எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பில் கிரவுடர்கட்டுரைகள்

நன்றியுள்ள இருதயம்

பண்டைய ரோம நாட்டில் செனேகா (கி.மு. 4-கி.பி. 65) என்னும் புகழ்பெற்ற தத்துவமேதை, விபச்சாரம் செய்தார் என்று பேரரசி மெசலினாவினால் குற்றஞ்சாட்டப்பட்டார். செனேகாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் பேரரசர் கிளாடியஸ், அவரை குற்றமற்றவராய் பார்த்ததினால், மரண தண்டனைக்கு பதிலாக, அவர் கோர்ஸிகா என்னும் இடத்திற்கு நாடு கடத்தப்பட்டார். இந்த சூழ்நிலை செனேகாவின் நன்றியுணர்ச்சிக்கு புதுவடிவம் கொடுத்தது. அவர் சொல்லும்போது, “படுகொலைகள், கொடுங்கோலாட்சிகள், திருடர்கள், விபச்சாரக்காரர்கள், கொள்ளையர்கள், புனிதர்கள், துரோகிகள் ஆகியோர் எல்லா காலத்திலும் இருப்பர். ஆனால் அவை எல்லாவற்றையும் விட கொடுமையான குற்றம் நண்றியுணர்வில்லாமல் இருப்பதே” என்கிறார்.    

செனேகாவின் காலகட்டத்தில் வாழ்ந்த பவுல் அப்போஸ்தலர் இதை ஏற்றுக்கொண்டார். ரோமர் 1:21ல் நன்றியுணர்வில்லாதிருப்பதே மனுஷீகத்தின் வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் என்று பவுல் எழுதுகிறார். கொலோசெ திருச்சபைக்கு எழுதும்போது, நன்றியுணர்ச்சிக்கு மூன்று தரம் சவால் விடுகிறார். “ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக” (கொலோசெயர் 2:7) என்றும், தேவ சமாதானம் நம்முடைய இருதயங்களை ஆளும்போது, நன்றியறிதலுள்ளவர்களுமாயிருக்கவும் (3:15) அறிவுறுத்துகிறார். மேலும் நன்றியுணர்வே ஜெபத்திற்கும் மையமாய் அமைகிறது (4:2) என்கிறார். 

தேவனின் மாபெரும் தயவே வாழ்க்கையின் மிகச்சிறந்த யதார்த்தங்களை நினைவூட்டுகிறது. அவர் நம்முடைய அன்பிற்கும் துதிக்கும் மட்டுமின்றி, நம்முடைய நன்றியுள்ள இருதயத்திற்கும் பாத்திரர். வாழ்க்கையின் நன்மையான எந்த ஈவும் அவரிடத்திலிருந்தே வருகிறது (யாக்கோபு 1:17). 

கிறிஸ்துவில் நாம் பெற்றுக்கொண்ட அனைத்து ஈவுகளுக்கும் நாம் நம்முடைய நன்றியுணர்வை சுவாசம்போல் இயல்பாகவே வெளிப்படுத்தவேண்டும். தேவனுடைய கிருபையுள்ள ஈவுகளுக்கு நம் நன்றியுணர்வை வெளிப்படுத்துவோம். 

ஆவியானவரின் நடத்துதல்

தன் இராணுவ முகாமின் பாதுகாப்புகளை வலுபடுத்துவதற்காக பாலைவனத்தின் மணலைத் தோண்டிய பிரஞ்சு இராணுவ வீரனுக்கு, பிரம்மாண்டமான ஒரு புதையல் தென்படப்போவது தெரியாது. மணலைத் தோண்டியபோது, அவனுக்கு ஒரு கல் தட்டுப்பட்டது. சாதாரண ஒரு கல் அல்ல அது தான் ரோஸட்டா கல்வெட்டு. மூன்று மொழிகளில் எழுதப்பட்ட ஐந்தாம் டோலமியின் விதிமுறைகள் மற்றும் ஆட்சி பதிவுகள் உள்ளடங்கிய கல்வெட்டு. ஹீரோகிளிஃபிக் எனப்பட்ட எகிப்திய எழுத்துக்கலையின் மகத்துவத்தைப் பிரதிபலிக்கும் 19ஆம் நூற்றாண்டின் பிரம்மாண்டமான அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பு அது (தற்போது பிரிட்டிஷ்அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது). 

