எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜெனிபர் பென்சன் ஷுல்ட்கட்டுரைகள்

மீண்டும் நீ அவளைக் காண்பாய்

ஒரு நாற்காலியை இழுத்து ஜாக்கி (ஜாகுடியே) படுக்கையின் பக்கத்தில் நான் அமர்ந்தபோது அந்த அறை மங்கலும் நிசப்தமுமாய் இருந்தது. மூன்று வருடங்களாக புற்று நோயுடன் போராடும் முன்னதாக ஜாக்கி மிகவும் துடிதுடிப்பான பெண். அந்த காட்சியை என் மனக்கண்ணால் பார்க்க முடிந்தது: மலர்ந்த முகம், புன்னகை ததும்பும் தோற்றம். இப்பொழுதோ அவள் அசையாமலும பேசாமலும் அந்த மருத்துவ மனையில் படுத்திருந்தாள்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சில வேத பகுதிகளை வாசிக்க நான் முடிவு செய்தேன். என்னுடைய வேதாகமத்தை எடுத்து 1 கொரிந்தியர் நிருபத்தில் ஒரு பகுதியை வாசிக்க ஆரம்பித்தேன்.

பிறகு நான் வெளியே வந்து என்னுடைய வாகனத்தில் தனிமையிலே உணர்ச்சிவசமாக சில நேரங்கள் செலவிட்ட பிறகு, எனக்கு ஒரு காரியம் மனதிற்கு வந்தது, அது என் கண்ணீரை குறைத்தது. அதாவது நான் அவளை மறுபடியும் பார்ப்பேன். என்னுடைய வருத்தத்தின் மிகுதியில் இறப்பு என்பது விசுவாசிகளுக்கு ஒரு தற்காலிகம் மட்டுமே (1 கொரிந்தியர் 15:21-22) என்பதை மறந்துவிட்டேன்.  நான் ஜாக்கியை மீண்டும் சந்திப்பேன் என்று அறிவேன் ஏனென்றால் எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட இயேசு மறித்து உயிர்த்தெழுந்தார் என்று நாங்கள் நம்பினோம். இயேசு மரித்தோரிலிருந்து எழுந்து உயிர்த்தெழுந்ததினால் மரணம் விசுவாசிகளை பிரிக்கும் வல்லமையை இழந்துவிட்டது. நாம் இறந்த பின்பு மோட்சத்தில் தேவனோடு, எல்லா ஆவிக்குள்ளான சகோதர சகோதரிகளோடு நித்திய காலமாக இருப்போம்.

இயேசு இன்றைக்கும் உயிரோடு இருக்கிறதினாலே, அவரை விசுவாசிப்பவர்கள் இழப்பிலும் துக்கத்திலும் கூட நம்பிக்கையுடையவர்களாய் இருப்பார்கள். மரணம் சிலுவையில் ஜெயமாக விழுங்கப்பட்டது.

வேலை மீது இரக்கம்

என் தோழி அனிதா, ஒரு கணக்கியல் நிறுவனத்தின் ஊதியத்தை கணக்கிடுகிறார். இது ஒரு நேரடியான வேலையாக கருதப்படலாம், ஆனால் முதலாளிகள் தங்கள் தகவல்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னரே சமர்ப்பிக்கின்றனர். ஊழியர்கள் தாமதமின்றி தங்கள் பணத்தை பெற்றுக்கொள்ள, அனிதா பெரும்பாலும் நீண்ட நேரம் வேலை செய்தார். மளிகைப் பொருட்களை வாங்குவதற்கும், மருந்துகளை வாங்குவதற்கும், வீட்டுவசதிகளுக்கு செலவிடவும் இந்த பணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் குடும்பங்ளை கருத்தில் கொண்டு அனிதா இப்படி செய்கிறார்.

