காலை மூடுபனி
ஒரு நாள் காலையில் என் வீட்டின் அருகிலுள்ள குளத்தைப் பார்வையிட்டேன். நான் ஒரு தலைகீழான படகிண்மேல் உட்கார்ந்து, ஒரு மென்மையான மேற்கு காற்று நீரின் மேற்பரப்பு முழுவதிலும் காணப்பட்ட மூடுபனியை துரத்துவதைப் பார்த்து யோசித்துக்கொண்டிருந்தேன். மூடுபனி வட்டமிட்டுச் சுழன்றது. சிறிய சூறாவளிகள் எழுந்து அடங்கின. அதற்குப் பின்னர் சூரிய ஓளி மேகங்களின் வழியாக சென்றதினால் மூடுபனி மறைந்தது.
இந்தக் காட்சி எனக்கு ஆறுதல் அளித்தது, ஏனென்றால் நான் சற்று முன் வாசித்த 'உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களை கார்மேகத்தைப் போலவும் அகற்றிவிட்டேன்" (ஏசா. 44:22) என்ற வசனத்துடன் இணைத்துப் பார்த்தேன். தொடர்ச்சியான பாவ எண்ணங்களிலிருந்து என்னை திசைதிருப்ப வேண்டி, நான் அந்த இடத்திற்கு சென்றேன். அந்த பாவங்களை நான் அறிக்கை செய்தாலும், நான் மீண்டும் அந்தப் பாவத்தை செய்யும்போது தேவன் என்னை மன்னிப்பாரா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
அன்று காலையில், ஆம் என்ற பதில் எனக்குத் தெரிந்தது. இஸ்ரவேலர் விக்கிரக ஆராதனை பிரச்சனையுடன் போராடிக்கொண்டிருக்கும்போது, தேவன் தம்முடைய தீர்க்கதரிசியான ஏசாயாவின் மூலம் அவர்களுக்கு கிருபை பாராட்டினார். பொய்யான தெய்வங்களை பின்பற்றி போவதை நிறுத்தும்படி கூறினபோதும், 'நான் உன்னை உருவாக்கினேன். நீ என் தாசன்... நீ என்னால் மறக்கப்படுவதில்லை" (வச. 21) என்று சொல்லி தேவன் அவர்களை மீண்டும் தம்மிடம் அழைத்தார்.
நான் அப்படி முழுமையாக மன்னிப்பை புரிந்துக்கொள்ளவில்லை, ஆனால் தேவனின் கிருபை மட்டுமே நம் பாவத்தை முழுவதுமாக நீக்கி, அதிலிருந்து நம்மை குணமாக்கும் என்பதை புரிந்துக்கொண்டேன். அவருடைய கிருபை முடிவில்லாதது, அவரைப்போல தெய்வீகமானதும், நமக்கு தேவையான போதெல்லாம் அது கிடைக்கிறது. இதற்காக அவருக்கு நன்றியுள்ள வனாயிருக்கிறேன்.
யாவருக்கும், அனைவருக்கும்
எள் சேல்வடார் தேசத்தில் இயேசுவை கணப்படுத்தும்படி அவருடைய சிலையை அந்த தேசத்தின் தலை நகரத்தின் நடுவே நிறுவப்பட்டுள்ளது. அது நகரத்தின் மத்தியில் போக்குவரத்து பரபரப்பாக இருக்கும் இடத்தில இருந்ததாலும் அங்குள்ள அனைவரும் பார்க்கும்படியாக உயரமாக இருக்கிறது. "உலக இரட்சகர்" என்று எழுதப்பட்டிருப்பதை அங்குள்ள அனைவரும் பார்க்கும்படி அவருடைய தெய்வத்துவம் வெளிப்பட்டதுகிறது.