நம்மில் பலருக்கு பெரும்பாலான வேதப்பகுதிகள் ஆழத்தில் புதைந்துள்ள பொக்கிஷங்கள் போன்றவை. சிலுவை மரணத்திற்கு முன்தினம் இரவில், இயேசு தன்னை பின்பற்றியவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரை வாக்குப்பண்ணுகிறார். அவர் சொல்லும்போது, “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்” (யோவான் 16:13) என்று சொல்லுகிறார். வேதத்தின் ஆழத்தில் மறைந்திருக்கும் ஆச்சரியமான சத்தியங்களின் மீது பரிசுத்த ஆவியானவரே ஒளியூட்டும் ஒரு ரோஸட்டா கல்வெட்டு. 

வேதத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து சத்தியங்களையும் நாம் அறிந்துகொள்ள முடியாது என்றாலும், கிறிஸ்துவை பின்பற்றுவதற்கு தேவையான அனைத்துக் காரியங்களையும் ஆவியானவர் நமக்குக் கொடுக்கிறார். அவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார். 

நினைவுகூர்ந்து மகிழ்ந்திரு

அமெரிக்காவின் தெற்கு விர்ஜீனியா மாகாணத்தில் டிசம்பர் 6, 1907இல் ஏற்பட்ட வெடி விபத்து, நிலக்கரி சுரங்க வரலாற்றில் மிகவும் மோசமான ஒன்று. இந்த விபத்தில் 360பேர் பலியாயினர். இந்த கோர விபத்து, 250 பெண்களை விதவைகளாகவும் 1000 பிள்ளைகளை தகப்பனில்லாதவர்களாகவும் மாற்றியது. இந்த நினைவுநாளையே அமெரிக்க சரித்திர நிபுணர்கள் தகப்பனார்கள் தினமாய் கொண்டாடத்துவங்கினர். பெரிய இழப்பிலிருந்து நினைவுகூருதல் நிகழ்ந்தது. அது பின் மகிழ்ச்சியான தருணமாய் மாறியது. 

மனிதர்கள் தங்கள் சிருஷ்டிகரை சிலுவையில் அறைந்த அவலம் மனித சரித்திரத்தின் பெரிய சோகம். இந்த இருண்ட நிகழ்வு நினைவுகூருதலையும் மகிழ்ச்சியினையும் தோற்றுவித்தது. சிலுவைக்கு போவதற்கு முன் தினம் இரவில், இஸ்ரவேலின் பஸ்காவை ஆசரித்த இயேசு தன்னுடைய நினைவு நாளையே ஆசரித்தார். லூக்காவின் பதிவு அதை இப்படியாய் விவரிக்கிறது. “பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது;  என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்” (லூக்கா 22:19). 

இன்றுவரை ஒவ்வொருமுறையும் கர்த்தருடைய பந்தியை நாம் ஆசரிக்கும்போதும் நமக்காக அவருடைய விரிசலில்லாத அன்பை நாம் கனப்படுத்துகிறோம். நம்மை மீட்டதற்கான விலைக்கிரயத்தையும் அவருடைய தியாகம் நமக்குக் கொடுத்த வாழ்க்கையையும் நினைவுகூருகிறோம். சார்லஸ் வெஸ்லி தன்னுடைய பாடல் ஒன்றில் “ஆச்சரியமான அன்பு! எனக்காய் என் தேவனே நீர் மரித்தது எப்படி!” என்று பாடியுள்ளார்.