அனிதாவுடைய இரக்கமுள்ள அணுகுமுறை எனக்கு இயேசுவை சுட்டிக்காட்டுகிறது. உலகத்தில், சில நேரங்களில், இயேசு தனக்கு சிரமமாக இருக்கும் போதும்கூட ஊழியம் செய்தார். உதாரணமாக, யோவான் ஸ்நானகன் கொல்லப்பட்ட செய்தியை கேட்ட பிறகு, இயேசு சற்று தனியாக இருக்க விரும்பி படவில் ஏறி தனிமைப்படுத்தப்பட்ட இடத்தை தேடி போனார் (மத். 14:13). ஒருவேளை அவருக்கு தன்னுடைய உறவினரான யோவானுக்காக துக்கப்படவும், அந்த துக்கத்திலும் அவர் ஜெபிக்கவும் தேவைப்பட்டிருந்தது.

ஒரே ஒரு சிக்கல் இருந்தது. திரளான ஜனங்கள் அவருக்கு பின்னே அங்கு போனார்கள். இந்த மக்களுக்கு அனேக சரீர தேவைகள் இருந்தது.  அவர்களை அனுப்பி விடுவது மிகவும் எளிதானதாக இருந்திருக்கும் ஆனால் இயேசு அங்கே வந்து அவர்களைப் பார்த்தபொழுது, அவர்கள் மேல் மனதுருகி அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவாகளை சொஸ்தமாக்கினார் (வச. 14).

இந்த உலகத்தில், இயேசுவினுடைய ஊழியத்தின் அழைப்பு மக்களுக்கு உபதேசிப்பதும் வியாதியுள்ளவர்களை சொஸ்தமாக்குவதும் ஒரு பாகமாயிருந்தாலும், அவருடைய பச்சாதாபம், அவர் தன்னுடைய பொறுப்புகளை நிறைவேற்றுவதை பாதித்திருந்தது. தேவன் தாமே, நம்முடைய வாழ்க்கையில் அவருடைய இரக்கத்தை அடையாளம்கண்டுக்கொள்ள உதவி செய்து அதையே நாம் மற்றவர்களுக்கும் செய்ய பெலத்தைத் தருவாராக.

இருவர் பாடிய தெய்வீகப் பாடல்

குழந்தைகளின் இசை நிகழ்ச்சியொன்றில், ஓர் ஆசிரியரும், ஒரு மாணவனும் ஒரு பியானோவின் முன்னால் அமர்ந்திருந்தனர்.      இருவரும் சேர்ந்து இசைக்கும் பாடலைத் தொடங்குவதற்கு முன்பு, அந்த ஆசிரியர் குனிந்து, அந்த மாணவனிடம், சில கடைசி நேர ஆலோசனைகளைக் கூறினார். அந்த இசைக் கருவியிலிருந்து இசை கொட்டிய போது, அந்த மாணவன் ஒரு எளிய ராகத்தை வாசித்தான், அந்த ஆசிரியர், அவனோடு இசைத்து, அந்த இசைக்கு ஓர் ஆழத்தையும், வளமையையும் கொடுத்தார். அந்த இசை முடிவுற்றபோது, அந்த ஆசிரியர் தன் தலையை அசைத்து, தன்னுடைய அங்கிகாரத்தைத் தெரிவித்தார்.

 நாம் இயேசுவோடு வாழும் வாழ்க்கையும் தனிப்பாடலைப் போன்றதல்ல, இருவர் சேர்ந்து பாடும் பாடலைப் போன்றது. சில வேளைகளில், அவர் “என் அருகில் அமர்ந்திருக்கிறார்”, அவருடைய வல்லமையினாலும், வழி நடத்தலாலும் தான், “என்னால் இயங்க முடிகிறது” என்பதையே நான் மறந்துவிடுகின்றேன். என்னுடைய சொந்த முயற்சியால், நான் சரியான சுரங்களை இசைக்க முயற்சிக்கிறேன்- என்னுடைய சொந்த பெலனால், நான் தேவனுக்கு கீழ்ப்படிய முயற்சிக்கிறேன், ஆனால் அது பலனற்றதாகவும் போலியாகவும் தான் முடிகின்றது. என்னுடைய கொஞ்ச பெலனைக் கொண்டு, நான் பிரச்சனைகளை தீர்க்க விரும்புகின்றேன், ஆனால், அது எனக்கும் பிறருக்கும் இடையே முரண்பாட்டைத் தான் கொண்டு வருகின்றது.