அவரே உலக இரட்சகர் என்று 1 யோவான் 4:14 கூறியிருப்பதை அந்த வார்த்தைகள் உறுதிப்படுத்துகிறது. அவர் எந்தவித பாகுபாடுமின்றி அனைவரையும் ஏற்றுக் கொள்கிறார். அவருக்கு கலாச்சாரமோ, வயதோ, படிப்போ, செல்வமோ தேவையில்லை. தம்மை பக்தியுடன் ஆர்வமாய் தேடுபவர்களை ஏற்றுக்கொள்கிறார்.
அப்போஸ்தலனாகிய பவுல் அக்காலத்திலே பல தேசங்களிலே சுற்றி திரிந்து இயேசுவின் வாழ்க்கையையும், அவர் மரணத்தையும், உயிர்தெழுதலையும் பிரசங்கித்து வந்தார். இந்த நற்செய்தியை அவர் எல்லாருக்கும் பிரசங்கித்தார் மதத் தலைவர்களுக்கும், காவலாளிகளுக்கும், யூதர்களுக்கும், புறஜாதியருக்கும், ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று எல்லாவித மக்களுக்கும் அறிவித்தார். ஒரு மனிதன் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று விசுவாசத்தால் அவரோடு புது ஐக்கியத்துக்குள் வரலாம் என்று பவுல் கூறுகிறார் (ரோம. 10:9). அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று வேதம் சொல்லுகிறது. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரிய சம்பன்னராயிருக்கிறார். (வச.11, 13).
இயேசு தூரமாக வைக்கப்பட்டு வழிபடபடுபவர் அல்ல. விசுவாசத்தினால் இணைந்து அவரோடு உறவு கொள்ளும் படி அழைக்கிறார். அவர் நமக்கு தரும் இரட்சிப்பை உணர்ந்துகொண்டு பரிசுத்த உறவுக்குள்ளாக இன்றைக்கே செல்வோம்.
நெருப்பின் மத்தியில்
ஸ்பெயினில் ஒருமுறை ஏற்பட்ட காட்டுத்தீயானது ஐம்பதாயிரம் ஏக்கர் சுற்றுப்புறத்திலுள்ள மரங்களை பட்சித்து போட்டது. எனினும் அவைகளின் நடுவே நின்றுகொண்டிருந்த ஆயிரத்திற்கும்மேற்பட்ட சைப்ரஸ் மரமோ தனது பிரகாசிப்பிக்கும் பச்சை நிறத்துடன் அழியாமல் நின்றுகொண்டிருந்தது. தண்ணீரை தனக்குள் தக்கவைத்துக்கொள்ளும் திறன் அந்த மரத்திற்கு இருந்ததால் அப்பேற்பட்ட தீயையும் தாங்கமுடிந்தது.
இதைபோல் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனை அரசாண்ட காலத்தில், ராஜாவின் கோபத்தினால் மூன்று நண்பர்கள் நெருப்புக்குள் போடப்பட்டும் உயிர் பிழைத்தார்கள். ராஜா உருவாக்கின சிலையை சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ வணங்க மறுத்து அவரை பார்த்து "நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்"(வச . 17) என்று கூறினார்கள். இதைக் கேட்ட ராஜா மிகவும் கோபத்துடன் அந்த அக்கினிச்சூளையின் சூட்டை ஏழு மடங்கு அதிகப்படுத்தக் கட்டளையிட்டார்.
ராஜாவினுடைய கட்டளையின்படி அந்த மூன்று நண்பர்களையும் அக்கினியில் போட சென்ற காவலாளிகள் அந்தநெருப்பின் அனலில் கொல்லப்பட்டார்கள். அவ்வளவாக நெருப்பின் அனல் அதிகரிக்கப்பட்டது. ஆனால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவோ நெருப்புக்குள்ளாக கட்டவிழ்க்கப்பட்டு எந்த பாதிப்புமில்லாமல் நடந்துகொண்டிருப்பதை அங்குள்ள அனைவரும் பார்த்தார்கள். அவர்களோடு நாலாவதாக ஒருவர் இருப்பதையும் கண்டார்கள். அவர் தேவபுத்திரனின் சாயலை உடையவராய் இருப்பதுபோல் கண்டார்கள் (வச. 25). இன்று பல வேதவல்லுநர்கள் அது இயேசுவின் முன் அவதாரம் என்று நம்புகிறார்கள்.
