுத்தாமல் நாம் நமது பாவங்களை அறிக்கை செய்தால் தேவன் நம்மை மன்னித்து நமக்கு ஒரு புது துவக்கத்தைத் தருகிறார். இது நம்பிக்கைக்கு எத்தனை பெரிய தூண்டுதல்!
பன்றி இறைச்சியும் முட்டைகளும்
கற்பனைக் கதை ஒன்றில் கோழியும், பன்றியும் ஆகிய இரு விலங்குகள் சேர்ந்து உணவகம் ஒன்று துவங்குவது குறித்து பேசிக் கொண்டன. உணவு வகைகளைக் குறித்து அவை திட்ட மிட்ட போது, கோழி, பன்றி இறைச்சியும், முட்டையும் பரிமாறலாம் எனக் கூறியது. பன்றி இதனை மறுத்து “நன்றி இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் முழுமையாக அர்பணிக்கப்பட வேண்டும்.” ஆனால், நீ இதில் கலந்து கொள்ள மாத்திரம் செய்யலாம் என்று கூறியது.
அந்த பன்றி தன்னை தட்டில் பரிமாறப்படுவதற்கு கவலைப்படவில்லை, தான் முழுவதும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளேன் என்று கூறியது. இயேசுவை முழுமனதோடு பின்பற்றவேண்டும் என்ற பாடத்தை எனக்குக் கற்று கொடுத்தது.
யூதாவின் ராஜாவாகிய ஆசா தன் ராஜ்ஜியத்தை காத்துக் கொள்வதற்காக தன் அரண்மனை மற்றும் கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களிலிருந்து வெள்ளியையும், பொன்னையும் எடுத்து சீரியாவின் ராஜா பெனாதாத்திடம் அனுப்பி இஸ்ரவேலின் ராஜாக்களுக்கும், அவனுக்கும் இருக்கும் உடன்படிக்கையை முறித்துப் போடும்படி அனுப்பினான். பெனாதாத் இதற்கு சம்மதித்து, இருவரும் இஸ்ரவேலை எதிர்த்தனர் (2 நாளா. 16:2).
ஆனால், கர்த்தருடைய தீர்க்கதரிசி அனானி ஆசாவிடத்தில் வந்து, கர்த்தர் ஏராளமான பகைஞர்களின் கைக்கு உம்மை விடுவித்திருந்தும் கர்த்தரைச் சார்ந்து கொள்ளாமல் சீரியாவின் ராஜாவைச் சார்ந்து கொண்டு மதிகேடாய் நடந்து கொண்டீர் என்றான். “தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்கு தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது” (வச. 9).
நாம் நமது போராட்டங்களையும் சவால்களையும் சந்திக்கும் போது கர்த்தரே நமக்கு சிறந்த துணை என்பதை மறந்துவிடக் கூடாது. நாம் முழுமனதோடு அவருக்கு பணிசெய்ய அர்ப்பணிக்கும் போது அவர் நம்மை பெலப்படுத்துகிறார்.
இன்னும் மேலாக அறிதல்
நாங்கள் ஒரு பையனை வெளிநாட்டிலிருந்து தத்தெடுத்து கடல் கடந்து எங்கள் வீட்டிற்கு கொண்டுவந்தபொழுது. அவனிடத்தில் அளவு கடந்த அன்பை பொழிந்து, கடந்த காலத்தில் அவன் அனுபவித்திராத விதவிதமான உணவுகளையும், அவனுக்குக் கொடுத்தோம். உணவு பற்றாக்குறையினால் அவனுக்கு ஒரு குறையிருந்தது. குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்களிடம் காட்டியும் அவன் வளர்ச்சியடையவில்லை. மூன்று வருடங்களுக்குப்பின் அவனுக்கு சில உணவுகள் ஒவ்வாமை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படிப்பட்ட உணவுகளை விலக்கியவுடன், சில மாதங்களுக்குள் அவன் ஐந்து அங்குலம் வளர்ந்துவிட்டான். அவன் வளர்ச்சியை தடைசெய்த உணவுகளைத் தெரியாமல் கொடுத்ததற்காக வருந்தினாலும், அவனுடைய வளர்ச்சியினால் சந்தோஷப்பட்டோம்.
அநேக ஆண்டுகளாக ஆலயத்தில் காணாமற்போயிருந்த நியாயப்பிரமாண புத்தகம் கிடைத்தவுடன் யோசியா ராஜாவும் என்னைப்போலவே சந்தோஷப்பட்டிருப்பான்; என்று நினைக்கிறேன். நான் அறியாமலேயே என் மகனின் வளர்ச்சிக்கு தடையாய் இருந்ததால் வேதனையுற்றது போல யோசியாவும், தன் அறியாமையினால், தேவன் தன் மக்களுக்காகக் கொண்ட மிகச்சிறந்ததும், பூரணமானதுமான விருப்பங்களை இழந்ததற்காக மனம் வருந்தினான் (2 இரா. 22:11). தேவனுடைய பார்வையில் செம்மையானதைச் செய்ததற்காக அவன் புகழப்பட்டாலும் (வச. 2), நியாயப்பிரமாண புத்தகம் கிடைத்தபின் தேவனை எப்படி இன்னும் அதிகமாக கனம் பண்ணவேண்டுமென்று அறிந்துகொண்டான். இப்பொழுது புதிதாகப் பெற்ற அறிவினால் தேவன் கற்பித்தபடியே தேவனை ஆராதிக்க ஜனங்களை வழிநடத்தினான் (23:22-23).
வேதத்திலிருந்து தேவனை எவ்வாறு கனம் பண்ணவேண்டும் என்று தெரிந்து கொண்டபின் நாம் அவ்வாறே தேவனுடைய சித்தத்தின்படி செய்யாமற் போனதற்காக வருத்தப்படுவோம். ஆனாலும் அவர் நம்மை குணப்படுத்தி, திரும்ப உயிர்ப்பித்து, இன்னும் ஆழமாக அவரை அறிகிற அறிவிற்குள் நடத்துகிறபடியால் ஆறுதல் அடைய முடியும்.
மிகச்சிறந்த பரிசு எது
சமீபத்தில் என் கணவர் தனது முக்கியமானதொரு பிறந்தநாளைக் கொண்டாடினார். அந்தப் பிறந்தநாளின் எண் பூஜ்யத்தில் முடிந்தது. அதுவே புதியதொரு பத்தாண்டுகளைக் கடக்கப்போகிறார் என்றும், அதற்கு நான் கொடுக்கும் பரிசு அவரைக் கனம் பண்ணுவதாக இருக்க வேண்டும் என்றும் தீவிரமாக சிந்தித்தேன். இதை ஏற்ற விதத்தில் கொண்டாடுவது எப்படி என்று பலவிதமான சிந்தனைகளைக் பற்றி என் பிள்ளைகளிடம் ஆலோசித்தேன். புதிதாக துவங்க இருக்கும் புத்தாண்டு காலத்திற்கான முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வண்ணம் அந்த கொண்டாட்டம் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். கொடுக்கும் பரிசு, அவர் எங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு இன்றியமையாமவர் என்பதைப் பிரதிபலிக்க வேண்டுமென்று விரும்பினேன். எங்கள் பரிசு அவருடைய வாழ்க்கையில் இந்த முக்கிய பிறந்த நாளுக்கு ஏற்றதாக இருக்கவேண்டுமென்று விரும்பினேன்.
முக்கியமான பிறந்தநாளை விட மிகப்பெரிய பரிசொன்றை தேவனுக்குக் கொடுக்க சாலமோன் ராஜா விரும்பினார். தான் கட்டும் ஆலயம் தேவனுடைய பிரசன்னத்திற்கு உகந்ததாக இருக்க விரும்பினார். தேவாலய கட்டுமானப் பொருட்களுக்காகத் தீரு ராஜாவுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் “எங்கள் தேவன் மற்ற எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர்” ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரிதாயிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் (2 நாளா. 2:5). மனிதரின் கைகளினால் கட்டப்படும் ஆலயம், வானங்களும் கொள்ளாத தேவனின் நற்பண்புகளுக்கு ஒருநாளும் ஈடாகாது என்று அறிந்தும், அவர் மேலுள்ள அன்பினாலும், அவரை ஆராதிக்க அவர்மேல் கொண்ட விருப்பத்தினாலும் கட்டினான்.
நம்முடைய தேவன் மெய்யாகவே, எல்லாத் தேவர்களையும்விட பெரியவர். அவர் நம் வாழ்க்கையில் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறபடியால், நம் இருதயங்கள் அன்பினால், தூண்டப்பட்டு, அதன் மதிப்பை பொருட்படுத்த விலையுயர்ந்த காணிக்கைகளை செலுத்துகிறோம். சாலமோனுக்குத் தன் காணிக்கை தேவனுடைய தகுதிக்கு ஈடாகாது என்று அறிந்தும், சந்தோஷமாகத் தன் காணிக்கைகளைச் செலுத்தினான். நாமும் அப்படியே செய்யலாம்.