என்னுடைய ஆசிரியர் என் அருகிலேயே இருந்தால், காரியங்கள் வேறு விதமாக இருக்கின்றது. எனக்கு உதவும்படி, நான் தேவனைச் சார்ந்து கொள்ளும் போது, என்னுடைய வாழ்வு தேவனை மகிமைப் படுத்துவதாக உள்ளது. நான் சந்தோஷத்தோடு பணி செய்கின்றேன், தாராளமாக அன்பு செய்கின்றேன், என்னுடைய உறவுகளைத்  தேவன் ஆசீர்வதிக்கும் போது, அது ஆச்சரியமாக உள்ளது. இயேசு தன்னுடைய முதல் சீஷர்களிடம், “ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக் கூடாது” (யோவா.15:5) என்றார்.

ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய நல்ல ஆசிரியருடன்    இணைந்து, இருவரும் பாடும் போது, அவருடைய கிருபையும், வல்லமையும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்வின் இசையை  சிறப்பாக வாசிக்க உதவும்.

பேசும் வாழைப்பழங்கள்

முயற்சியைக் கை விடாதே. பிறர் வாழ்வில் புன்னகை மலர நீ காரணமாயிரு. நீ அற்புதமானவள். நீ எங்கேயிருந்து வந்தாய் என்பதல்ல, நீ எங்கே போய் கொண்டிருக்கின்றாய் என்பதே முக்கியம். இவையெல்லாம் அமெரிக்காவிலுள்ள ஒரு பள்ளியில் மதிய உணவின் போது வழங்கப்படும் வாழைப்பழங்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள். சிற்றுண்டிச் சாலையின் மேலாளர் ஸ்டேசி, இந்த உற்சாகமளிக்கும் வார்த்தைகளை வாழைப் பழங்களில் எழுதுவதற்கு தனது நேரத்தைச் செலவிட்டார். அவற்றைப் பள்ளிக் குழந்தைகள் “பேசும் வாழைப்பழங்கள்” என்று பெயரிட்டு அழைத்தனர்.

 இத்தகைய ஓர் அன்புச்செயல்,  அந்தியோகியாப் பட்டணத்திலுள்ள “ஆவிக்குரிய இளைஞர்களைக்” குறித்து கேள்விப்பட்ட பர்னபாவின் இருதயத்தை நமக்கு நினைவுப் படுத்துகின்றது (அப். 11:22-24). பர்னபா, மக்களைக் கவர்ந்து இழுக்கக் கூடிய ஆற்றல் பெற்றவன். அவன் நற்பெயர் பெற்றவன், விசுவாசத்தாலும் பரிசுத்த ஆவியாலும் நிரம்பப் பெற்றவன், அவன் புதிய விசுவாசிகளை “கர்த்தரிடத்தில் மன நிர்ணயமாய் நிலைத்திருக்கும் படி” புத்தி சொன்னான் (வ.23). அவன், தான் உதவி செய்ய விரும்பிய அந்த ஜனங்களிடம்:   தொடர்ந்து ஜெபம் பண்ணுங்கள். தேவனிடம் விசுவாசமாயிருங்கள். வாழ்வு கடினமாகும் போது, தேவனுக்கு மிக அருகில் இருங்கள். என்பதாக ஆலோசனைக் கொடுத்திருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.

குழந்தைகளைப் போன்று, புதிய விசுவாசிகளுக்கும் அதிகப் படியான ஊக்கப்படுத்துதல் அவசியம். அவர்கள் ஆற்றல் நிரம்பப் பெற்றவர்கள். அவர்கள் தங்களிடமுள்ள திறமைகளைக் கண்டுபிடிக்கின்றனர். ஆனால், தேவன் அவர்களை என்ன செய்ய வேண்டுமென விரும்புகின்றார், அவர்கள் மூலம் தேவன் எவற்றைச் செய்ய விரும்புகின்றார் என்பதையெல்லாம், முழுவதும்        அறிந்திருக்க மாட்டார்கள், மேலும், எதிரியானவன் அவர்கள் விசுவாசத்தில் வளர்ந்துவிடாமல் தடுப்பதற்கான வேலைகளைச் செய்துகொண்டிருப்பான்.

இயேசுவோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், இயேசுவுக்காக வாழ்வது எத்தனை கடினமானது என்பதை அறிவோம். பரிசுத்த ஆவியானவர் நம்மோடிருந்து, நம்மை வழி நடத்தி, ஆவியின் உண்மைகளை நமக்கு நினைவுபடுத்தி, நம்மை ஊற்சாகப் படுத்தி, பிறரையும் உற்சாகப் படுத்த உதவுவாராக.

நமக்காக ஜெபத்தை ஏறெடுப்பவர்

ஒரு சனிக் கிழமை, பிந்திய மதிய வேளையில், அருகில் உள்ள உணவகத்தில் சாப்பிடும்படி குடும்பத்துடன் அமர்ந்தோம். உணவு பரிமாறுபவர் எங்களது மேசையில் உணவுகளை வைத்தபோது, எனது கணவர் நிமிர்ந்து பார்த்து, அவருடைய பெயரைக் கேட்டார். அத்தோடு, “சாப்பிடும் முன்னர் நாங்கள் குடும்பமாக ஜெபிப்பது வழக்கம், இன்று உனக்காக நாங்கள் ஜெபிக்கும்படி ஏதாகிலும் இருக்கிறதா?” எனக் கேட்டார். அவனுடைய பெயரை நாங்கள் இப்பொழுது அறிவோம், சஞ்ஜெய் எங்களை ஆச்சரியத்தோடும், எதிர்பார்ப்போடும் பார்த்தான். சிறிது நேர அமைதிக்குப் பின்னர், அவன் தன்னுடைய நண்பனின் அறையில் தங்கியிருந்து அவனுடைய சோபாவில் தான்  ஒவ்வொரு இரவும் தூங்குவதாகவும், அவனுடைய மோட்டார் வாகனம் பழுதடைந்து விட்டதாகவும் கூறி மனமுடைந்து போனான்.

என்னுடைய கணவர், தேவனிடம், சஞ்சைக்குத் தேவையானவற்றைக் கொடுக்குமாறும், அவனுக்கு தேவனுடைய அன்பைக் காட்டுமாறும் ஜெபித்தார்.        நாம் பரிந்து கேட்கும் ஜெபமும் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய தேவைகளைத் தெரிந்து கொண்டு, தேவனுக்கு அவற்றைத் தெரியப்படுத்துவதை போல உள்ளது. நம்முடைய மிகப் பெரிய தேவைகளின் போதும், நம்முடைய சொந்த முயற்சியினால் நாம் நம் வாழ்வை கையாள முடியாது என உணரும் போதும், தேவனிடம் என்ன சொல்வது என்று அறியாமல் திகைக்கும் போதும், “ஆவியானவர் தாமே வாக்குக் கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோம. 8:26). ஆவியானவர் என்ன சொல்லுவார் என்பதை நாம் அறியோம், ஆனால் அது தேவன் நம்முடைய வாழ்விற்கு வைத்திருக்கும் சித்தத்தை நிறைவேற்றுவதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்தமுறை நீ தேவனுடைய வழி நடத்தலுக்காக, தேவைகளுக்காக, ஒருவரின் வாழ்வின் பாதுகாப்பிற்காக ஜெபிக்கும் போது, அ   ந்த இரக்கத்தின் செயல் மூலம் உன்னுடைய ஆவிக்குரிய தேவைகள் தேவனிடம் எடுத்துச் செல்லப் படுகின்றன என்பதை தெரிந்து கொள். அவர் உன்னுடைய பெயரை அறிவார், உன்னுடைய பிரச்சனைகளை அவர் பார்த்துக் கொள்வார்.

அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்

சண்டை மீன் ஒன்றை எங்களுடைய வீட்டில் இரண்டு ஆண்டுகளாக வளர்த்து வந்தோம். அதனுடைய தொட்டியில் உணவு போடும் போதெல்லாம், என்னுடைய இளைய மகள் குனிந்து, அதனோடு பேசுவாள். அவளுடைய மழலையர் பள்ளியில் செல்லப் பிராணிகளைப் பற்றிய பேச்சு வந்த போது, அதனை தன்னுடையதாக பெருமையுடன் கூறிக் கொண்டாள். ஒரு நாள், அந்த மீன் மரித்துப் போனது, என்னுடைய மகளும் மனமுடைந்து போனாள்.