இதைபோல் அச்சுறுத்தல்களும் சோதனைகளும் நமக்கு வரும்போது இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார். நம்மை அழுத்தமூட்டும் சூழ்நிலைகள் நமக்கு நேரிட்டால் நாம் பயப்படவேண்டாம். தேவன் நம்மை எப்போது, எப்படி காப்பர் என்று நமக்கு தெரியவில்லை என்றாலும், அவர் நம் கூடவே எப்போதும் இருக்கிறார் என்பது நிச்சயம். நாம் கடந்துவரும் எல்லா நெருப்புகளிலும் அவரில் விசுவாசமாய் இருக்க நமக்கு அவர் பெலன் தருவார்.
மீண்டும் நீ அவளைக் காண்பாய்
ஒரு நாற்காலியை இழுத்து ஜாக்கி (ஜாகுடியே) படுக்கையின் பக்கத்தில் நான் அமர்ந்தபோது அந்த அறை மங்கலும் நிசப்தமுமாய் இருந்தது. மூன்று வருடங்களாக புற்று நோயுடன் போராடும் முன்னதாக ஜாக்கி மிகவும் துடிதுடிப்பான பெண். அந்த காட்சியை என் மனக்கண்ணால் பார்க்க முடிந்தது: மலர்ந்த முகம், புன்னகை ததும்பும் தோற்றம். இப்பொழுதோ அவள் அசையாமலும பேசாமலும் அந்த மருத்துவ மனையில் படுத்திருந்தாள்.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சில வேத பகுதிகளை வாசிக்க நான் முடிவு செய்தேன். என்னுடைய வேதாகமத்தை எடுத்து 1 கொரிந்தியர் நிருபத்தில் ஒரு பகுதியை வாசிக்க ஆரம்பித்தேன்.
பிறகு நான் வெளியே வந்து என்னுடைய வாகனத்தில் தனிமையிலே உணர்ச்சிவசமாக சில நேரங்கள் செலவிட்ட பிறகு, எனக்கு ஒரு காரியம் மனதிற்கு வந்தது, அது என் கண்ணீரை குறைத்தது. அதாவது நான் அவளை மறுபடியும் பார்ப்பேன். என்னுடைய வருத்தத்தின் மிகுதியில் இறப்பு என்பது விசுவாசிகளுக்கு ஒரு தற்காலிகம் மட்டுமே (1 கொரிந்தியர் 15:21-22) என்பதை மறந்துவிட்டேன். நான் ஜாக்கியை மீண்டும் சந்திப்பேன் என்று அறிவேன் ஏனென்றால் எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட இயேசு மறித்து உயிர்த்தெழுந்தார் என்று நாங்கள் நம்பினோம். இயேசு மரித்தோரிலிருந்து எழுந்து உயிர்த்தெழுந்ததினால் மரணம் விசுவாசிகளை பிரிக்கும் வல்லமையை இழந்துவிட்டது. நாம் இறந்த பின்பு மோட்சத்தில் தேவனோடு, எல்லா ஆவிக்குள்ளான சகோதர சகோதரிகளோடு நித்திய காலமாக இருப்போம்.
இயேசு இன்றைக்கும் உயிரோடு இருக்கிறதினாலே, அவரை விசுவாசிப்பவர்கள் இழப்பிலும் துக்கத்திலும் கூட நம்பிக்கையுடையவர்களாய் இருப்பார்கள். மரணம் சிலுவையில் ஜெயமாக விழுங்கப்பட்டது.