துக்கத்தில் நம்பிக்கை

டாக்ஸி ஓட்டுநர் எங்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருடைய கதையை எங்களுக்குச் சொன்னார். வறுமையின் நிமித்தமாக தன் வீட்டைவிட்டு வெளியேறி, 17 வயதில் இந்த பட்டணத்திற்கு வந்ததாக கூறினார். பதினொறு வருடங்கள் கழிந்துவிட்டது. தற்போது தனக்கு குடும்பம் இருப்பதாகவும் தங்களுடைய கிராமத்தில் கிடைக்காத நல்ல வாழ்க்கையை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் கூறினார். ஆயினும் தன் பெற்றோரை விட்டும் உடன்பிறப்புகளை விட்டும் பிரிந்திருப்பதை நினைத்து வேதனைப்பட்டார். எங்களிடம் அவர் பகிர்ந்துகொண்ட அவருடைய கடினமான வாழ்க்கை பயணமானது, அவருடைய குடும்பத்தோடு ஒன்று சேரும்வரை நிறைவடையாது.    

நம்மை நேசிப்பவர்களிடமிருந்து பிரிந்திருப்பது கடினமானது. ஆனால் நாம் நேசிப்பவர்களை மரணத்தில் பிரிவது அதைவிட கடினமானது. அந்த இழப்பை, அவர்களை மீண்டும் சந்திக்கும்வரை ஈடுகட்டமுடியாது. இதுபோன்ற இழப்பை அனுபவித்துக் கொண்டிருந்த தெசலோனிக்கேய திருச்சபையின் புது விசுவாசிகளுக்கு பவுல் எழுதும்போது, “அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை” (1 தெசலோனிக்கேயர் 4:13) என்று எழுதுகிறார். விசுவாசிகளாய் கிறிஸ்துவோடு சேர்ந்து மீண்டும் நாம் இணைக்கப்படப் போகிறோம் என்று நாம் எதிர்பார்க்கலாம் (வச. 17). 

சில வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு ஏற்படுத்திய ஆழமான பிரிதலை நாம் பொறுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் மீண்டும் இணையப் போகிறோம் என்று கிறிஸ்துவுக்குள் நம்புகிறோம். துக்கங்கள் மற்றும் இழப்புகளின் மத்தியிலும் தேவன் கொடுத்த இந்த நம்பிக்கையில் நாம் ஆறுதல் அடைகிறோம் (வச. 18). 

தேவையான இடத்தில் தண்ணீர்

உலகின் மிக ஆழமான ஏரியான பைக்கால் ஏரி, மிகவும் பரந்து விரிந்த அற்புதமான ஏரி. 49 மைல் (79 கி.மீ.) குறுக்கே ஒரு மைல் ஆழத்தையும் கிட்டத்தட்ட 400 மைல் (636 கி.மீ) அளவையும் கொண்டு, இது உலகின் அனைத்து நண்ணீரில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த நீர் பெரும்பாலும் அணுக முடியாதது. பைக்கால் ஏரி சைபீரியாவில் அமைந்துள்ளது. இது ரஷ்யாவின் மிக தொலைதூரப் பகுதிகளில் ஒன்றாகும். நமது கிரகத்தின் பெரும்பகுதிக்கு தண்ணீர் அத்தியாவசியமான ஒரு தேவை என்றபோதில், மக்கள் யாரும் போக முடியாத இந்த இடத்தில் இவ்வளவு தண்ணீர் இருப்பது முரண்பாடான ஒரு காரியம். 

பைக்கால் ஏரி தொலைதூரத்தில் இருந்தாலும், முடிவில்லாத வாழ்வாதாரமான தண்ணீர் இங்கு கிடைக்கிறது. அதின் தேவை அதிகம் உள்ளவர்களுக்கே அது கிடைக்கிறது. சமாரியாவில் ஒரு கிணற்றினருகே இயேசு இருந்தபோது, ஒரு பெண்ணுடன் உரையாடினார். அவளுடைய ஆழ்ந்த ஆன்மீக தாகத்தின் ஓரங்களை ஆராய்ந்தார். அவளுடைய உள்ளத்தின் ஏக்கத்திற்கு தீர்வு? இயேசு மட்டுமே.