என்னுடைய மகளின் உணர்வுகளை சற்று நெருக்கமாக கவனித்து, அவளிடம், “அதைக்குறித்து, தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்” எனத் தெரிவிக்குமாறு என்னுடைய தாயார் கூறினார். தேவன் எல்லாவற்றையும் அறிவார் என்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன், ஆனால், அது எவ்வாறு ஆறுதலளிப்பதாக இருக்க முடியும்? தேவன் நம்முடைய வாழ்வில் நடைபெறுகின்ற காரியங்களைத் தெரிந்திருப்பவர் மட்டுமல்ல, அவர் இரக்கத்தோடு நம்முடைய ஆத்துமாவைப் பார்க்கின்றார், இவைகள் நம் ஆன்மாவை எப்படி பாதிக்கும் என்பதையும் அவர் அறிவார். நம்முடைய வயது, கடந்தகால காயங்கள், பணபற்றாக்குறை ஆகியவற்றின் அடிப்படையில் “சிறிய காரியங்கள்” கூட பெரியதாகத் தோன்றுவதையும் அவர் அறிவார்.  தேவாலயத்தின் காணிக்கைப் பெட்டியில், ஏழை விதவை இரண்டு காசுகளைப் போட்ட போது, அந்தக் காணிக்கையின் அளவையும், அவளுடைய இருதயத்தையும் அவர் அறிந்திருந்தார். அது அவளுக்கு எப்படிப் பட்டது என்பதை அவர் விளக்கினார், “மற்றெல்லாரைப் பார்க்கிலும், இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள். இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள்” (மாற். 12:43-44) என்றார்.

அந்த விதவை தன்னுடைய சூழ்நிலையைப் பற்றி எதுவும் கூறவில்லை. ஆனால் அவள் கொடுத்த மிகச் சிறிய நன்கொடையை, இயேசு, அவள் செய்த தியாகமாகக் கருதினார். இதேப் போன்றே அவர் நம்முடைய வாழ்வையும் பார்க்கின்றார், அவருடைய அளவற்ற ஞானத்தினால் நாம் ஆறுதலையும் பெற்றுக்கொள்வோம்.

அழகினை ரசிக்க ஒரு நேரம்

ஜனவரி மாதத்தில் ஒரு நாள் காலை எழுந்தபோது, அந்த நடு பனிக்காலத்தில், அநேக வாரங்களாக பார்த்துக்கொண்டிருக்கிற, அதே சோகக் காட்சியான, பனிபடர்ந்த நிலப்பரப்பையும், அதனூடே பழுப்படைந்த புற்கள் நீட்டிக் கொண்டிருப்பதையும், சாம்பல் நிற வானத்தையும், குச்சிகளாகக் காட்சிதரும் மரங்களையும் தான் காணமுடியும் என்று நினைத்தவனாக வெளியேப் பார்த்தேன். ஒரே இரவில், வித்தியாசமான ஒன்று நடந்துள்ளது. ஒரு பனிப் புயலால் வெளி முழுவதும், பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்தது. அந்த மந்தமான காட்சிகள், அழகிய காட்சியாக மாறியிருந்தது, அந்தப் பனிக்கட்டிகள், சூரிய வெளிச்சத்தில் மின்னியதோடு, என்னையும் பிரகாசிக்கச் செய்தது.

சில வேளைகளில், நமக்குள்ளே நம்பிக்கை வேண்டும் என்பதையே மறந்து விட்டுப் பிரச்சனைகளைப் பார்க்கிறோம். ஒவ்வொரு நாள் காலையும், வேதனையும், பயமும், ஏமாற்றமும் தான் நம்மைச் சந்திக்க காத்திருக்கின்றன என நாம் எதிர் பார்க்கிறோம். ஆனால் இதுவரை நடந்திராத ஒன்று நடக்கக் கூடுமென நாம் நினைப்பதேயில்லை. மீண்டும் இழந்தவற்றைப் பெற்றுக்கொள்ளல், வளர்ச்சியடைதல் அல்லது தேவனுடைய வல்லமையினால் வெற்றி பெறல் ஆகியவற்றை நாம் எதிர் பார்ப்பதேயில்லை. நம்முடைய கஷ்ட வேளைகளை கடந்து செல்வதற்கு தேவன் நமக்கு உதவுகின்றார் என வேதாகமம் கூறுகின்றது. உடைந்த உள்ளங்களை அவர் சரிசெய்கின்றார், அடிமைத்தனத்திலிருப்போரை விடுவிக்கிறார், துயரத்திலிருப்போரைத் தேற்றுகிறார், “சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக துதியின் உடையையும் கொடுக்கிறார்” (ஏசா. 61:3).

நாம் பிரச்சனையில் இருக்கும் போது, நம்முடைய தேவன், நம்மை மகிழ்ச்சியாக்க விரும்ப மாட்டாரா? நம்முடைய சோதனைகளின் மத்தியில் அவரே நமது நம்பிக்கையாய் இருக்கிறாரல்லவா? நாம் முழுமையான விடுதலையைப் பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதாயிருந்தாலும், தேவன் நம்மோடு இருக்கின்றார், நம்மை ஊக்கப்படுத்துகின்றார், அடிக்கடி தம்மை, நமக்கு வெளிப்படுத்துகின்றார். என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில், “என்னுடைய ஆழ்ந்த காயங்களின் வழியாக உம்முடைய மகிமையைக் கண்டேன், அது என்னையும் பிரகாசிப்பித்தது” என்ற தூய அகஸ்டினின் வார்த்தைகளைப் புரிந்துகொள்வோம்.

நம்மை வழிநடத்தும் வெளிச்சம்

ஒரு அருங்காட்சியகத்தில், பழங்கால விளக்குகள் வைக்கப்பட்டிருந்த பகுதியைச் சுற்றி வந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த  ஒரு குறிப்பு, அவை இஸ்ரவேல் தேசத்திலிருந்தவை என்பதைக் காட்டியது. செதுக்கப் பட்ட வடிவுகளால் அலங்கரிக்கப்பட்ட, நீள் வளைய, களிமண்ணாலான குவளைகளில் இரண்டு துளைகள் இருந்தன.  ஒன்று, எரிபொருளுக்காகவும், மற்றொன்று, திரி வைப்பதற்காகவும் அமைக்கப்பட்டிருந்தது. இஸ்ரவேலர் இத்தகைய விளக்குகளைச் சாதாரணமாக மாடங்களில் வைப்பர். இவை, மனிதனின் உள்ளங்கையளவு சிறியதாக இருந்தது.

இத்தகைய விளக்குகள், தாவீது அரசனை மிகவும் கவர்ந்திருக்க வேண்டும், அவர் தேவனைப் போற்றிப் பாடும் போது, “கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்” (2 சாமுவேல் 22:29) என்கின்றார். தேவன்,  யுத்தங்களில் வெற்றியைக் கொடுத்த போது, தாவீது இப்பாடலைப் பாடுகின்றார். அவனுடைய தேசத்திலும், புறதேசத்திலும் உள்ள எதிரிகள், அவனைக் கொல்லும் படி பின் தொடர்ந்த போதும், அவன் தேவனோடு கொண்டுள்ள ஐக்கியம் அவனைப் பெலப்படுத்தியதால், மறைவிடங்களில் முடங்கிக் கிடக்காமல், தேவப் பிரசன்னம் கொடுத்த நம்பிக்கையோடு, முன்னோக்கிச் சென்று, எதிரிகளைச் சந்திக்கின்றான். தேவன் அவனுக்கு உதவி செய்தபடியால், அவனால் காரியங்களைத் தெளிவாகக் காணவும், தனக்கும், தன்னுடைய படைகளுக்கும், தன்னுடைய தேசத்திற்கும் சரியான முடிவுகளை எடுக்கவும் முடிந்தது.

தாவீதின் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள இருள் என்பது, பெலவீனம், தோல்வி, மற்றும் மரணத்தைக் குறித்த பயத்தைக் காட்டுகின்றது. நம்மில் அநேகர் இத்தகைய கவலைகளோடு வாழலாம், அது, நமக்குள் பதட்டத்தையும், மன அழுத்தத்தையும் உருவாக்கும். இந்த இருள் நம்மை அழுத்தும் போது, தேவன் நம்மோடு இருக்கின்றார் என்பதை நாமறிவதால், நாம் சமாதானத்தைப் பெற்றுக்கொள்கின்றோம். பரிசுத்த ஆவியானவரின் அக்கினி நமக்குள் பிரகாசித்து, நாம் இயேசுவை முக முகமாய் சந்திக்கும் வரை, நம் பாதைக்கு வெளிச்சம் காட்டுவார்.

அபாயகரமான பொருட்கள்

அபாயச் சங்கு ஒலி, என் காதுகளை பிளக்கும் அளவுக்கு அதிகரித்துக் கொண்டேயிருந்த போது, அவசர கால வண்டி ஒன்று வேகமாக, என்னுடைய காரை முந்திக் கொண்டு சென்றது. அதன் பிரகாசமான ஒளி, என்னுடைய காரின் முன் பக்க கண்ணாடி வழியே வந்த போது, அந்த வாகனத்தின் பக்கங்களில் எழுதியிருந்த ”அபாயகரமான பொருட்கள்” என்ற வாசகம் ஒளிர்ந்து, என் கண்களுக்குத் தெரிந்தது. அந்த வாகனம், ஒரு அறிவியல் ஆய்வகத்திற்கு அவசர வேலைக்காக சென்றது. அங்கு, 400 காலன் கந்தக அமிலம் சேமிப்பு கிடங்கில் கசிவு ஏற்பட்டிருந்ததால், அப்பொருளை அகற்றச் சென்றது என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன். கந்தக அமிலம் தொடுகின்ற யாவற்றையும் அரித்து விடுவதால், அதனை உடனே அகற்ற வேண்டும்.

இந்த புதிய கதையை நான் கேள்விப்பட்ட போது, எனக்குள்ளாக ஒரு எண்ணம் தோன்றியது. என்னுடைய வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு கடுமையான வார்த்தைகளையும் ஒரு சங்கின் வழியாக ஒலித்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். பரிதாபம், என் வீட்டைச் சுற்றிலும் தாங்கொணா சத்தமாயிருக்கும். 

ஏசாயா தீர்க்கன் இத்தகைய ஒரு விழிப்பை, தன்னுடைய பாவத்தைக் குறித்து உணர்கின்றார். அவர், தேவனுடைய மகிமையை ஒரு தரிசனத்தில் பார்த்த போது, தன்னுடைய தகுதியின்மையை உணர்கின்றார். அவர் தன்னைக் குறித்து,” அசுத்த உதடுகளுள்ள மனுஷன்” என்கின்றார், மேலும் அத்தகைய மனுஷர்களின் மத்தியில் வாசம் பண்ணுகின்றேன், (ஏசா. 6:5) எனவும் கூறுகின்றார். உடனே, ஒரு தேவ தூதன் அவனுடைய உதட்டை ஒரு நெருப்புத் தழலால் தொடுகின்றான். அத்தோடு, “இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது” என்றான் (வச. 7).

ஒவ்வொரு கணத்திலும், நாம் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து, பேச்சின் மூலமாகவோ அல்லது எழுத்தின் மூலமாகவோ வெளிப்படுத்துவதற்கு அநேக வாய்ப்புகள் உள்ளன. அவை “அபாயகரமான” வார்த்தைகளா? அல்லது தேவனுடைய மகிமை, நம்மை உணர்த்தி, அவருடைய கிருபை, நம்மை சுகப்படுத்தி, நாம் வெளிப்படுத்தும் எல்லா காரியங்களும் அவரை கனப்படுத்த அமைய, நாம், நம்மை ஒப்புக்கொடுப்போமா?