வேலை மீது இரக்கம்
என் தோழி அனிதா, ஒரு கணக்கியல் நிறுவனத்தின் ஊதியத்தை கணக்கிடுகிறார். இது ஒரு நேரடியான வேலையாக கருதப்படலாம், ஆனால் முதலாளிகள் தங்கள் தகவல்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னரே சமர்ப்பிக்கின்றனர். ஊழியர்கள் தாமதமின்றி தங்கள் பணத்தை பெற்றுக்கொள்ள, அனிதா பெரும்பாலும் நீண்ட நேரம் வேலை செய்தார். மளிகைப் பொருட்களை வாங்குவதற்கும், மருந்துகளை வாங்குவதற்கும், வீட்டுவசதிகளுக்கு செலவிடவும் இந்த பணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் குடும்பங்ளை கருத்தில் கொண்டு அனிதா இப்படி செய்கிறார்.
அனிதாவுடைய இரக்கமுள்ள அணுகுமுறை எனக்கு இயேசுவை சுட்டிக்காட்டுகிறது. உலகத்தில், சில நேரங்களில், இயேசு தனக்கு சிரமமாக இருக்கும் போதும்கூட ஊழியம் செய்தார். உதாரணமாக, யோவான் ஸ்நானகன் கொல்லப்பட்ட செய்தியை கேட்ட பிறகு, இயேசு சற்று தனியாக இருக்க விரும்பி படவில் ஏறி தனிமைப்படுத்தப்பட்ட இடத்தை தேடி போனார் (மத். 14:13). ஒருவேளை அவருக்கு தன்னுடைய உறவினரான யோவானுக்காக துக்கப்படவும், அந்த துக்கத்திலும் அவர் ஜெபிக்கவும் தேவைப்பட்டிருந்தது.
ஒரே ஒரு சிக்கல் இருந்தது. திரளான ஜனங்கள் அவருக்கு பின்னே அங்கு போனார்கள். இந்த மக்களுக்கு அனேக சரீர தேவைகள் இருந்தது. அவர்களை அனுப்பி விடுவது மிகவும் எளிதானதாக இருந்திருக்கும் ஆனால் இயேசு அங்கே வந்து அவர்களைப் பார்த்தபொழுது, அவர்கள் மேல் மனதுருகி அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவாகளை சொஸ்தமாக்கினார் (வச. 14).
இந்த உலகத்தில், இயேசுவினுடைய ஊழியத்தின் அழைப்பு மக்களுக்கு உபதேசிப்பதும் வியாதியுள்ளவர்களை சொஸ்தமாக்குவதும் ஒரு பாகமாயிருந்தாலும், அவருடைய பச்சாதாபம், அவர் தன்னுடைய பொறுப்புகளை நிறைவேற்றுவதை பாதித்திருந்தது. தேவன் தாமே, நம்முடைய வாழ்க்கையில் அவருடைய இரக்கத்தை அடையாளம்கண்டுக்கொள்ள உதவி செய்து அதையே நாம் மற்றவர்களுக்கும் செய்ய பெலத்தைத் தருவாராக.
இருவர் பாடிய தெய்வீகப் பாடல்
குழந்தைகளின் இசை நிகழ்ச்சியொன்றில், ஓர் ஆசிரியரும், ஒரு மாணவனும் ஒரு பியானோவின் முன்னால் அமர்ந்திருந்தனர். இருவரும் சேர்ந்து இசைக்கும் பாடலைத் தொடங்குவதற்கு முன்பு, அந்த ஆசிரியர் குனிந்து, அந்த மாணவனிடம், சில கடைசி நேர ஆலோசனைகளைக் கூறினார். அந்த இசைக் கருவியிலிருந்து இசை கொட்டிய போது, அந்த மாணவன் ஒரு எளிய ராகத்தை வாசித்தான், அந்த ஆசிரியர், அவனோடு இசைத்து, அந்த இசைக்கு ஓர் ஆழத்தையும், வளமையையும் கொடுத்தார். அந்த இசை முடிவுற்றபோது, அந்த ஆசிரியர் தன் தலையை அசைத்து, தன்னுடைய அங்கிகாரத்தைத் தெரிவித்தார்.