கிணற்றிலிருந்து எடுக்க வந்த தண்ணீருக்கு மாறாக, இயேசு அதைவிடச் சிறந்த ஒன்றை வழங்கினார்: “இந்த தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது, நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்” (யோவான் 4: 13-14).

பல விஷயங்கள் திருப்தியை உறுதிப்படுத்துகின்றன, ஆனால் ஒருபோதும் நம் இருதயத்தின் தாகத்தை முழுமையாகத் தணிக்காது. இயேசுவால் மட்டுமே நம்முடைய ஆன்மீக தாகத்தை உண்மையிலேயே பூர்த்தி செய்யமுடியும். அனைவரது தேவைகளையும், எல்லா இடங்களிலும் அவர் சந்திக்கிறார். 

எதை பார்க்க முடியாது?

​ஜூலை 16, 1945 இல் நியூ மெக்ஸிகோவின் தொலைதூர பாலைவனத்தில் முதல் அணு ஆயுதம் வெடித்தபோது, ​ அணு வயது தொடங்கியது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் கிரேக்க தத்துவஞானி டெமோக்ரிட்டஸ் (சி. 460–370 கி.மு ) பிரபஞ்சத்தின் இந்த சிறிய கட்டுமானத் தொகுதிகளைக் கூட காணக்கூடிய எதையும் கண்டுபிடிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அணுவின் இருப்பு மற்றும் சக்தியை ஆராய்ந்து கொண்டிருந்தார். டெமோகிரிட்டஸ் அவர் பார்க்க முடிந்ததை விட அதிகமாக புரிந்து கொண்டார் மற்றும் அதன் விளைவு அணுக் கோட்பாடாகும்.

விசுவாசத்தின் சாராம்சம் காண முடியாததைத் தழுவுகிறது என்று வேதம் சொல்கிறது. எபிரெயர் 11: 1 "இப்போது விசுவாசம் என்பது நம்பபடுகிறதின் உறுதி, காணப்படாதவைகளின் நிச்சயம்." என்றும் உறுதிப்படுத்துகிறது, இந்த உத்தரவாதம் விருப்பத்தினால் அல்லது நேர்மறையான சிந்தனையின் விளைவாகவும் அல்ல. யாருடைய இருப்பு பிரபஞ்சத்தில் உண்மையான உண்மையோ அந்த காண முடியாத தேவன் மீதான நமது நம்பிக்கை. அவருடைய யதார்த்தம் அவருடைய படைப்பின் கிரியையில் காட்டப்பட்டுள்ளது (சங்கீதம் 19: 1) மற்றும் பிதாவின் அன்பை நமக்குக் காட்ட வந்த அவருடைய குமாரனாகிய இயேசுவில் அவருடைய கண்ணுக்குத் தெரியாத தன்மையையும் வழிகளையும் வெளிப்படுத்துவதன் மூலம் விளங்கபன்னினார் (யோவான் 1:18).

அப்போஸ்தலன் பவுல் (அப்போஸ்தலர் 17:28) கூறியது போல் இந்த தேவனுக்குள் “நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்”. ஆகவே, “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்” (2 கொரிந்தியர் 5: 6). எனினும் நாம் தனியாக நடக்கவில்லை. கண்ணுக்குத் தெரியாத தேவன் ஒவ்வொரு அடியிலும் நம்முடன் நடக்கிறார்.