நாம் இயேசுவோடு வாழும் வாழ்க்கையும் தனிப்பாடலைப் போன்றதல்ல, இருவர் சேர்ந்து பாடும் பாடலைப் போன்றது. சில வேளைகளில், அவர் “என் அருகில் அமர்ந்திருக்கிறார்”, அவருடைய வல்லமையினாலும், வழி நடத்தலாலும் தான், “என்னால் இயங்க முடிகிறது” என்பதையே நான் மறந்துவிடுகின்றேன். என்னுடைய சொந்த முயற்சியால், நான் சரியான சுரங்களை இசைக்க முயற்சிக்கிறேன்- என்னுடைய சொந்த பெலனால், நான் தேவனுக்கு கீழ்ப்படிய முயற்சிக்கிறேன், ஆனால் அது பலனற்றதாகவும் போலியாகவும் தான் முடிகின்றது. என்னுடைய கொஞ்ச பெலனைக் கொண்டு, நான் பிரச்சனைகளை தீர்க்க விரும்புகின்றேன், ஆனால், அது எனக்கும் பிறருக்கும் இடையே முரண்பாட்டைத் தான் கொண்டு வருகின்றது.
என்னுடைய ஆசிரியர் என் அருகிலேயே இருந்தால், காரியங்கள் வேறு விதமாக இருக்கின்றது. எனக்கு உதவும்படி, நான் தேவனைச் சார்ந்து கொள்ளும் போது, என்னுடைய வாழ்வு தேவனை மகிமைப் படுத்துவதாக உள்ளது. நான் சந்தோஷத்தோடு பணி செய்கின்றேன், தாராளமாக அன்பு செய்கின்றேன், என்னுடைய உறவுகளைத் தேவன் ஆசீர்வதிக்கும் போது, அது ஆச்சரியமாக உள்ளது. இயேசு தன்னுடைய முதல் சீஷர்களிடம், “ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக் கூடாது” (யோவா.15:5) என்றார்.
ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய நல்ல ஆசிரியருடன் இணைந்து, இருவரும் பாடும் போது, அவருடைய கிருபையும், வல்லமையும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்வின் இசையை சிறப்பாக வாசிக்க உதவும்.
பேசும் வாழைப்பழங்கள்
முயற்சியைக் கை விடாதே. பிறர் வாழ்வில் புன்னகை மலர நீ காரணமாயிரு. நீ அற்புதமானவள். நீ எங்கேயிருந்து வந்தாய் என்பதல்ல, நீ எங்கே போய் கொண்டிருக்கின்றாய் என்பதே முக்கியம். இவையெல்லாம் அமெரிக்காவிலுள்ள ஒரு பள்ளியில் மதிய உணவின் போது வழங்கப்படும் வாழைப்பழங்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள். சிற்றுண்டிச் சாலையின் மேலாளர் ஸ்டேசி, இந்த உற்சாகமளிக்கும் வார்த்தைகளை வாழைப் பழங்களில் எழுதுவதற்கு தனது நேரத்தைச் செலவிட்டார். அவற்றைப் பள்ளிக் குழந்தைகள் “பேசும் வாழைப்பழங்கள்” என்று பெயரிட்டு அழைத்தனர்.
இத்தகைய ஓர் அன்புச்செயல், அந்தியோகியாப் பட்டணத்திலுள்ள “ஆவிக்குரிய இளைஞர்களைக்” குறித்து கேள்விப்பட்ட பர்னபாவின் இருதயத்தை நமக்கு நினைவுப் படுத்துகின்றது (அப். 11:22-24). பர்னபா, மக்களைக் கவர்ந்து இழுக்கக் கூடிய ஆற்றல் பெற்றவன். அவன் நற்பெயர் பெற்றவன், விசுவாசத்தாலும் பரிசுத்த ஆவியாலும் நிரம்பப் பெற்றவன், அவன் புதிய விசுவாசிகளை “கர்த்தரிடத்தில் மன நிர்ணயமாய் நிலைத்திருக்கும் படி” புத்தி சொன்னான் (வ.23). அவன், தான் உதவி செய்ய விரும்பிய அந்த ஜனங்களிடம்: தொடர்ந்து ஜெபம் பண்ணுங்கள். தேவனிடம் விசுவாசமாயிருங்கள். வாழ்வு கடினமாகும் போது, தேவனுக்கு மிக அருகில் இருங்கள். என்பதாக ஆலோசனைக் கொடுத்திருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.
குழந்தைகளைப் போன்று, புதிய விசுவாசிகளுக்கும் அதிகப் படியான ஊக்கப்படுத்துதல் அவசியம். அவர்கள் ஆற்றல் நிரம்பப் பெற்றவர்கள். அவர்கள் தங்களிடமுள்ள திறமைகளைக் கண்டுபிடிக்கின்றனர். ஆனால், தேவன் அவர்களை என்ன செய்ய வேண்டுமென விரும்புகின்றார், அவர்கள் மூலம் தேவன் எவற்றைச் செய்ய விரும்புகின்றார் என்பதையெல்லாம், முழுவதும் அறிந்திருக்க மாட்டார்கள், மேலும், எதிரியானவன் அவர்கள் விசுவாசத்தில் வளர்ந்துவிடாமல் தடுப்பதற்கான வேலைகளைச் செய்துகொண்டிருப்பான்.
இயேசுவோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், இயேசுவுக்காக வாழ்வது எத்தனை கடினமானது என்பதை அறிவோம். பரிசுத்த ஆவியானவர் நம்மோடிருந்து, நம்மை வழி நடத்தி, ஆவியின் உண்மைகளை நமக்கு நினைவுபடுத்தி, நம்மை ஊற்சாகப் படுத்தி, பிறரையும் உற்சாகப் படுத்த உதவுவாராக.
நமக்காக ஜெபத்தை ஏறெடுப்பவர்
ஒரு சனிக் கிழமை, பிந்திய மதிய வேளையில், அருகில் உள்ள உணவகத்தில் சாப்பிடும்படி குடும்பத்துடன் அமர்ந்தோம். உணவு பரிமாறுபவர் எங்களது மேசையில் உணவுகளை வைத்தபோது, எனது கணவர் நிமிர்ந்து பார்த்து, அவருடைய பெயரைக் கேட்டார். அத்தோடு, “சாப்பிடும் முன்னர் நாங்கள் குடும்பமாக ஜெபிப்பது வழக்கம், இன்று உனக்காக நாங்கள் ஜெபிக்கும்படி ஏதாகிலும் இருக்கிறதா?” எனக் கேட்டார். அவனுடைய பெயரை நாங்கள் இப்பொழுது அறிவோம், சஞ்ஜெய் எங்களை ஆச்சரியத்தோடும், எதிர்பார்ப்போடும் பார்த்தான். சிறிது நேர அமைதிக்குப் பின்னர், அவன் தன்னுடைய நண்பனின் அறையில் தங்கியிருந்து அவனுடைய சோபாவில் தான் ஒவ்வொரு இரவும் தூங்குவதாகவும், அவனுடைய மோட்டார் வாகனம் பழுதடைந்து விட்டதாகவும் கூறி மனமுடைந்து போனான்.
என்னுடைய கணவர், தேவனிடம், சஞ்சைக்குத் தேவையானவற்றைக் கொடுக்குமாறும், அவனுக்கு தேவனுடைய அன்பைக் காட்டுமாறும் ஜெபித்தார். நாம் பரிந்து கேட்கும் ஜெபமும் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய தேவைகளைத் தெரிந்து கொண்டு, தேவனுக்கு அவற்றைத் தெரியப்படுத்துவதை போல உள்ளது. நம்முடைய மிகப் பெரிய தேவைகளின் போதும், நம்முடைய சொந்த முயற்சியினால் நாம் நம் வாழ்வை கையாள முடியாது என உணரும் போதும், தேவனிடம் என்ன சொல்வது என்று அறியாமல் திகைக்கும் போதும், “ஆவியானவர் தாமே வாக்குக் கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோம. 8:26). ஆவியானவர் என்ன சொல்லுவார் என்பதை நாம் அறியோம், ஆனால் அது தேவன் நம்முடைய வாழ்விற்கு வைத்திருக்கும் சித்தத்தை நிறைவேற்றுவதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அடுத்தமுறை நீ தேவனுடைய வழி நடத்தலுக்காக, தேவைகளுக்காக, ஒருவரின் வாழ்வின் பாதுகாப்பிற்காக ஜெபிக்கும் போது, அ ந்த இரக்கத்தின் செயல் மூலம் உன்னுடைய ஆவிக்குரிய தேவைகள் தேவனிடம் எடுத்துச் செல்லப் படுகின்றன என்பதை தெரிந்து கொள். அவர் உன்னுடைய பெயரை அறிவார், உன்னுடைய பிரச்சனைகளை அவர் பார்த்துக் கொள்வார்.
அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்
சண்டை மீன் ஒன்றை எங்களுடைய வீட்டில் இரண்டு ஆண்டுகளாக வளர்த்து வந்தோம். அதனுடைய தொட்டியில் உணவு போடும் போதெல்லாம், என்னுடைய இளைய மகள் குனிந்து, அதனோடு பேசுவாள். அவளுடைய மழலையர் பள்ளியில் செல்லப் பிராணிகளைப் பற்றிய பேச்சு வந்த போது, அதனை தன்னுடையதாக பெருமையுடன் கூறிக் கொண்டாள். ஒரு நாள், அந்த மீன் மரித்துப் போனது, என்னுடைய மகளும் மனமுடைந்து போனாள்.
என்னுடைய மகளின் உணர்வுகளை சற்று நெருக்கமாக கவனித்து, அவளிடம், “அதைக்குறித்து, தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்” எனத் தெரிவிக்குமாறு என்னுடைய தாயார் கூறினார். தேவன் எல்லாவற்றையும் அறிவார் என்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன், ஆனால், அது எவ்வாறு ஆறுதலளிப்பதாக இருக்க முடியும்? தேவன் நம்முடைய வாழ்வில் நடைபெறுகின்ற காரியங்களைத் தெரிந்திருப்பவர் மட்டுமல்ல, அவர் இரக்கத்தோடு நம்முடைய ஆத்துமாவைப் பார்க்கின்றார், இவைகள் நம் ஆன்மாவை எப்படி பாதிக்கும் என்பதையும் அவர் அறிவார். நம்முடைய வயது, கடந்தகால காயங்கள், பணபற்றாக்குறை ஆகியவற்றின் அடிப்படையில் “சிறிய காரியங்கள்” கூட பெரியதாகத் தோன்றுவதையும் அவர் அறிவார். தேவாலயத்தின் காணிக்கைப் பெட்டியில், ஏழை விதவை இரண்டு காசுகளைப் போட்ட போது, அந்தக் காணிக்கையின் அளவையும், அவளுடைய இருதயத்தையும் அவர் அறிந்திருந்தார். அது அவளுக்கு எப்படிப் பட்டது என்பதை அவர் விளக்கினார், “மற்றெல்லாரைப் பார்க்கிலும், இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள். இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள்” (மாற். 12:43-44) என்றார்.
அந்த விதவை தன்னுடைய சூழ்நிலையைப் பற்றி எதுவும் கூறவில்லை. ஆனால் அவள் கொடுத்த மிகச் சிறிய நன்கொடையை, இயேசு, அவள் செய்த தியாகமாகக் கருதினார். இதேப் போன்றே அவர் நம்முடைய வாழ்வையும் பார்க்கின்றார், அவருடைய அளவற்ற ஞானத்தினால் நாம் ஆறுதலையும் பெற்றுக்கொள்வோம்.