விலைக்கிரயம்

மைக்கேலேஞ்சலோவின் படைப்புகள் இயேசுவின் வாழ்க்கையின் பல அம்சங்களை ஆராய்ந்தன, எனினும் மிகவும் கடுமையான ஒன்று மிகவும் எளிமையானவற்றுள் ஒன்றாகும். 1540 களில் அவர் தனது நண்பர் விட்டோரியா கொலோனாவுக்காக ஒரு படத்தை (இறந்த கிறிஸ்துவின் உடலை வைத்திருக்கும் இயேசுவின் தாயின் படம்) வரைந்தார். சுண்ணாம்பில் வரையப்பட்டது. மரியாள் தனது மகனின் உடலை மடியில் கிடத்தியபடி வானத்தை நோக்கியதை சித்தரிக்கிறது. மரியாவின் பின்னிருந்து எழும்பிய சிலுவையின் மேல் உத்திரம் டான்டே சொர்க்கத்தில் இருந்து எடுக்கப்பட்டிருந்த இந்த வார்த்தைகளை சுமந்து கொண்டிருந்தது,"எவ்வளவு இரத்தம் செலவாகும் என்பதை அவர்கள் அங்கே எண்ணிப் பார்க்கவில்லை." மைக்கேலேஞ்சலோவின் கருத்து ஆழமானது: இயேசுவின் மரணத்தைப் பற்றி நாம் நிதானிக்கும்போது, அவர் கொடுத்த விலையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

கிறிஸ்து செலுத்திய விலை "முடிந்தது" (யோவான் 19:30) என்ற அவரது இறக்கும் அறிவிப்பில் உள்ளது. “முடிந்தது” (டெட்டெலெஸ்டாய்) என்ற சொல் பல வழிகளில் பயன்படுத்தப்பட்டது - ஒரு ரசீதுக்கான பணம் செலுத்தப்பட்டது, ஒரு பணி முடிந்தது, ஒரு பலி செலுத்தப்பட்டது, ஒரு தலைசிறந்த படைப்பு முடிந்ததைக் காட்டுவதற்கு. இயேசு சிலுவையில் நம் சார்பாக செய்த காரியங்களுக்கு அவை ஒவ்வொன்றும் பொருந்தும்! ஒருவேளை அதனால்தான் அப்போஸ்தலன் பவுல் எழுதினார், “நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.” (கலாத்தியர் 6:14).

நம்முடைய இடத்தை எடுக்க இயேசுவின் விருப்பம், தேவன் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கு நித்திய சான்று. அவர் செலுத்திய விலையைப் பற்றி நாம் நிதானிக்கும்போது, அவருடைய அன்பையும் கொண்டாடுவோம் - சிலுவைக்கு நன்றி செலுத்துவோம்.

ஒரு பலமான இதயம்

பிலிப் யான்சியுடன் இணைந்து எழுதியுள்ள தனது பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டு புத்தகத்தில் டாக்டர் பால் பிராண்ட் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், ஓசனிச்சிட்டின் இதயம் இரத்தாலின் (அவுன்ஸ்) எடையைக் கொண்டு ஒரு நிமிடத்திற்கு எண்ணூறு முறை துடிக்கிறது; ஒரு நீல திமிங்கலத்தின் இதயம் அரை டன் எடையுடையது, நிமிடத்திற்கு பத்து முறை மட்டுமே துடிக்கிறது, அதை இரண்டு மைல் தொலைவிலேயே கேட்க முடியும். இவ்விரண்டிற்கும் மாறாக, மனித இதயமானது மந்தமாக செயல்படுவதுபோல தோன்றுகிறது, ஆனாலும் அது தனது வேலையைச் சரியாகச் செய்கிறது ஒரு நாளைக்கு 1,00,000 முறை [ஒரு நிமிடத்திற்கு 65-70 முறை] ஓய்வெடுக்க நேரமில்லாமல் துடித்து, நம்மில் பெரும்பாலோரைப் எழுபது ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்கள் வரை கொண்டு செல்கிறது.
ஆச்சரியமான இந்த இதயம் வாழ்க்கையின் ஊடே நிறைவுக்கு நம்மை பெலப்படுத்தி கொண்டுசேர்க்கிறது. இது நமது ஒட்டுமொத்த உள்ளான நல்வாழ்விற்கு ஒரு உருவகமாக மாறியுள்ளது. ஆனாலும், நம்முடைய உண்மையான இருதயமும் சரி உருவக இருதயமும் சரி இரண்டுமே தோல்விக்கு ஆளாகின்றன. நம்மால் என்ன செய்ய முடியும்?

இஸ்ரவேலின் ஆராதனைத் தலைவரான சங்கீதக்காரனாகிய ஆசாப் 73-ஆம் சங்கீதத்தில் உண்மையான வலிமை வேறெங்கிருந்தோ - வேறுயாரிடம் இருந்தோ - வழிகளிலோ வருகிறது என்பதை ஒப்புக் கொண்டார். “என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்” (வ. 26) என்று எழுதுகிறார். ஆசாப் சொன்னது சரிதான். ஜீவனுள்ள தேவன் நம்முடைய இறுதி மற்றும் நித்திய பெலனானவர். வானத்தையும் பூமியையும் படைத்தவர் என்ற முறையில் தேவனுடைய பரிபூரண வல்லமைகளுக்கு அத்தகைய வரம்புகள் எதுவும் கிடையாது என்று அவருக்குத் தெரியாது.

நம்முடைய கடினமான மற்றும் சவாலான காலங்களில் ஆசாப் தனது சொந்த போராட்டங்களின் மூலம் கற்றுக்கொண்டதைக் கண்டறிவோம். தேவனே நம் இருதயங்களின் உண்மையான பெலன். நாம் ஒவ்வொரு நாளும் அவருடைய பெலனில் ஓய்வெடுக்க முடியும்.

இயேசுவைப் போல

ஒரு சிறுவனாக, இறையியலாளர் புரூஸ் வேர், 1 பேதுரு 2:21-23 நம்மை இயேசுவைப் போல இருக்கும்படி அழைக்கிறார் என்று விரக்தியடைந்தார். வேர் தனது இளமை உற்சாகத்தைப் பற்றி 'தி மேன் க்ரைஸ்ட் ஜீசஸ்' என்னும் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். “இது நியாயமில்லை, நான் தீர்மானித்தேன். குறிப்பாக பாவம் செய்யாத ஒருவரின் அடிச்சுவடுகளை பின்பற்றுமாறு அந்தப்பத்தியில் கூறும்போது, ​​இது முற்றிலும் இயற்கையை மீறிய ஒன்று... இதை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்வதற்கு தேவன் உண்மையில் எந்த அர்த்தத்தில் இப்படி சொல்கிறார் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை.”

அத்தகைய விவிலிய சவாலை வேர் ஏன் மிகவும் அச்சுறுத்தலாகக் கண்டார் என்பது எனக்குப் புரிகிறது! ஒரு பழைய கோரஸ் கூறுகிறது, “இயேசுவைப் போல இருக்க, இயேசுவைப் போல இருக்க வேண்டும். அவரைப் போல இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ” ஆனால் வேர் சரியாகக் குறிப்பிட்டது போல, நாம் அதை செய்ய முடியாதவர்களாய் இருக்கிறோம். இதனால் நாம் ஒருபோதும் இயேசுவைப் போல ஆகவே முடியாது என்ற முடிவுக்கு வருகிறோம்.

இருப்பினும், நாம் தனித்து விடப்படவில்லை. பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய பிள்ளைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறார், இதனால் கிறிஸ்து நம்மில் உருவாக முடியும் (கலா. 4:19). ஆகவே, பவுல் ஆவியானவரை பற்றி எழுதிய சிறந்த அத்தியாயத்தில், “தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;” (ரோம. 8:29) என்று நாம் வாசிப்பதில் ஆச்சரியமில்லை. தேவன் தம்முடைய வேலையை நம்மில் நிறைவு செய்வதைக் காண்பார். அவர் நம்மில் வாழும் இயேசுவின் ஆவியின் மூலமாக அதைச் செய்கிறார்.

நாம் ஆவியானவரின் கிரியைகளுக்கு நாம் கீழ்ப்படியும்போது, ​​நாம் உண்மையிலேயே இயேசுவைப் போலவே ஆகிவிடுகிறோம். இது தேவனின் பெரிய ஆசை என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலானது!